எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, May 31, 2009

வெங்காயம் பிடிக்குமா? பிடிக்காதா?

கொண்டைக்கடலை மூணு நாளா ஊறிட்டு இருக்கு. இந்த வெயில்லே ரொம்ப ஊற வைச்சாலும் வீணாயிடும். ஆகவே நல்லா அலசுங்க. அலசும்போது உங்க மாமியார், மாமனார், நாத்தானார், மச்சினர் ஆகியவங்களை அலசறாப்போல நினைச்சுக்கவும். நல்லாத் தண்ணீர் விட்டு அலசுவீங்க உங்களை அறியாமலேயே. அப்புறமா கொஞ்சம் கொண்டைக்கடலையை எடுத்துத் தனியா வைக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் ஊறிய கடலை இருக்கலாம். மிச்சம் கடலையைக் குக்கரில் வேகவைக்கவும். உ.கி. போடணும்னா அதையும் சேர்த்தே வேக வைக்கவும். இப்போ முதல்லே வெங்காயம் சேர்க்காமல் செய்யற விதம் பார்க்கலாம். சிலருக்கு வெங்காயமே பிடிக்காது. சிலர் சேர்க்கவே மாட்டாங்க. ஆகவே முதல்லே அதைப் பார்க்கலாம். எங்க வீட்டிலே எப்போவுமே இரு முறைகளும் உண்டு. வெங்காயத்துக்கு ஓட்டுப் போடும் உறுப்பினர்களும், வெங்காயத்தைக் கண்டாலே ஓடும் நபர்களும் இருக்காங்க. ஆகவே இரண்டுமே கட்டாயமாய்ச் செய்யப் படும்.

கால் கிலோ கொ.கடலை வேக வைச்சது, பெரிய உ.கிழங்கு ஒன்று வேக வைச்சு உதிர்த்துக் கொள்ளவும்.

தேவையான மசாலாப் பொருட்கள்: மசாலானதும் எல்லாரும் என்னவோ தவிர்க்க வேண்டியதுனு நினைக்காதீங்க. சும்மா மிளகாய்ப் பொடியும், தனியாப் பொடியும் போட்டால் கூட அதுவும் மசாலா தான்.

அரைக்க: பச்சை மிளகாய்: இரண்டு, கொத்துமல்லித் தழை ஒரு கைப்பிடி, இஞ்சி, ஒரு துண்டு, ஏலக்காய் இரண்டு, கிராம்பு இரண்டு அல்லது மூன்று, தக்காளி நல்ல சிவந்த தக்காளி இரண்டு.இத்தோடு ஊற வைத்து எடுத்து வச்சிருக்கும் கொ.கடலை ஒரு டேபிள் ஸ்பூனையும் சேர்க்கணும். தேங்காய், (விருப்பப் பட்டால்). மாதுளம் விதையும், விரும்பினால்.

புளி ஒரு நெல்லிக்காய் அளவு, வெல்லம் ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்(விருப்பப் பட்டால்), ஜீரகம் வறுத்துப் பொடி செய்த தூள் ஒரு டீ ஸ்பூன்.

இப்போ மேலே சொன்ன பொருட்களில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் தவிர மற்றவற்றை நன்றாய் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். ஜீரகம் மட்டும் தாளிக்கவும். பின் மஞ்சள் தூள், மி.தூள், மல்லித் தூள் சேர்த்து, அதோடு அரைத்த கலவையையும் சேர்த்து நன்றாய் எண்ணெய் பிரிந்து வரும் வரைக்கும் வதக்கவும். எண்ணெய் பிரிய ஆரம்பிச்சதும், கொ.கடலையைச் சேர்க்கவும். பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி, உ.கிழங்கையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து தளதள வெனக் கொதித்து வரும்போது வெல்லம் சேர்க்கவும். நன்கு கெட்டியானதும், இறக்கி ஜீரகத் தூளைச் சேர்த்துவிட்டுப் பின் பச்சைக் கொத்துமல்லித் தழைகளைப் பொடிப் பொடியாய் நறுக்கிச் சேர்க்கவும். வெங்காயமோ, பூண்டோ இல்லாத கொ.கடலை மசாலா தயாராகிவிட்டது. சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க. அப்புறமா வெங்காயம் சேர்த்துப் பண்ணிப் பார்ப்போம்.

