எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, October 24, 2019

பாரம்பரியச் சமையல்கள், கத்திரிக்காய் மஹாத்மியம் தொடர்ச்சி!

நான்கு பேருக்கான அளவு! கத்திரிக்காய்ப் பிரியர் எனில் முக்கால் கிலோ வேண்டும். எல்லாக் கத்திரிக்காயும் ஒரே சீராக ஒரே அளவில் இருந்தால் நல்லது. ரொம்பச் சின்னதாயும் வேண்டாம்!

நான் எங்க ரெண்டு பேருக்குத் தான் என்பதால் ஆளுக்கு ஐந்து கத்திரிக்காய் என்ற வீதாசாரப்படி பத்துக் கத்திரிக்காய் எடுத்துக் கொண்டேன்.

கத்திரிக்காய்க்குள் அடைக்கத் தேவையான பொருட்கள்

மிளகாய்ப் பொடி  இரண்டு டீஸ்பூன்

தனியா ஒன்றரை அல்லது இரண்டு டீஸ்பூன்(அவரவர் காரத்திற்கு ஏற்பக் கூட்டியோ குறைத்தோ எடுத்துக்கலாம்.)

மஞ்சள் பொடி   அரை டீஸ்பூன்

பெருங்காயப் பொடி அரை டீஸ்பூன்

அம்சூர் பொடி(காய வைத்த மாங்காய்ப் பவுடர்) அரை டீஸ்பூன்(இது கட்டாயம் அல்ல)

கரம் மசாலாப் பொடி அரை டீஸ்பூன்

வறுத்த ஜீரகப் பொடி ஒரு டீஸ்பூன்

சோம்பு இரண்டு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

மேலே சொல்லி இருப்பனவற்றை ஒரு பேசினில் போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  

கத்திரிக்காய்களை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.


 

கழுவிய கத்திரிக்காய்களை நான்காகப் பிளந்து கொண்டு உள்ளே கலந்து வைத்திருக்கும் பொடியை வைத்து எல்லாவற்றையும் நிரப்பவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும். அதில் கத்திரிக்காய்களை மெதுவாக ஒவ்வொன்றாகப் போடவும்.

தேவையானால் அடைத்தது போக மீதம் இருக்கும் பொடியை மேலே தூவலாம்.

  


சிறிது நேரம் ஒரு தட்டைப் போட்டு மூடி வைத்து குறைந்த வெப்பத்தில் கத்திரிக்காய்களை வதக்கவும். திருப்பி விடும்போது கத்திரிக்காய் உடையாமல் கவனமாகத் திருப்பி விடவும்.  நல்ல கத்திரிக்காயாக இருந்தால் நன்கு குழைந்துவிடும். அரை மணி நேரத்துக்குள்ளாகத் தயார் செய்து விடலாம். இப்போது ஃபுல்கா, நான், சப்பாத்தி போன்றவற்றுடன் சூடாகப் பரிமாறவும். 


நம்ம ஊர்ப்பக்கம் கத்திரிக்காய்ப் பொடி அடைத்த கறி எனில் மி.வத்தல், தனியா, கடலைப்பருப்பு, உபருப்பு மிளகு, தேங்காய்த் துருவல் வறுத்து மிக்சியில் அல்லது அம்மியில் பொடி செய்து அதை அடைத்துச் செய்வோம். அது சாப்பாட்டுக்கு நன்றாக இருக்கும். இது சப்பாத்தியோடு நன்றாக இருக்கும். 

இந்தக்கத்திரிக்காயை வில்லை வில்லையாக வட்டமாக நறுக்கிக் கொண்டு பஜ்ஜி மாவில் தோய்த்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டுப் பிரட்டியும் எடுக்கலாம். அதற்குத் தேவையான பொருட்கள்.
கால் கிலோ கத்திரிக்காய். கழுவித்துடைத்து வில்லையாக நறுக்கிக் கொள்ளவும். வில்லைகளுக்கு ஏற்பக் கடலைமாவு பஜ்ஜி பதத்தில் கரைக்க வேண்டும்.

கடலை மாவு ஒரு கிண்ணம், அரைக்கிண்ணம் அரிசி மாவு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி. எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். கொஞ்சம் நீர் விட்டுக் கொண்டு அதை பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். மசாலா பிடித்தமானவர்கள் இத்துடன் கொஞ்சம் கரம் மசாலாத்தூள்,அம்சூர்ப் பொடி ஆகியவற்றையும் கலந்து கொள்ளலாம். ஆனால் நான் கலந்து கொள்ளுவதில்லை.

