எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, January 17, 2021

திடீர்னு ஒரு பனீர் புலவு! :)

 சென்ற வாரம் ஸ்ராத்தத்தின் போது வாங்கி வந்த காய்கள் நேற்று வரை வந்து விட்டன! இன்னிக்குக் காய் இல்லை.  கொஞ்சம் போல் காரட்டுகளும் ஒரு கைப்பிடி அவரைக்காயும் தான் இருந்தது. நம்மவருக்கு உடனே குஷி வந்துடுமே. நான் போய்க் காய்களெல்லாம் வாங்கிண்டு அப்படியே மத்தியானத்துக்குக் குழம்பு, ரசம், கறி, கூட்டும் வாங்கிடறேன். நீ சாதம் மட்டும் வை! நேத்திக்கே கை வலினு சொன்னியே! இன்னிக்குச் சமைக்க வேண்டாம்னு சொல்ல எனக்குள் உத்வேகம். பின்னே? நான் சமைக்கிறேன். நீங்க ஒண்ணும் போய் அலைய வேண்டாம் என்று பெரிய முட்டுக்கட்டையாய்ப் போட்டேன். இன்னிக்கே சந்தைக்குக் காய்கள் எல்லாம் வந்திருக்காது. நாளையிலிருந்து தான் வழக்கமான முறையில் இருக்கும்னு சொன்னேன். ஆனால் அவர் கிளம்பிட்டார்.

நான் தீர்மானமாக நீங்க காய் வாங்கி வந்தாலும் நான் பனீர் புலவ் தான் இன்னிக்குப் பண்ணப் போறேன் என்று சொல்லி விட்டேன். சரி, ஆனால் கொஞ்சம் ரசம் வேண்டும் எனக்கு என்றார். தொட்டுக்க அப்பளம் வாட்டிக்கலாம், இல்லாட்டியும் வாழைக்காய் வறுவல் இருக்குனு நானும் சரினு சொல்லிட்டேன். ஆனால் அவரால் சந்தைக்கே போக முடியாமல் வண்டி படுத்தி எடுத்துக் கடைசியில் வீட்டுக்கு வந்துட்டார். இஃகி,இஃகி,இஃகி!



நான் திட்டம் போட்ட படி பனீர் புலவ் செய்தேன். அதுக்குக் காய்கள் வேண்டும்னு எல்லாம் இல்லை. வெங்காயம் இருந்தாலே போதும். ஆனால் காரட் வாங்கிப் பல நாட்கள் ஆகி விட்டதால் அதைத் தீர்க்கணும்னு காரட்டுகளை எடுத்துக் கொண்டேன். பச்சைப் பட்டாணி இல்லை; அதனால் என்ன? காய்ந்த பட்டாணியை நேற்றே எதுக்கும் இருக்கட்டும்னு ஊற வைச்சிருந்தேன். அதை நன்கு கழுவிக் கொண்டு சிறிது உப்புச் சேர்த்துக் குக்கரில் வேக வைத்தேன். இல்லைனால் பட்டாணிக் கல்லைப் போல் உட்கார்ந்திருக்கு! 

அதற்குள்ளாகப் பனீரை எடுத்து அலம்பித் துண்டுகளாக்கிக் கொண்டு அதில் மஞ்சள் பொடி, கொஞ்சமாக மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, (தேவையானால் கரம் மசாலாப் பொடி) ஜீரகப் பொடி, உப்பு ஆகியன சேர்த்து நன்கு கலந்து வைத்தேன். வீட்டில் அதிர்ஷ்டவசமாக பாஸ்மதி அரிசி இருந்தது. அதை ஒரு சின்னக் கிண்ணம் எடுத்து நன்கு கழுவி விட்டுப் பின்னர் நீரை வடிகட்டிக் கொண்டு இரண்டு தேக்கரண்டி நெய்யை விட்டு அரிசியை வறுத்துவிட்டு அரிசி எடுத்த கிண்ணத்தாலேயே ஒன்றேகால் கிண்ணம் நீரை அதில் விட்டு அரிசியை ஊற வைத்தேன்.

இதெல்லாம் ஆவதற்குள்ளாகப் பட்டாணி வெந்து விட்டதைக் குக்கர் அறிவிக்க, ரசத்துக்கும், மோருக்கும் வெறும் சாதம் அரை ஆழாக்கு வைத்துவிட்டு ஈயச் செம்பில் ரசத்தையும் வைத்தேன். பின்னர் வந்து 2 பெரிய வெங்காயம், காரட் ஒன்று பொடியாக நீளவாட்டில் நறுக்கிக் கொண்டேன். தக்காளி சேர்க்கலை. வீட்டில் தக்காளியும் இல்லை. கொத்துமல்லி, புதினா எதுவும் இல்லை. நல்லவேளையாகப் பச்சை மிளகாயும், இஞ்சியும் இருந்தன. அதைப் பொடியாக நறுக்கிக் கொண்டேன். பச்சை மிளகாய் இரண்டைப் பிளந்து வைத்துக் கொண்டேன்.


