எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, June 29, 2020

(எங்க வீட்டுப்) பாரம்பரியச் சமையலில் பூரி, பாதாம் பாயச வகைகள்!

பால் பாயசத்துக்குப்- பின்னர் கிட்டத்தட்டப் பதினைந்து நாட்களாக எதுவும் போடவில்லை என நெல்லைத் தமிழர் கேட்டிருக்கார். என்னமோ நேரமே வாய்க்கலை.  அதோடு மனச்சோர்வு, கவலை, வருத்தம், அடுத்து என்ன ஆகுமோனு எண்ணங்கள். இம்மாதிரியான ஒரு நிலைமையைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. இன்னிக்குச் சரியாயிடும், நாளைக்குச் சரியாயிடும் என்பது நீண்டு கொண்டே போகிறது. கஷ்டப்பட்டு மனதை ஒருமுகப் படுத்திக் கொண்டு எழுத முயற்சிகள் செய்யணும். அந்தக் கொஞ்ச நேரமாவது மனது வேறே திசையில் ஈடுபடணும். இப்போதைக்கு இது ஒன்று தான் செய்ய முடியும்.
*********************************************************************************

அடுத்த பாயசம் பூரிப் பாயசம். என்னடானு பார்க்கிறீங்களா? இப்படி ஒரு பாயசம் இருக்கு! மைதாமாவிலோ, கோதுமை மாவிலோ அல்லது ரவையோ அல்லது மூன்றும் கலந்தோ மாவு பிசைந்து பூரிகளாக இட்டுப் பொரித்து எடுக்கணும்.

ரவை மட்டுமென்றில் நைசாக இருத்தல் வேண்டும். இல்லை எனில் அரைக்கிண்ணம் ரவை+அரைக்கிண்ணம் மைதா அல்லது கோதுமை மாவு என பாதி ரவை பாதி மைதா அல்லது கோதுமை மாவு போட்டுக் கொள்ளலாம். ஒரு சிட்டிகை உப்புப் போட்டு ஒரு டீஸ்பூன் நெய்விட்டு மாவை நன்றாகக் கலந்து கொண்டு ஒரு கிண்ணம் வெதுவெதுப்பான பாலில் நன்றாகப் பூரி மாவு மாதிரிப் பிசைந்து வைக்கவும். பிசைந்த மாவு கொஞ்ச நேரம் ஊறட்டும். நன்கு ஊறிய பின்னர் மாவை மீண்டும் கைகளால் நன்கு பிசைந்து கொண்டு ஒரு வாணலியில் நெய் வைத்துக் கொண்டு நெய்யைக் காய விடவும். நெய் காய்ந்ததும் அடுப்பைத் தணித்துக் கொண்டு அந்த மிதமான சூட்டிலேயே  பிசைந்த மாவில் பூரிகளாக இட்டுக் கொண்டு அதை டைமன்ட் ஷேப்பில் வெட்டிக் கொண்டு பொரித்து எடுக்கவும். எல்லா மாவையும் இம்மாதிரிப் பூரிகளாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடி கனமான ஒரு பாத்திரத்தில் 3 கிண்ணம் நீரை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். நீர் கொதித்ததும் பொரித்தெடுத்த பூரிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வேக வைக்கவும். இது கொஞ்சம் வேலை வாங்கும். பூரிகள் வெந்ததும் ஏற்கெனவே காய்ச்சிச் சுண்ட வைத்த பாலைச் சேர்க்கவும். இன்னும் கொஞ்சம் கொதிக்கவிட வேண்டும். பால் நீர் வற்றிச் சுண்ட ஆரம்பிக்கையில் சர்க்கரை சேர்க்கவும். ஒரு சிலர் ஆரம்பத்தில் நீரில் வேகவிடும்போதே சர்க்கரையும் சேர்க்கின்றனர். அப்படிச் சேர்க்கையில் சில சமயங்களில் பால் திரிந்து விடுகிறது. ஆகவே பின்னால் சேர்த்தால் நல்லது. நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்துப் பின்னர் நெய்யில் முந்திரிப்பருப்பு, சாரப்பருப்பு, பிஸ்தாப்பருப்பு ஆகியவற்றை வறுத்துச் சேர்த்து ஏலக்காய், குங்குமப்பூ சேர்க்கவும். குங்குமப் பூ இல்லை எனில் ஜாதி பத்திரியைப் பாலில் ஊற வைத்துச் சேர்க்கலாம்.