அடுப்பில் தோசைக்கல்லைச் சூடு செய்யவும். சமையல் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தான் இதற்கு நன்றாக இருக்கும். ஒரு கிண்ணம் எண்ணெய் தேவைப்படும். எண்ணெயை எடுத்துக் காய்ந்த தோசைக்கல்லில் ஒரு சின்னக் குழிக்கரண்டியால் பரப்பி ஒரு துணி அல்லது வாழை இலையால் எண்ணெயை தோசைக்கல் முழுக்கப் பரத்தவும். தோசைக்கல் காய்ந்து விட்டதெனில் அதிலிருந்து ஆவி வரும். இப்போது வில்லையாக நறுக்கிய கத்திரிக்காயை பஜ்ஜி மாவில் ஒவ்வொன்றாகத் தோய்த்து தோசைக்கல்லில் சுமார் ஐந்து, ஆறு வில்லைகளைப் பரத்தலாகப் போடவும். எண்ணெய் ஊற்றவும். அது வெந்து விட்டதெனில் தானே தூக்கிக் கொண்டு கிளம்பும். அப்போது தோசைத்திருப்பியால் எடுத்து மறுபக்கம் போடவும். மறுபக்கமும் நன்றாக வேகவிட்டு எடுத்துக் கொண்டு ஒரு வடிதட்டில் தனியாகப் போட்டு வைக்கவும். சாப்பாடுடன் சாப்பிடலாம். மாலை காஃபி, தேநீர் ஆகியவற்றுடனும் சாப்பிடலாம்.

முதலில் சொன்னது குஜராத்தி முறையில் செய்தது. இரண்டாவதாக மேற்கு வங்காள முறையில் செய்தது. 

நல்ல பிஞ்சுக்கத்திரிக்காயோடு, பிஞ்சு வெண்டைக்காயும் சேர்த்து வதக்கல் கறியாகப் பண்ணலாம். அம்பத்தூரில் எங்க வீட்டுத் தோட்டத்தில் நிறையக் கத்திரிக்காய், வெண்டைக்காய் காய்த்தது. அப்போது நான் குழந்தைகளுக்குச் சப்பாத்தியோடு தொட்டுக்கவோ அல்லது சாப்பாட்டுக்கோ இம்மாதிரிப் பண்ணுவேன். நன்றாக இருக்கும். கத்திரிக்காயை நீளமாக நறுக்கிக் கொண்டு அதற்கேற்றாற்போல் உருளைக்கிழங்கையும் நீளமாக நறுக்கி வெங்காயத்தையும் மெலிதாக நீளமாக நறுக்கிக் கொண்டு வதக்கினால் அதையும் சாப்பாடு, சப்பாத்தி ஆகியவற்றோடு சாப்பிடலாம். இன்னும் கத்திரிக்காயில் பச்சடி, கொத்சு, துவையல், சட்னி, பஞ்சாபி முறையில் பைங்கன் பர்தா, ஸ்டஃப் பண்ணின கத்திரிக்காயை பஜ்ஜி மாவில்தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுப்பது எனப்பலவிதம் இருக்கிறது. கூட்டுகளிலும் கேட்கவே வேண்டாம். புளி விட்டு, விடாத கூட்டு, பொரிச்ச கூட்டு, பொரிச்ச குழம்பு,என வகை வகையாக உள்ளது. அதெல்லாம் கூட்டுக்கள் பற்றி எழுதும்போது வரும்.

23 comments:

  1. கீதாக்கா கத்தரிக்காய் மஹாத்மியத்துக்கு அப்புறமா வருகிறேன்...இப்ப வேலைகள்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க தி/கீதா, நேத்திக்கு ஸ்ரீராமோட கருத்தைத் தான் படிச்சேன். பார்த்தால் உங்களோடது ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! :)))))

      Delete
  2. குஜராத்தி முறை கேள்விப்பட்டிருக்கிறேன்.  எங்கள் வீட்டில் செய்ததில்லை.   அதனாலேயே சுவைத்ததுமில்லை.   இரண்டாவது சொல்லியிருக்கும் முறை புதுசாக இருக்கிறது.  கடலை மாவில் தோய்த்து தோசைக்கல்லில்ப்போட்டு எடுத்தால் நன்றாக வெந்திருக்குமா?  

