எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, April 30, 2014

மாங்கொட்டைக் குழம்பு!

நான்கு பேர்களுக்கு மாங்கொட்டைக் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்

மாங்கொட்டையை  எடுத்துக் கொண்டு கடினமான தோலைத் தட்டி உடைத்து உள்ளே உள்ள பருப்பைத் தனியாக எடுத்துக் கொள்ளவும்.  அநேகமாய் அது நான்கு பேருக்கான குழம்புக்குப் போதும்.  சின்னதாக இருப்பதாய்த் தோன்றினால் இன்னொரு கொட்டையை உடைத்து உள்பருப்பையும் எடுத்துக் கொள்ளலாம். இந்தக் குழம்பிற்குச் சிலர் மாங்காய்த் தளிரையும் போடுவார்கள்.  தளிரை மாங்காய் வற்றல் என்றும் சொல்வார்கள்  மாங்காய்க் காலத்தில் தோலோடு மாங்காயை நீளமாக அரை அங்குல கனத்தில் வெட்டி எடுத்துக் கொண்டு உப்புச் சேர்த்து ஊற வைத்துப் பின்னர் வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.  இதுவே மாங்காய் வற்றல்.  இந்த மாங்காய் வற்றல் இல்லாமலும் மாங்கொட்டைக் குழம்பு செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

மிளகு    இரண்டு டீஸ்பூன்

மிளகாய் வற்றல் ஆறு

உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

ஜீரகம்(தேவைப்பட்டால்) அரை டீஸ்பூன்

தனியா இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை ஒரு கைப்பிடி

வறுக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

புளி ஒரு எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்துக் கரைக்கவும்)

தாளிக்க மற்றும்  குழம்பு  கொதிக்கவிடத் தேவையான எண்ணெய் நல்லெண்ணாயாக இருத்தல் நலம்.  அது இரண்டு டேபிள் ஸ்பூன் அல்லது ஒரு குழிக்கரண்டி

உப்பு தேவையான அளவு

மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன்

மாங்கொட்டைப் பருப்பு

மாங்காய் வற்றல்(தேவையானால்)  ஊற வைத்து வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

முதலில் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் விட்டு  மி.வத்தல், தனியா, உளுத்தம்பருப்பு, மிளகு, ஜீரகம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.  பெருங்காயம், கருகப்பிலையையும் வறுத்துக் கொள்ளவும்.  இத்துடன் மாங்கொட்டைப் பருப்பையும் உப்பு, புளி இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.  அல்லது புளி ஜலத்தைக் கரைத்து வைத்துக் கொண்டு, உப்புச் சேர்த்து மேற்சொன்ன சாமான்களை வறுத்து, மாங்கொட்டையை வறுக்காமல் சேர்த்து அரைத்துப் புளிக்கரைசலில் கரைத்துக் கொள்ளலாம்.

கல்சட்டி அல்லது கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கடுகு போடவும். அரைத்துக் கரைத்த விழுது ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் ஊற்றிக் கொண்டு தாளிதம் செய்தவற்றில் கொட்டிக் கலக்கவும்.  மஞ்சள் பொடி சேர்க்கவும். அடுப்பை மெதுவாக எரிய விட்டு நிதானமாய்க் கொதிக்க விட வேண்டும்.  கொதிக்க ஆரம்பித்ததும் ஏற்கெனவே வேக வைத்த மாங்காய் வற்றலைச் சேர்க்கலாம். பின்னர் குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வருகையில் அடுப்பை அணைக்கவும்.  குழம்பை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு குறைந்தது பதினைந்து நாட்கள் பயன்படுத்தலாம்.


மின் தமிழ்க் குழுமத்தில் ஷைலஜா மாங்கொட்டைக் குழம்பு செய்முறை கேட்டிருந்தார்.  அதை இங்கேயும் பர்கிறேன். 

