எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, December 1, 2013

சேம்பு இலைக்கறி வேணுமா?

மின் தமிழில் இலைக்கறி, இலை போளி போன்றவை குறித்து எழுதினதிலே இருந்து சேம்பு இலைக் கறி/வடை(மதுரையில் வடைனே சொல்வோம்) பத்தி எழுத நினைச்சேன்.  ஆனால் உடனே எழுத முடியாமல் மின்சாரம் படுத்தல், மற்ற சில, பல பிரச்னைகள்.



தேவையான பொருட்கள்:

சேம்பு இலை( வீட்டிலேயே தொட்டிகளில் வளர்க்கலாம்.  இல்லைனாலும் காய்கறி மார்க்கெட்டில் சொல்லி வைத்து வாங்கலாம். கீரை விற்பவர்களிடம் சொன்னால் எளிதில் கிடைக்கும்.)  நல்ல பெரிதாக நான்கு அல்லது ஐந்து.

இதற்கு உள்ளே அடைக்க சிலர் கடலைமாவைப் புளி ஜலத்தில் விழுது போல் கரைத்துக் கொண்டு உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயம் சேர்த்துக் கொண்டு அதைத் தடவி விட்டு அப்படியே வேக வைக்கின்றனர். ஆனால் எங்க வீட்டில் அப்படிச் செய்தது இல்லை.

து.பருப்பு, சின்னக் கிண்ணம் ஒன்று

க.பருப்பு அதே அளவு,

பாசிப்பருப்பு அந்த அளவில் பாதி

மிளகாய் வற்றல் (கொஞ்சம் கூடவே வைச்சுக்கணும்.) 15

உப்பு தேவைக்கு

பெருங்காயம்

கருகப்பிலை, கொத்துமல்லி  நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

வறுக்க சமையல் எண்ணெய்

கடுகு, உ.பருப்பு.

சேம்பு இலைகளை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு மஞ்சள் தூள் & உப்புக் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

பருப்பு வகைகளை நன்கு கழுவி ஊற வைக்கவும்.  இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊறியதும் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.  நன்கு நைசாகவே அரைக்கலாம்.  அரைத்த விழுதில் கருகப்பிலை, கொத்துமல்லி பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.

இப்போது சேம்பு இலைகளை  வெளியே எடுத்துக் கொண்டு அவற்றில் அரைத்த விழுதை ஒரு பக்கமாகத் தடவவும்.  அரை அங்குலம் கனத்துக்குத் தடவலாம்.  தடவாத மறு பாதியை அப்படியே தடவி இருக்கும் பக்கம் பாதியாக மடிக்கவும்.  இப்படியே எல்லா இலைகளிலும் அரைத்த விழுதைத் தடவி இலையை மடித்துக் கொள்ளவும்.  இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும்.

வேக வைத்ததை வெளியே எடுத்து ஒரு கத்தியால் சின்னத் துண்டங்களாகப் போடவும்.  இரும்பு வாணலியில் எண்ணெயைக் காய வைத்துக் கடுகு, உ.பருப்புப் போட்டு நறுக்கிய துண்டங்களை மொறுமொறுப்பாக வறுத்து/ பொரித்து எடுக்கவும். 

இதை மாலை தேநீரோடும் சாப்பிடலாம்.  சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ளும்படியும் வைத்துக் கொள்ளலாம்.  இங்கே சேம்பு இலையே கிடைக்க மாட்டேன் என்கிறது.  திருச்சி போகணுமோ என்னமோ! :)

14 comments:

  1. திருச்சிக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. கட்டாயமா வாங்க டிடி. அதுக்குள்ளே இங்கே சேம்பு இலை கிடைக்குதானு பார்த்து வைச்சுக்கிறேன்.

      Delete
  2. கேள்விப்பட்டதில்லை. இலையோடேயே வறுத்து அப்படியே சாப்பிடலாமா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், இலையோடத் தான். இலை சில சமயம் கொஞ்சம் தொண்டையில் அரிக்கும். அதுக்குத் தான் முதல்லேயே ஊற வைக்கிறது. மதுரை, தஞ்சை மாவட்டங்களில் ரொம்பவே பிரபலமான ஒன்று இது. இலை மெலிதாக இல்லாமல் நல்ல கெட்டியாகவும் இருக்கணும்.

      Delete
  3. சாப்பிட்டதில்லை.... ஆனால் கேள்விப்பட்டதுண்டு...

    ReplyDelete
    Replies
    1. இங்கே இலைகளைப் பார்க்கவே முடியலை. கிடைச்சால் செய்துடுவோம். :))))

      Delete
  4. சேம்பு இலை - சேப்பங்கிழங்கு இலை?
    நிஜமாவே ரெசிபி தானா? இல்லே என் தம்பி ஒரு தடவை மங்கையர் மலருக்கு அனுப்பின மாதிரியா?

    செய்முறை சிரமமா இருக்கு படிக்க.. யாராவது செஞ்சு கொடுத்தா நன்றி சொல்லி நாலு உள்ளே தள்ளுவேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை, நிஜம்மாவே ரெசிபி தான். கஷ்டமான செய்முறை எல்லாம் இல்லை. பருப்பு உசிலிக்கு அரைக்கிறதை இலையில் தடவிச் சுருட்டி வைச்சுட்டு ஆவியில் வேக வைக்கணும். பின்னர் அதைத் துண்டம் போடணும். அவ்வளவு தான். நாங்க சின்ன வயசிலே நிறையச் சாப்பிட்டிருக்கோம். மார்கழி மாசம் பிறந்தாலேயே எங்க அப்பா ஊரான மேல்மங்கலத்திலே இருந்து மஞ்சள், சேம்பு இலை, கடலை எல்லாம் வர ஆரம்பிக்கும். :))))

      Delete
  5. நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிட்டதில்லை... கிடைச்சா சமைக்கலாம்..:)

    ReplyDelete
    Replies
    1. பாருங்க, இலை கிடைக்குதானு! :)

      Delete
  6. இங்கே விசாரிச்சிட்டிருக்கேன் அம்மா.. கிடைச்சா செய்யலாம்னு.. ரெசிப்பி படிக்கறப்பவே சாப்பிடும் ஆவல் அதிகரிக்குது!!!!

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கும் செய்து பாருங்க. இலை மெலிதாக இல்லாமல் கொஞ்சம் அழுத்தமாப் பார்த்து வாங்குங்க.

      Delete
  7. This is patra, isn't it?
    I tasted only once when I visited Gujarat and loved it. Could not make it a home as I am not getting the leaf.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிங்கோ, ஆமாம், குஜராத்தில் மசாலா எல்லாம் சேர்த்துக் கடலைமாவு பேஸ்ட் செய்து தடவிச் செய்வார்கள். அதுவும் நல்லாவே இருக்கும். வருகைக்கு நன்றி.

      Delete