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், எண்ணங்கள் பதிவிலே நானே எழுதிப் போட்டுப் படிச்சுக் கருத்தும் சொல்லி இருக்கீங்க! இஃகி,இஃகி,இஃகி! கடாயில் போட்டு வதக்கும் கத்திரிக்காய் தோசைக்கல்லுக்கு மசியாமல் இருக்குமா? நன்றாகவே வேகும்! ஆனால் எங்க வீட்டில் இதைப் பொரிச்சால் போணி ஆகிறாப்போல் இப்படிச் செய்தால் போணி ஆவதில்லை. :)))))

      Delete
  3. இதெல்லாம் படத்தில் பார்த்துக்கொள்வதோடு சரி...  எனக்கு வாய்ப்பது அவ்வப்போது கத்தரிக்காய் வதக்கல்...    அதற்கே ரொம்ப டயலாக் எல்லாம் விடவேண்டும்...

    ReplyDelete
  4. எங்க வீட்டில கத்தரி வெண்டை இரண்டும் போட்டு வதக்கல் செய்வாங்க பிறந்த வீட்டில்.

    கத்தரி பஜ்ஜி தோசைக்கல்லில் செய்வது எங்கள் வீட்டில் எண்ணெய் வேண்டாதவர்களுக்குச் செய்து கொடுப்பது. செம டேஸ்டியா இருக்கும் வித்தியாசமான சுவையுடன் அதுக்கு அப்புறம் நானும் செய்யத்தொடங்கி மகனுக்கு லஞ்ச்பாக்ஸில் வைத்ததுண்டு. தொட்டுக் கொண்டு சாப்பிட என்றே...ரொம்பப் பிடிக்கும்.

    இந்த முறை ஸ்டஃப்ட் கத்தரி சப்பாத்திக்கு செம சைட் டிஷ். ரொம்ப நல்லாருக்கும்..அடிக்கடி செய்வதுண்டு .நம் வீட்டில் கத்தரி பிரியர்கள் அதிகம்....உங்கள் அளவையும் குறித்துக் கொண்டேன் கீதாக்கா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கத்திரி,வெண்டை போட்டு இங்கேயும் செய்யறேன்னு சொன்னால் மாட்டுப் பொண்ணு பயந்துட்டா! இஃகி,இஃகி,இஃகி!

      Delete
  5. //வில்லையாக நறுக்கிய கத்திரிக்காயை பஜ்ஜி மாவில் ஒவ்வொன்றாகத் தோய்த்து// - நான் வெங்காயத்தை (பெரிய வெங்காயம்) அடை மாவில் தோய்த்து வட்ட வடிவமாக அடை போல ஆக்கி (அதுக்கு நிறைய வில்லைகள் தேவை) அடை பண்ணுவேன். ரொம்ப நல்லா இருக்கும். கடலைமாவு/கத்தரி முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்க நெல்லைத்தமிழரே, அடை மாவை விட இதில் நன்றாகவே இருக்கும்.

      Delete
  6. அம்பத்தூர் தோட்டத்துல கத்தரி, வெண்டையா? நீங்க எப்போவும் ஒரு வேப்பமரம் படம் மட்டும்தானே போட்டுப்பார்த்திருக்கிறேன். அங்க தோட்டம்லாம் இருந்ததா?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழரே, ஒன்றே ஒன்றை மட்டும் பார்த்தால் எப்படி? பலவிதமான செடிகள், மரங்கள் இருந்ததைச் சொல்லி/எழுதி இருக்கேன். அதோடு நான் வேப்பமரத்தைப் படம் எடுத்தப்போ வீடு கட்டி 30 வருஷங்கள் ஆகி விட்டன. இப்போப் போன வருஷம் 35 ஆவது வருஷம் விற்றோம். வேப்பமரம் வாசலிலே இருந்தது. கொல்லையில் மரங்கள் வளர்ந்து நிழல் தட்டும் வரைக்கும் கீரையிலிருந்து முள்ளங்கி, கத்திரி, வெண்டை வரை எல்லாமும் போட்டிருக்கோம். அவரைப்பந்தல், வேலிப்பாகல், கரும்பு, மஞ்சள், சித்தரத்தை, பிரண்டை எல்லாமும் போட்டிருக்கோம். தூதுவளையும்,சிறியாநங்கை, பெரியாநங்கை எல்லாம் தானே வந்தன. வாசலில் முல்லை, நித்தியமல்லிக் கொடிகள், பவளமல்லி மரம், குண்டுமல்லிச் செடிகள், அரளி, தங்க அரளி, விருட்சி இத்தனையோடு ஒரு முருங்கை மரமும் வளர்ந்தது.