படங்களுக்கு நன்றி கூகிளார்

அடுப்பில் குக்கரை வைத்துக்கொஞ்சம் எண்ணெய்/வெண்ணெய் சேர்த்துக் காய வைத்துக் கொண்டேன். ஜீரகம், சோம்பு, முழு மிளகு வகைக்கு ஒரு தேக்கரண்டி போட்டுத் தாளித்து லவங்கப்பட்டை ஒரு துண்டு பச்சை ஏலக்காய் 2, ஒரு கிராம்பு போட்டுக் கொண்டேன்.  பச்சை மிளகாய், இஞ்சியைப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு அது வதங்க ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டேன். வெங்காயம் வதங்கியதும் காரட்டைப் போட்டு வதக்கினேன். காரட் கொஞ்சம் வதங்கியதும் அரைத் தேக்கரண்டி மஞ்சள் பொடி, கால் தேக்கரண்டி மிளகாய்ப் பொடி(காரம் அதிகம்) ஒரு தேக்கரண்டி தனியாப் பொடி, கால் தேக்கரண்டி கரம் மசாலாப் பொடி போட்டுக் காய்களோடு நன்கு கலக்கும்படி வதக்கிக் கொண்டேன். எல்லாம் நன்கு கலந்ததும் நீரோடு  ஊற வைத்திருக்கும் அரிசியை அப்படியே அதில் சேர்த்தேன். மேற்கொண்டு நீர் வேண்டாம். பாஸ்மதி அரிசி அதிகம் நீர் தாங்காது. தேவையான உப்பைச் சேர்த்தேன். ஏனெனில் பட்டாணியில் கொஞ்சம் உப்புப் போட்டிருக்கோம். பனீருக்கும் கொஞ்சம் உப்புச் சேர்த்திருக்கோம். ஆகவே குறைவான உப்பே போதும்.

கொத்துமல்லித் தழை, புதினா இருந்தால் காரட், வெங்காயம் வதக்கையில் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கலாம். அல்லது பச்சையாகக் கடைசியில் மேலே தூவலாம். இரண்டுமே இல்லை. குக்கரை மூடித் தணித்தே அடுப்பை எரிய விட்டு நன்கு மேலே ஆவி வந்ததும் வெயிட்டைப் போட்டேன். சிறிது நேரத்தில் ஒரு விசில் வர அடுப்பை உடனே அணைத்து விட்டேன். இதற்கு நடுவில் ஒரு வாணலியில் அல்லது பிடித்தமானால் நான் ஸ்டிக் தோசைக்கல்லில் நெய்யை விட்டுக் கொண்டு மசாலா சேர்த்து ஊற வைத்திருக்கும் பனீர் துண்டுகளை நன்கு ப்ரவுன் நிறம் வரும் வரை பிரட்டிக் கொள்ள வேண்டும். அதிகம் பிரட்ட வேண்டாம். ரப்பர் மாதிரி ஆயிடும். இங்கே குக்கர் திறந்ததும் வறுத்த பனீர்த் துண்டுகளை அதில் சேர்த்துக் கொத்துமல்லி, புதினா போடுவதானால் போட்டுவிட்டு மெதுவாகக் கிளறணும். அரிசி உடையாமல் கிளறிக் கொடுக்கணும். 

இதை வெங்காயப் பச்சடி, காரட் பச்சடி, வெள்ளரிக்காய்ப் பச்சடி, தக்காளிப் பச்சடி ஆகியவற்றோடு சாப்பிடலாம். பண்ணும்போதோ, சாப்பிடும்போதோ இதைப் பதிவாகப் போடும் எண்ணமே இல்லை. ஆனால் சாயந்திரம் திடீர்னு தோன்றிய ஓர் உந்துதலில் மிச்சம் இருக்கும் புலவைப் படம் எடுத்துக் கொண்டேன். மற்றப் படங்கள் வழக்கம் போல் எடுக்கலை. ஹிஹிஹிஹி. கீழே மிச்சம் இருக்கும் பனீர் புலவ். பனீர் எங்கேனு கேட்காதீங்க! பொறுக்கிச் சாப்பிட்டுட்டேன்! :)))))


இன்று செய்த பனீர் புலவ் படம்

எல்லாப்படங்களையும் ஒழுங்கா எடுத்திருந்தால் எ.பி.க்குத் திங்கக்கிழமைப் பதிவுக்கு அனுப்பி இருப்பேன். இதையே "எண்ணங்கள்" வலைப்பக்கம் போட நினைச்சு அப்புறமா இங்கேயே போடலாம்னு போட்டுட்டேன். யாருக்கெல்லாம் முடியுதோ வந்து சாப்பிடுங்கப்பா!

