எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, December 7, 2019

பாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல்!

பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா? ஒரு மாறுதலுக்கு இதை எலுமிச்சை பிழிந்து பண்ணிச் சாப்பிடுவோம்.

Image result for சேனைக்கிழங்கு

காராக்கருணை எனப்படும் சேனைக்கிழங்கு கால் கிலோ, துவரம்பருப்புக் குழைந்தது ஒரு சின்னக் கிண்ணம், பச்சை மிளகாய் 4, இஞ்சி ஒரு துண்டு, தாளிக்க எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மஞ்சள் பொடி, கர்கப்பிலை, கொத்துமல்லி, எலுமிச்சம்பழம் 1, உப்பு தேவைக்கு. தேங்காய்த் துருவல் தேவையானால் ஒரு டீஸ்பூன்.

சேனைக்கிழங்கை நன்கு தோல் சீவிக் கழுவிக்கொண்டு குக்கரில் அல்லது வாயகன்ற பாத்திரத்தில் வேக வைக்கவும். நன்கு வேக வேண்டும். வெந்ததும் முன் சொன்னாற்போல் ஓர் மத்தைக்கொண்டு நன்கு மசித்துக்கொள்ளவும். மஞ்சள் பொடி, உப்புச் சேர்த்து வைக்கவும். அடி கனமான வாணலி அல்லது கல்சட்டியைப் போட்டு எண்ணெயை ஊற்றவும். கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை ஆகியவற்றை வரிசையாகப் போடவும். கலந்து வைத்திருக்கும் கலவையை ஊற்றவும். வேக வைத்த துவரம்பருப்பில் அரைக்கிண்ணம் நீர் சேர்த்துக் கலவையில் ஊற்றவும். உப்பு ஏற்கெனவே சேர்த்துவிட்டதால் காரம் அதிகம் தேவை எனில் ஒரு டீஸ்பூன் சாம்பார்ப் பொடி சேர்க்கலாம். இல்லை எனில் பச்சை மிளகாய்க் காரமே போதும். நன்கு சேர்த்து கொதித்ததும் கரண்டியால் எடுத்து ஊற்றும் பதத்தில் வந்து விட்டால் கீழே இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொத்துமல்லி தூவவும். இதை வற்றல் குழம்பு, வெறும் குழம்பு, அப்பளக்குழம்பு ஆகியவற்றோடு தொட்டுக்கொள்ளத் துணைக்கு ஏதுவாக இருக்கும்.


Image result for பீர்க்கங்காய்
பீர்க்கங்காய்ச் சட்டி மசியல்: இது பிசைந்து சாப்பிட ஏதுவானது. பீர்க்கங்காயைப் பலரும் அதிகம் சாப்பிடுவதில்லை. சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே உகந்தது. நார்ச்சத்து அதிகம். கலோரிகள் குறைவாக உள்ளது. உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான அனைத்து உயிர்ச்சத்துக்களும் கொண்டது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். பார்வைக்கோளாறுகளைச் சரி செய்யும். ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். மூல நோய், மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு மருந்து. நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் வெப்ப நாடான நம் நாட்டு சீதோஷ்ணத்துக்கு ஏற்ற காய். தோல் நோய்க்கும் உகந்ததாகச் சொல்லப்படும் பீர்க்கங்காய், பூக்கள் ஆகியன சித்த மருத்துவத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. எடையைக் குறைக்கும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலைக் குணப்படுத்தும்.

இந்தப் பீர்க்கங்காயில் இத்தனை சத்துக்கள் இருந்தாலும் பெரும்பாலோர் அலட்சியமாக ஒதுக்கி விடுகின்றனர். இப்போது இதில் சட்டி மசியல் செய்யும் விதம் பற்றிப் பார்ப்போம். பீர்க்கங்காய்த் தோலைச் சீவி நறுக்கி வதக்கினால் துளியாகப் போய்விடும் என்பதால் சுமார் அரைக்கிலோ பீர்க்கங்காய்ச் சட்டி மசியலுக்குத் தேவை.

அரைக்கிலோ பீர்க்கங்காய் தோல் சீவி நறுக்கி வைக்கவும். புளி ஓர் எலுமிச்சை அளவுக்கு எடுத்துக்கொண்டு கரைத்து வடிகட்டி வைக்கவும். உப்பு, மஞ்சள் பொடி தேவைக்கு.

வறுத்துப் பொடிக்க: மிளகாய் வற்றல் 4, கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, மிளகு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் சின்னத் துண்டு. வறுக்கத் தேவையான எண்ணெய். கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக்கொண்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடிக்கவும்.

தாளிக்கவும் வதக்கவும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய், தாளிக்கக் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சின்னப் பச்சை மிளகாய் ஒன்று, சின்ன மி.வத்தல் ஒன்று, கருகப்பிலை,தேவையானால் கொத்துமல்லிக்கடைசியில் தூவலாம். அவசியம் இல்லை.

