எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, March 25, 2011

கொஜ்ஜு கொஜ்ஜு கொஜ்ஜு கொஜ்ஜு!


ஜெயஸ்ரீ சொன்ன மங்களூர் கொஜ்ஜுவைப் பத்தி இப்போப் பார்க்கலாமா?? பொதுவா இந்த கொஜ்ஜு அன்னாசிப் பழத் துண்டங்களில் தான் செய்யறாங்க. ஆனால் வித்தியாசமாய் ஓர் அம்மாள் சங்கரா தொலைக்காட்சி சானலில் மாங்காய், பழுக்கும் நிலையில் இருப்பதில் செய்து காட்டினார். அவர் செய் முறையில் மி.வத்தல், தனியா, உளுத்தம்பருப்பு, வெந்தயம், வெள்ளை எள் ஆகியனவற்றோடு கொப்பரைத் துருவலும் இருந்தது. சிலர் தனியா சேர்க்க மாட்டோம் என்கின்றனர். பொதுவிலிது ஒரு வகைப் பச்சடி என்றே சொல்லலாம். இப்போ அன்னாசிப் பழத் துண்டுகளில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் அன்னாசிப் பழத்துண்டுகள் ஒரு கிண்ணம். மி.வத்தல் 4 அல்லது 6 காரத்தின் தன்மைக்கேற்ப, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், உளுந்து இரண்டு டீ ஸ்பூன், வெள்ளை எள் ஒரு டீ ஸ்பூன், வெந்தயம் ஒரு டீ ஸ்பூன். கொப்பரைத் துருவல் ஒரு கப். தேங்காய் அதிகம் வேண்டாமெனில் அரை கிண்ணம் போதும். எல்லாவற்றையும் வறுக்க எண்ணெய். புளி ஒரு நெல்லிக்காய் அளவு நீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். எண்ணெய் விட்டு எல்லாப் பொருட்களையும் அன்னாசிப் பழத் துண்டுகள் தவிர வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.

அன்னாசித் துண்டங்களைக் குக்கரிலோ அல்லது நீர் வைத்து வாணலியிலோ வேக வைக்கவும். வேக வைத்த அன்னாசித் துண்டில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்துப் புளிவாசனை போகக் கொதிக்க விடவும். இப்போது பொடித்துள்ள பொடியைத் தேவையான அளவு போடவும். ஒரு சின்னத் துண்டு வெல்லம் இஷ்டப் பட்டால் சேர்க்கலாம்.

ஒரு சிலர் தனியாவோடு நாம் சாம்பாருக்கு அரைக்கிறாப் போல் கடலைப் பருப்பும் சேர்த்து வறுத்து அரைக்கின்றனர். இது அவரவர் ருசிக்கு ஏற்ப மாறுபடும்.

Thursday, March 24, 2011

நீங்க எனக்கு பிரண்டையா இல்லையா?

ஹிஹிஹி, சிநேகிதர்களைப் பிரண்டை எனக் கேலியாகச் சொல்லுவாங்க. அதுவும் எதனால் என்றால், அந்தக் காலங்களில் ஆங்கிலம் அதிகம் படிக்காத பாட்டிங்க இருந்தாங்க இல்லையா? அவங்க கிட்டே ஃபிரண்ட் என்று சொன்னால், அவங்க பிரண்டை என்றே சொல்லுவாங்க. என் அப்பாவோட சித்தியும் அப்படித் தான் சொல்லி இருக்காங்க. ஆனால் இங்கே சொல்லப் போறது பிரண்டை என்னும் வச்சிரவல்லி. ஹிஹி, என்ன ஒரு பெண்ணோட பேர் மாதிரி இருக்கா?? வச்சிரவல்லி என்றும் ஒரு பெயர் பிரண்டைக்கு உண்டு. இதோ இதான் காய். இங்கே மார்க்கெட்டில் கிடைக்குது. வீட்டிலேயே நட்டிருந்தோம். கொடி வகை. வேலை செய்யற ஆளுங்க எப்போ எப்படி வெட்டினாங்கனு புரியலை. சித்தரத்தையையும் காணோம், இதையும் காணோம். இரண்டையும் திரும்ப வச்சிருக்கோம், வரணும்! சரி, சரி, இதோ விஷயத்துக்கு வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.

பிரண்டை வாங்கிக்குங்க. குறைஞ்சது நாலு பேர் உள்ள குடும்பத்துக்குக் கால் கிலோ வேண்டும். வாங்கி நல்லாக் கழுவி, கணுவினருகே வெட்டி எடுத்துவிட்டு மிச்சத்தைத் துண்டாக நறுக்கி வைச்சுக்கவும்.

மி.வத்தல் உங்கள் காரத்தின் தன்மைக்கேற்ப பத்து அல்லது பனிரண்டு வைச்சுக்கலாம். பெருங்காயம் ஒரு துண்டு, கடுகு, உ.பருப்பு முறையே இரண்டு டீஸ்பூன், புளி ஒரு நெல்லிக்காய் அளவு. உப்பு தேவையான அளவ. நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன்.


வாணலில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு முதலில் கடுகு, உ.பருப்பு வறுத்துத் தனியாக வைக்கவும். பெருங்காயத்தை எண்ணெயில்போட்டுப் பொரித்துக்கொண்டு மிளகாய் வற்றலையும் போட்டு வறுத்துக்கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்திருக்கும் பிரண்டைகளைப் போட்டு நன்கு வதக்கவும். புளியையும் இதில் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கிவிட்டுப் பின்னர் ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு உப்புச் சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் கொர கொரப்பாக இருக்கையிலேயே தனியாக எடுத்து வைத்த கடுகு,உ.பருப்பைச் சேர்க்கவும். ஒரு சுற்றுச் சுற்றி விட்டுப் பின்னர் வெளியே எடுக்கவும். சூடான சாதத்தில், நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டு பிரண்டைத் துவையலைப் போட்டுப் பிசைந்து சாப்பிடவும். வயிற்றுக் கோளாறுகள், ருசியின்மை, பசியின்மை ஆகியனவற்றுக்கு அரு மருந்து. வயிறு உப்புசமாக இருந்தாலும் சரியாகும்.