பாதாம் கீர் அல்லது பாயசம். சுமார் நூறு கிராம் பாதாம். சர்க்கரை சம அளவு, சுண்டக் காய்ச்சிய பால் அரை லிட்டர், ஏலக்காய், குங்குமப்பூ அல்லது ஜாதிபத்திரி. மேலே தூவப் பொடியாக நறுக்கிய பாதாம்பருப்புகள், முந்திரிப்பருப்பு, சாரப்பருப்பு.

பாதாமை ஊற வைத்துத் தோலுரித்துக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் ஜலத்தைக் கொதிக்க வைத்து அரைத்த விழுதைப் போட்டு மிக்சி ஜாரையும் அலம்பி ஜலத்தைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறிக் கொடுக்கவும். நன்கு கெட்டிப்படும் சமயம் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரையும் பாதாமும் சேர்ந்து கெட்டியானதும் சுண்டக் காய்ச்சிய பாலைச் சேர்க்கவும். பால் சேர்த்ததும் அதிகம் கொதிக்க வேண்டாம். ஏலக்காய்த் தூள்,குங்குமப்பூ அல்லது ஜாதி பத்திரி சேர்த்து நெய்யில் பொடியாக நறுக்கிய பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, சாரப்பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். இதைக் குளிர வைத்தும் சாப்பிடலாம். சூடாகவும் சாப்பிடலாம். பாதம் நூறு கிராம் இல்லை எனில் 50 கிராம் பாதாமோடு 50 கிராம் முந்திரியைச் சேர்த்துக் கொள்ளலாம். முதலில் பாதாமை அரைத்த பின்னர் முந்திரியைச் சேர்த்து அரைக்க வேண்டும். மற்றவை முன் சொன்ன மாதிரித் தான்.

பாதாம் கீர் | badam kheer - Dinakaran

படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினகரன்


அடுத்து பாசுந்தி எனப்படும் ஒரு பாயச வகை. இது மஹாராஷ்ட்ராவில் ரொம்பவே பிரபலம். விருந்தினர் வருவதாக இருந்தால் முதல் நாளே செய்து வைத்துவிடுவார்கள். ஏனெனில் இதைச் சூடாகவும் சாப்பிடலாம், குளிர வைத்தும் சாப்பிடலாம். இதற்குத் தேவைக் கொஞ்சம் கூட நீர் கலக்காத கொழுப்புச் சத்தை எடுக்காத சுத்தமான பால். பால் கறந்து வாங்குவது நல்லது. ஆனால் இப்போதெல்லாம் இங்கே அப்படிக் கிடைப்பதில்லை என்பதால் கொழுப்புச் சத்துள்ள பாலாக வாங்கிக் கொள்ளவும். சிலர் இதோடு மில்க் மெயிட் சேர்க்கிறார்கள். நான் பெரும்பாலும் வட மாநிலங்களில் இருந்ததால் அங்கே நல்ல பால் எப்போதும் புதிதாகக் கிடைக்கும். அந்த மாதிரிப் பால் எனில் இரண்டு லிட்டர் பால் தேவை. இதற்குச் சர்க்கரை கொஞ்சம் குறைவாகவே போட்டுக் கொள்ளலாம். சுமார் அரைக்கிண்ணம் சர்க்கரை இருந்தால் போதும். பாசுந்தி மேலே தூவ ஏலக்காய்த் தூள், பாதாம், முந்திரி, பிஸ்தா பொடியாக நறுக்கியது. நெய்யில் வறுத்தோ வறுக்காமலோ! குங்குமப்பூக் கிடைத்தால் அதைப் பாலில் ஊற வைக்கவும்.

