சுமார் 40, 45 வகைக்கீரைகள் இருப்பதாகத் தெரிய வருகிறது. ஆனால் எனக்குத் தெரிந்தவை அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, புளிச்சகீரை, குப்பைக்கீரை, பசலைக்கீரை, பாலக் கீரை, தண்டுக்கீரை, அகத்திக் கீரை போன்ற சில மட்டுமே. இவற்றில் முள்ளங்கிக்கீரை, புதினாக்கீரை, கொத்துமல்லிக்கீரை போன்றவற்றைச் சேர்க்கவில்லை.
அரைக்கீரை மலச்சிக்கலுக்கு மிகவும் நல்லது. குத்துச் செடியாகப் படர்ந்து இருக்கும் அரைக்கீரை இலைகளைப் பறித்தாலும் மீண்டும் வளரும் இயல்பு கொண்டது. ஆகவே அறுத்து எடுக்கும் கீரை என்பதே நாளாவட்டத்தில் அரைக்கீரை என மாறி இருக்கலாம். அதிக உயரம் வளராது. தண்டுக்கீரை இனத்தைச் சேர்ந்தாலும் இதன் தண்டைப் பெரும்பாலும் சமைப்பதில்லை. ஒரு முறை வந்துவிட்டால் தொடர்ந்து ஒரு வருடம் வரை பலன் கொடுக்கும். இலை பச்சையாக இருந்தாலும் கீழ்ப்பாகத்தில் லேசாகச் செவ்வரி ஓடி இருக்கும். இதன் விதைகள் கூடச் சாப்பிடலாம் என்கின்றனர்.
அந்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்,
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்.”
எனத் திருமந்திரத்தில் சொல்லி இருப்பதாக இயற்கை வேளாண்மையில் பிரபலமான திரு நம்மாழ்வார் கூறுகிறார். இது பத்திய உணவுகளுக்குச் சிறந்தது. இதில் தங்கச் சத்தும், இரும்புச் சத்தும் நிறைந்திருப்பதாகச் சொல்வார்கள். சிறந்த சத்துணவான இதை எல்லோரும் தாராளமாகச் சாப்பிடலாம். எவ்விதக் கெடுதலையும் உண்டு பண்ணாது. '
இதில் நீர்ச்சத்து 87 சதவீதமும் புரதம் 2.8 சதவீதமும் கொழுப்புச் சத்து 0.4 சதவீதமாகவும், 2.4 தாது உப்புக்களும், மாவுச் சத்து 7.4 சதவீதமும் உள்ளன. இதை உண்டால் 44 கலோரிகளே பெறுவோம். தினமும் உண்ணத் தக்கக் கீரை வகையில் இது மிக முக்கியமானது.
மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். பித்தத்தைத் தணிக்கும். நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். தோல் வியாதியைத் தடுக்கும். ஆரம்ப மனோ வியாதிக்குச் சிறந்த மருந்து. தலை முடி வளரும் தன்மை உடையது. புளியுடன் சேர்த்துச் சமைக்கையில் ருசி அதிகம் இருக்கும்.