Friday, May 29, 2009

இன்னிக்கு வீக் எண்ட் டிபன் என்ன?


ரொம்ப நாட்கள் ஆச்சு, சமையலறைப்பக்கம் வந்து. இப்போ என்ன சமைக்கலாம்? சொல்லுங்க. காலம்பர நேரம் இந்தியாவிலே. அதனாலே காலை ஆகாரத்துக்குச் சமைப்போமா?? யு.எஸ். மற்ற வெளிநாட்டுக் காரங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க. உங்க நேரத்துக்குச் செய்துக்கலாம். ஓகேயா??

பூரி செய்யலாமா? சிலர் காலம்பர நேரம் எண்ணையானு சொல்றாங்க. காதிலே விழுது. ராத்திரி செய்தாலும் அப்போவும் ஒத்துக்குமா?? யோசிங்க. காலம்பர தான் நல்லது. சாப்பிட்டுட்டு நாள் பூரா ஏதானும் வேலை செய்வோம். அப்போ ஜீரணம் ஆகாதா? ரெடியாகிக்கோங்க. வயிறு காலியா இருக்கட்டும். பூரி செய்ய ரங்கமணிகளைத் தயார் செய்யுங்க. சாப்பிட தங்கமணிகள் தயார் ஆகுங்க. முதலிலேயே மாவு பிசைய வேண்டாம். முதலில் தொட்டுக்க என்ன செய்யறதுனு ஒரு சின்ன கலந்துரையாடல் செய்து முடிவு பண்ணுங்க.

அதாவது எல்லார் கருத்தையும் கேட்டுக்கணும். கடைசியிலே உங்க முடிவை வெளியே சொல்லாமல், அதுப்படி பண்ணிடணும். ஓகேயா?? இன்னிக்கு என்னோட முடிவு பூரியும், தொட்டுக்க உருளைக்கிழங்கு மசாலாவும். மசாலானதும் ஐயே எனக்கு வேண்டாம்னு ஓட வேண்டாம். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா பேரு தான் மசாலா. வெங்காயம் கூட வேணும்னா சேர்த்துக்கலாம். வெங்காயம் சாப்பிட மாட்டீங்கனா அதுவும் வேண்டாம். ஓகேயா?? மனசு சமாதானம் ஆயிடுச்சா?

உ.கி. கால் கிலோவாவது வேண்டும். வெங்காயம் சேர்த்தால் 4 பேருக்கு இது போதும். வெங்காயம் கால் கிலோ. இரண்டு பச்சை மிளகாய். கருகப்பிலை. இஞ்சி ஒரு சின்னத் துண்டு.உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, தாளிக்க ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய். கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளிக்க ஒரு ஸ்பூன் எல்லாவற்றிலும், முதல்லே வெங்காயம் போடாமல் பண்ணும் விதம் பார்ப்போமா? ஏன்னா இன்னிக்கு சனிக்கிழமை, வெங்காயமா? அப்படினு அங்கே யாரோ பல்லைக் கடிக்கிறாங்க.