இதன் கூடவே தொட்டுக்க சைட் டிஷாக மோர்க்குழம்பு அல்லது மோர்ச்சாறு பயன்படுத்தலாம். மோர்ச்சாறு சீக்கிரம் செய்ய முடியும். கெட்டியான புளித்த மோரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், அரிசி மாவு சேர்த்துக் கரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கடுகு, வெந்தயம், மி.வத்தல், ஓமம், து,பருப்பு, கருகப்பிலை தாளித்துக் கரைத்த மோரை ஊற்றவும். பொங்கி வரும்போது இறக்கி விடவும். இதை எந்தத் துவையல் அரைத்தாலும் சைட் டிஷாகப் பயன்படுத்தலாம். துவையல் என்பது முக்கியமான காய்கள், அல்லது பொருளை நன்கு வறுத்து மிளகாய் வற்றலோடு சேர்த்துச் செய்வது. சட்னி என்பது எல்லாவற்றையும் பச்சையாக வைத்துச் செய்வது. சட்னியில் தாளிதம் அரைக்க வேண்டாம். துவையலில் தாளிதத்தைச் சேர்த்து அரைக்க வேண்டும்.

Thursday, March 17, 2011

சப்பாத்தி சாப்பிடலாமா?

தினம் தினம் என்ன பண்ணறது சப்பாத்திக்கு?? அதுவும் தினசரிச் சாப்பாட்டிலே சப்பாத்தியும் உண்டுங்கறச்சே/ பாலாஜி அங்கிள் சொன்னாப்போல் ஆவக்காய் ஊறுகாயும், வெண்டைக்காய்க் கறியும் நல்லாத் தான் இருக்கும். ஆனால் வெண்டைக்காயைச் சாதாரணமாய்ப் பண்ணறாப்போல் பண்ணாமல் கொஞ்சம் வித்தியாசமாப் பார்ப்போமா??

வெண்டைக்காய் உங்க தேவைக்கு ஏற்பக் கால் அல்லது அரை கிலோ. குடமிளகாய் நூறு கிராம், தக்காளி பெரிது என்றால் ஒன்று, சின்னது என்றால் இரண்டு. மி.பொடி, ஒரு டீஸ்பூன், தனியா பொடி, பெருங்காயப் பொடி ஒரு டீஸ்பூன், ம.பொடி, உப்பு, சீரகம், கடுகு தாளிக்க. அல்லது சாம்பார் பொடி இரண்டு டீ ஸ்பூன். எண்ணெய்.

வெண்டைக்காயை ரொம்பப் பொடியாக நறுக்காமல் ஒரு இஞ்ச் நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளவும். அதே அளவுக்குக் குடை மிளகாய், தக்காளியையும் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் வைச்சு, கடுகு, சீரகம் தாளிக்கவும். பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும். வெண்டைக்காய்த் துண்டங்களைப் போட்டுச் சற்று வதக்கவும். குடைமிளகாய்த் துண்டங்களையும் சேர்க்கவும். இரண்டும் நன்கு கலக்கும் வரை வதக்கிக் கொண்டு, மிளகாய்த்தூள், தனியாத் தூள் அல்லது சாம்பார் பொடியும் சேர்த்து, நறுக்கிய தக்காளித் துண்டங்களையும் சேர்த்து உப்பையும் சேர்க்கவும். மூடி வைக்க வேண்டாம். அப்படியே சற்று நேரம் நன்கு கலந்து கொண்டு வதக்கிக் கொள்ளவும். கறி நன்கு வதங்கியதும், சூடாகச் சப்பாத்தியுடன் பரிமாறவும். இதுக்கு வெங்காயமோ, பூண்டோ தேவை இல்லை.

பீட்ரூட்டைச் சப்பாத்திக்கு வேண்டாமே!

பஸ்ஸிலே சப்பாத்திக்குத் தொட்டுக்க பீட்ரூட் தான் அருமையான இணை உணவுனு நம்ம அநன்யா அக்கா சொல்லி இருக்கிறதை எல்லாரும்/சிலர்?? ஆமோதிக்கிறாங்க. என்னப் பொறுத்தவரையில் பீட்ரூட் என்பது பச்சையாய்ச் சாப்பிடும் ஓர் காய். அதைக் காரட், தக்காளி போன்றவற்றுடன் வெங்காயம் சேர்த்தோ, சேர்க்காமலோ சாலடாகச் சாப்பிடலாம். ஆனால் சில சமயம் வேறே வழி இல்லைனா பண்ணித் தான் ஆகணும். போரடிக்கும், வேறே வழியே இல்லை. எல்லா ஹோட்டலிலும் தினம் போடும் ஒரு கறியில் பீட்ரூட் தமிழ்நாடு பூராவும் அநேகமாய் எல்லா ஹோட்டல்களில் தினமும் பீட்ரூட் கறி இருக்கும். க்ர்ர்ர்ர்ர்ர்ர். நாம போரடிச்சா பீட்ரூட்டைக் கறி பண்ணிச் சாப்பிட்டுக்கலாம், என்னிக்கோ. அது கூட அன்னிக்குனு பார்த்து சாப்பாடே வேண்டாம்னு உங்க வீட்டிலே எல்லாரும் உண்ணாவிரதம் இருக்க நேரிடும். இருந்தாலும் முதல்லே பீட்ரூட் கறியை வெங்காயம் சேர்த்தும், சேர்க்காமலும் எப்படிப் பண்ணறதுனு பார்க்கலாம். இது சப்பாத்திக்கெல்லாம் இல்லை. சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ் அடுத்துத் தரேன் பாருங்க. என்ன வெங்காயம்?? பூண்டு?? அதெல்லாம் எதுக்கு வேண்டாம். அது இல்லாமலேயே.