பாலை ஒரு அடி கனமான பாத்திரத்தில் விட்டு நன்கு காய்ச்சவும். பால் பொங்கும் சமயம் அடுப்பைத் தணித்துக் கிட்டே இருந்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். பால் கொதிக்கக் கொதிக்க அதில் ஆடை படியும். அந்த ஆடைகளைப் பாத்திரத்தின் ஓரத்தில் ஒதுக்கிக் கொண்டே வரவும். கடைசியில் பால் சேறு மாதிரி வரும் சமயம் சர்க்கரையைச் சேர்த்து ஒதுக்கிய ஏடுகளையும் பாலில் சேர்த்து நன்கு கிளறவும். எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு ஏலப்பொடி, பாதாம், முந்திரி, பிஸ்தா தூவவும். தேவையானால்/கிடைத்தால் குங்குமப்பூச் சேர்க்கவும்.

இனிப்பான பாஸந்தி செய்வது எப்படி ...


படத்துக்கு நன்றி: கூகிளார் வாயிலாக மாலை மலர்

26 comments:

  1. சொல்லப்பட்டிருக்கும் வகைகள் ருசிக்க ஆவலாகத்தான் இருக்கிறது.  செய்யும் அலுப்புதான் கண்ணைக் கட்டுகிறது!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், நிச்சயமா இவை எல்லாமே வேலை வாங்கக்கூடிய உணவு வகைகளே! உடலும் மனமும் ஒத்துழைக்கணும்.

      Delete
  2. நீங்கள் முதலில் சொல்லி இருப்பது போலதான் என் மனநிலையும்.  அதுவும் தினசரி வெளியில் சென்று வருவதால் வரும் மனக்கலக்கமும் சேர்ந்து கொள்கிறது.  இந்நிலை மாறும் நாளுக்காய்த்தான் மனம் ஆவலாய்க் காத்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், இங்கேயும் ஒரே கலக்கம் தான். மாட்டுப்பெண்ணுக்கு திரும்பிச் செல்ல விமான சேவை பார்த்தால் ஒண்ணு பணம் ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கு; இல்லைனா அந்த விமானம், நேவார்க், நியூயார்க், வாஷிங்க்டன், பாஸ்டன் ஆகிய வடகிழக்கு மாநிலப் பகுதிகளுக்கு மட்டுமே செல்கிறது. சிகாகோ போனால் கூடப் போதும்னு பார்த்தால் அந்த விமானம் உடனடியாக முன்பதிவு முடிந்து விடுகிறது. என்னமோ போங்க! என்னனு தெரியாமல் கலக்கம் தான் அதிகமா இருக்கு! என்னிக்குத் தான் மாறுமோ!

      Delete
  3. மனச்சோர்வு, கவலை, வருத்தம்லாம் உங்களுக்கு எதுக்கு வரணும்? அக்கடான்னு வீட்டில் இருக்கலாம். காய், பழம், மளிகைலாம் கிடைத்துவிடுகிறது. ரிஸ்க் எடுக்காமல் இருந்துவிடலாம். ஏன் கவலைப்படறீங்க?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழரே, சாப்பிட்டால், சாமான்கள் கிடைத்தால் போதும்னு மனசு இருந்தால் நல்லது தான். பலரும் நினைப்பது தான் நீங்களும் நினைக்கறீங்க, "எனக்கு என்ன கவலை, மனச்சோர்வு,வருத்தம்" என்று. அவரவருக்கு அவரவர் வருத்தம் தான் பெரிதாகத் தெரியும். மற்றவங்க சுக வாழ்க்கை வாழ்வதாகத் தான் நினைப்பார்கள்.

      Delete
    2. இல்லை. அந்த அர்த்தத்தில் சொல்லலை. இவையெல்லாம் கிடைக்கலைனா (காய், மளிகை போன்றவை) அல்லது வெகுதூரம் பயணித்து வாங்கணும்னா, அது இன்னும் பெரிய மனக்கலக்கத்துல கொண்டுவந்துடும் இல்லையா?