உ.கி. 4 பேருக்கு பெரிய கிழங்காக 3 அல்லது 4 நன்கு குழைய வேக வைக்கவும். குக்கரோ, அப்படியே வேக வைப்பீங்களோ அது உங்க இஷ்டம், இதெல்லாம் சொல்லணுமா என்ன? குழைய வேக வைச்ச உ.கி.யை எடுத்து உதிர்த்து, அதில் தேவையான உப்பு, ம.பொடி, பெருங்காயப் பொடி போட்டுக் கலந்து வச்சுக்கோங்க. அடுப்பில் (ஆமாம், ஆமாம், அடுப்பை மூட்டிட்டுத் தான் இதெல்லாமா சொல்லிட்டு இருப்பாங்க?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்) கடாயை வச்சு, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு போடவும் பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கவும், கருகப்பிலையும் போடவும். எல்லாம் சிவந்து வந்ததும், கலந்து வைத்த உ.கியைப் போட்டு, விருப்பம் இருந்தால் தக்காளி ஒன்றையும் சேர்க்கவும். தக்காளி ஆப்ஷனல். பின்னர் ஒரு சின்னக் கிண்ணம் நீர் சேர்க்கவும். சேர்ந்து கொதித்து வந்ததும், கீழே இறக்கிப் பொடிப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்க்கவும். இப்போ வெங்காயம் போடாத உ.கி. மசாலா பூரிக்குத் தயார்.

வெங்காயம் போடும் முறையில் மற்றது எல்லாம் மேற்கண்டவாறே. தாளிக்கும்போது கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ப.மி, இஞ்சி சேர்த்துக் கருகப்பிலையோடு வெங்காயத்தையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும்வரை வதக்கி விட்டுப் பின்னர் உருளைக்கிழங்குக் கலவை சேர்க்கணும். இதற்குத் தக்காளியே வேண்டாம். இப்போ மசாலா ரெடி. அடுத்து பூரி.

அடுப்பிலே பூரி பொரிக்கத் தேவையான எண்ணெயை வைத்துவிடவும். என்ன ஆச்சரியமா இருக்கா?? ஆமாம், பூரிக்கு அப்படித் தான் செய்யணும். ஆச்சா??? இப்போ எண்ணெய் காய வைக்கணும், அதே சமயம் எண்ணெய் அதிகமும் காயக் கூடாது/ புரிஞ்சதா? ஆகவே அடுப்பு நெருப்பை மிதமான எரிச்சலில் வைக்கணும். எண்ணெய் காயட்டும். அதுக்குள்ளே வேறே யாரையானும் நீங்க காயாதீங்க.

தேவையான அளவு கோதுமை மாவு. அரை கிலோ கோதுமை மாவுனா அதுக்குத் தேவையான உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் அஸ்கா சர்க்கரை, இரண்டு டேபிள் ஸ்பூன் பாம்பே ரவை(சன்னரவை) எல்லாம் கலந்து கொஞ்சம், கொஞ்சமாய் நீர் தெளித்துப் பிசையவும். மாவு நல்லா ஒரு பந்து போல் வரும்வரைக்கும் பிசையணும். நல்லாப் பிசைந்ததும், சின்னச் சின்ன உருண்டைகளாய் உருட்டிக் கொண்டு சப்பாத்திக் கல்லில் போட்டுப் பூரி எந்த அளவிற்கு வரணும்னு நினைக்கறீங்களோ அந்த அளவிற்கு இட்டுக் கொண்டு காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். பூரி இரண்டு பக்கமும் உப்பிக் கொண்டு, (யாரானும் அடிச்ச உங்க கன்னம் வீங்குமே அதைவிடப் பெரிசா உப்பும்) நல்லா வரும். இந்த மாதிரி உப்பிக் கொண்டும் எண்ணெய் குடிக்காமலும் வரதுக்காகத் தான் எண்ணெயை வச்சுட்டு மாவு பிசையணும், சர்க்கரை, ரவை சேர்க்கணும். பூரியை எஞ்சாய் பண்ணிட்டுச் சொல்லுங்க, எப்படி இருந்ததுனு வர்ட்டாஆஆஆஆஆஆஆஆ???