Friday, April 4, 2014

வடாம் திருடர்கள் ஜாக்கிரதை! :(

எங்க குடியிருப்பில் அநேகமாக எல்லாருமே நான் வடாம் போடுவதைப் பார்த்துட்டு இந்தவருஷம் போட்டாங்க.  முந்தாநாள் அரிசிமாவில் வெங்காயக் கறிவடாம் போட்டேன்.  முந்தாநாள் வைச்சதில் ரங்க்ஸ் ரொம்பவே உருண்டையாக உருட்டி விட அதெல்லாம் உள்ளே காயவில்லை.  அதனால் நேத்திக்கு எல்லாத்தையும் ஒரு பெரிய தட்டில் மாற்றிக் காய வைத்திருந்தேன். கிட்டத்தட்ட 2 கிலோ வடாம் இருக்கும். யாரோ வந்து அத்தனை வடாமையும் எடுத்துட்டுப் போயிட்டாங்க.  வெறும் காலித் தட்டு மட்டும் நாங்க வைச்ச இடத்திலேயே இருந்தது.  ரொம்பப் பெரிய தட்டு என்பதால் அதை எடுத்துட்டுப் போனாத் தெரிஞ்சுடும்னு எடுத்துட்டுப் போகலை போல!  இன்னொருத்தர் போட்டிருந்த வடாம்களில் கொஞ்சத்தை மட்டும் வைச்சுட்டு, (ருசி பிடிக்கலையோ?) மிச்சம் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிருக்காங்க. என்னத்தைச் சொல்றதுனு ஒண்ணும் புரியலை! போன வருஷம் அமெரிக்காவுக்கு அனுப்ப, மாமியாருக்குனு கொடுக்கிறதுக்காகனு நிறையவே போட்டேன். அப்போல்லாம் ஒண்ணுமே நடக்கலை.  இந்த வருஷம் இப்போத் தான் ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே திருட்டு! :((((

Wednesday, April 2, 2014

வெங்காயக் கறிவடாம் படங்களும் சில முக்கியக்குறிப்புகளும்!


படம் அன்னிக்கே எடுத்துட்டாலும் இன்னிக்குத் தான் அப்லோட் செய்ய முடிஞ்சது.  அதான் தனிப்பதிவாப் போட்டுட்டேன். :))))

முதல்நாளே ஊற வைச்ச சிவப்புக்காராமணி மேலே. காராமணி பிடிக்காது து.பருப்புனு சொன்னால் அதைக் காலம்பரவே ஊற வைச்சுக்கலாம்.




ஊற வைச்ச உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு




அரைத்த மாவு.




வெங்காயம் நறுக்கியது.  இத்துடன் கருகப்பிலை, கொத்துமல்லியும் சேர்த்துக் கலக்கணும்.




இப்படி உருட்டி வைக்கணும்.  ரொம்பவே மொழு மொழுனு உருட்டிட்டா உள்ளே சரியாக் காயாது.  ஆகவே கொஞ்சம் அப்படியே பக்கோடாவுக்குப் போடறாப்போல் உருட்டிப் போடணும்.  அப்போத் தான் நல்லாக் காயும்.


சில டிப்ஸ் கொடுக்கணும்.  இதோ வரேன்.  ஹிஹிஹி, அவசர வேலை ஒண்ணை முடிச்சுட்டு வந்தேன்.


குக்கர் வைக்கிறது இப்போ 99% பழக்கம் என்றாலும் இன்னமும் சிலர் அதில் சில முக்கியத் தவறுகளைச் செய்கின்றனர்.  பார்க்க எதுவுமே இல்லை என்பது போல் தெரிந்தாலும் அது தான் மிக முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.

சமீபத்தில் என் உறவினர் குக்கர் வைத்ததும் உடனேயே அதில் வெயிட் எனப்படும் குண்டைப் போட்டு விட்டார்.  அம்மாதிரிப் போடுவது மிகத் தவறு.  குக்கர் நாமே தேய்த்தால் கூட அதிலிருந்து ஆவி வரும்வரை வெயிட் போடாமல் இருப்பது தான் நல்லது.  ஒரு வேளை தேய்க்கையில் ஏதேனும் சாதப்பருக்கையோ, பருப்புத் துணுக்கோ, காய்கள் வைப்பவர்களானால் காய்த்துணுக்கோ மிக நுண்ணிய அளவில் கூட அந்த ஆவி வெளிவரும் துவாரத்தில் இருப்பது உண்டு.  நன்றாக நீர் விட்டுக் கழுவவேண்டும்.  அப்படியும் பல சமயங்களில் அடைபடும்.  குண்டை உடனே போட்டுவிட்டால் அந்தத் துவாரத்தின் வழியே வெளிவர வேண்டிய அதிக அழுத்தம் நிறைந்த ஆவி உள்ளேயே தங்கிக் குக்கர் வெடிக்கும் அபாயம் உண்டு. துவாரத்தின் வழியாக ஆவி வெளி வர நேரம் கொடுத்தால் அந்த ஆவி பட்டு அதிலுள்ள நீரானது உள்ளே இருக்கும் துணுக்குகளை ஆவியோடு சேர்த்து வெளிக்கொண்டுவரும்.  இது தான் ஆபத்து இல்லாத முறை.