26 comments:

  1. முதல் மூன்று படங்களைப் பார்த்து, 'நம்ம கீசா மேடமா... ப்ரொஃபஷனல் போட்டோகிராபர் தோத்துடுவாங்க போலிருக்கு' என்று நினைத்தேன்....


    "படங்களுக்கு நன்றி' வரியைப் படிக்கும்வரை.

    ஆனாலும் பனீர்புலாவ் என் பசியைத் தூண்டுது. நீங்க சொல்லியிருக்கும் எல்லா ஐட்டங்களும், பச்சைப் பட்டாணி-புதியது உட்பட, இன்று இருக்கு. ஆனா 6 மணிக்கு மேல் நான் சாப்பிடமாட்டேனே..

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா. நீங்க ஆறு மணிக்கெல்லாம் சாப்பிடுவதே தப்பு! ஏற்க முடியாத ஒன்று. அந்தி/சந்தி காலத்தில் சாப்பிடக் கூடாதுனு தெரியாதா? அந்த நேரம் தானே நரசிம்மர் அவதரித்து ஹிரண்யனை சம்ஹாரம் பண்ணினார். அந்த நேரம் எப்போவுமே (பிரதோஷகாலம்) சாப்பாடெல்லாம் சாப்பிடும் நேரம் அல்ல. இறை வழிபாட்டுக்கு உகந்த நேரம். அதன் பின்னர் ஆறரை மணிக்கு மேல் ஏழு மணிக்குள் இரவு உணவை முடிச்சுக்கலாம். நானும் சொல்ல நினைச்சு நினைச்சுத் தயக்கமா இருந்தது. இன்னிக்குச் சொல்லிட்டேன்.

      Delete
    2. 6 மணினா, 6 மணிக்கேவா? பொதுவா 5 1/2 மணிக்கு சாப்பாட்டை முடித்துடுவேன்...இல்லைனா 6 1/2 (லேட்டாச்சுன்னா). மிகச் சில சமயம் 7 மணிக்கு தட்டு வந்திருக்கு. சந்தி சமயம் சந்தியாவந்தனத்துக்கான காலமல்லோ.

      Delete
  2. //பனீர் எங்கன்னு கேட்காதீங்க// - நீங்க வெறும் பாத்திரத்தை வச்சு, இதுதான் பனீர் புலாவ், பனீர் புலாவ் எங்கன்னு கேட்காதீங்க, சாப்பிட்டுக் காலி பண்ணின பிறகுதான் போட்டோ எடுக்கலைனு நினைவுக்கு வந்தது..அதனால பாத்திரத்தை போட்டோ எடுத்தேன் என்று சொன்னால் மட்டும் நாங்க சண்டைக்கு வரமுடியுமா? அப்படியா... சரி...னு சொல்லவேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! பனீர் என்றால் நான் அப்படியே சாப்பிடுவேன்!

      Delete
  3. பனீர் புலவு செய்முறை நல்லா இருக்கு. சில மாதங்கள் முன்பு கொஞ்சம் புதினாவும் போட்டு மனைவி செய்திருந்தா (எனக்கு புதினா வாசனையே பிடிக்காது). நல்லாவே இருந்தது.

    //யாருக்கெல்லாம் முடியுதோ வந்து சாப்பிடுங்கப்பா// - எதை பனீர் இல்லாத வெறும் மசாலா பாஸ்மதி சாதத்தையா?

    ReplyDelete
    Replies
    1. நானும் புதினா/கொத்துமல்லி எல்லாமும் போடுவேன். ஆனால் அன்று கருகப்பிலை தவிர்த்து எதுவும் இல்லை. நேற்றுத் தான் போய்க் காய்கறி வாங்கி வந்தார். ஆனால் எதுவும் சரியாய்க் கிடைக்கலை. வாழைத்தண்டு, கத்திரிக்காய், சேனைக்கிழங்கு இப்படித் தான் கிடைச்சது. மக்கள் இங்கே இன்னமும் பொங்கல் மயக்கத்திலிருந்து வெளிவரலை. :))))

      Delete
    2. அது சரி...சேனைக் கிழங்கு அங்க என்ன விலை? இங்க கிலோ 30 ரூபாய்-40 ரூபாய் ஆகிறது. கேரட்தான் கிலோ 20, சௌசௌ கிலோ 20, பீன்ஸ் கிலோ 30 ன்னு பார்க்கிறேன். தக்காளி பாவம்..15-20 ரூபாய்தான்.

      Delete
  4. ஆஹா...   சுவையாக இருக்கும் போலவே...   

