எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, June 5, 2020

சமையலில் பாரம்பரியம் உண்டா?

இந்தத் தென்னிந்தியச் சமையலுக்கே பாரம்பரியச் சமையல் என்றே பெயர். இப்போதெல்லாம் இம்மாதிரி முழுச் சமையல் பலவீடுகளிலும் செய்வதில்லை. எல்லோருடைய சாப்பாட்டு முறையும் மாறி விட்டது. ஆகவே சுமார் 40,50 வருடங்களுக்கு முன்னர் நாம் என்ன சமைத்தோம், என்ன சாப்பிட்டோம் என்பதைச் சொல்வதற்காகவே இந்தப் பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். அதோடு இளைய தலைமுறைகளில் சிலருக்கு இந்தப் புராதனச் சமையல் முறை பிடிபடவே இல்லை. எளிதாகக் குக்கரில் அரிசியோடு காய்களையும் நறுக்கிச் சேர்த்து மசாலாப்பொடிகளோடு உப்பைச் சேர்த்து வேகவிட்டு எடுப்பது அவர்களுக்கு சுலபமாக இருக்கிறது. இப்போதெல்லாம் யாரும் நீட்டி முழக்கிக் கொண்டு, சாம்பார், ரசம், மோர், காய்கள் எனச் சாப்பிடுவதில்லை. ஏதேனும் ஒரு காய்! அதை எதில் வேண்டுமானாலும் போட்டுக்கலாம். முடிந்தால் ஒரு குழம்பு! அல்லது அந்தக் காயைத் தொட்டுக்கொண்டே சாப்பாடு. மோர் சாதம் விரும்பினால்! இல்லைனா மோரைக்குடிச்சுடுவோம். இதான் பெரும்பாலான இளைய தலைமுறையினர் செய்வது.

அவர்களுக்கு நாம் பரம்பரையாக என்ன செய்து வந்தோம் என்று தெரிவதும் குறைந்த பக்ஷம் விசேஷ நாட்களிலாவது அவரவர் வீடுகளில் செய்து கொண்டிருந்த பண்டிகைச் சமையலைச் செய்யவும் அதைப்பற்றித் தெரிந்து கொள்ளவுமே எழுத ஆரம்பித்தேன். நடுவில் சில வீடுகளில் ஒத்துப் போகாத சமையல்களைச் செய்வது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். புளி விட்டு அரைத்து விட்ட சாம்பார் பண்ணினால் அதுக்குத் தொட்டுக்க இப்படிக் கறி பண்ணலாம், கூட்டு எனில் பொரிச்ச கூட்டு மாதிரிப் பண்ணலாம். என்று குறிப்பிட்டிருந்தேன். சாம்பாரோ, குழம்போ இரண்டிலும் புளி விட்டுப் பண்ணிவிட்டுத் தொட்டுக்கொள்ளும் காயிலும் புளி விட்டு அதே அரைத்து விட்ட சாம்பாருக்கு அரைச்சதை இந்தக் கூட்டிலும் கலந்தால் இரண்டும் ஒரே மாதிரி ருசியில் அமையும். ஆகவே அப்படிப் பண்ணாமல் மாற்றிப் பண்ண வேண்டும் என்று சொல்லி இருந்தேன். சென்ற பதிவிலும் அதைக் குறிப்பிட்டுச் சிலர் மாறுவதில்லை என்றும் சொல்லி இருந்தேன். முகநூலில் கொடுத்த சுட்டிக்கு அந்தப் பதிவுக்குக் கருத்திட்ட நண்பர் ஒருத்தர் இதில் எல்லாம் நீங்கள் தலையிட முடியாது; பாரம்பரியம்னு ஒண்ணு இல்லவே இல்லை. உங்க இஷ்டப்படி மாற முடியாது. நீங்க அப்படி எதிர்பார்க்கக் கூடாது என்றெல்லாம் ஆலோசனைகள் கொடுத்திருக்கார்.