இன்னொன்றும் குக்கர் குறித்தே.  ஆவி வெளியே வந்து குக்கருக்கு வெயிட் போட்டு விசில் வரும்போது வெயிட் தூக்கிக் கொள்ள வேண்டும்.  தூக்கிக் கொண்டு நீண்ட சப்தமாக வரவேண்டும்.  விட்டு விட்டு வரக் கூடாது.  ஆவி வரும் துவாரத்தில் அடைப்பு இருந்தால் தான் விட்டு விட்டு வரும்.  ஆனால் பெரும்பாலும் விட்டு விட்டு வருவது தான் நல்லது என நினைக்கின்றனர்.  உள்ளே இருக்கும் அதிக அழுத்தம் நீண்ட சப்தத்தோடு வெளியேற வேண்டும்.  இந்த அழுத்தம் உள்ளேயே தங்குவது ஆபத்து.  அம்மாதிரி நீண்ட சப்தம் வந்தால் அது ஏதோ தப்பு என்பது போல் வெயிட்டின் தலையில் ஒரு கரண்டியை அல்லது இடுக்கியைப் பிடித்துக் குக்கரோடு சேர்த்து அமுக்கிக் கொண்டு நிற்கின்றனர்.  அழுத்தம் தாங்காமல் வெயிட் தூக்கிக் கொண்டு குக்கரின் உள்ளே உள்ள உணவுப் பொருள் எல்லாமும் வெளியேறி மூடியே தூக்கிக் கொண்டு திறக்கும் அபாயம் இதில் உண்டு.  சொன்னாலும் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றனர்.

அடுத்தது குக்கரின் சேஃப்டி வால்வ்.  முன்னெல்லாம் இதைச் சுற்றி ஈயப் பற்று வைத்திருந்தது.  அப்புறம் அதிக அழுத்தம், சூட்டில் அடிக்கடி ஈயம் உருகுவதால் முழுக்க முழுக்க ரப்பரினால் ஆன சேஃப்டி வால்வ் வந்தது.  அது கொஞ்சமாவது சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். உள்ளே உள்ள அதிகப்படி நீராவி அதன் மூலம் வெளியேற வேண்டும்.  அதை ஈயம் போட்டு முழுக்க முழுக்க அடைக்கின்றனர்.  இதுவும் மிகப் பெரிய ஆபத்து. குக்கர் வாங்கினதும், அவர்கள் கொடுக்கும் கையேடுகளைக் கவனமாகப் படித்துவிட வேண்டும். அப்போது தான் நாம் செய்வதில் என்னென்ன தவறு என்பது புரியவரும். 

Monday, March 31, 2014

குழம்பில் போடும் வெங்காயக் கறிவடாம்

ஏற்கெனவே வெங்காயக் கறிவடாம் குறித்து எழுதி இருக்கேன்.  ஆகையால் என்னடா இதுனு எல்லோரும் பார்ப்பீங்கனு தான் விளக்கம் கொடுத்துட்டேன்.  அது பொரிச்சுத் தொட்டுக்கொள்ள வைச்சுக்கறதுக்கு.  இது குழம்பு வைக்க. கூட்டு, கலந்த சாதம் போன்றவற்றில் போட்டுக் கலக்க. 

சிவப்புக் காராமணி ஒரு ஆழாக்கு அல்லது 200 கிராம்

இதை முதலிலேயே ஊற வைக்கணும்.  எட்டு மணி நேரமாவது ஊறணும், ஆகவே முதல்நாள் மாலை அல்லது இரவே ஊற வைக்கவும். 