பீட்ரூட் கால் கிலோ: போதுமானு கேட்காதீங்க. இதைச் சாப்பிடவே நீங்க வாசல்லே போர்டு வைக்கணும். வெங்காயம் சேர்த்தால் பெரிய வெங்காயம் இரண்டு. பொடிப் பொடியா நறுக்கி வைங்க. நினைவா ரங்க்ஸை வெங்காயம் உரிச்சு நறுக்கி வைக்கச் சொல்லுங்க. எதுக்குனு சொல்லவேண்டாம். சமையல்லே பீட்ரூட்னு தெரிஞ்சா எங்கேயானும் வெளியே சாப்பாடுனு ஓடிட சான்ஸ் இருக்கு. பச்சை மிளகாய், இரண்டு, இஞ்சி ஒரு துண்டு, தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு தேவைக்கு ஏற்ப. கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை தாளிக்க எண்ணெய். இந்தப் பச்சை மிளகாய், இஞ்சி, தே.துருவலை மிக்சியிலோ அம்மியிலோ கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதைத் தனியா வச்சுக்கோங்க.

இப்போ பீட்ரூட்டை நல்லா அலம்பி முழுசா, கவனிக்கவும், முழுசா குக்கரில் வேக வைக்கவும். வேக வைக்காமல் நறுக்க எனக்குக் கஷ்டமா இருக்கு. அதனாலே குக்கரில் வேக வைச்சுடுவேன். அப்புறம் தோலை உரிச்சா உ.கி. தோல் மாதிரி வந்துடும். இப்போ நறுக்கிக்குங்க. வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் தாளிக்கத் தேவையான அளவுக்கு ஊற்றினால் போதும். கடுகு, உ.பருப்பு தாளித்துக் கருகப்பிலை போடவும். வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் போடலை என்றால் நறுக்கி வைச்ச பீட்ரூட்டைப் போட்டு உப்புப் பொடியைச் சேர்க்கவும். மூடி வைச்சுக் கொஞ்ச நேரம் வதக்கிவிட்டுப் பின்னர் கரகரப்பாய் அரைச்ச ப.மி. இஞ்சி, தே,து, சேர்க்கவும். நன்கு கிளறவும். ஒரு ஐந்து நிமிஷம் விடாமல் கிளறியதும் விரும்பினால் பச்சைக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.

இதை விட்டால் பீட்ரூட்டைத் துருவிப் பால் சேர்த்தோ, சேர்க்காமலோ அல்வா பண்ணலாம். ஜாம் மாதிரிக் கிளறி வைச்சுக்கலாம். முகத்துக்கு அழகு சாதனமாய்ப் பயன்படுத்தலாம்.

Friday, November 5, 2010

வயிறு வலிக்குதே!

தீபாவளி பட்ச்ணங்களை ஒரு பிடி பிடிச்சா வயிறு வலிக்கத் தான் செய்யும்.

க்ர்ர்ர்ர், யாரு சாப்பிட்டாங்க பக்ஷணங்கள் எல்லாம்??? இருந்தாலும் வயிறு வலிக்குது!

சரி, சரி, இப்போ என்ன? மருந்தைச் சாப்பிட்டால் எல்லாம் சரியாயிடும்.

அந்த மருந்தும் நானே தான் கிளறிச் சாப்பிடவேண்டி இருக்கு. :(

சரி, சரி எனக்குச் சொல்லிக் கொடு, நான் கிளறுகிறேன்.

வேண்டாம்பா சாமி, அன்னிக்கு அல்வா கிளறினாப்போல் ஆயிடும். அப்புறமா அது சொத்தை, இது நொள்ளைனு என்னைச் சொல்லுவீங்க.

ரெண்டு பேருமாச் சேர்ந்து தானே அல்வா கிளறினோம்??

அது என்னமோ சரிதான். ஆனால் சரியா வரலைனதும், எனக்கு அல்வா கொடுத்துட்டீங்க! நானே மருந்தைக் கிளறிக்கறேன்.

சரி, சாமான்கள் என்னனு சொல்லு, அதையாவது எடுத்து வைக்கலாம்.

வறுத்துப் பொடிக்க வேண்டிய சாமான்கள்.

சுக்கு
மிளகு,
ஜீரகம்,
சோம்பு,
கசகசா,
கிராம்பு,
ஏலக்காய்,
கருஞ்சீரகம்
இலவங்கப்பட்டை,
சித்தரத்தை,
திப்பிலி,
தேசாவரம் அல்லது கண்டந்திப்பிலிக்குச்சிகள்

இது எல்லாத்தையும் நல்லாக் காய வைச்சுச் சம அளவு எடுத்துக்கவும். வெறும் வாணலியில் வறுக்கவும். வறுத்ததை மிக்சியில் போட்டு நன்றாய்ப் பொடியாக்கவும். அநேகமாய் நைசாகவே வரும். அப்படிக்கொஞ்சம் கொர கொரனு இருந்தாலும் பரவாயில்லை. பொடியைத் தனியாய் வைத்துக்கொள்ளவும்

இனி பச்சையாய் அரைக்க
இஞ்சி 50 கிராம்
கொத்துமல்லி விதை 100 கிராம்
இவற்றை நன்கு நீர் விட்டு அரைத்து, வடிகட்டிச் சாறு எடுத்துக்கொள்ளவும். மூன்று நான்கு முறை அரைத்துச் சாறை எடுக்கலாம்.

