எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, July 9, 2019

பாரம்பரியச் சமையல்களில் திருவாதிரைக்குச் செய்யும் ஏழுதான் குழம்பு!

ஏழுதான் குழம்பு  சிலர் வீட்டில் கூட்டுப் போல் கெட்டியாகவும் இருக்கும். மதுரை, தஞ்சை மாவட்டங்களில் இதற்குத் துவரம்பருப்பையும் குழைய வேக வைத்துச் சேர்ப்பார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் சிலர் பருப்பே போடாமல் செய்வார்கள். இதற்குப் பெரும்பாலும் நாட்டுக்கறிகாய்களே சுவையாக இருக்கும். கிடைக்காத இடம் என்றால் கிடைக்கும் வேறு காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையான காய்கள்:
வெள்ளைப் பூஷணிக்காய் ஒரு கீற்று
பறங்கிக்காய் ஒரு கீற்று
வாழைக்காய் பெரிதாக இருந்தால் ஒன்று சின்னது என்றால் 2
கத்திரிக்காய் 5ல் இருந்து 8க்குள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெரிய கிழங்கு என்றால் ஒன்று
பச்சை மொச்சை உரித்தது ஒரு கிண்ணம்
அவரைக்காய் 100 கிராம்
சேனைக்கிழங்கு கால் கிலோ
சேப்பங்கிழங்கு(விரும்பினால் கால் கிலோ)
சிறுகிழங்கு கால் கிலோ
கொத்தவரைக்காய் 100 கிராம்

இதோடு பீன்ஸ், காரட், செளசெள இதெல்லாம் விரும்பினால் சேர்க்கலாம். ஆனால் பொதுவாக நாட்டுக்காய்கள் தான் நன்றாக இருக்கும். இப்போதெல்லாம் உருளைக்கிழங்கைக் கூட இந்தக் குழம்பில் போடுகின்றனர். நான் போடுவது இல்லை. அவியலுக்குக் கூட உருளைக்கிழங்கு சேர்க்க மாட்டேன். எல்லாக் காய்களையும் இரண்டு அங்குல நீளம் ஒரே மாதிரியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தனியாக வைக்கவும்.

கால் கிலோ துவரம்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்துக்க் குழைய வேகவைக்கவும். புளி நூறு கிராம் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். இவை எல்லாம் தயாராக இருக்கட்டும். இப்போது அரைக்க வேண்டியவை

அரைக்க:
மி.வத்தல் பத்து அல்லது பதினைந்து
கொத்துமல்லி விதை 100 கிராம்
கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு ஒரு டீ ஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்
அரிசி ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் ஒரு மூடி

திருநெல்வேலிப் பக்கம்ஒரு சிலர் எள்ளும், கடுகும் அரைக்கும் பொருட்களோடு சேர்ப்பார்கள். அதைத் தாளகக் குழம்பு என்பார்கள். ஏழுதான் குழம்பில் பருப்பு வேக வைத்துச் சேர்ப்போம். தாளகத்தில் அது கிடையாது. ஆகையால் அதெல்லாம் அவரவர் விருப்பம். தாளகம் முறையில் செய்வது என்றால் பாதிமூடி அரைக்கையில் சேர்த்தாலும் தாளிக்கையில் பல்,பல்லாகக்கீறியும் போடுவதுண்டு. மேலே சொன்ன பொருட்களை ஒவ்வொன்றாகச் சமையல் எண்ணெயில் வறுக்கவும். தேங்காய் எண்ணெயில் வறுத்தால் நன்றாக இருக்கும்.  வறுத்த பொருட்களை ஆறவிட்டு மிக்சியில் போட்டு நன்றாகப் பொடி செய்யவும்.

தாளிக்க: தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, மி.வத்தல்.கருகப்பிலை, கொத்துமல்லி.

காய்களைக்கழுவி கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். புளி கரைத்த நீரைக் கொதிக்க வைத்து வேக விட்ட காய்களை சேர்க்கவும். புளிக்கரைசலுக்குத் தேவையான உப்பையும் போடவும். நன்கு கொதிக்கையில் வெந்த பருப்பைச் சேர்த்துக்கொண்டு, ஒரு கொதி விட்டதும், அரைத்து வைத்த பொடியைப் போடவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயைக் காய வைத்துக்கொண்டு அதில் கடுகு, மி.வத்தல் 2 கருகப்பிலையைப் போட்டுத் தாளிக்கவும். பச்சைக்கொத்துமல்லியைத் தூவவும்.

நேற்றைய பதிவான தாளகக் குழம்பைப் பார்த்து/படித்துவிட்டு என் மாமா பெண் இதுக்கும் களிக்குழம்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன எனக் கேட்டிருந்தார். ஆகவே இதை இங்கே பகிர்கிறேன்.