இஃகி,இஃகி,இஃகி, இதைப் பற்றி விரிவாகச் சொல்ல முடியலை; சொல்லவும் முடியாது! ஆகவே விட்டுடுவோம். ஆனால் நம் வீடுகளில் தினசரி சமைக்கும் முறை இன்னமும் முழுக்க முழுக்க மாறவில்லை. பலரும் தினம் ஏதேனும் குழம்பு, ரசம், கறி, கூட்டு என்று பண்ணுகிறார்கள். அப்படிப் பட்டவர்களுக்காக மட்டுமே இந்தப் பதிவுகள். மற்றபடி காய்கள் வெட்டுவதைப் பற்றியோ, அவியலில் புளி சேர்ப்பதைப் பற்றியோ நான் எங்கும் குற்றம் சொல்லவில்லை. ஆனாலும் அவியலுக்கு என நீளமாகவே காய்களை நறுக்கணும். நறுக்கும்போதே அவியலுக்கா எனக் கேட்பார்கள். அதே போல் எரிசேரிக்குச் சேனைக்கிழங்கைச் செதுக்கித் தான் எடுப்பார்கள். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முறை இருக்கத் தான் செய்கிறது.  மோர்க்கூட்டு எனில் சிவப்பு மிளகாய் வைத்து ஜீரகம் சேர்ப்பதில்லை. அதே போல் அவியலிலும் பெரும்பாலும் ஜீரகம் சேர்ப்பதில்லை. கடலைப்பருப்பெல்லாம் ஊற வைச்சு அரைச்சு அவியலில் சேர்க்க மாட்டோம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செய்முறை தனியே இருக்கிறது. குறைந்த பக்ஷம் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

மேற்சொன்னவற்றிலேயே ஒவ்வொரு வீடுகளில் ஒவ்வொரு மாதிரிப் பண்ணுவார்கள். இது அவரவர் வழக்கம். இதில் நாம் தலையிட முடியாது. சிலர் குழம்பு வைத்துக் கூட்டு மட்டும் பண்ணுவார்கள். இன்னும் சிலர் கூட்டுப் பண்ணி ரசம் மட்டும் வைப்பார்கள். வெறும் வெந்தயம் தாளித்தாலே வெந்தயக்குழம்புனு சொல்லுபவர்கள் உண்டு. மி.வத்தல், துவரம்பருப்பு, வெந்தயம் வறுத்து அரைத்தால் தான் வெந்தயக்குழம்புனு சொல்லுபவர்களும் உண்டு. இதில் எல்லாம் மாறுபாடுகள் இருக்கும். ஆனால் அடிப்படை மாறாது! ஆகவே நான் தொடர்ந்து எழுதுவதில் பிரச்னை ஏதும் இல்லைனு நினைக்கிறேன். அவரவர் வீட்டு வழக்கப்படி மாற்றியோ அல்லது மாற்றாமலோ சமைக்கலாம். இதுவரைக்கும் சமையல் புத்தகங்கள் எழுதினவர்கள் அனைவரும் இப்படித் தான் பொதுவான அடிப்படை சமையலையே எழுதி வந்திருக்கின்றனர். இங்கேயும் அது தான்! அதிலும் இப்படிச் சேர்க்கவேண்டும்/இப்படிச் சேர்க்கக் கூடாது என்றெல்லாம் சொல்லி இருப்பார்கள்.  இது ஒரு பொதுவான வழக்கம். சமைக்கும் முறை மட்டும் இன்றிப் பரிமாறும் முறை, சாப்பிடும் முறை என்றெல்லாம் உள்ளது. அதுக்கெல்லாம் போகலை! :)))))))

34 comments:

  1. அன்பு கீதாமா,
    நீங்கள் எழுதுங்கள் .நம் பாரம்பரியச் சமையலுக்கு அர்த்தம் இருப்பதால்
    அதைப் பின் பற்ற வேண்டும்.