கருப்பட்டி பிடித்தால் கருப்பட்டி அல்லது வெல்லம். தூளாக்கியது ஒரு கிண்ணம் அல்லது 100 கிராம். கிளறுவதற்குத் தேவையாக ஒரு கரண்டி அல்லது ஐம்பது கிராம் நல்லெண்ணெய், ஐம்பது கிராம் நெய். சுத்தமான தேன் ஒரு கரண்டி.

நல்ல இரும்புச் சட்டியில்(நான் - ஸ்டிக் எல்லாம் சரிப்படாது. இரும்பின் சத்து மருந்தில் சேரணும்) இஞ்சி, கொத்துமல்லிச் சாறை விட்டுக் கொதிக்க விடவும். நன்கு தள தளவெனக் கொதிக்கும்போது தூளாக்கிய கருப்பட்டியைப் போடவும். கருப்பட்டி கரைந்து வாசனை போனதும், பொடி பண்ணி வைத்த மருந்துக் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். விடாமல் கிளறவும். நடுவில் கொஞ்சம் நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறிக் கொண்டு இருக்கவும். கையில் ஒட்டாமல் உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும். ஆறியதும் தேனைச் சேர்த்து, ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். ஒரு சின்ன ஸ்பூனால் ஒரு உருண்டை சாப்பிட்டாலே போதுமானது.

Sunday, September 12, 2010

கொழுக்கட்டை வேணுமோ, கொழுக்கட்டை?

விநாயகர் சதுர்த்திக் கொழுக்கட்டை செய்யும் விதம்.

முதல் முறை உருண்டை கொழுக்கட்டை.

இரண்டு கிண்ணம் அரிசி மாவு, ஒரு கிண்ணம் தூளாக்கிய வெல்லம், தேங்காய்க் கீறல்கள், ஏலக்காய், நீர்.

இதற்கு அரிசி மாவும் சரியாய் இருக்கும். இல்லாவிட்டால் பச்சரிசி ஒரு கிண்ணம் எடுத்துக் களைந்து கொண்டு நீரில் ஊற வைக்கவும். அரிசி ஒரு மணி நேரமாவது ஊறிய பிறகு நீரை வடித்துவிட்டுப் பின் மிக்சியில் மாவாக்கவும். மாவைச் சூடு வர வெறும் வாணலியில்/கடாயில் வறுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் ஒரு கிண்ணம் நீரைச் சுட வைக்கவும். நீர் கொதித்து வரும்போது தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் நீரில் கரையும்போது தேங்காய்க்கீறல்களைச் சேர்த்துவிட்டு, அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். நன்கு கிளறவும். மாவு நன்கு வேக வேண்டும். நன்கு வெந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும். சிறு சிறு உருண்டைகளாய்ப் பிடிக்கவும்.

ஒரு இட்லிப் பானையில் நீர் ஊற்றி, இட்லித் தட்டில் அல்லது ஒற்றைத் தட்டில் எண்ணெய் தடவி, அல்லது இலை/துணி போட்டுப் பிடித்த உருண்டைகளை வைத்துப் பத்து நிமிடம் வேக வைக்கவும். பின் வெளியே எடுக்கலாம்.

பொதுவாய் இந்தக் கொழுக்கட்டையைப் பிடி கொழுக்கட்டை என்று சொல்வதுண்டு. பெரும்பாலும் விநாயகருக்கு வேண்டிக்கொண்டு நினைத்த காரியம் பூர்த்தியானால் இந்தப் பிடி கொழுக்கட்டை செய்து விநியோகம் பண்ணிப் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வார்கள்.

அடுத்துப் பூரணக் கொழுக்கட்டை. பொதுவாய் இதுதான் விநாயக சதுர்த்திக்குச் செய்வார்கள். இது வெறும் தேங்காய்ப் பூரணம், கடலைப்பருப்புப் பூரணம், எள் பூரணம், உளுந்துப் பூரணம் என நான்கு வகைகளில் செய்வது உண்டு.
முதலில் பூரணங்கள் செய்யும் முறை:

தேங்காய்ப் பூரணம்: தேங்காய் சிறிது ஒன்று. ஏலக்காய் நாலைந்து பொடித்துக்கொள்ளவும். பாகு வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன் தூளாக்கியது. வெல்லம் ரொம்பச் சேர்த்தால் பூரணம் கொழுக்கட்டையில் இருந்து வெளியே வந்துவிடும்.

தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும். ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் தேங்காய் துருவலோடு வெல்லத்தையும் சேர்க்கவும். நீர் சேர்க்கவேண்டாம். வெல்லத்தில் உள்ள நீரும் தேங்காய் துருவலில் உள்ள நீருமே போதுமானது. வெல்லமும் தேங்காய்த் துருவலும் நன்கு கலக்கவேண்டும். நன்கு கலந்து பூரணம் உருட்டும் பதம் வரும்போது இறக்கி ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும்.

கடலைப்பருப்புப் பூரணம்: கடலைப்பருப்பு ஒரு சின்னக் கிண்ணம், வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள்.

ஒரு சின்னக் கிண்ணம் கடலைப்பருப்பை எடுத்து வறுத்து ஊற வைக்கவும். ஊற வைத்த பருப்பை வேக வைத்து அதோடு வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுது தளர இருந்தால் நான் ஸ்டிக் கடாயில் போட்டுச் சிறிது நேரம் கிளறினால் கெட்டியாகிவிடும். ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும்.

எள் பூரணம்: ஒரு சிலர் கடலைப்பருப்புப் பூரணத்திலேயே எள்ளையும் வறுத்துப் பொடித்துச் சேர்ப்பார்கள். சிலருக்குத் தனியாக எள் பூரணம் செய்வார்கள்.
கறுப்பு எள் ஐம்பது கிராம். ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத் தூள். ஏலக்காய்,
எள்ளைக் களைந்து கல்லரித்துக்கொண்டு வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். வெடிக்கும் வரை வறுக்கவேண்டும். பின் பொடித்த வெல்லம், ஏலக்காயோடு சேர்த்து அம்மியிலோ அல்லது மிக்சியிலோ பொடி பண்ணிக்கொள்ளவும்.