13 comments:

  1. ஏழுகறி கூட்டு செய்முறையைப் பார்த்தேன்.

    ஆமாம்...இதை மட்டும் செய்ய, காய்கள் எப்படி வாங்குவீங்க? ஒவ்வொண்ணுலயும் கொஞ்சம் கொஞ்சமா?

    ReplyDelete
    Replies
    1. நவம்பர், டிசம்பரில் காய்கள் விலையும் குறைந்திருக்கும். அதோடு இம்மாதிரி விசேஷங்களுக்காக எல்லாக் காய்களுமாகச் சேர்ந்து அரைகிலோ 30 ரூ என விற்பார்கள். அல்லது எல்லாவற்றிலும் நாமே கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொடுத்து அரைக்கிலோ/அல்லது ஒருகிலோ நமக்குத் தேவையானதைப் போட்டுத் தரச் சொல்லலாம். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசிப் பாரணைக்கென 21 காய்கள் கொண்ட ஒரு தொகுப்பு விற்பாங்க! குறைந்த பட்சம் 25 ரூபாயிலிருந்து இருக்கும். நமக்குத் தேவையானதை வாங்கிக்கலாம்.

      Delete
  2. //குறைந்த பட்சம் 25 ரூபாயிலிருந்து இருக்கும்.// - அடப்பாவீ... இங்க நான் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு குறைஞ்சு ஒரு காயும் பார்க்கலை. பூசனி/பறங்கி - 35 ரூ, கோஸ்-40, காலிஃப்ளவர்-என்ன சைஸ்னாலும் 40 ரூபாய்

    அத்திவரதர் போயிட்டு கிண்டில இரவு 7 மணிக்கு இறங்கினபோது பாக்கெட் 10 ரூபாய் என ஸ்டேஷன்ல புது காய்கள் விற்பதைப் பார்த்தேன். 5 சேப்பங்கிழங்கு 10 ரூபாய், கைப்பிடி கொத்தவரை 10 ரூபாய் என்பது மாதிரி

    ReplyDelete
    Replies
    1. நெ.த. நான் சொன்னது நவம்பர், டிசம்பரில். இப்போ இங்கேயும் காய்கள் விலை அதிகம் தான். மழை வேறே இல்லையா? பூஷணிக்கீற்று பத்து ரூபாய்க்குக் குறைஞ்சு கொடுப்பதில்லை. வெண்டைக்காயெல்லாம் 50 ரூ, 40 ரூ என விற்றது,இப்போ எப்படினு தெரியலை! சில இன்னும் அதிக விலை!

      Delete
  3. அப்பால வர்றேன்...

    ReplyDelete
    Replies
    1. அப்பால வந்ததுக்கு நன்னி!

      Delete
  4. இந்தக் கூட்டு அல்லது குழம்பு நாங்களும் செய்வதுதான். இதேபோலதான் செய்வோம். எள் சேர்ப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. தாளகத்தில் மட்டுமே எள் சேர்ப்பார்கள் ஸ்ரீராம்.

      Delete
  5. நாங்கள் உருளைக்கிழங்கு அவியலில் சேர்ப்போம். ஏழு தான் கூட்டிலும் உருளைக்கிழங்கு சேர்ப்போம். ஆனால் செம்பு சேர்த்தால் கொழகொழ என்றிருக்கும் என்று சேர்ப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. *சேம்பு (சேப்பங்கிழங்கு) என்று படிக்கவும்!

      Delete
    2. சேம்பு போட்டு சாம்பாரே மாமியார் வீட்டில் அடிக்கடி பண்ணுவாங்க! அங்கே நிறைய விளையுமே! ஆனால் எங்க வீட்டில் எப்போதேனும் தான் சேம்பு! இதில் எல்லாம் அபூர்வமாகத் தான் சேர்ப்பார்கள்.

      Delete
  6. அன்பு கீதா மா. இன்னிலேருந்து ஒரு ரூல்.
    கூட்டு, சாம்பார் செய்யும் போது இந்தப் போர்ஷன் ரேவதிக்குன்னு சாப்பிடவும் ஹாஹா.

    ஒரு அம்மா,எஸ்பெஷல்லி எங்க அம்மா செய்வதெல்லாம் நீங்களும் செய்கிறீர்கள்.
    படிக்கவே ஆசையாக இருக்கிறது.

    எழுகறிக் குழம்பு அமிர்தம்.
    மனம் நிறை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, இதெல்லாம் எப்போவோ செய்யும் குழம்பு வகை தானே! என்றாலும் உங்களைக் கட்டாயம் தினம் தினம் நினைத்துக் கொள்வோம்.

      Delete