அடுத்து இப்போ எல்லாம் நாகரீகமான உணவாய்ச் சொல்லப் படும் பூரியோடு சேர்த்து உண்ணப் படும் சனா மசாலா/ எப்படினு பார்ப்போமா??? சனாவை ஊற வைங்க. நல்லா ஒரு நாள் ஊறட்டும். அப்போத் தான் மிருதுவா இருக்கும். அப்புறமாச் செய்யலாம்.

Monday, May 25, 2009

சமையல் ரகசியங்கள் வந்துட்டே இருக்கே!

ரொம்ப நாளாச்சு சமைச்சு, திவா கேட்டார், ரகசியமா வச்சிருக்கீங்கனு. ரகசியம் எல்லாம் எதுவும் இல்லை. நேரம் இல்லை எழுதியதை அப்லோட் செய்ய. அதோடு உடம்புக்கும் வந்துடுச்சு. இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாவது கவனிக்கணும். பார்க்கலாம்.

Monday, April 13, 2009

புத்தாண்டு வாழ்த்துகள், சமைக்கும் அனைவருக்கும்!

வேப்பம்பூப் பச்சடி செய்யலாமா இப்போ? இந்தப் புத்தாண்டுத் தொடக்கத்திலே தான் வேப்பம்பூப் பச்சடி செய்வாங்க. மற்ற நாட்களிலே வேப்பம்பூ ரசம், அல்லது பொடி செய்து போட்டுப் பிசைந்து சாப்பிடறதுனு இருக்கும். சில வீடுகளிலே ஊரிலே எங்கேயாவது அம்மை போட்டிருந்தால் வேப்பம்பூ பொரிக்க மாட்டாங்க. கிராமங்களிலேயும், சிறிய ஊர்களிலேயும் மட்டுமே இது பார்க்க முடியும். மற்ற இடங்களில் கொஞ்சம் கஷ்டம் தான். அந்த அம்மன் காப்பாத்துவா.

வேப்பம்பூவுக்குத் தனி மணம் உண்டு தெரியுமா? காலையிலே எழுந்ததும், சுமார் 4 மணியில் இருந்து 4-30 அல்லது ஐந்து மணிக்குள்ளே வேப்ப மரத்தடியிலே நின்னு மூச்சை உள்ளே இழுத்து ஆழ்ந்து சுவாசிங்க வேப்பம்பூவின் மணம் நாடி, நரம்பிலெல்லாம் பரவும். இப்போ ஜன்னலுக்கு வெளியே கீழே வேப்பம்பூ கொட்டிக் கிடக்கு. முன்னே எல்லாம் கொஞ்சம் சுத்தமாய் இருக்கும், நிறைய எடுத்து வைச்சுக்குவோம். இப்போ அசோகா விதைகளும் விழுந்து சுத்தமே செய்ய முடியலை. :(((( என்ன செய்யறது. ஓரளவு சுத்தமான வேப்பம்பூவை எடுத்துக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு வேப்பம்பூ வேணும்.

இந்தப் பச்சடியை இருவிதமாய்ச் செய்யலாம். ஒன்று புளி சேர்த்து. தஞ்சை ஜில்லாவில் புளி சேர்த்தே அதிகம் செய்வாங்க. மற்றது மாங்காய் சேர்த்து. மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் மாங்காய் சேர்த்தே செய்வாங்க. சிலர் இரண்டும் கலந்துக்கிறாங்க. அது எப்படி இருக்கும்னு தெரியலை. இப்போ ஒண்ணொண்ணாய்ப் பார்ப்போமா??