உளுந்தம் பூரணம்:
உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம், மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு, தேங்காய்த் துருவல், தாளிக்க கடுகு, உ.புருப்பு, கருகப்பிலை, விரும்பினால் எலுமிச்சம்பழம் ஒரு மூடி.

உளுந்தைக் களைந்து கல்லரித்துக்கொண்டு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறியதும் வடிகட்டிவிட்டுப் பின்மிக்சியில் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து உளுத்தம்பருப்பை அரைக்கவும். ரொம்ப நைசாக அரைக்கவேண்டாம். என்றாலும் பருப்பும் தெரியக் கூடாது. அரைத்த விழுதை ஒரு ஒற்றைத் தட்டில் எண்ணெய் தடவிப் பரப்பி இட்லிப் பானையில் வேக வைக்கவும். குச்சியால் அல்லது ஒரு கரண்டி நுனியால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது வெளியில் எடுத்து ஆறவிடவும்.

கடாயில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை சேர்க்கவும். வெந்த உளுத்தம்பருப்பு விழுதைச் சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவலும் சேர்க்கவும். பூரணம் உதிர் உதிராக வந்ததும் கீழே இறக்கவும். விரும்பினால் எலுமிச்சம்பழம் ஒரு மூடி பிழிந்து கொள்ளலாம்.

நான்கு பூரணங்களும் ரெடியாயிடுச்சு. இப்போ மேல் மாவு தயாரிக்கும் முறை.

அரிசி நல்ல பச்சரிசியாக இருத்தல் நலம். தமிழ்நாடு என்றால் ஐஆர் இருபது அரிசி கிடைக்கும், மற்ற இடங்களில் உள்ளவர்கள் நல்ல பச்சரிசியாகப் பார்த்து எடுத்துக்கொள்ளவும். யு.எஸ். , கனடா என்றால் அமெரிக்கன் லாங் கிரெயின் ரைஸ் சரியாய் இருக்கும்.

அரிசி 250 கிராம். வேக வைக்க நீர் ஒரு சின்னக் கிண்ணம், ஒரு சிட்டிகை உப்பு. ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்.

அரிசியை நன்கு களைந்து நீரில் ஊற வைக்கவேண்டும். குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஊறினால் நல்லது. ஊறிய அரிசியை நீரை வடித்துவிட்டு மிக்சியில் போட்டுத் தேவையான நீரை மட்டும் கொஞ்சமாய் ஊற்றி நல்ல நைசாக அரைக்கவும். கையால் தொட்டால் மாவில் கரகரப்புத் தெரியக் கூடாது. நல்ல சில்க் மாதிரி வழவழப்பாக இருக்க வேண்டும். மாவை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் நீர் ஒரு சின்னக் கிண்ணம் ஊற்றி ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போடவும். நீர் நன்கு கொதிக்கவேண்டும். இப்போது அரைத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொட்டிக் கிளறவேண்டும். மாவு நிறம் மாறும் வரை நன்கு கிளறிக் கொள்ளவும். மாவு நன்கு வெந்ததும் பந்துபோல் திரண்டு வரும். எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து எண்ணெயும், சூடான நீரும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும், உள்ளே கட்டிகள் இல்லாமல் நன்கு பிசைய வேண்டும்.

இந்த மாவில் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்துக் கிண்ணம் போல் செய்யவும். தேவையான பூரணத்தை உள்ளே வைத்து நிரப்பவும். இப்படிக் கொழுக்கட்டைகள் செய்து விட்டு இப்போது அவற்றை வேகவிடவேண்டும். இட்லிப் பானையில் நீர் ஊற்றி இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டைப் போட்டு அதில் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து வேகவிடவேண்டும். ஏற்கெனவே வெந்த மாவு என்பதால் அதிக நேரம் விடவேண்டாம். கொழுக்கட்டைகள் மேலே எண்ணெய் கசிந்தாற்போல் நீர் வந்து வேர்த்துவிட்டிருக்கும். அப்போது எடுத்துவிடலாம்.

ஒரு சிலர் மாவை நீர் விட்டு அரைக்காமல் நீரை வடித்துவிட்டு மாவைப் பொடியாக்கியும் வைத்துக்கொள்வார்கள். இது அவரவர் செளகரியம் போல் செய்து கொள்ளலாம்.

அடுத்துப் பால் கொழுக்கட்டை

இதற்கும் அரிசி தேவை. வெல்லம், தேங்காய் பெரிதாக ஒன்று. ஏலக்காய்.

அரிசி 250 கிராம். பாகு வெல்லம் 300/400 கிராம், தேங்காய் பெரிதாக ஒன்று, ஏலக்காய். தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு ஒரு சிட்டிகை.

அரிசியை நன்கு ஊற வைக்கவேண்டும். ஊறிய அரிசியை தேங்காய் துருவல் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். தனியாக வைத்துக்கொள்ளவும். பெரிய தேங்காயை எடுத்து உடைத்துத் துருவிப் பாலை எடுக்கவும். முதல் பாலைத் தனியாக வைக்கவும். அடுத்த இரண்டு முறை எடுக்கப் படும் தேங்காய்ப் பாலை ஒன்றாக வைத்துக்கொள்ளவும்.

வெண்கல உருளி/கடாயில் ஒரு கிண்ணம் நீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து ஒரு முட்டை நல்லெண்ணெய் அல்லது நெய் விடவும். நீர் கொதித்து வரும்போது அரைத்த மாவைப்போட்டுக் கிளறவும். நன்கு பந்து போல் மாவு வரும்வரை கிளறவும். ஆற வைத்துச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு இருக்கலாம்.