மறுநாள் காலை அரை ஆழாக்கு உளுத்தம்பருப்பு, அரை ஆழாக்குக் கடலைப்பருப்புக் களைந்து ஊற வைக்கவும்.  காலை ஏழு மணிக்குள்  அரைச்சுப் போட்டுடறது நல்லது என்பதால் முடிந்தவரை காலை ஐந்து மணிக்குள்ளாக ஊற வைக்கவும்.  இல்லையென்றாலும் பரவாயில்லை.  ஒன்பது மணிக்குள்ளாகப் போட்டுடலாம்.

மேற்சொன்ன அளவுக்குத் தேவையான பொருட்கள்:

மிளகாய் வற்றல் பத்து அல்லது பனிரண்டு(காரம் வேண்டும் எனில் கூடப் போட்டுக்கலாம்)

தேவையான உப்பு

பெருங்காயம்

கருகப்பிலை, கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும்

கால் கிலோவில் இருந்து அரைகிலோவுக்குள்ளாகப் பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் தோல் உரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊற வைத்த சாமான்களை மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.  நன்கு நைசாகவே அரைக்கலாம்.  பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நறுக்கிய வெங்காயம், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துவிட்டு நன்கு கலக்கவும். ஒரு பெரிய தாம்பாளத்தில் அடியில் எண்ணெய் தடவி அல்லது ப்ளாஸ்டிக் ஷீட்டை நன்கு அலம்பித் துடைத்து அதில் இந்த மாவை உருண்டையாகவோ அல்லது வடை போலவோ வைக்கவும்.  குறைந்தது மூன்று நாட்கள் (நல்ல வெயில் அடித்தால்) காய வேண்டும்.  காய்ந்த பின்னர் கையால் நொறுக்கிப் பார்த்தால் தூளாகும்.  அந்தப் பதம் வந்ததும் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

வெறும் குழம்பு வைத்தால் போடத் தான் ஏதும் இல்லை எனில் குழம்பை இறக்கும்போது இதை எண்ணெயில் பொரித்துச் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.  கூட்டுகளுக்குப் போடலாம். கீரையில் வெங்காய வாசனை பிடிக்கும் எனில் போடலாம்.  மசாலா சாதங்களிலும் சேர்க்கலாம்.  நாளை போடும்போது நினைவிருந்தால் படம் எடுத்துப் போடறேன். :))))

Wednesday, March 12, 2014

காரடையான் நோன்பு நூற்க வாங்க!

காரடையான் நோன்பு மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் ஆரம்பிக்கும் வேளையில் கொண்டாடப் படும் ஒன்று.  பல சமயங்களிலும் இந்த மாதம் பிறப்பது என்பது நடு இரவில், அகாலத்தில் என வரும்.  இந்த வருடமும் இரவு பனிரண்டு மணிக்கு என்பதால் இரவு ஒன்பது மணியில் இருந்து பத்து மணிக்குள்ளாக நோன்பை முடித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர்.  இப்போ நோன்புக் கொழுக்கட்டைக்கு வேண்டிய பொருட்கள்!

வெல்லக் கொழுக்கட்டைக்கு:

நல்ல பச்சரிசி இரண்டு கிண்ணம்

அரிசியை நன்கு சுத்தம் செய்து களைந்து கல்லரித்து இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கவும்.  பின்னர் நீரை வடித்து அரை மணி வைக்கவும். அதன் பின்னர் மிக்சி ஜாரில் போட்டு மாவாக்கவும்.  சலிக்கணும்னு கட்டாயம் இல்லை.  கொஞ்சம் கொரகொரப்பு இருக்கலாம்.  பிடிக்காதவங்க சலிச்சு எடுத்துக் கொண்டு நைசாக இருக்கும் மாவை வெல்லக் கொழுக்கட்டைக்கும், கொர, கொரப்பாக இருப்பதை உப்புக்கும் வைச்சுக்கலாம். பொதுவாக இந்த நோன்புக்கு மிஷினில் கொடுத்து திரிக்கும் வழக்கம் இல்லை. ஆனால் இப்போது சிலர் தயாராகக் கிடைக்கும் அரிசி மாவையோ அல்லது மெஷினில் கொடுத்து அரைத்தோ பயன்படுத்துகின்றனர்.  இது அவரவர் விருப்பம்.

மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக வெறும் வாணலியில் போட்டுக் கோல மாவு பதம் வரும் வரை வறுக்கவும்.  ஒரு தாம்பாளத்தில் போட்டு ஆற வைக்கவும்.

வெல்லம் தூள் செய்தது ஒரு கிண்ணம்

தேங்காய் மூடி ஒன்று, பல்லுப் பல்லாகக் கீறிக் கொள்ளவும்.

ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன்.

காராமணி அல்லது முழுத் துவரை  இரண்டு டேபிள் ஸ்பூன்.  முதல் நாளே ஊற வைத்துக் களைந்து கல் அரித்துக் கொஞ்சம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

நீர் தேவையான அளவு.


ஒரு வாணலி அல்லது வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கிண்ணம் நீரை விட்டுக் கொதிக்க விடவும்.  ஏற்கெனவே வேக வைத்துத் தனியாக வைத்திருக்கும் காராமணி/துவரையைச் சேர்க்கவும். வெல்லத் தூளையும் சேர்க்கவும். வெல்ல வாசனை போகக் கொதிக்க விடவும்.  பின்னர் வறுத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறிக் கொண்டே வரவும்.  தேங்காய்க் கீற்றுக்களையும் சேர்க்கவும்.  நன்கு கிளறி மாவு கெட்டிப் பட்டு சுருண்டு வருகையில் கீழே இறக்கி ஏலப் பொடியைச் சேர்த்து ஆற விடவும்.  இது கொஞ்சம் ஆறட்டும்.  அதுக்குள்ளே நாம,

இப்போது அடுத்து உப்புக் கொழுக்கட்டைக்கான முறையைப் பார்க்கலாம்.

மாவு முன் சொன்ன முறையில் தயாரித்து ஆற விடவும்.  இதற்கும் காராமணி//துவரை தேவை.  ஆகவே முன் சொன்னாற்போல் வெல்லக் கொழுக்கட்டைக்கு வேக விடுகையில் இதற்கும் சேர்த்து வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.  தேங்காய்க் கீற்றும் அப்படியே.  வெல்லத்துக்கும், இதற்கும் சேர்த்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தாளிக்க

சமையல் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு,

உ.பருப்பு

க.பருப்பு தலா ஒரு டீஸ்பூன்

இஞ்சி ஒரு துண்டு

பச்சை மிளகாய் அவரவர் ருசிக்கு ஏற்ப மூன்றிலிருந்து நான்கு

கருகப்பிலை

பெருங்காயம்

உப்பு

அடி கனமான வேறொரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, பருப்பு வகைகளைப் போட்டுத் தாளித்துக் கொண்டு இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை நறுக்கிய தேங்காய்த் துண்டுகள், பெருங்காயம் சேர்க்கவும். இரண்டு கிண்ணம் நீரை ஊற்றி உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும்.  நீர் கொதிக்கையில் வெந்த காராமணி/துவரையைச் சேர்க்கவும்.  வறுத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறவும்.  விரைவில் மாவு கெட்டிப்பட்டு உருண்டு திரண்டு வந்துவிடும்.  கீழே இறக்கி ஆற வைக்கவும்.

இப்போது ஒரு இட்லிக் கொப்பரை அல்லது வாணலியில் ஒற்றைத் தட்டில் வாழை இலையை எண்ணெய் தடவிப் பரப்பவும். , முதலில் வெல்லக் கொழுக்கட்டை மாவை ஒரு எலுமிச்சை அளவு எடுத்து வடை போல் தட்டி நடுவில் ஒரு சின்ன குழி செய்து இட்லிக் கொப்பரையில் இருக்கும் வாழை இலையில் வைக்கவும். ஒரே சமயம் இம்மாதிரிப் பத்துப் பதினைந்து அடைகள் செய்து வேக வைக்கலாம்.  குறைந்தது வாழை இலை பரப்பிய அந்தத் தட்டுக் கொள்ளும் அளவுக்கு வைக்கவும்.  பின்னர் மூடியால் மூடிவிட்டு ஐந்திலிருந்து பத்து நிமிஷம் வரை வேக வைக்கவும். திறந்து பார்த்தால் மேலே வேர்த்து விட்டிருக்கும்.  வெளியே எடுத்து  ஆற விடவும்.  எல்லா மாவையும் இதே போல் செய்யவும்.