      எங்களுக்கும் நல்லவேளை இவையெல்லாம் அருகிலேயே கிடைக்கின்றன. அதனால் தப்பித்தோம் என்று நினைத்துக்கொள்கிறேன்.

      மற்றபடி, மற்ற கவலைகள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. இதில் விதிவிலக்கு யாருமே இருக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

      Delete
  4. எனக்கு என் பெண் எக்ஸாம் தள்ளிப் போகிறதே, பையனுக்கு செமஸ்டர் எக்ஸாம் எப்போ என்றே தெரியலையே, ஆனா அசைன்மெண்ட் நிறைய கொடுக்கிறார்கள், அதைப் பண்ணுவதிலும் ஒரு பிராஜக்டிலும் கொஞ்சம் பிஸியாக இருந்தாலும், இந்த இரண்டு விஷயங்களும் மனதை வாட்டுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மட்டுமில்லை நெல்லைத்தமிழரே, படிக்கும் வயதில் குழந்தைகள் உள்ள பல பெற்றோர்களுக்கும் உங்களை மாதிரித் தான். அதே போல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், பிள்ளை இருப்பவர்களுக்கு எப்போத் திருமணத்தை முடிப்போம் என்னும் கவலை! எங்க உறவினர்களுக்குள்ளேயே 3,4 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் திருமணம் மார்ச், ஏப்ரலில் நடந்து முடிந்திருக்க வேண்டியதுக்குக் காத்திருக்காங்க. சிலருக்கு மணமகன், மணமகள் இருவருமே அம்பேரிக்காவில் இருந்து வரவேண்டிய நிலைமை.

      Delete
  5. பூரிப் பாயசமா? கேள்விப்பட்டதே இல்லை. பதிர்பேணி சாப்பிட்டிருக்கேன், ஆனால் நெய் அதிகம் என்பதால் விருப்பமில்லை.

    அதைவிட பூரி செய்து (மைதா), சுண்டக்காய்ச்சிய பால்+ஜீனி, குங்குமப்பூ போட்டதில், ஊறவைத்து உடனே சாப்பிடுவது ரொம்பப் பிடித்தமானது.

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்டப் பால் போளி மாதிரித்தான் நெல்லைத்தமிழரே!

      Delete
    2. நீங்க எழுதின முகூர்த்தம். என்னவோ என் மனைவி இன்று பால்போளி செய்தாள். (நான் பல முறை சொல்லியும், அப்புறம் அப்புறம் என்றே தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. இன்று நான் ஜி.எம். டயட் ஆரம்பித்த அன்று செய்துவிட்டாள். நான் விடுவேனா என்ன. ஜி.எம். டயட்டை சஸ்பெண்ட் பண்ணிவிட்டேன். ஹா ஹா)

      Delete
    3. ஹாஹாஹா, உங்க மன உறுதி சோதித்துப் பார்க்கப்படுகிறது! :))))))

      Delete
  6. பாசந்திலாம் வீட்டில் செய்ததே இல்லை.

    எனக்குத் தெரிந்து திருவல்லிக்கேணி ரத்னா கஃபேயில் பாசந்தி ரொம்ப அருமையா இருக்கும் (50 ரூபாய்). நிறைய தடவை சாப்பிட்டிருக்கோம்.

    ReplyDelete
    Replies
    1. பாசுந்தி நான் ஒரே ஒரு முறை குஜராத்தில் இருந்தப்போப் பண்ணினேன். ஆனால் நிறையச் சாப்பிட்டிருக்கேன். எல்லாமும் வீட்டில் செய்ததே!

      Delete
  7. உங்க லக் பாருங்க..ஒவ்வொரு பாயச இடுகைக்கும் படங்கள் கிடைத்துவிடுகிறது.