மாங்காயைத் தோல் சீவிப் பொடிப் பொடியாய் நறுக்கி ஒரு கிண்ணம் நீர் சேர்த்து வேக வைக்கவும்.வேக ஆரம்பிச்சதும் கொஞ்சம் போல் உப்புச் சேர்க்கவும். நன்று வெந்ததும், மாங்காய்க் குழம்பில் கொஞ்சம் போல மிளகாய்த் தூள்(இது தேவையானால் மட்டும்) சேர்க்கவும். பின்னர் வெல்லம் பொடித்து அதில் சேர்க்கவும். வெல்லம், மிளகாய்த் தூள் எல்லாம் சேர்ந்து நன்றாய்க் கொதித்து சேர்ந்து வரும்போது ஏலக்காய் சேர்த்துக் கீழே இறக்கவும். வாணலியில் நெய்யைக் காய வைத்துஅதில் சுத்தம் செய்த வேப்பம்பூவைப் போட்டுப் பொரிக்கவும். பச்சடியில் சேர்க்கவும். மாங்காய்ப் பச்சடி வேப்பம்பூ சேர்த்துத் தயார்.

அடுத்துப் புளி சேர்த்து: புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்துக் கரைக்கவும். அதில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வாசனை போகக் கொதிக்கும் போது வெல்லம் சேர்க்கவும். நன்று கெட்டியானதும் கீழே இறக்கி ஏலக்காய் சேர்த்து, முன் சொன்ன மாதிரியே வேப்பம்பூவை நெய்யில் பொரித்துச் சேர்க்கவும். வேப்பம்பூப் பச்சடி தயார்.

படம் உதவி கூகிளார்: கபீரன்பன் வந்து வேப்பம்பூப் பச்சடியை பனோரமாவிலே ஏன் போடலைம்பார். அதனால் முன்னாலேயே சொல்லிடறேன்.

Saturday, April 11, 2009

மழை கொட்டணுமா? நான் உதவிக்கு வரேன்!

உங்க ஊரிலே மழையே இல்லையா? உடனே அணுகவும், என்னை. நான் மனசாலே நினைச்சாலே போதும், வத்தல் போடவோ, வடாம் போடவோ. சுட்டெரிக்கும் சூரியனை மறைத்துக் கொண்டு எழுந்திருக்கும் மழை மேகங்கள். வாநிலை அறிக்கையே நம்மைக் கேட்கலாமானு யோசிக்கிறாங்க. ரெண்டு நாளா நினைச்சேன் குழம்பு கறிவடாம் செய்யலாமா? அப்படியே மழை வந்தாலும் அந்த மாவை வடையாத் தட்டிச் சாப்பிடலாம்னு. வங்கக் கடலின் ஏதோ ஒரு மூலையில் இருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துக்குச் செய்தி போய், உடனேயே கடலோர மாவட்டங்களில் மழையைப் பொழிய வைத்து, என்னோட திட்டத்தைத் தள்ளிப் போட்டுவிட்டது. இனி மீண்டும் வெய்யில் சுட்டெரிக்கும்போது பார்ப்போம் அடுத்த திட்டத்துடன்.

Sunday, March 22, 2009

பாகற்காயில் பிட்லை சாப்பிடணுமா!

இந்த சூடான் புலி, எங்கே இருந்து இது எல்லாத்தையும் பார்க்கிறார்னு புரியலை, உடனே வந்து பின் ஊட்டம் கொடுக்கிறார். ஏற்கெனவே நான் வீக் கொஞ்சம். ஊட்டம் தேவைனு மருத்துவர் சொல்லிட்டே இருக்கார். ஆகவே உங்க பின் ஊட்டம் இன்னும் தெம்பா இருக்கும் எனக்கு. இப்போப் பாகற்காய் பிட்லை எப்படிச் செய்யறதுனு பார்ப்போமா? புலி கேட்டிருக்காரே, அவருக்காகத் தான் இதை இப்போப் போடறேன்.