இதே போல் உப்புக் கொழுக்கட்டை மாவையும் வடை போல் தட்டி நடுவில் குழி செய்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

சுவாமி அலமாரி அல்லது பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு எதிரே தனியாக இரண்டு கோலம் போட்டு, (நீங்க தனியா இருந்தால் இரண்டு கோலம், வீட்டில் இரண்டு, மூன்று நபர்கள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் தனித் தனிக்கோலம்) அதில் நுனி வாழை இலையை வைக்கவும்.  நல்ல சுத்தமான வெண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.  சுவாமி படங்களுக்கு எதிரே செய்த கொழுக்கட்டைகளை வைத்து, வேறொரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், உடைத்த தேங்காய், நோன்புச் சரடுகள் வைக்கவும்.  நோன்புச் சரடுகளை முதலிலேயே பூவோ அல்லது மஞ்சளோ வைத்துக் கட்டித் தயார் செய்யவும்.

நுனி வாழை இலையில் முதலில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் வைத்துவிட்டு இரண்டு அல்லது நான்கு வெல்லக் கொழுக்கட்டை, நான்கு உப்புக் கொழுக்கட்டையை இரு இலைகளிலும் அல்லது எத்தனை பேர் இருக்காங்களோ அத்தனை பேர் இலைகளிலும் வைக்கவும்.அவரவர் ஒவ்வொரு இலைக்கு முன்னாலும் நின்று கொள்ளவும்.  நோன்புச் சரடுகளையும் சேர்த்து அம்பிகையை வேண்டிக் கொண்டு நிவேதனம் செய்து வழிபட்டுக் கற்பூரம் காட்டவும். எல்லாருமே தனித்தனியாக நிவேதனம் செய்யலாம்.  எல்லாரும் நிவேதனம் செய்து முடிந்ததும் கற்பூர ஆரத்தி பொதுவாகச் செய்யலாம்.

பின்னர் ஒரு நோன்புச் சரடை முதலில் எடுத்து அம்மன் படத்தின் மேல் சார்த்தவும். அவரவர் குலதெய்வம் அம்மனாக இருந்தால் அந்தப் படத்தின் மேலேயும் சார்த்தலாம்.  பின்னர் வயதில் மூத்த சுமங்கலிப் பெண் முதலில் கழுத்தில் தான் கட்டிக் கொண்டு பின்னர் வயதில் சிறியவர்களுக்கு அவரே கட்டிவிடவேண்டும். ஒரு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தைக்கும் கட்டுவது உண்டு.  பின்னர் நிவேதனம் செய்த இலைகளில் இருந்து திருமணம் ஆன பெண்கள் வேறொரு தட்டு அல்லது இலையில் தங்கள் கணவன்மாருக்கு இந்த நிவேதனப் பிரசாதத்தைக் கட்டாயமாய் எடுத்து வைக்கவும்.  வகைக்கு ஒன்று என எடுத்து வைத்தால் கூடப் போதும்.  பின்னர் அவர்கள் சாப்பிட்டு முடிந்த பின்னர் கணவனுக்கு நிவேதனப் பிரசாதத்தைக் கொடுத்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் கணவருக்கும் வீட்டில் மற்றவர்களுக்கும் செய்த கொழுக்கட்டைகளைப் பகிர்ந்தளிக்கலாம்.

சுமங்கலிப் பெண்களுக்கு அன்று முழுதும் விரதம் என்பதால் நோன்பு நூற்கும் வரை பொதுவாக எதுவும் சாப்பிட மாட்டார்கள்.  நோயாளிகள், வயதானவர்கள், பசி தாங்க முடியாதவர்கள் கஞ்சியோ அல்லது சப்பாத்தி மாதிரியான ஆகாரமோ செய்து ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுக்கலாம்.  செய்த கொழுக்கட்டையில் குறைந்தது இரண்டாவது எடுத்து வைத்து நோன்பு முடிந்த மறு நாள் காலையில் பசுமாட்டுக்குக் கொடுக்க வேண்டும்.


எங்கே, இங்கே ஶ்ரீரங்கத்தில் பசுமாட்டுக்கு அப்படி எல்லாம் கொடுத்துட்டு அப்புறமா வீட்டுக்கு வரமுடியாது! :)))))  மாட்டுக்காரங்க சும்மா விடமாட்டாங்க!