    (ஒருவேளை கிடைத்த படத்தை வைத்து இடுகை தயார் செய்கிறீர்களோ? ஹா ஹா)

    ReplyDelete
    Replies
    1. இதுக்குக் கூடவா கண்ணு வைப்பது! எதில் கண் வைக்கிறதுனு வியவஸ்தையே இல்லை போலயே! :))))))

      Delete
  8. ஆஆவ் !!! என்ன கீதாக்கா ஒரே ஸ்வீட் ரெசிபிசா  இருக்கு இப்போல்லாம் :) 
    // மனசோர்வு ,வருத்தம் // எனக்கும் நிறைய டிவி வலை நியூஸ் எதுவும் பார்க்க பிடிக்கலை . கெட்ட விஷயங்கள் நெகட்டிவிட்டி மிகவும் மனதை பாதிக்குது ..மீடியா முக்கியமா மனநலத்துக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கணும் ..எதுவும் நம் கையில் இல்லை என்பதே உண்மை .
    சரி இனிப்புக்கு வரேன் ..இந்த பூரியை அம்மா பால் பூரி என்று சொல்லி இதேபோல் செய்வாங்க .குட்டி பாட்டில் மூடியால் அப்பளம் அளவுக்கு வெட்டுவாங்க .பிறகு நீங்க சொன்னபோல் சுண்டக்காய்ச்சின பாலில் ஊறவிட்டு .அதை அவங்களும் தங்கையும் சாப்பிடுவாங்க  ஆனா நான் சாப்பிட்டதே இல்லியே :) 

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், இங்கேயானும் பார்க்க முடிந்ததே! பாயசம் செய்முறைகள் ஆரம்பித்து இப்போத் தான் முடிக்கப் போறேன். அதுவரை பாயசமாகத் தானே போட முடியும். நீங்க சொன்னாற்போல் வட்டமாக வெட்டிப் பாலில் ஊறவிட்டுச் சாப்பிடுவது ரஸமலாய்! பூரிப் பாயசம் இல்லை. பனீரில் வட்டமாக வெட்டிக் கொண்டு சர்க்கரைப்பாகில் கொதிக்கவிட்டு எடுத்துச் சுண்டக் காய்ச்சிய பாலில் கேசரி நிறத்தில் வண்ணம் சேர்த்தோ, வெண்மையாகவோ, மஞ்சள் நிற வண்ணம் சேர்த்தோ போட்டுத்தருவார்கள். அது ரசமலாய். இது வேறே. வெறும் பால் மட்டுமே! சர்க்கரை சேர்த்தது.

      Delete
    2. திரட்டுப்பாலுக்குத் தம்பி தான் இந்த பாசுந்தி எனலாம். :))))

      Delete
  9. சுவையான குறிப்புகள். பூரி பாயசம் இங்கே சாப்பிட்டு இருக்கிறேன். வேலை ஜாஸ்தி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வடக்கே பூரிப் பாயசம் நிறையப் பார்க்கலாம். காசி யாத்திரையின் போது அங்கே நிறையப் பண்ணினார்கள். அப்போ நிறையவே சாப்பிட்டிருக்கோம். பூரிப் பாயசத்துக்கு வேலை ஜாஸ்தி தான். இதுவும் ஒரு சின்னக்கிண்ணம் பாஸ்மதி அரிசி போட்டுச் செய்யும் ஒரு பாயசமும் அங்கே ரொம்பவே பிரபலம். அது பெயர் என்ன? ஃபிர்னி? தெரியலை. ஆனால் நான் சாப்பிட்டிருக்கேனே தவிர்த்துப் பண்ணியதில்லை. ஆகவே இதில் எழுதப் போவதில்லை.

      Delete
  10. இங்கும் அதே நீங்கள் முதலில் சொல்லி இருப்பதுதான்...எப்போது நிலைமை சரியாகும்னு இருக்கு. நியூஸ் பார்ப்பதே இல்லை ஆனால் எப்படியோ காதில் வந்து விழுகிறது! மனநலம் என்பது மிக மிக முக்கியம் தற்போது. கணவர் காலேஜ் போய் வர வேண்டிதான் இருக்கிறது. என்ன செய்ய? இதோ எங்கள் ஏரியாவில் தெரு பக்கம் வரை வந்தாச்சு!

