எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, March 30, 2019

பொடி விஷயம் தான் வந்து பாருங்க! பாரம்பரியச் சமையல்கள்! 4

சாம்பாரிலே பல முறைகள் உள்ளன. அதில் பொடி போட்டுச் செய்யும் முறையை முந்தைய பதிவில் பார்த்தோம். பின்னர் செய்ய வேண்டியது அரைத்து விட்ட சாம்பார்.  இந்த அரைத்து விட்ட சாம்பார் நான் எப்போவோ தான் பண்ணுவேன். சாம்பாரே வாரம் ஒரு தரம் பண்ணினால் அதிகம். ஆகவே அதற்கான படங்களை எழுதும்போது போட இயலாது. அதான் தாமதம். நான் பண்ணும்போது எடுத்துட்டுப் போடணும்.  படங்கள் வேண்டாம் எனில் எழுதிக் கொண்டே போகலாம். என்னோட கருத்தும் அது தான். படங்களை எதிர்பார்க்காதீர்கள் என்பதே.

பிரபலமான "சமைத்துப் பார்!" புத்தகம் எழுதிய மீனாக்ஷி அம்மாள் எந்தப் படத்தை எந்தச் சமையல் குறிப்பில் போட்டிருக்கிறார்? சமீபத்திய பதிப்புக்களில் படங்கள் வருகின்றனவோ என்னமோ! தெரியாது. ஆனால் என்னிடம் இருக்கும் மீனாக்ஷி அம்மாள் புத்தகங்களிலும், பெண், மாட்டுப்பெண் ஆகியோரிடம் இருப்பனவற்றிலும் படங்களே இல்லை. அளவுகள் மட்டும் முன்னர் கொடுத்த படி, வீசம்படி அளவுகள் மாறி மெட்ரிக் அளவுக்குக் கொடுத்திருப்பார்கள். என்னிடம் உள்ள ஒரு புத்தகத்தில் மூலத்தில் உள்ள அளவை மாற்றாமல் அதற்குத் தகுந்த மெட்ரிக் அளவுகளைத் தனியாக ஓர் அனுபந்தமாகப் போட்டிருக்கின்றனர்.

தொடர்ந்து எழுதினால் தான் தொடர்ச்சி விட்டுப் போகாது. ஆனால் நான் அன்று பொடி போட்ட சாம்பார் பண்ணின பின்னர் ஒரு வாரம் ஊரில் இல்லை. அதன் பின்னர் நேற்றுத் தான் சாம்பார் பண்ணினேன் என்றாலும் அரைத்துவிட்டுப் பண்ணவில்லை. அதே பொடி போட்ட சாம்பார். இப்போ வேறே எதுவும் சொல்லவில்லை என்றாலும் இந்த சாம்பார்ப் பொடி அதிக பக்ஷமாக அரைத்து வைக்கும் முறையை மட்டும் பார்ப்போம்.

சாம்பார்ப் பொடி அல்லது ரசப்பொடி அரைக்கும் முறை:

இதிலே சாம்பார்ப்பொடி அரைப்பது (அதாவது மிஷினில் கொடுத்துத் திரிப்பது) எனில் கடலைப்பருப்பு அதிகம் சேர்க்கணும். ரசப்பொடி எனில் துவரம்பருப்பும், மிளகும் அதிகம் இருக்கணும். இப்போ ஓர் கண்ணளவாக சாமான்கள் தேவையானதைப் பார்ப்போமா?

கால் கிலோ மி.வத்தல். (இதிலேயும் நான் நீள வத்தல் தான் வாங்குவேன். குண்டு வத்தல் பெரும்பாலும் காரம் அதிகம் இருக்கும்.)

Image result for மிளகாய் வற்றல்    Image result for தனியா

முக்கால் கிலோ தனியா! ஒரு சிலர் கால் கிலோவுக்குக் கால்கிலோவே போதும் என்பார்கள். இன்னும் சிலர் அரைக்கிலோ போடுவார்கள். நான் சில மிளகாய் வற்றலுக்கு ஒரு கிலோ தனியா கூடப் போட்டிருக்கேன். காரம் தாங்காது!

200 கிராம் விரலி மஞ்சள்
Image result for விரலி மஞ்சல்   Image result for துவரம்பருப்பு


கால் கிலோ துவரம்பருப்பு அல்லது 200 கிராம் துவரம்பருப்பு அல்லது ஒரு கிண்ணம் துவரம்பருப்பு. துவரம்பருப்பு அதிகம் போட்டால் பொடியில் சாம்பார் செய்தாலும் சரி, ரசம் பண்ணினாலும் சரி ரொம்பக் கெட்டியாக ஆகாது. நிதானமான சாம்பார் பண்ணலாம்.