    நிறையப் பேர் இதை உணர வேண்டும்.
    உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து
    படிப்பவர்களுக்கு இது புரியும். நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, ஏற்கெனவே வழிபாட்டு முறைகளில் இருந்து எல்லாமும் மாறிக்கொண்டிருக்கிறது. இதிலே சமையலிலும் பாரம்பரியம் இல்லைனு கொடி பிடிக்கிறாங்க. என்னத்தைச் சொல்லுவது?

      Delete
    2. //வழிபாட்டுமுறை// - இது முக்கியமான பாயிண்ட் கீசா மேடம். நான் சிறுவயதில் இருந்த நிலைக்கும் இப்போதைக்கும் மிகவும் வேறுபாடு இருக்கிறது. பாரம்பர்யங்கள், நீர்த்துப்போவது போல எனக்குத் தோன்றுகிறது.

      Delete
    3. வழிபாட்டு முறை முற்றிலும் மாறிவிட்டது நெல்லைத்தமிழரே!

      Delete
  2. குழம்பு, ரசம், காய், கூட்டு, மோர், ஊறுகாய் என்று சாப்பிடுவது எனக்கே கிடையாது கீசா மேடம். எனக்கு ஏதேனும் ஒன்றுதான் சாப்பிட முடியும். ஒன்று சாம்பார் சாதம் (குழம்பு சாதம்) இல்லைனா சாத்துமது இல்லைனா மோர் சாதம். முதல்லல்லாம் என் மனைவி குழம்பு, சாத்துமது பண்ணுவா. நான் ஏதேனும் ஒன்றைத்தான் சாப்பிடுவேன். பஹ்ரைனில் இருந்தபோது, போகி அன்று மட்டும் முழுச் சாப்பாடு, வடை பாயசத்துடன் செய்து, அதற்காகவே ஒரு இலை 18 ரூபாய் என்று 4 இலை வாங்குவேன், இலையில் அன்று சாப்பாடு.

    ReplyDelete
    Replies
    1. நாங்க இன்னமும் இந்த அசட்டுத்தனங்களைப் பின்பற்றி வருகிறோம் நெல்லைத்தமிழரே! தினமும் ரசம் வேண்டும். மோரும் வேண்டும். கொஞ்சமாகப் போட்டுக் கொண்டு கொஞ்சமாக ரசம் வைத்து விட்டுப்போம். மிஞ்சறாப்போல் பண்ணுவதில்லை.

      Delete
    2. உங்க வீட்டுல கூப்பிட்டு சாப்பாடு போட்டாலும், நான் ஏதேனும் ஒன்றுதான் சாப்பிடுவேன். ஹா ஹா. யாத்திரை செல்லும்போது அனேகமா, குழம்பு சாதம் மட்டும்தான் சாப்பிடுவேன். அவங்க என்னதான் சொன்னாலும் (இன்னைக்கு மிளகு சீரக சாத்துமது ரொம்ப நல்லாருக்கும் என்பதுபோல) நான் சாப்பிடமாட்டேன். அதுபோல பாயசம் சாப்பிட்ட உடனேயே என் உணவு முடிந்துவிடும். மோர் சாதமோ இல்லை தயிர் சாதமோ போட்டுக்க மாட்டேன்.

      Delete
    3. நானும் மோர் சாதம் சாப்பிட நேர்ந்தால் அதற்குப் பின்னரே பாயசம். பாயசத்துக்கப்புறமா எதுவும் சாப்பிட மாட்டேன்.

      Delete
  3. ஒவ்வொன்றுக்கும் ஒரு செய்முறை இருக்கு - இது அந்த அந்தப் பகுதிக்கு ஏற்றபடி மாறும்னு நினைக்கறேன். உதாரணமா எங்க வீட்டுல (அம்மா) புளிவிட்டுதான் அவியல் செய்வாங்க (கொஞ்சமா புளி ஜலம் சேர்ப்பாங்க). நான் அதற்கு ஈடா மாங்காய் சேர்ப்பேன்.

    எனக்கு தயிர் இல்லாமலேயே அவியல் பிடிக்கும். ஆனா எங்க வீட்டில் தயிர் சேர்ப்பாங்க.