இதுக்கு முதலில் தேவையானது பாகற்காய் தாங்க. பாகல்காய் ஒரு கால் கிலோ எடுத்துக்கோங்க. நல்லா வில்லை, வில்லையா நறுக்கணும். வில்லைனதும் ராமரோட வில் நினைவில் வந்தால் நான் பொறுப்பில்லை. வட்ட, வட்டமாய் நறுக்கணும். இந்தப் பாகல்காயே இரண்டு, மூன்று விதம் இருக்கு. பொதுவா எல்லாரும் பெரிய பாகல் காய் தான் வாங்குவாங்க. ஆனால் மெது பாகல்காய்/மிதி பாகல் காய்னு ஒண்ணு இருக்கு. மிதி பாகல்காய்னதும் ம.பா.வை மிதிக்கிறதோனு நினைக்கவேண்டாம். வேலி பாகல்காய்னு ஒண்ணு இருக்கு. சின்ன பாகல்காய்னால் அதைக் காம்பு மட்டும் நறுக்கி இரண்டாய்ப் பிளந்து வச்சுக்கணும். வேலி பாகல் காயிலேயே மீடியம் சைஸா இருந்தால் வில்லை போட்டுக்கலாம். வில்லையும் போட்டுக்கலாம். உங்க இஷ்டம்.

நறுக்கின பாகல் காயில் கொஞ்சம் தயிர், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொஞ்ச நேரம் வைக்கவும். ஒரு மணி நேரம் வைக்கலாம். அதுக்குள்ளே நீங்க இரண்டு மெகா சீரியலும் பார்த்துக்கலாம். மெகா சீரியல் முடிஞ்சதும் ம.பா. இருந்தார்னா நல்லது. இல்லாட்டி நீங்களே தான் சமைச்சாகணும். து.பருப்பு ஒரு சின்ன கிண்ணம் எடுத்துக்கணும். குக்கரிலேயோ, கல்சட்டியிலேயோ து.பருப்பை நல்லாக் குழைய வேக வச்சுக்கணும். முதல்நாளே மொச்சை, கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவற்றில் எது பிடிக்குதோ அதை ஊற வைச்சுக்கலாம். அதையும் பருப்போடு சேர்த்து வேக வைச்சுக்கலாம். இது எல்லாம் தனியாத் தெரியணுமானால் அப்புறமாய்ப் போடலாம். உங்களுக்குப் பிடிக்காது ம.பா.வுக்கு மட்டுமே பிடிக்கும்னா போடாமலும் இருக்கலாம்.

இப்போ பாகல் காய் தயார். து.பருப்பு தயார். கொ.கடலை., மொச்சை தயார். இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ மசாலா சாமான்கள் வறுத்துக்கணும். மசாலான்னாலே எல்லாரும் கரம் மசாலா ஒண்ணுதான் நினைச்சுக்கறாங்க. நாம போடற உப்பு, காரமே மசாலாவோட சேர்த்தி தான். டூ இல்லை. நீங்க தயார் செய்யப் போற பிட்லை 4 பேர் சாப்பிடலாம்னு வச்சுக்குங்க. (பின்னே? யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்னு எல்லாருக்கும் கொடுக்கவேண்டாமா?) ஒரு சின்ன எலுமிச்சம்பழ அளவுப் புளி, 4ல் இருந்து 6 மி.வத்தல். (காரம் அவங்க, அவங்க ருசிக்குத் தகுந்தாற்போல்) ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, (இது போடாமலும் செய்யலாம்) கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன், உ.பருப்பு ஒரு ஸ்பூன், 5 அல்லது 6 மிளகு, ஒரு சின்னக் கட்டிப் பெருங்காயம், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் போன்றவற்றை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வறுத்துக் கொள்ளணும்.