Image result for கடலைப் பருப்புImage result for மிளகு

சின்னக் கிண்ணத்தால் ஒரு கிண்ணம் கடலைப்பருப்பு. அல்லது சாம்பார் கெட்டியாக இருக்கணும் எனில் 200 கடலைப்பருப்புப் போடலாம். அவரவர் விருப்பம். நான் கடலைப்பருப்பு அதிகம் பயன்படுத்துவதில்லை. சுமார் 100 கிராம் அளவு கடலைப்பருப்பே போடுவேன்.

100 கிராம் மிளகு (மிளகு இத்தனை இருந்தால் ரசம் நீர்க்க வரும்! மிளகைக் குறைத்தால் ரசம் கெட்டியாக இருக்கும்.)

Image result for வெந்தயம்

வெந்தயம் 50 கிராம். அநேகமாய் இது போதும். தேவை எனில் 100 கிராம் வரை போட்டுக்கலாம். ஆனால் ரசத்தில் ருசி மாறும். 

இவற்றைத் தனித்தனியாக வெயிலில் நன்கு காய வைத்து விரலி மஞ்சளை மட்டும் பாக்குவெட்டியால் நறுக்கிக்கொண்டு காய வைத்து சாமான்களோடு சேர்த்துக் கொண்டு மாவு மில்லில் மிளகாய் அரைக்கும் மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு நான்கு அல்லது ஐந்து மாசம் இது தாராளமாய் வரும். நான் எல்லாவற்றிற்கும் அதாவது சப்பாத்திக்கூட்டு, சமையலில் செய்யும் சில கூட்டு வகைகள்னு எல்லாவற்றிற்கும், காரக்கறி வகைகளுக்கும் என இந்தப் பொடியே பயன்படுத்துவதால் எனக்கு 4 மாதங்கள் தான் வரும்.

இதிலேயே மிளகாய் வற்றலை மட்டும் நன்கு காய வைத்துக் கொண்டு மற்றச் சாமான்களை கொத்துமல்லி விதை, துபருப்பு, கபருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை வறுத்துச் சேர்க்கலாம். பொடி நல்ல வாசனையாக இருக்கும். புளி வாசனை போகக் கொதித்ததும் இந்தப் பொடியைச் சேர்க்கலாம். இதிலேயே சிலர் கருகப்பிலையும் சேர்ப்பார்கள். நான் சேர்ப்பதில்லை. அவரவர் விருப்பம்.

அடுத்து தனி ரசப்பொடி

மிளகாய் வற்றல் 100 கிராம், கால் கிலோ கொத்துமல்லி விதை, 200 கிராம் துவரம்பருப்பு, 200 கிராம் மிளகு, விரலி மஞ்சள் 100 கிராம். இதில் மி.வற்றல் தவிர்த்து மற்றவற்றை வறுத்துக் கொண்டு விரலி மஞ்சளை நறுக்கிக் காயவைத்துச் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதைத் தனியாக ரசத்துக்கு மட்டும் பயன்படுத்தலாம். ஒரு சிலர் ஜீரகமும் சேர்க்கின்றனர். கருகப்பிலையும் சேர்க்கின்றனர். ஜீரகப் பொடியைத் தனியாக வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டு ரசம் இறக்கும்போது சேர்த்தால் நன்றாக இருக்கும். கருகப்பிலையும் ரசம் கொதிக்கையில்ஆர்க்கோடு இரண்டாகக் கிள்ளிப் போட்டுக் கொதிக்க வைத்தால் மணம் தூக்கும். தக்காளியைச் சிறு துண்டங்களாக நறுக்கிச் சேர்க்க வேண்டும். 

கறிமாப்பொடி

இதைக் கூட்டுக்கள், ச்ராத்தத்தன்று செய்யும் காய் வகைகள் ஆகியவற்றிலே போடுவாங்க. பொதுவாக இதிலே தேங்காய் இருக்காது. வேண்டும் எனில் தனியாச் சேர்க்கணும். ச்ராத்தப் பொடியில் மிளகு, ஜீரகம், தூக்கலாக இருக்கும். பொதுவான பொடியில் மி.வத்தலும் உண்டு.