இப்போது இன்னொரு உருளி/கடாயில் கொஞ்சம் போல் நீர் விட்டு வெல்லத்தைப் போடவும். வெல்லம் கரைந்து வரும்போது இரண்டாம் முறை, மூன்றாம் முறை எடுத்த தேங்காய்ப்பாலை விட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வரும்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் போடவும். முதலில் போட்டவை வெந்து மேலே மிதந்து வரும்போது அடுத்த முறை போடலாம். இப்படி எல்லாவற்றையும் போட்டதும், சிறிது நேரம் சேர்ந்து கொதிக்கவிடவும். பின் கீழே இறக்கி ஆற வைத்து முதல் தேங்காய்ப் பாலையும் ஏலக்காய்ப் பொடியையும் சேர்க்கவும்..

சிலருக்கு இந்த உருண்டைகளை நேரே தேங்காய்ப்பாலில் போடும்போது அவை கரைந்துவிடுமோ என யோசிப்பார்கள். அவர்கள் உருட்டி வைத்ததும் உருண்டைகளை இட்லிப் பானையில் வேகவிட்டு வைத்துக்கொள்ளவும். தேங்காய்ப் பால், வெல்லத்தோடு சேர்ந்து நன்கு கொதிக்கும்போது கொழுக்கட்டை உருண்டைகளைச் சேர்க்கலாம். இம்முறையில் உருண்டைகள் உடையாது.



ரவையில் செய்யும் நெய்க்கொழுக்கட்டை:

பொதுவாக இதை கணபதி ஹோமத்துக்கோ, அல்லது நவகிரஹ ஹோமம் போன்றவை செய்யும் முன்னர் செய்யப் படும் கணபதி ஹோமத்துக்கோ தான் முதல்நாளே செய்து வைத்துக்கொள்வது வழக்கம். இன்றைய நாட்களில் பெரும்பாலான பெண்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் அவங்க ஓரளவு நம் வழக்கப்படி பண்டிகைகள் கொண்டாடும்போது பாரம்பரிய உணவு வகைகளைச் செய்யமுடியாமல் திண்டாடுகிறார்கள். அவங்க விநாயக சதுர்த்திக்கு இந்த ரவைக் கொழுக்கட்டையைச் செய்து கொள்ளலாம். வேலைக்குப் போகும் பெண்கள் விநாயக சதுர்த்திக்கு முன்னர் வரும் ஏதாவது விடுமுறை நாளில் இதைச் செய்து (ருசி பார்க்காமல்) ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு விநாயக சதுர்த்தி அன்று நிவேதனத்துக்குப் பயன் படுத்தலாம். இதுவும் பதினைந்து நாட்களுக்குக் குறையாமல் இருக்கும். இதற்குத் தேவையான பொருட்கள் பார்ப்போமா?

பூரணம் செய்ய: ஒரு சின்னக் கிண்ணம் தேங்காய் துருவல், 1/2 கிண்ணம் வெல்லம் தூளாக்கியது, ஏலக்காய்ப் பொடி.

மேல் மாவிற்கு: சன்னமான நைஸ் ரவை ஒரு கிண்ணம். ஒரு சிட்டிகை உப்பு, பிசைய அரைக்கிண்ணம் பால். (காய்ச்சாத பாலும் பயன்படுத்தலாம்.) பிசையும்போது தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய். பொரிக்கவும் நெய் அல்லது எண்ணெய் தேவையான அளவு.

முதலில் முன் கூறியபடி தேங்காய்ப் பூரணம் வெல்லத்தூள் சேர்த்துச் செய்து ஏலப் பொடி சேர்த்து ஆற வைக்கவும்.

ரவையில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாலைச் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாலும் ரவையும் ஊறிக்கொண்டு கெட்டியாக ஆகி இருக்கும். இப்போது அதைக் கைகளில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொண்டு நன்கு பிசையவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும்வரை நன்கு பிசையவும். அரை மணி நேரம் வைக்கவும். பின்னர் சப்பாத்திக்கல்லில் இந்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை எடுத்துக்கொண்டு மெலிதான சப்பாத்தியாக இடவும். ஒரு வட்டமான மூடியால் இட்ட சப்பாத்தியில் கத்திரித்து எடுக்கவும். சிறு சிறு வட்டமானக் குட்டிக் குட்டிச் சப்பாத்திகள் நாலைந்து கிடைக்கும். இவற்றில் செய்து வைத்த பூரணத்தை நிரப்பிக் கொழுக்கட்டைக்கு மூடுவது போல் மூடவும். இம்மாதிரி எல்லா மாவையும் பூரணம் நிரப்பிச் செய்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் (சூடானதும்) அடுப்பைச் சிறிதாக எரிய விட்டுச் செய்து வைத்த கொழுக்கட்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். பொன் நிறமாகப் பொரியும் போது எடுத்துவிடலாம். மேலே கரகரப்போடும் உள்ளே பூரணத்தின் மிருதுவோடும் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

காரக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்: இரண்டு கிண்ணம் ஊற வைத்துச் சன்னமாக ரவை போல் மிக்சியில் உடைத்துக்கொள்ளவேண்டும். ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயம் எல்லாவற்றையும் நீரில் ஊற வைக்கவும். தேங்காய் துருவல் ஒரு சின்ன மூடித் தேங்காய் துருவல். தாளிக்க எண்ணெய், பச்சை மிளகாய் 2 இஞ்சி ஒரு சிறு துண்டு, கருகப்பிலை, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு. நீர் வேக வைக்கத் தேவையான அளவு. உப்பு.