நல்லா சிவப்பா, உங்களுக்குக் கோபம் வந்தால் மூஞ்சி எப்படிச் சிவக்குமோ அவ்வளவு சிவப்பா வறுத்துக்கலாம். வறுத்ததை ஆற விடவும். அதே வாணலியில் தயிர், உப்பு, ம.தூள் சேர்த்து ஊற வைத்த பாகல்காயைப் போட்டுச் சற்றே வறுக்கவும். தயிரை எல்லாம் பிழிஞ்சு எடுத்துட்டுத் தான். ம.பா.வை வேலை வாங்கப் பிழிஞ்சு எடுக்க மாட்டோமா? அல்லது மாமியாரோ, நாத்தனாரோ அகப்பட்டால் பிழிஞ்சு எடுக்க மாட்டோமா அதே மாதிரித் தான். மிச்சம் இருக்கும் தயிரை ஜூஸுனு சொல்லி ம.பா.கிட்டேயே கொடுக்கலாம் வீணடிக்காமல். நம்ம ம.பா. கிட்டே இதெல்லாம் பலிக்கலை, தோட்டத்துக் கறிவேப்பிலை தான் சாப்பிட்டுட்டு இருக்கு அந்த மாதிரி பிழிஞ்சதும் மிச்சம் இருக்கும் தயிரை எல்லாம்.இப்போ வதக்கிய பாகல்காயை வேக வைத்த துவரம்பருப்போடு சேர்க்கவும். புளியைக் கரைத்து அதில் ஊற்றவும். நாலு பேருக்கு வருமானு பார்த்துக்கோங்க. உப்பு, ம.பொடி சேர்க்கவும். இது கொஞ்சம் கொதிக்கட்டும். அதுக்குள்ளே வறுத்து வைச்சதையெல்லாம் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். நல்லா ஒரு கொதி வந்ததும், அரைச்சு வச்சதைக் கலக்கவும். நல்லாக் கொஞ்ச நேரம் கொதிக்கட்டும். ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம். சேர்க்காமலும் இருக்கலாம். அது உங்களுக்கு டயபடீஸ் இருக்கா இல்லையாங்கறதைப் பொறுத்து. கீழே இறக்கி வைத்துத் தேங்காய் எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, ஒரே ஒரு மி.வத்தல், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பச்சைக் கொத்துமல்லியும் போடலாம். சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.

டிஸ்கி: படங்கள் உதவி: கூகிளார். திடீர்னு பாகற்காய் பிட்லை படம் போடணும்னா என்ன செய்யறது? அதான் கூகிளாரைக் கேட்டதும் கொடுத்துட்டார். நன்றிங்கோ!

Sunday, March 15, 2009

என்ன?? யாரையுமே காணோம்?

கொழுக்கட்டையிலே ஆரம்பிச்சதா என்னனு தெரியலை, யாருமே இதுக்கு பதிலே போடலை, எல்லார் வாயிலேயும் இன்னும் கொழுக்கட்டை இருக்கு போலிருக்கு. இப்போ ஒரு முக்கியமான விஷயம் சொல்லணுமே! அது தான் இந்த ராத்திரி வேளையிலேயும் கடமை தவறாம எழுதிட்டு இருக்கேன்.

அரிசி எந்த அரிசியா இருந்தாலும் கொஞ்சம் வறுக்கணுங்க. என்ன?? என்ன?? ம.பா.வைத் தான் வறுக்கத் தெரியுமா? அது பாட்டுக்கு அது. நல்லா வறுத்தெடுங்க. கூடவே அரிசியையும், ஆனால் இதை நல்லா வறுக்கக் கூடாது. கொஞ்சம் சூடு வரப் புரட்டி எடுக்கணும். ம.பா. உங்களுக்குத் தெரியாமல் சினிமா,கினிமா போயிட்டு வந்தார்னு வச்சுக்குங்க. அந்த சினிமாவும் உங்களுக்குப் பிடிக்காத நடிகர்தான்னும் தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்க. இருந்தாலும் சும்மாவானும் கொஞ்சமே கொஞ்சமாவது பிகு காட்ட மாட்டீங்களா?அந்த மாதிரி லேசா வறுக்கணும். முடிஞ்சால் ம.பா.வையே வறுக்கச் சொல்லிடுங்க. சினிமா போயிட்டு வந்ததுக்குத் தண்டனையாவும் இருக்கும். கொழுக்கட்டை சரியா வரலைனா, அவராலேதான்னு சொல்லிடலாம். எப்படி ஐடியா?