பொதுவான பொடி

மிளகாய் வற்றல் சுமார் 50 கிராம்

துபருப்பு+கபருப்பு+ உபருப்பு வகைக்கு இரண்டு டீஸ்பூன்

புழுங்கலரிசி  ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு இரண்டு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு, கருகப்பிலை ஒரு கைப்பிடி.

இவை எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நைசாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும். பத்திய சமையல்கள், கூட்டு வகைகள் போன்றவற்றில் காய்கள் வெந்த பின்னர் இந்தப் பொடியைத் தேவையான அளவுக்குச் சேர்த்து ஒரு கொதி விட்டால் பின்னர் கீழே இறக்கித் தாளிக்கலாம். இதற்குப் பொதுவாகத் தேங்காய் சேர்ப்பதில்லை. தேவை எனில் தேங்காய்த் துருவலைத் தனியாக அரைத்துச் செய்து கொண்டிருக்கும் குழம்பு அல்லது கூட்டு வகைகளில் சேர்க்கலாம்.

ச்ராத்தப் பொடி

மிளகு, ஜீரகம்,கருகப்பிலை  மிளகு,உளுத்தம்பருப்பு வகைக்கு  ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் இரண்டு டேபிள் ஸ்பூன், கைப்பிடி கருகப்பிலை. எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்துத் தேவையானால் பச்சரிசியும் கொஞ்சம் சேர்த்து வறுத்துக் கொண்டு மிக்சி ஜாரில் பொடித்து வைத்துக் கொள்ளவும். ச்ராத்தக் காய்கள், கூட்டுகள், மசியல், குழம்பு வகைகளில் சேர்க்கலாம். தேங்காயை இதற்கும் தனியாக அரைத்து விடலாம்.


படங்களுக்கு நன்றி கூகிளார்!

21 comments:

  1. நீங்க படம் வெளியிடாட்டாலும் பரவாயில்லை. அளவு சொல்லி, செய்முறை சொன்னாலே போதும். தெரிந்த குறிப்புகளெல்லாம் விளக்கமா எழுதுங்க. இந்தப் பகுதி நல்லா இருக்கு, உபயோகமாவும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா! நெ.த. நன்றி.

      Delete
  2. //பிரபலமான "சமைத்துப் பார்!" புத்தகம் எழுதிய மீனாக்ஷி அம்மாள் எந்தப் படத்தை எந்தச் சமையல் குறிப்பில் போட்டிருக்கிறார்? // - இந்த வேலைதானே வேணாம்கறது. முதல் முதல்ல சமையல் புக் எழுதினாங்க. அப்போ கேமராவா? அதுவும் பெண் ஒருத்தங்க இதை எழுதினதே பெரிசு இல்லையா?

    காலம் மாற மாற, தெக்கினிக்கு இருப்பதால் படங்கள்லாம் கேட்கிறோம். இது டப்பா?

    விட்டா பாகவதர் காலத்துல 50 பாட்டாவது ஒரு படத்துல இருந்தது. இப்போவும் அந்த மாதிரி படம் எடுக்கலாமேன்னு சொல்லுவீங்க போலிருக்கே (அப்படி படம் எடுத்தா நீங்க கூட போய் பார்க்கமாட்டீங்க. சீக்கிரம் பொதிகைல வந்துடும் பார்த்துக்கலாம்னு விட்டுடுவீங்க)

    ReplyDelete
    Replies
    1. டப்பே இல்லை, ஆனால் தொடர்ச்சி விடுபடும். அதான் பிரச்னை! இப்போப் பாருங்க அரைச்சு விட்ட சாம்பாரை நான் என்னிக்குப் பண்ணுவேன்னு எனக்கே தெரியாது! அதுக்குள்ளே ஜேகே அண்ணா வேறே வந்து சாம்பார் ஊசிப் போச்சுனு பழசை இன்னும் வைச்சுட்டுச் சொல்லறார். கொட்டி விட வேண்டாமோ? :)))))

      Delete
    2. நீங்க சொல்றது சரி. உங்க இடுகைக்காக வீட்டில் தொடர்ந்து 10 நாள் சாம்பார் பண்ணினால் தாங்குமா? அப்படி இல்லாமல் இடுகைக்காகவே நீங்க பண்ணற எல்லாவற்றையும் ஆர்டரில் இல்லாமலும் எழுதலாம். ஆனா மாமா, நேற்று பண்ணின மோர்க்குழம்பை நாளைக்குப் பண்ணேன் என்று கேட்டால், சாரி... 3 மாசம் கழிச்சு பண்ணறேன்னு சொல்லமுடியுமோ?