எல்லாரும் எப்படி இருக்கீங்க?

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்தே. இந்தப் பக்கத்தில் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியாகும் வகையில் அமைத்திருந்தேன்.  அதனால் எனக்கு மின் மடல் வராமல் பின்னூட்டங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.  ஆனால் இப்போது அதை மாற்றி விட்டேன்.  மட்டுறுத்தலுக்கு உட்பட்டுப் பின்னூட்டங்கள் வெளியாகும் வகையில் மின் மடலுக்கு வரும்படி மாற்றிவிட்டேன். ஆகையால் படிக்கும் நண்பர்கள் பின்னூட்டங்கள் உடனே வெளியாகவில்லையே என எண்ண வேண்டாம்.  இப்போ ஒரு பாரம்பரிய செய்முறைக் குறிப்பைப் பார்ப்போமா?

நாளை காரடையான் நோன்பு.  எல்லாப் பெண்களுக்கும் நாளை கட்டாயமாய் நோன்பு  இருக்கும்.  இதை சாவித்திரி நோன்பு என்றும் சொல்வதுண்டு.  இதற்கு நிவேதனமாக அரிசி மாவில் செய்த வெல்லக் கொழுக்கட்டை, (ஒரு சிலர் அடை என்பார்கள்) உப்புக் கொழுக்கட்டை பண்ணுவாங்க.  சாவித்திரி காட்டில் கிடைத்த வரகரிசியில் மாவாக்கி, அங்கே கிடைத்தக் காராமணிகளைப் போட்டு, சுள்ளிகளைப் போட்டு எரிய வைத்து  வைக்கோலிலேயே அடைகளையும்  வேக வைத்து எடுத்தாள் என்பது செவிவழிக் கூற்று.  பல காலம் என்னோட அம்மா காரடையான் நோன்புக்காகவே மாட்டுக்காரர்களிடம் கேட்டு வைக்கோல் வாங்கி வந்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டு, இட்லிக் கொப்பரையில் துணி போடும் இடத்தில் அதற்கு பதிலாக வைக்கோலைப் போட்டு அதில் இந்தக் கொழுக்கட்டை/அடைகளைத் தட்டிப் போட்டு வேக வைப்பார்.

இப்போ அதெல்லாம் யாருக்கும் தெரியாத ஒன்று. :))) அடை செய்முறையை மட்டும் பார்ப்போம்.  இதை நோன்பன்று மட்டும் தான் செய்து சாப்பிடணும்னு இல்லை.  சாதாரணமான நாளிலும் மாலை டிஃபனுக்குச் செய்யலாம். வாங்க , மத்தியானமா அடுத்த பதிவுக்குப் போய் அடை செய்வது எப்படினு பார்க்கலாம்!

Thursday, February 6, 2014

தாளகமாம், தாளகம்!

இன்னிக்கு கொஞ்சம் மாறுதலா ஒரு குழம்பு செய்தேன்.  இதுக்குப்பருப்பு வேணும்னு அவசியம் இல்லை.  இதைத் தாளகக் குழம்புனு சொல்வாங்க.  எங்க வீட்டிலே இதை ராயர் குழம்புனு அப்பா சொல்லுவார். இதுக்கு நாட்டுக் காய்களே நன்றாக இருக்கும்.  நான் இன்னிக்கு அவரைக்காய், கத்தரிக்காய் மட்டும் போட்டுச் செய்தேன். பொதுவாக இதுக்கு அவரை, கத்திரி, வாழைக்காய், சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பறங்கிக்காய் போன்றவையே  நன்றாக இருக்கும்.  மறந்தும் கூட இங்கிலீஷ் காய்கள் எனப்படும் பீன்ஸ், உருளைக்கிழங்கு, காரட் போன்றவையோ பச்சைப்பட்டாணியோ வேண்டாம்.  பச்சை மொச்சை கிடைக்கும் காலத்தில் பச்சை மொச்சையும், அதுகிடைக்கவில்லை எனில் காய்ந்த மொச்சையையும், கொண்டைக்கடலையையும் போட்டுக்கலாம்.  படம் இன்னொரு நாள் பண்ணும்போது தான் எடுக்கணும்.  நேத்திக்கு ராத்திரி தேப்லா பண்ணினேன்.  படம் எடுக்க மறந்து போச்ச்! :))))