முதலில் மிக்சியில் ஊற வைத்த பருப்பு வகைகளையும் மிளகாய்வற்றல், தேங்காய்துருவலஓடு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதைத் தனியாக வைத்துக்கொள்ளவும்.
இப்போது வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உ.பருப்பு, க,பருப்பு, ப.மிளகாய், இஞ்சி கருகப்பிலை தாளிக்கவும். பெருங்காயத் தூளும் சேர்க்கவும். பின்னர் மூன்று கப் நீரை ஊற்றவும். இப்போது அரைத்து வைத்துள்ள பருப்பு விழுதைப் போட்டு உப்புச் சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது அரிசி ரவையைப் போட்டுக் கிளறவும். நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும். ஆறிய பின்னர் சிறு சிறு உருண்டைகளாய்ப் பிடித்து, இட்லிப் பானையில் வேகவிடவும். இதற்குத் தொட்டுக்கொள்ளத் தேங்காய்ச் சட்னி, மோர்க்குழம்பு நன்றாக இருக்கும்.

அப்பாவி தங்கமணிக்காக வெடிக்காத உப்புச் சீடை!



கோகுலாஷ்டமி சிறப்புப் பலகாரங்கள்/பட்சணங்கள்:

முறுக்கு: கை முறுக்கையே அநேகமாய் முறுக்கு என்று சொல்வோம். சிலர் அச்சில் பிழியும் தேன்குழலைச் சொன்னாலும் பொதுவாய் முறுக்கு என்றால் கையால் சுற்றுவதே! இதற்குத் தேவையான பொருட்கள்.

அரிசி மாவு: 2 கப், வறுத்த உளுத்தமாவு ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டீஸ்பூன் சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணை, கலக்க நீர் தேவையான அளவு. பொரித்து எடுக்கச் சமையல் எண்ணெய்.
முறுக்குச் சுற்றும் வட்டமான தட்டு, அல்லது நீரில் நனைத்துப் பிழிந்த வெள்ளைத் துணி அல்லது தினசரி செய்தித் தாள்(இதில் அச்சுக்களின் ஈயம் கலக்குமோனு சந்தேகம் எனக்கு இருப்பதால் துணி அல்லது வட்டத்தட்டையே பயன்படுத்துவேன்.)

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசிமாவு, உளுத்தமாவு, உப்பு, பெருங்காயப்பொடியைச் சேர்க்கவும். உப்புத் தூளாக இருந்தால் பரவாயில்லை. கல் உப்புத் தான் பயன்படுத்துபவர்கள் தேவையான உப்பை நீரில் கலக்கி அடுப்பில் வைத்துக் கொஞ்சம் சூடு செய்துவிட்டு அந்த உப்புக் கரைசலை ஊற்றிக்கொள்ளலாம். பொதுவாகப் பழங்காலத்தில் உப்புக் கரைசலை ஊற்றியே செய்யப் பட்டது. இன்றைய நாட்களில் தூள் உப்புக் கிடைப்பதால் அப்படியே பயன்படுத்தப் படுகிறது.

மாவு மேற்சொன்ன பொருட்களோடு நன்கு கலந்ததும், சீரகத்தையும், வெண்ணெயையும் சேர்க்கவும். நீர் சேர்க்காமல் சற்று நேரம் வெண்ணெய் நன்கு கலக்கும்வரை மாவைப் பிசையவும். மாவில் வெண்ணெய் நன்கு கலந்ததும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெயைச் சுட வைக்கவும். எண்ணெய் நன்கு சூடு ஏறி அதில் இருந்து ஆவி வரும்போது நினைவாக அடுப்பைச் சிறிதாக எரியவிடவேண்டும். எண்ணெய் சூடு ஏறுவதற்குள்ளாக முறுக்குத் தட்டிலோ, துணியிலோ கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டு, பின்னர் கை கொண்ட மட்டும் மாவை எடுத்து முறுக்கிச் சுற்றிக்கொண்டே வரவேண்டும். இரண்டு சுற்று, நாலு சுற்று, ஐந்து சுற்று, ஏழு சுற்றுத்தான் பொதுவாகச் சுற்றுவார்கள் என்றாலும் இரண்டு சுற்றே போதுமானது. ஐந்து, ஏழு எல்லாம் கல்யாணங்கள் போன்ற பெரிய அளவில் செய்யப் படும் விசேஷங்களில் பயன்படும். சுற்றிய முறுக்கைப் பின்னல் கலையாமல் ஒரு தோசைத் திருப்பியால் எடுத்துக் காய்ந்த எண்ணெயில் போடவும். ஒரு சமயத்தில் நாலைந்து முறுக்குகள் வரை போடலாம். ஐந்து, ஏழு சுற்று முறுக்கென்றால் ஒரே முறுக்குத் தான் போடமுடியும். முறுக்கு நன்றாகச் சிவக்கும் வரை பொரிக்கவும். நன்கு சிவந்து எண்ணெயில் மேலே மிதந்து வரும். பொரியும்போது வரும் சப்தமும் அடங்கிவிடும். அப்போது முறுக்குகளை வெளியே எடுக்கவும். ஒரு தகர டப்பாவில் அல்லது நமுத்துப் போகாவண்ணம் வேறு ஏதானும் டப்பாக்களில் போட்டு வைக்கவும். ஒரு மாதம் வரையிலும் கெட்டுப் போகாது. கையால் உடைத்தால் முறுக்குச் சுற்றுக்களின் உள்ளே குழல் போல் ஓட்டை தெரியும். அப்படி இருந்தால் முறுக்கு நல்ல பதத்தில் வந்திருக்கிறது என்று பொருள்.