      Delete
    3. படங்கள் இல்லாமல் எழுதிட்டுப் பின்னர் படங்களைச் சேர்க்கலாம். இது ஒன்றே வழி! அதோடு உடனுக்குடன் பதிவுகளை எதிர்பார்ப்பதும் முடியாது! என்னால் அப்படி எல்லாம் உடனுக்குடன் எழுதுவது முடியாது! உட்காரும் கொஞ்ச நேரத்தில் பல சொந்த வேலைகள்! அதற்குத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்புறமாத் தான் பதிவுகள். ஆகவே நேரம் எடுக்கும்.

      Delete
  3. உபயோகமான தகவல்கள். வேண்டும் வந்து பார்த்துக் கொள்ளலாம். ஸ்ராத்தத்துக்கு பொடி அரைத்து வைத்துக் கொண்டதில்லை. தேங்காய் சேர்ப்பர்களா என்ன? ஒருவேளை அதெல்லாம் அந்தந்த வீட்டு வழக்கமோ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், ச்ராத்தத்துக்குப் பொடி சில வீடுகளில் உண்டு. இதில் உளுத்தம்பருப்பைச் சேர்த்திருந்தது விடுபட்டுப் போயிருக்கு. காப்பி, பேஸ்ட் பண்ணினாலே பிரச்னை தான். இப்போச் சேர்க்கிறேன். தி/கீதாவின் குறிப்பைப் பார்த்ததும் தான் கவனித்தேன். மேலும் ச்ராத்தப் பொடியை ச்ராத்தம் அன்றே குளித்துச் சமைக்க ஆரம்பிக்கையில் தயார் செய்வாங்க. முன்கூட்டி எல்லாம் தயார் செய்வதில்லை.

      Delete
  4. முக்கால் கிலோ மிளகாய்க்கு ஒன்றரை கிலோ தனியா, 350 கிராம் மிளகு, கால் கிலோ து ப, ஐம்பது கிராம் கப, நூறு அல்லது நூற்றைம்பது கிராம் மஞ்சள், இவை மட்டும் காயவைத்து அரைத்துக் கொள்வோம். இது என் அம்மா தந்த அளவுக்குறிப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்,ஸ்ரீராம், அவரவர் வீட்டுக்காரத்துக்கு ஏற்பப் பண்ணிக்கலாம் தானே!மிளகு நிறையப் போடுவதால் உங்க வீட்டு ரசம் தெளிவாக வரும்னு நினைக்கிறேன்.

      Delete
  5. கீதாக்கா நம் வீட்டில் சாம்பார் பொடி தனி ரசப் பொடி தனி.

    அளவுகள் கிட்டத்தட்ட இதே தான். நானும் கறிவேப்பிலை சேர்ப்பதில்லை. ஜீரகம் கொஞ்சம் பொடியோடு சேர்பதுண்டு. என்றாலும் ஜீர்கப் பொடியும் ரசம் செய்யும் போது போடுவதுண்டு. அதுவும் ஃப்ரெஷ்ஷாகத்தான். இந்தப் பொடி எதுவும் வெளியில் வாங்குவதில்லை.

    நான் சாம்பாருக்கு அரைக்கிலோ தனியா...கால் கிலோ மிளகாய்..து ப அதே க ப அதே...என் பாட்டியும் து ப தான் அதிகம் சேர்ப்பார். கப கொஞ்சம் தான். மாமியார் பொடியில் இரண்டும் சமம். ஸோ நான் இதுதான் என்றில்லை ஒவ்வொரு முறையும் ஒரு பொடி...வீட்ட்டிலெயே மிக்சியில் பொடிப்பதுதான். சென்னையில் என்றால் யாருக்காவது சேர்த்து என்றால் மெஷினில்..மகனுக்குக் கொடுத்துவிடவும் மொஷினில்தான் செய்தேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என் அம்மாவும் சரி, நானும் சரி, சாம்பார்ப்பொடினு பண்ணுவதே இல்லை தி/கீதா. ரசப்பொடி தான். அதில் தான் வற்றல் குழம்புகள், பருப்புக்குழம்பு எனப் பண்ணுவோம். புளி விட்ட கூட்டு வகைகளுக்கு,ப் பொரிச்ச கூட்டுகளுக்கு எல்லாம் இந்தப் பொடி தான் கொஞ்சமாய்ச் சேர்ப்போம்.

      Delete
    2. நாங்கள் ரசப்பொடி என்றுதான் தனியாய்ப் பண்ணுவதில்லை.