இந்தச் சட்டி மசியலைக் கல்சட்டி அல்லது மண் சட்டியில் பண்ணினாலே நன்றாக வரும். ஏனெனில் பீர்க்கங்காயைப் போட்டு நன்கு வதக்கிப் பின்னர் மசிக்கணும். கடாய் அல்லது கல்சட்டியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு தாளிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளித்துக் கொண்டு கடைசியில் பீர்க்கங்காய்த் துண்டங்களையும் போட்டு நன்கு வதக்கவும். பீர்க்கங்காய் சீக்கிரத்தில் குழைந்து விடும். இல்லை எனில் ஓர் மத்தால் மசித்துக்கொள்ளவும். நன்கு மசிந்ததும் கரைத்து வைத்துள்ள புளி ஜலத்தை ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். சேர்ந்து கொதிக்கையில் வறுத்த பொடியைத் தேவையான அளவுக்குக் கலந்து ஒரு கொதி விட்டதும் கீழே இறக்கித் தேவையானால் பச்சைக்கொத்துமல்லி தூவவும். சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம். பொங்கல், அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா ஆகியவற்றோடு தொட்டுக்கொள்ளவும் நன்றாக இருக்கும்.

12 comments:

  1. உண்மைதான்...   பீர்க்கங்காயை பெரும்பாலும் வாங்குவதே இல்லை.   இப்படிமறந்து விட்டால் அப்புறம் செய்வதில் சுணக்கம் வந்து விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீராம், எங்க வீட்டில் பீர்க்கங்காய் அடிக்கடி வாங்குவோம். வாரம் ஒரு நாளாவது இடம் பெறும். ஒரு தரம் துவையல்னா, ஒரு தரம் இந்த மாதிரிச் சட்டி மசியல், இன்னொரு தரம் பிட்லை என்று பண்ணுவோம். சப்பாத்திக்கு என்று வெங்காயம், பாசிப்பருப்புச் சேர்த்துத் தேங்காய், ஜீரகம் அரைத்து விட்டுப் பீர்க்கங்காய்க் கூட்டும் பண்ணுவேன். மாமா அரை மனசாச் சாப்பிடுவார்.

      Delete
  2. சேனைக்கிழங்கில் மசியல் செய்ததில்லை.   இப்படி ஒருதரம் முயற்சித்துப் பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்க ஸ்ரீராம், புளி விட்டும் பண்ணிப் பாருங்க, எலுமிச்சம்பழம் பிழிந்தும் பண்ணிப் பாருங்க.

      Delete
  3. இரண்டுமே சுவையான குறிப்பு. பீர்க்கங்காய் கூட்டு செய்வதுண்டு. மசியல் செய்ததில்லை. இங்கே பீர்க்கங்காய் நன்றாகக் கிடைக்கிறது. செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இந்த முறையில் பண்ணும்போதே தாளிப்பில் வெங்காயமும் வதக்கிச் சேர்த்தால் சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம். ஆனால் அரிசி உப்புமாவுக்கு நல்ல துணை.

      Delete
  4. ஒரு நாளைக்கு ஒழி என்றால் ஒழியாய்
    இரு நாளைக்கு ஏல் என்றால் ஏலாய்...... இடும்பைகூர் என் வயிறே
    உன்னோடு வாழ்தல் அரிது.

    இடுகை போடலைனா, நிறைய இடைவெளி விட வேண்டியது. இல்லைனா, டக் டக் என்று நிறைய இடுகை போடவேண்டியது. நியாயமா?

    இன்னும் முந்தைய இடுகைக்கே இன்னும் கருத்து போடலை. அதுக்குள் இந்த இடுகை வந்து 17 மணி நேரமாகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத்தமிழரே, எனக்கு நேரம் சரியாக வாய்க்கணும். மத்தியானத்தில் உட்கார்ந்து எழுதினால் தான் முடியும். அப்படி இல்லைனா தள்ளித்தான் போகும். இதை ஷெட்யூல் செய்து வைத்திருந்தேன். தானாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறது! நானே பின்னர் தான் பார்த்தேன்! என்ன செய்வது!

      Delete
  5. எனக்கு சாதாரண, சேனைக் கிழங்கு கரேமது (கட் செய்து, சிறிது வேகவைத்து, வாணலியில் எண்ணெய் கடுகுவிட்டு வறுப்பது) ரொம்பவும் பிடிக்கும். வேறு வகையில் கரேமது, கூட்டு செய்து சாப்பிட்டதில்லை. ஆனால் நான் +2 படித்தபோது ஹாஸ்டலில் சேனையைக் கூட்டு செய்வார்கள். எனக்கு அது ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சேனையும், காராமணியும் சேர்த்துக் கூட்டுப் பண்ணலாம் நெ.த. ஆனால் பெரும்பாலும் இதை எரிசேரி மாதிரித்தான் பண்ணுவாங்க. சாதாரணக் கூட்டை அரிதாகவே பார்க்க முடியும்.

      Delete
  6. பீர்க்கைங்காயில், துவையல், பாசிப்பருப்பு கூட்டு ஆகிய இரண்டும்தான் சாப்பிட்டிருக்கிறேன். வேறு வகையில் சாப்பிட்டதே இல்லை.

    ReplyDelete
  7. இப்படியும் பண்ணிப் பாருங்க! நன்றாகவே இருக்கும். பொரிச்ச கூட்டு எதோடயும் இந்தச் சட்டி மசியல் ஒத்துப் போகும்.

    ReplyDelete