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சுவையாகவே இருந்தது.

      Delete
    2. அதை அவர் சொன்னாரான்னு கேட்கணும்னு நினைத்தேன். ஹாஹா.

      Delete
    3. சாப்பிடுவதில் இருந்தே தெரிஞ்சுக்கலாம். இன்னிலேருந்து ஆறு மணிக்கெல்லாம் சாப்பிடாதீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  5. பாஸும் பனீர் ரைஸ் செய்வார்,  நன்றாகவே இருக்கும்.  ஆனால் அதில் கேரட் எல்லாம் போட்ட நினைவு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இஃகி,இஃகி,இஃகி, ஶ்ரீராம், பனீர் புலவுக்கு வெங்காயம் மட்டும் போட்டால்கூடப் போதும் தான். ஆனால் என்னிடம் காரட் செலவு செய்யாமல் இருந்தது என்பதால் சாதத்தில் சேர்த்துக் கொண்டேன். அப்படியும் ஒரு காரட் மிச்சம் இருக்கு. நாளைக்கு வாழைத்தண்டு சாலடில் சேர்க்க வேண்டியது தான்!

      Delete
  6. பனீர் புலாவ் நன்று. இங்கே பலருக்கு பனீர் மட்டும் இருந்து விட்டால் போதும்! அதை வைத்தே நிறைய தொட்டுக்கை செய்து விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நானும்! :))))

      Delete
  7. 😄😄😃😃😀😀😀😀😀😀😀😀😀😀😀

    ReplyDelete
  8. பனீர் புலவை விட அதற்கு முன்பான ஆரோஹண அவரோஹணத்தைக் கண்டு சிரித்துக் கொண்டே படித்தேன்.
    ஹாஹாஹா. எனக்கும் படம் பிடிக்க மறந்து
    ஏதோ எடுப்பேன். என் மகள் வேறு,,,
    சாப்பிட்ட பிறகு தான்
    படங்கள் எடுக்கணும்னு உத்தரவு
    போடுவாள்::::)))))))))).
    வீட்டில் இருப்பதை வைத்து இவ்வளவு அருமையாகச் செய்து விட்டீர்களே.

    மஹா நறுவிசாக எழுதுவது பெரிய திறமை.
    எனக்கு இன்னும் கைவரவில்லை!!!!!!
    இங்கே அடிக்கடி செய்வாள். எனக்கு தான் தயக்கமாக இருக்கும்.
    வில்லு வில்லாக சாதம் இருந்தால்
    சாப்பிட முடியாது.
    புலாவ் படம் அருமை. வாழ்த்துகள் மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நமக்கெல்லாம் ராமாயணம் எழுதாட்டிச் சரிப்படாதே! நறுவிசோ என்னமோ! தெரியலை! கொஞ்சம் வம்பு பண்ணிக்கொண்டே இருக்கச் சொல்லும் மூளை! பாஸ்மதி அரிசியை அரைமணி நேரம் ஊற வைத்துவிட்டுப் பின்னர் சமைத்தால் நல்ல நீளமாகவும் மிருதுவாகவும் ஒட்டிக்காமலும் வரும். வில்லு வில்லாக இருக்காது.

      Delete
  9. வல்லி சிம்ஹன் எழுதியது போல நறுவிசாக எழுதுவது உங்களுக்கு கை வந்த கலை. அப்படித்தான் பனீர் புலவு செய்முறையைப்பற்றியும் எழுதியிருக்கிறீர்கள்!!சில சமயம் சமையலின் சுவையை விட அது மிஞ்சி விடுகிறது!!👌😊

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ! முதல் முறையாக வந்திருக்கீங்களோ? வருகைக்கு நன்றி. நறுவிசா இருப்பதாப் பாராட்டி இருப்பதற்கும் நன்றி. பனீர் புலவ் நன்றாகவே இருந்தது. அதுக்கும் மீண்டும் நன்றி.

      Delete
  10. மூன்று நாட்களாக தேடித்தேடி இன்று தான் எங்கள் பிளாக் இன் மூலம் தொடர்பு கிடைத்தது இருப்பதை வைத்துக்கொண்டு என்ன எல்லாமே இருக்கிறது நன்றாக சுவைபட தயாரித்து விட்டீர்கள் நானும் முன்கதை பின் கதை எழுதுவது வழக்கம் தயாரிப்பை விட பேச்சும் கூட இருந்தால்தான் ருசியும் அதிகமாக இருக்கும் நன்றாக இருந்தது அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்மா, நல்வரவு, உங்கள் வருகையும், கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்கும் நன்றி அம்மா. நான் நேரில் பேசுவதை விட இம்மாதிரிப் பதிவுகளில் அதிகம் பேசுவேன். :)))))

      Delete