      Delete
    3. துவரம்பருப்பு,மிளகு கூடுதலாய்ப் போட்டால் ரசம் தெளிவாய் வரும்! அதைத் தான் ரசப்பொடி என்போம்.

      Delete
  6. நம் வீட்டு ஸ்ரார்த்த பொடி மிளகு உ ப வறுத்து பொடித்துக் கொள்வது. அன்றேதான். தேங்காய் எந்தக் காய்க்கு வேண்டுமோ அதுல மட்டும் சேர்த்துப்பாங்க...

    சொல்ல விட்டுப் போச்சு. மஞ்சள் நான் இவ்வளவு சேர்த்ததில்லை பொடிகளில். அதைக் குறித்து வைத்துக் கொண்டேன்..செஞ்சு பார்க்க
    உங்க குறிப்புகள் எல்லாம் பயன்படுபவை..

    கீதா

    ReplyDelete
  7. உளுத்தம்பருப்பு எங்க வீட்டிலும் உண்டு. விடுபட்டுப் போயிருக்கு தி/கீதா. சேர்க்கிறேன். பொதுவாகப் பனிரண்டாம் நாள் காரியத்தில் எதை எல்லாம் சேர்க்கணுமோ அதை எல்லாம் சேர்க்கச் சொல்லுவாங்க. அப்படிச் சேர்த்தது தான் என் மாமியார், மாமனார் ச்ராத்தங்களில் தேங்காய்!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.... எங்கள் வீட்டிலும் சொல்வார்கள்.

      Delete
  8. உபயோகமான தகவல்கள்.

    நான் இங்கே பொடி எல்லாம் செய்வதில்லை. வீட்டிலிருந்து வரும்போது எடுத்துக் கொண்டு வந்து விடுவேன்! தீர்ந்து விட்டால் நண்பர்கள் வீட்டிலிருந்து, அவசரத்திற்கு வாங்கிக் கொள்ளலாம் - பிரச்சனை இல்லை! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், பொடி விஷயம் தானே! விட்டுடலாம்! :)))))

      Delete
  9. ஓ ஒவ்வொன்றாக செய்யப்போகிறேன் கீசாக்கா நன்றி.

    ReplyDelete
  10. செய்ங்க, செய்ங்க, செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க. மி.வத்தல் கிடைக்கலைனாலோ அல்லது அங்கே உள்ள மிக்சியில் பொடியாக்க முடியலைனாலோ மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியா(கொத்துமல்லி விதை) பொடி வாங்கிக்கோங்க. கால் கிலோ மிளகாய்ப் பொடினா (அதிகம் தான். ஆனால் ஓர் அளவுக்குச் சொல்றேன்.) முக்கால் கிலோ தனியாப் பொடி, நூறு கிராம் மஞ்சள் பொடி எல்லாவற்றையும் ஒரு பெரிய பேசினில் போட்டு நன்கு கலந்துவிடுங்கள். பின்னர் 200 கிராம் துவரம்பருப்பு, நூறுகிராமுக்குக் கொஞ்சம் குறைச்சுக்கடலைப்பருப்பு, 100 கிராம் மிளகு, 50 கிராம் வெந்தயம் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்துக்கோங்க. நன்கு சிவக்க வறுக்கணும். பின்னர் அவற்றை எல்லாம் மிக்சி ஜாரில் போட்டு நைசாகப் பொடித்து மிளகாய்ப் பொடிக்கலவையோடு நன்கு கலந்து விட்டுப் பின்னர் மறுபடியும் மிக்சி ஜாரில் எல்லாவற்றையும் போட்டு நன்கு நைஸாகத் திரித்து/பொடித்து வைத்துக்கொள்ளவும். இதிலேயே கடலைப்பருப்புப் போடாமல் கால்கிலோ துவரம்பருப்பு, 200 கிராம் மிளகு வறுத்துச் சேர்த்து அரைத்தால் ரசப்பொடி. இங்கே அம்பேரிக்காவில் நான் பையருக்கும், பெண்ணுக்கும் ஊருக்குக் கிளம்புகையில் இப்படித் தான் பண்ணி வைத்துவிட்டு வருவேன். ராஜஸ்தான், குஜராத்தில் எல்லாம் இருந்தப்போ இம்மாதிரிப் பொடிகள் வாங்கித் தான் சாம்பார்ப் பொடி, ரசப்பொடி தயாரிப்பு. அப்போல்லாம் மிக்சி இல்லை. கையால் அரைக்கும் மிஷின் ஒன்று வாங்கி இருந்தேன். அதில் தான் எல்லாமும் அரைப்பேன்.

    ReplyDelete