    அவியல் சாப்பிடும்போது நெருடக்கூடாது. அதாவது முற்றின வெண்டை, முருங்கைக்காய் சேர்ப்பது, இப்போ புதுசா பட்டாணி சேர்ப்பது இதெல்லாம் எனக்குப் பிடிப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. அவியலில் வெண்டைக்காயா? ஙேஏஏஏஏஏஏஏஏஏ! முருங்கைக்காய்ப் பிஞ்சாக இருந்தால் வாசனைக்குச் சேர்ப்பது உண்டு. நான் அவியலில் சேர்ப்பது நாட்டுக்காய்கள் மட்டுமே. வாழைக்காய், சேனைக்கிழங்கு, கொத்தவரை, கத்திரிக்காய், பூஷணிக்காய், சாட்டைப்பயறு(கிடைத்தால்), எப்போவானும் விசேஷங்களில் காய்கள் நிறைய இருக்கணும் என்பதால் பீன்ஸ், காரட் சேர்ப்பேன். பச்சைப்பட்டாணி எல்லாம் சேர்த்ததே இல்லை. இதே போல் திருவாதிரைக்குழம்புக்கும் நாட்டுக்காய்கள் தான். அவியலில் சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு சேர்ப்பதில்லை.

      Delete
    2. ஹா ஹா... நான் அவியலில் சேப்பங்கிழங்கும், வெண்டைக்காயும் சேர்ப்பேன். பையனுக்கு அவியலில் இந்த இரண்டும் பிடிக்காது. என் பெண், உருளை எதுக்குப் போடறீங்க என்பாள். ஆனா பாரம்பர்ய அவியல் என்றால் நாட்டுக் காய்களை மட்டும் போட்டுப் பண்ணுவதுதான்.

      Delete
    3. அவியலில் வெண்டைக்காயா? ஹையோ, ஹையோ! சேப்பங்கிழங்கு சேர்த்துப் பாத்திருக்கேன். வெண்டைக்காய்! கடவுளே! உங்க வீட்டுக்கு நாங்க சாப்பிட வந்தா அன்னிக்கு நோ அவியல்.

      Delete
    4. //உங்க வீட்டுக்கு நாங்க சாப்பிட வந்தால்// - ஐயையோ... வெறும்ன படங்கள்லாம் போட்டு ஆஹா ஓஹோன்னு தன்னைத் தானே புகழ்ந்துகொண்டேனே... சாயம் வெளுத்துடுமா? இங்க பக்கத்துல ஏதேனும் கேடரர் உண்டான்னு பார்க்கணுமே... ஐயையோ..அவன் எங்கயாவது வெல்லத்தைப் போட்டிருந்தால் அந்தப் பொய்யும் தங்காதே.. பேசாம ஏகாதசி அன்று வந்தால்தான் தப்பித்தேன். இந்தாங்க எங்க வீட்டு விருந்துன்னு துளசி ஜலம் கொடுத்துடலாம்.

      Delete
    5. இதைத் தான் திருநெல்வேலிக்காரங்க உபசாரம்னு சொல்லுவாங்க. தஞ்சை ஜில்லாவில் திருப்பந்துருத்தி உபசாரம். இந்த உணவு வகைகளைக் கொடுத்து எல்லோரையும் கவர்வதிலே எங்க மதுரையை அடிச்சுக்க வேறே ஊர் ஏதும் இல்லை. ஹாஹாஹாஹாஹாஹாஹா

      Delete
  4. நீங்க சொல்லும் பாரம்பர்யத்தைப் போலவே, அமாவாசை அன்று வாழைக்காய் உபயோகிக்கணும், துவாதசி, புளி சேர்க்கக்கூடாது, அகத்திக்கீரை சாப்பிடணும் என்றெல்லாம் முறை இருக்கு (ஏகாதசி விரதம் இருந்தால் ஹா ஹா).

