எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, September 26, 2014

நவராத்திரிக்குச் சுண்டல் வகைகள்!

முதலில் பச்சைப்பயறுச் சுண்டல்!  எத்தனை பேர் வருவாங்கங்கறது நீங்க குடி இருக்கும் இடத்தையும், உங்களோட நட்பு வட்டத்தையும் பொறுத்தது.  இங்கே நான் கால் கிலோவுக்கான அளவில் சொல்றேன்.  பொதுவாக இந்தப் பருப்பு வகைகள் ஊற வைத்தால் இரட்டிப்பாக ஆகும். ஆகவே பார்த்துக் கொள்ளவும்.

கால் கிலோ பச்சைப்பயறு நன்கு களைந்து கல் அரித்து, கல் பயறை நீக்கி (அரிக்கும்போது அடியில் தங்கிடும்;  கலகலனு கல் சப்தம் வரும்) பின்னர் நன்கு முழுகும் அளவுக்கு மேலேயே தண்ணீர் ஊற்றி முதல் நாளே ஊற வைக்கவும்.  மறு நாள் காலை களைந்து விட்டு நீரை மாற்றவும்.  ஊறிய வாச்னை போகும்.  இப்படி இரண்டு, மூன்று தரம் களைந்து நீரை மாற்றிக் கொண்டே இருக்கவும்.

நன்கு ஊறியதும், சின்னச் சின்னதாய் முளை தெரிய ஆரம்பிச்சிருக்கும்.  ஒரு கடாய் அல்லது அலுமினியம் வாணலியில் நீரை விட்டுக் கொதிக்க வைத்து பயறைச் சேர்க்கவும்.  குக்கரில் வைத்தால் குழைந்து உருத்தெரியாமல் போயிடும்.  அரை வேக்காட்டில் தேவையான உப்பைச் சேர்க்கவும்.  உப்புச் சேர்த்துச் சிறிது நேரம் வேக விடவும்.  வெந்த பின் ஒரு வடிதட்டில் கொட்டி நீரை வடிக்கவும்.  இப்போது தாளித்து எடுத்தால் சுண்டல் தயார்.  முதலில் இதில் இனிப்புச் சுண்டல் செய்முறை.


வெல்லத் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன்

தாளிக்க எண்ணெய்  இரண்டு டீஸ்பூன்

கடுகு  ஒரு டீஸ்பூன்

மி.வத்தல் ஒன்று

கருகப்பிலை,பெருங்காயம்  இதுக்கு வேண்டாம்.

தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்


கடாயில் எண்ணெய் வைத்துக் கடுகைப் போட்டு வெடித்ததும், மி.வத்தலைக் கிள்ளிப் போட்டுப் பயறைப் போடவும்.  உடனேயே வெல்லத் தூளைச் சேர்த்துவிட்டுக் கொஞ்சம் கிளறவும்.  வெல்லம் கரைய ஆரம்பித்ததும், தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.  சிறிது நேரம் கிளறி விட்டுக் கீழே இறக்கவும்.  வருபவர்களுக்கு விநியோகம் செய்யவும்.


அடுத்து காரச் சுண்டல்


தாளிக்க எண்ணெய்  இரண்டு டீஸ்பூன்

கடுகு

மி. வத்தல் 2

கருகப்பிலை

பெருங்காயம்

தேங்காய்த் துருவல்

கொஞ்சமாய் சாம்பார்ப் பொடி ஒரு டீஸ்பூன்


கடாயில் எண்ணெய் வைத்துக் கடுகைப் போட்டு வெடித்ததும், கருகப்பிலை, மி.வத்தல் சேர்க்கவும்.  மி. வத்தல் கறுப்பானதும் பயறைப் போட்டு சாம்பார்ப் பொடியைப் போட்டுச் சிறிது கிளறவும்.  ஐந்து நிமிஷம் பொடி வாசனை போகக் கிளறியதும், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிவிட்டுக் கீழே இறக்கவும்.  வருப்வர்களுக்கு விநியோகம் செய்யவும்

சாம்பார்ப் பொடி போட்டால் உள்ள ருசி போடாமல் பண்ணுவதில் மாறி இருக்கும்.  அப்படியும் முயன்று பார்க்கவும்.


2 comments:

  1. குறித்து வைத்துக் கொள்கிறேன்! பல் படுத்தும் பாடல் இவற்றை எல்லாம் நினைக்கவே முடியவில்லை! :)))

    ReplyDelete
  2. சுண்டல்.... எங்கெங்கும் சுண்டல் இந்த நவராத்திரி நாட்களில்! :)

    ReplyDelete