எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, September 27, 2014

நவராத்திரிச் சுண்டல் வகைகள் 2 கடலைப்பருப்புச் சுண்டல்

நேத்திக்கு இரு சுண்டல் வகைகளைப் பார்த்தோம்.  ஒன்று தித்திப்புச் சுண்டல்; இன்னொன்று காரச் சுண்டல்.  நேற்றைய சுண்டல் காரச் சுண்டல் தான்.  பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் புட்டுத் தான் செய்வார்கள்.  ஆனால் நேற்றுக் கொஞ்சம் வேலை ஜாஸ்தி என்பதோடு புட்டுச் செய்ய முன்னேற்பாடுகளும் செய்யவில்லை.  கடலைப்பருப்புச் சுண்டல் அல்லது கொண்டைக்கடலைச் சுண்டலும் வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம் என்பதால் கடலைப்பருப்புச் சுண்டலே செய்துவிட்டேன்.


கடலைப்பருப்பு கால் கிலோ

உப்பு தேவையான அளவு

தாளிக்க எண்ணெய்   மூன்று டீஸ்பூன்

பச்சை மிளகாய் சிறிதாக 2 பொடிப் பொடியாக நறுக்கவும்

இஞ்சி ஒரு துண்டு பொடியாக நறுக்கவும்

கருகப்பிலை பொடியாக நறுக்கவும்

கொத்துமல்லி பொடியாக நறுக்கவும்

பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன்

சாம்பார்ப் பொடி  ஒரு டீ ஸ்பூன்

தேங்காய்த் துருவல்  2 டேபிள் ஸ்பூன்


கடலைப்பருப்பை மூன்று மணீ நேரம் ஊற வைக்கவும்.  ஊறிய பருப்பை நன்கு களைந்து கொண்டு கடாயில் வெந்நீரைக் கொதிக்க வைத்து அதில் பருப்பை வேகப் போடவும்.  பருப்பு மூழ்கும் வண்ணம் நீர் இருக்க வேண்டும்.  அரை வேக்காடாகப் பருப்பு வெந்ததும் தேவையான உப்பைச் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.  பருப்புக் கையால் எடுத்துப் பார்த்தால் நசுங்க வேண்டும்.  அந்தப் பதம் வந்ததும், இன்னும் குழைவாக வேண்டுமானால் அந்தக் கொதிக்கும் நீரிலேயே ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.  தேவை இல்லை எனில் நீரை வடிகட்டவும்.


கடாய் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகை வெடிக்க விடவும்.  பெருங்காயத் தூள், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை  சேர்க்கவும்.  ஒரு கிளறு கிளறியதும் வெந்த பருப்பைச் சேர்க்கவும்.  பருப்பைக் கிளறும் முன்னர் சாம்பார்ப் பொடி ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்.  ஆசாரக் காரர்கள் தினம் சமைத்துச் சாப்பிடும் சாம்பார்ப் பொடி தேவையில்லை எனில் தனியாகக் கொஞ்சமாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.


நாலு டீஸ்பூன் மிளகாய்ப் பொடிக்கு , அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி,

ஒரு டேபிள் ஸ்பூன் தனியா

துபருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகு ஆகியவை தலா ஒரு டீஸ்பூன் போட்டு வெறும் சட்டியில் வறுத்துக் கொண்டு மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடியோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். இதைச் சுண்டலுக்குப் போடனு தனியாக வைத்துக் கொள்ளலாம்.  மிளகு, வெந்தயம் ஜாஸ்தியாகத் தோன்றினால் அரை டீஸ்பூன் போதும்.

சாம்பார்ப் பொடி போட்டுக் கிளறியதும், தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.  விருப்பமிருந்தால் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம்;  இது அவரவர் விருப்பம்.  பின்னர் நன்கு கிளறியதும், கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கி மேலே தூவி நன்கு கிளறி எடுத்து வைத்து விநியோகம் செய்யவும்.


நவராத்திரி இல்லாத நாட்களில் இந்தச் சுண்டலை மாலை டிஃபனுக்குச் செய்து கொத்துமல்லியோடுபுதினா இலைகளையும் நறுக்கிச் சேர்த்துக் கொண்டு, பச்சை வெங்காயம் பொடியாக நறுக்கியது மேலே தூவிக் கொண்டு, எலுமிச்சம்பழம் பிழிந்து கொண்டு, ஓமப் பொடியோடு சேர்த்துச் சாப்பிடலாம். பிடித்தால் சாட் மசாலா கொஞ்சம் தூவிக்கலாம்.


1 comment:

  1. எனக்கு பிடிக்காத சுண்டல்.... :) ஆனாலும் பார்க்கறதுல, படிக்கறதுல தப்பில்லை! :)))

    ReplyDelete