    பாயாசம் பூரி பாயாசம் வீட்டில் செய்வதுண்டு. பால் போளின்னு அல்லது பூரி பாயாசம்னும். இதே போலத்தான் குறிப்பா மாமியார் வீட்டில் சரஸ்வதி பூஜை அன்று இது கண்டிப்பா இருக்கும். சின்ன சின்னதாகவும் பொரித்து செய்வதுண்டு. சுண்டக் காய்ச்சிய பால்...எல்லாம்..

    மற்ற இரண்டும் அப்படியே இங்கும் உண்டு.

    இதோடு நான் சிரோட்டியும் செய்வதுண்டு. இன்றுதான் முன்பு செய்த சிரோட்டி ரெசிப்பி எபி க்கு எழுதினேன் இன்னும் படனள் செட் செய்யலை...அனுப்பணும் செட் செய்துவிட்டு அனுப்பணும். இப்போது இங்கு ஸ்வீட் நோ என்று வீட்டில் சொல்லப்பட்டுள்ளது பார்ப்போம். எவ்வளவு நாள் என்று. நான் சாப்பிட முடியாதே பிடித்தாலும்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, இங்கேயும் ஒரே டைலமா! வேலை செய்யும் பெண்ணைக் கூப்பிட்டுக்கோ என்கிறார் மாமா. அதோடு சாப்பாடும் காடரர் கிட்டே வாங்கலாம் என்கிறார். எனக்கு பயமாக இருக்கிறது. ஏனெனில் ஸ்ரீரங்கத்துக்குள்ளும் கொரோனா நுழைந்து விட்டது. எங்கே யாருக்கு என்னனு யாரும் சரியாய்ப் பார்க்கலை. ஆனால் வீட்டில் வேலை இருந்து கொண்டே இருக்கிறது. மத்தியானங்களில் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் படுத்துக்கோ என்கிறது உடம்பு! பார்ப்போம். என்ன நடக்குமோ ஒண்ணுமே புரியலை.

      சிரோட்டியும் நான் இன்னமும் பண்ணிப் பார்க்கவில்லை. சாப்பிட்டிருக்கேன். சுருள் பூரி, பாம்பே பூரி எனச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சாப்பிட்டிருக்கேன். பாதம் போட்டு பாதம் பூரி என்றும் கொடுத்திருக்காங்க.

      Delete
    2. கீதா சாம்பசிவம் மேடம்... உங்களுக்குள்ள கலக்கம், தயக்கம்தான் எங்களுக்கும் இருக்கு. உண்மையிலேயே நாம் இந்த கொரோனாவைத் தவிர்ப்பது மிகக் கடினம். அதிருஷ்டத்துலதான் தப்பிக்கணும். (கொண்டுவரும் பேப்பரில் இருக்கலாம், பிளாஸ்டிக்கில் இருக்கலாம், காயில் இருக்கலாம். அதை ஹேண்டில் செய்யும்போது உடையில் பட்டு அங்கு டிரான்ச்ஃபர் ஆகலாம், கைப்பிடியைத் தொட்டுவிட்டு மறந்துபோய் முககவசத்தைத் தொட்டால் அங்கு அது போய் உட்கார்ந்துக்கலாம். எத்தனையோ லாம் கள்).

      பொதுவா நான் நினைப்பது, பொருளை வாங்கி, அதை சுட வைத்துச் சாப்பிட்டால், வைரஸ் தாக்கம் இருக்காது என்பது.எதைச் சுடவைக்க முடியுமோ அதனை மட்டும் நீங்க வாங்கிக்கொண்டால் வேலை குறையும். நாங்கள் இன்னும் வீட்டு வேலை செய்பவரை வரச்சொல்லலை. இன்னும் மூன்று மாதங்கள் போகட்டும் என்றிருக்கிறோம். சில பல மராமத்து வேலைகளுக்கு மெயிண்டெனென்ஸிலேர்ந்து ஆட்கள் வரும்போது பசங்களை அவங்க அவங்க அறைக்குள் முடங்கச் சொல்லிவிட்டு நான் ஹேண்டில் செய்கிறேன்.

      ஈஸ்வரோ ரட்சது கதைதான்.

      Delete