அடுத்து உப்புச் சீடை:

இதற்கும் தேவையான பொருட்கள்

2கப் அரிசிமாவு, ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த உளுத்த மாவு, ஊற வைத்த கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது, விருப்பமிருந்தால் எள் ஒரு டீ ஸ்பூன் சேர்க்கலாம், உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், நீர் தேவையான அளவு. பொரிக்க சமையல் எண்ணெய்.

அரிசி மாவு, உளுத்தமாவு, உப்பு, பெருங்காயத் தூள், எள், தேங்காய்க் கீறியது, ஊறிய கடலைப்பருப்பை ஒன்றாய்ச் சேர்க்கவும். சற்று நேரம் எல்லாம் ஒன்றாய்க்கலக்கும்வரை கலந்துவிட்டுப் பின் வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் நன்கு கலந்ததும், கொஞ்சமாய் நீரை விட்டுப் பிசையவும். இது உருட்டினால் உருண்டையகாவும், உதிர்த்தால் உதிராகவும் வரவேண்டும். அப்படிப் பிசைந்தால் போதுமானது. ரொம்ப நீரைச் சேர்த்துச் சப்பாத்தி மாவு போலெல்லாம் பிசையவேண்டாம். இப்போது அடுப்பில் எண்ணெயைச் சூடாக்கவும். அதற்குள் ஒரு பேப்பரில் அல்லது துணியில் பிசைந்த மாவைக் கையால் உருட்டிப் போடவும். உருண்டை ரொம்பவும் உருண்டையாக அழகாயெல்லாம் வரவேண்டாம். சும்மாப் பிடிச்சுப் போட்டால் போதுமானது. பொதுவாக உப்புச் சீடையை எண்ணெயில் போட்டால் வெடிக்கும்.

சமையலறையே ரணகளமாகக் காட்சி அளிக்கும். அதற்குக் காரணம் சேர்க்கும் உப்பு, கடலைப்பருப்பு, தேங்காய்க் கீறல் போன்றவற்றைச் சரியாகக்கவனிக்காமல் சேர்ப்பதே. உப்பை நீரில் கரைத்தே உப்புச் சீடைக்குச் சேர்க்கவேண்டும். அடுத்துக் கடலைப்பருப்பில் ஒரு தோல் கூட இருக்கவேண்டாம், கல் இருந்தாலும் வெடிக்கும். அதையும் கவனித்துச் சேர்க்கவேண்டும். தேங்காய்க் கீறலில் தேங்காயின் ஓடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதையும் மீறிச் சீடை வெடித்தால் உருண்டையைச் சரியாகப்பிடிக்காமல் ரொம்பவே கையால் வழவழவென்று செய்ததால் இருக்கும். ஆகவே மேலே கொஞ்சம் கரடு, முரடாக இருந்தால் தப்பில்லை.

உருட்டிய சீடைகளை எண்ணெயில் போட்டுவிட்டு (நினைவாக அடுப்பில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கவும்) ஒரு மூடியால் அதை மூடிவிடவேண்டும். நூற்றுக்கு நூறு சதம் வெடிக்காது. பின்பு தட்டை எடுத்துவிட்டுச் சீடைகளைத் திருப்பிப் போடவும். நன்கு வெந்து சத்தம் அடங்கி மேலே மிதந்து வந்ததும், எடுத்து எண்ணெயை வடித்துவிட்டு ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். சீடைகள் நன்கு வெந்திருந்தால் கலகலவென்ற சப்தம் வரும்,

வெல்லச் சீடை:

அரிசி மாவு இரண்டு கப், வறுத்த உளுத்த மாவு, ஒரு டேபிள் ஸ்பூன், எள் ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய் நாலைந்து பொடி பண்ணி வைத்துக்கொள்ளவும். நல்ல பாகு வெல்லம் தூளாக்கியது இரண்டு கப், வெல்லம் பாகு வைக்க நீர் அரை கிண்ணம். தொட்டுக்கொள்ள நெய், பொரிக்க சமையல் எண்ணெய்/நெய்

கடாய் அல்லது வெங்கல உருளியில் அரைக் கிண்ணம் நீரை ஊற்றிக் கொதிக்கும்போது தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் கரைந்து பாகு கொதிக்கும் போது வேறொரு சின்னக் கிண்ணத்தில் கொஞ்சம் நீர் எடுத்துக்கொண்டு காய்ந்த பாகில் ஒரு துளி விட்டுப்பார்த்தால் அது நீரில் கரையாமல் கையால் உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும். அந்தப் பதம் வந்ததும், தேங்காய்க் கீறல்களைச் சேர்த்துவிட்டு, பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய் அரிசி மாவில் விட்டுக் கலக்கவும். மாவு பாகில் நன்கு கலந்து விட்டது என்று நமக்கே புரியும், அந்த நேரம் வரைக்கும் பாகைச் சேர்க்கலாம். பாகு போதும் என்ற அளவு கலந்ததும், மாவில் வறுத்த உளுத்த மாவையும் எள்ளையும் ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கரண்டியால் நன்கு கலக்கவும். சற்று நேரம் ஆறவிடவும். பின்பு மாவை எடுத்துக் கையால் உருட்டிப் பார்க்கவும். உருண்டைகளாய் வரும்.

எண்ணெய் அல்லது நெய்யைக் காய வைத்து, உருட்டிய உருண்டைகளை ஒன்றிரண்டாய்ப் போட்டுச் சிறு தீயில் பொரிக்கவும். மேலே சிவந்து வரும் வரை பொரித்து எடுக்கவும். ஆறிய பின்பு சாப்பிட்டுப் பார்த்தால் உள்ளே மிருதுவாகவும், மேலே மொறுமொறுப்போடும் இருக்கும். பல நாட்கள் கெடாது. இரண்டு மாதம் கூட இருக்கும். பாகும் நன்றாக அமைந்து நெய்யிலும் பொரித்தால் மாதங்கள் ஆக, ஆக சுவை கூடும்.