செய்முறை


நான்கு பேருக்குக்காய்கள் அனைத்தும் கலந்து கால் கிலோவுக்குள்போதும். அல்லது

வாழைக்காய் சின்னது ஒன்று

கத்தரிக்காய் இரண்டு

அவரைக்காய் ஒரு கைப்பிடி

சேனைக்கிழங்கு நூறு கிராம் அளவு

பறங்கிக்காய் நூறு கிராம் அளவு

சர்க்கரை வள்ளிக் கிழங்கு கிடைச்சால் ஒன்று

பச்சை மொச்சை அல்லது மொச்சைப்பருப்பு ஒரு கைப்பிடி

கொண்டைக்கடலை  ஒருகைப்பிடி

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு. ஊறவைத்துக் கரைத்து வடிகட்டுச் சாறு எடுத்துக் கொள்ளவும்.  சாறின் அளவு இரண்டு கிண்ணம் இருக்கலாம்.

உப்பு தேவைக்கு

வறுத்து அரைக்க

மஞ்சள் பொடி அல்லது விரலி மஞ்சள் ஒரு துண்டு

மிளகாய் வற்றல்  நான்கு

கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

மிளகு ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க

கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, கொத்துமல்லி, மி.வத்தல்

தாளிக்க வறுக்க

சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

காய்களைத் துண்டம் துண்டமாக அல்லது நீள வாட்டில் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி எடுத்து நறுக்கிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.  காய்கள் பாதி வெந்ததும் புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வறுக்கவும்.  தேங்காயையும் வறுக்கலாம்.  மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதைச் சேர்த்துத் தேவையான உப்பை மட்டும் சேர்க்கவும். ஒரு கொதி விட்டதும் இன்னொரு இரும்புக் கரண்டியில் மிச்சம் எண்ணெயை ஊற்றிக் கடுகு, மி.வத்தல், உ.பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும்.  கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும். வெறும்  சாதம், மற்றும் கலந்த சாதங்களோடு சாப்பிட ஏதுவானது.  சாதம் மட்டும் வைத்துக்கொண்டு இப்படிக் காய்களைப் போட்டுக் குழம்பு செய்து அப்பளம் பொரித்துக் கொண்டோ அல்லது வடாம், வத்தல் வறுத்துக் கொண்டோ சாப்பிட்டுக்கலாம்.


இதுவே இன்னொரு முறையிலும் செய்வார்கள்.  அதில் காய்கள் சேர்க்கும் விதம், புளித்தண்ணீர் சேர்ப்பது எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும் வறுத்து அரைப்பதில் மாறுதல் இருக்கும்.

வறுத்து அரைக்க

மி.வத்தல்.      5

கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு  ஒரு டீஸ்பூன்

உ.பருப்பு                  ஒரு டீஸ்பூன்

வெள்ளை எள்       அரை டீஸ்பூன்

வெந்தயம்               அரை டீஸ்பூன்

பெருங்காயம்

தேங்காய்த் துருவல்

கருகப்பிலை

இவை எல்லாவற்றையும் வறுத்து கருகப்பிலையையும் வறுத்து அரைத்துச் சேர்ப்பார்கள்.  இதுவும் ஒரு மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.

தென் மாவட்டங்களில் வெண் பொங்கலும், தாளகக் குழம்பும் ரொம்பவே பிரபலம் ஆன ஒரு விஷயம்.  அதுவும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் கன்னிப் பெண்கள் இருந்தாலோ (பத்து வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும்) அல்லது அக்கம்பக்கம் இருந்தாலோ அவங்களுக்கு வெண் பொங்கல் செய்து இந்தக் குழம்பையும் பண்ணி எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்துச் சாப்பிட வைப்பாங்க.  புதுத் துணிகள் எடுத்துக் கொடுக்கிறதும் உண்டு.  வெறும் வெற்றிலை, பாக்கு, காசு கொடுப்பவர்களும் உண்டு.  இப்போதெல்லாம் இந்தப் பழக்கம் இருக்கானு தெரியலை.