உளுத்தம்பூரணம்: இது உழுந்தா, இல்லை உளுந்தானே ஆராய்ச்சி இன்னும் முடியலை. அதைத் தனியா வச்சுப்போம். ஒரு கப் உளுந்தை ஊற வைச்சு, மிளகாய் வத்தல், பெருங்காயம், (பூரிக்கட்டையால் ம.பா.வைஅடிக்கும்போது வருமே அந்தக் காயம் இல்லை) வாசனைக்குச் சேர்த்து உப்பும் தேவைக்கு ஏற்ப, (நீங்களும் சாப்பிடும் ஐடியா இருந்தால் உப்பைக் கொஞ்சம் கவனமாய்ச் சேர்க்கவும். அப்புறம் முனியம்மாவுக்குக் கொடுக்கிறதால் இருந்தால் எல்லாம் பெர்ஃபெக்டா இருக்கணும்.) அப்புறமா வாங்க மாட்டாங்கறதோட இல்லாமல், வேலை செய்யற மத்த வீடுங்களிலேயும் உங்க மானம் போயிடும். கவனம் தேவை.

எல்லாத்தையும் அரைச்சீங்களா? அட, சொல்லலையா? எல்லாத்தையும் மிக்ஸியிலே போட்டு அரைக்கணும்ங்க. இப்போ எல்லாம் யாரு அம்மி, கல்லுரல்னு கட்டி அரைக்கிறாங்க?? அரைச்சதை ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி, இட்லிப் பானையில் வச்சு வேக வைக்கணும். வேகாத வெயிலில் போய் ம.பா.வைத் தேங்காய் வாங்கி வரச் சொன்னீங்களா இல்லையா? அந்த மாதிரி வேகாம இருந்துடப் போகுது. நல்லா வேகணும். ஒரு குச்சியால் குத்திப் பார்த்தீங்கன்னா, இங்கேயும் ம.பா.வே உதவிக்கு வருவார். கை சுடாமல் இருக்க அவரையே குத்திப் பார்க்கச் சொல்லலாம். என்ன?? வேலைக்குப் போயிடறாரா? இதெல்லாம் அவர் வீட்டிலே இருக்கும்போது வச்சுக்கணும், இல்லைனா லீவு போடச் சொல்லணும். உங்களை மீறி அவர் வேலைக்குப் போயிட முடியுமா? ஒட்டாமல், குச்சியில் தான், ஒட்டாமல் வந்ததும் எடுத்து, உதிர்த்து, (எவ்வளவு வேலை பாருங்க, இதுக்குத் தான் ம.பா. கூடவே இருக்கணும்) தாளிதம் செய்த வாணலியில் போட்டுப் புரட்டி வச்சுக்குங்க. ம.பா. மாட்டேன்னு சொன்னார்னா அவரைத் தனியாப் புரட்டி எடுத்துடலாம்.

உளுத்தம் பூரணம் இப்போ ரெடி. மாவிலே கிண்ணங்கள் போல் சொப்புப் பண்ணி அதில் வைத்து மூடி, மறுபடி இட்லிப் பானையில் வேகவிட்டு வைக்கச் சொல்லுங்க. உங்க ம.பா.வை. அப்புறமா எல்லாக் கொழுக்கட்டையும் ரெடி ஆனதும் உங்க தோழிகளை அழைத்து, பெருமையாக் காட்டலாம். ஆனால் ஒண்ணு, மூச்சு விடக் கூடாது. ம.பா. தான் செய்தார்னோ, அவர் ஒத்தாசை இல்லைனா உங்களால் முடியாதுனோ. அலட்டிக்கணும் நல்லா, அப்புறம் கொழுக்கட்டை செய்யறதைப் பத்தி முடிஞ்சால் வகுப்பு எடுங்க.