    என் மனைவி ஒரு நோட்டில், என்ன என்ன பண்டிகைக்கு என்ன என்ன செய்யணும் என்று திருமணமாவதற்கு முன்பு எழுதி இருந்தாள் (அவள் அம்மாவிடம் கேட்டு). இதெல்லாம் பொக்கிஷம் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. கூடியவரை நாங்க கடைப்பிடிக்கிறோம் நெல்லைத்தமிழரே, அமாவாசை அன்று புளி விட்டு, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வாழைக்காயை வேக வைத்து எடுத்துக்கொண்டு மி.வ.கொமவி, கடலைப்பருப்பு, தேங்காய் வறுத்து அரைத்த பொடி போட்டு அமாவாசைக் கறி தான்! எப்போவானு கொத்தவரை அல்லது அவரை. கத்திரிக்காய் அன்னிக்குச் சமைக்க மாட்டோம். அதே போல் விரதம் இருக்கும் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய் கட்டாயம் இருக்கும். துவாதசி அன்னிக்குப் பொரிச்ச குழம்பு தான். எலுமிச்சம்பழ ரசம்.

      Delete
    2. முன்னெல்லாம் அமாவாசைக்கும் துவாதசிக்கும் பாயசம் வைத்துக் கொண்டிருந்தேன். இப்போ நோ பாயசம். அதோடு விரதம் இருக்கக் கூடாதுனு மருத்துவர்கள் நிபந்தனை வேறே!

      Delete
    3. ஓ அக்கா நம் வீட்டில் அமாவாசை அன்று மஞ்சள் பொடி சேர்க்கமாட்டாங்க என் மாமியார். அதே போல அன்று மிளகு, உளுத்தம் பருப்பு, வற்றல் மி வறுத்து பொடி செய்து போடுவாங்க. குழம்பும் மிளகு குழம்புதான் இருக்கும் து பருப்பு சேர்க்க மாட்டாங்க. ஒன்லி பாசிப்பருப்பு.

      திவசத்தின் போது சேர்க்கப்படும் காய்கள் மட்டுமே அன்று சமைப்பாங்க.

      கீதா

      Delete
    4. அமாவாசை அன்று மஞ்சள் பொடியெல்லாம் சேர்ப்போம். காய்கள் தான் நாட்டுக்காய்கள் மட்டும். வாழைக்காய், அவரை, கொத்தவரை, புடலை, பாகல் இப்படி. மற்றபடி சமையல் எல்லாம் சாதாரணச் சமையல் தான்.

      Delete
  5. உங்க வழக்கப்படி நீங்க எழுதுங்க. நீங்க என்ன பத்திரிகையா நடத்தறீங்க...வாசகர் ரசனைப்படி வழக்கத்தை மாற்றுவதற்கு.

    நீங்க எல்லா டாபிக்குகளிலும் (கலத்தில் பரிமாறும் முறை, சாப்பிடும் முறை என்பதையும்) எழுதுங்க.

    அவ்வப்போது நம்பெருமாள் தொடரை அந்தரத்தில் விட்டுவைத்திருக்கோம் என்பதையும் மறக்காதீங்க. அவரை விரைவில் ஸ்ரீரங்கத்தில் கொண்டுபோய்ச் சேருங்க. 8 மாசமாச்சு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெல்லைத்தமிழரே, வர வரப் பாரம்பரியங்களைப் பின்பற்றினால் அவங்களை துரோகி என்று சொல்லிவிடுவார்கள் என நினைக்கிறேன். :)))))) வயதில் பெரியவங்களே பாரம்பரியம் என்ற ஒன்று கிடையாது எனச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

      Delete
  6. அவியலுக்கு இப்படி, சேனைக் கறிக்கு இப்படி என்று ஒவ்வொரு ஐட்டத்துக்கும் காய்களை நறுக்கும் விதமே தனியாக இருக்கும்.  இப்போது அப்படி எல்லாம் பார்ப்பதில்லை.  எப்படி வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது சரிதான் ஸ்ரீராம், காய் நறுக்குவதை வைத்தே என்ன பண்ணப் போறோம் என்பதைச் சொல்லிவிடலாம். ஆனால் இப்போல்லாம்! :(((((

      Delete
    2. இன்னும் பத்து வருடங்களுக்குள்ள (அதுக்கு முன்னாலேயே வருவதற்கு நமக்கு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மும்பை போல இல்லை), காய்கறிகளை வெட்டி பாக்கெட் போட்டு விற்பாங்க. சின்ன வெங்காயம், அவியலுக்கான காய் என்று எல்லாம் கிடைத்துவிடும். நம்ம வேலை, பாக்கெட்டை வாங்கினோமா, சட்னு பண்ணினோமா என்று ஆகிவிடும்.

      பழமுதிர்சோலை போன்ற கடைகளில் இப்போவே கிடைக்குது. ஆனால் என் மனதில், கொஞ்சம் வீணாப்போன காய்கறிகளை சீர் செய்து இந்த மாதிரி கட் பண்ணி தலைல கட்டிடறாங்களோன்னு.

      Delete
    3. அம்பேரிக்காவில் காரட், வெண்டைக்காய் "ஓக்ரா" என்னும் பெயரில், அவரைக்காய், கொத்தவரைக்காய், சேனைக்கிழங்கு எல்லாம் வெட்டிப் பைகளில் போட்டு ஃப்ரீஸரில் வைத்திருப்பார்கள். வாங்கிச் சமைக்கலாம். சேனைக்கிழங்கு பெரிதாக வெட்டி இருப்பார்கள். அதனால் காலம்பரவே எடுத்து வைச்சுட்டுக் கொஞ்சம் நறுக்கிக் கொண்டு சமைப்பேன். மற்றவற்றை அப்படியே வெந்நீரில் அலம்பிட்டுச் சமைக்கலாம்.

      Delete
  7. நீங்கள் எழுதி வரும் இந்தப் பக்கங்கள் என்றென்றைக்கும் நல்ல ரெஃபரென்ஸாக இருக்கும்.  நெல்லை சொல்வது போல மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ஸ்ரீராம், தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுப்பதற்கு மிகவும் நன்றி.

      Delete
  8. போற்றுவார் போற்றட்டும்... தூற்றுவார் தூற்றட்டும்....

    நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நன்றி. தொடர்ந்து எழுதுவேன். :)

      Delete
  9. அக்கா இட்ஸ் ஓகே அக்கா நீங்க உங்கள் செய்முறைப்படி போடுங்க. யார் யாருக்குப் பயனுள்ளதாக இருக்குமோ அவங்க பார்த்துக்குவாங்க..

    யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே ஐயன் கருணையைப் பாடு என்ற பாடல் ஏனோ டக்கென்று நினைவுக்கு வந்தது!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, அதெல்லாம் பயமில்லை. இதை விட மோசமாக எல்லாம் பார்த்துட்டேன். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாக் கேட்டு வைத்துக் கொண்டேன்.

      Delete
  10. காய் நறுக்குவது என்பது ஒரு கலைதான்.

    ஆனால் இப்போது இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் பேச்சுலர்ஸ் எல்லாரும் விதரணையாகச் சமைக்க முடியாததால் அவர்கள் ஷார்ட்டாகச் சமைக்கிறார்கள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வயிறு காயாமல் இருந்தால் போதும் என்பதே அவங்க எண்ணம்.

      Delete
  11. நான் அவியலுக்கு நாட்டுக் காய்கள்தான் பயன்படுத்துவேன்.
    எங்கள் சமையல் முறைகள் வேறு உங்களுக்கு தெரிந்திருக்கும். தேங்காய்பாலும் காய்ந்தமிளகாய் காரமும் கூடவாக இருக்கும்.தேங்காய்பால் விடுவதால் பருப்பு பொதுவாக போடமாட்டோம். சாம்பார், பொரியல் வகைக்குத்தான் பருப்பு சேர்ப்போம்.
    பாரம்பரிய சமையலை தொடருங்கள் நாங்களும் அறிந்து கொள்வோம்.

    ReplyDelete