      Delete
    2. பாருங்க... அப்பவே உங்களுக்கு உங்க எதிர்காலம் பற்றித் தெரிந்து, பெரிய எழுத்தாளினியாக இணையத்தில் கம்பீரத்தோடு வலம் வருவீங்கன்னு தெரிஞ்சிருந்ததுன்னா, நிறைய படங்கள் எடுத்து வச்சிருப்பீங்க.

      நம்ம தோட்டத்தில் விளைவதை வைத்து சமையல் செய்வதைப் போல ஒரு திருப்தி கிடைக்காதுன்னு நினைக்கறேன்.

      Delete
    3. எனக்குள் எத்தனையோ திறமைகள் வெளிவராமலே போய்விட்டன. :( இதைச் சொல்லுவதில் எந்தத் தயக்கமும் இல்லை. அப்பா வீட்டில் இருந்தவரை அவ்வளவு விரைவில் அப்பாவின் சம்மதம் கிடைக்காது. அதையும் மீறிச் சில விஷயங்களில் திறமை வெளிப்பட்டது. தோட்டம் போடுவதும், பராமரிப்பதும் மிகவும் பிடிக்கும். ஆனால் புக்ககத்தில் மாமனார், மாமியார் டவுனில் வளர்ந்த பெண், உனக்கு என்ன மண்ணைப் பற்றித் தெரியும் என்பார்கள்! நான் சொல்லும் ஆலோசனைகளை எல்லாம் எடுத்துக்க மாட்டாங்க. அதையே பிறர் யாரானும் சொன்னால் எடுத்துப்பாங்க! எழுதுவதிலும் திறமை உண்டு/இருந்தது. கல்யாணம் ஆன புதிசிலேயே மாமாவே சொல்லி இருக்கார். நல்லா எழுதறேன்னு. ஆனால் காலம், நேரம் சரியா வாய்க்கலை என்பதோடு புக்ககத்தில் நான் என்னை/என் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டிக்கொள்ள முடியாது! :)))) அதிலும் 3 நாத்தனார்களை மீறி! இப்போச் சற்று முன் கூட மாமா சொன்னார், நம்ம வீட்டு மனுஷர்கள் உனக்கு ஒண்ணும் தெரியாதுனு நினைச்சுட்டு இருந்தாங்க. இப்போ பார்த்துட்டு/படிச்சுட்டு ஆச்சரியப்படறாங்கனு. நான் உடனேயே சொல்லிட்டேன்! நீங்க என்னை வெளிப்படுத்திக்க விடலையேனு! :)))))

      Delete
    4. பூசணி, பறங்கியை விட்டுட்டேன் பாருங்க. மார்கழி மாசக்கோலத்துக்கு எங்க வீட்டுப் பூக்களைப் பறிச்சே கோலத்தில் வைப்போம்.

      Delete
    5. அதுல பூசனிக்காய், பறங்கிக்காய் காச்சுதா? எனக்கு பூசனில ரொம்ப ஆசை உண்டு. என் தம்பி வீட்டில் ஒரு மாதம் முன்பு நல்ல பெரிய பூசணி கொடியில் வந்திருந்தது. நான் போட்டோ எடுத்துக்கறேன், ரொம்ப அழகா இருக்குன்னதுக்கு போட்டோ எடுத்தால் காய் வாடிவிடும் என்று அவனும் அவன் மனைவியும் சொல்லிட்டாங்க. (என்ன மூடநம்பிக்கையோ).

      அப்போ பறித்த காய்கறிகள் மாதிரி வருமா?

      Delete
    6. நாங்க எங்கே போனாலும் தோட்டம் போட்டுடுவோம். இதில் நசிராபாதில் (ராஜஸ்தான்) போட்டது அதிகம். வாழை, முருங்கை,மஞ்சள், இஞ்சி என நிறையப் போட்டிருக்கோம். காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், காரட் எல்லாமும் போட்டிருக்கோம். காரட் ஊட்டி வீட்டில் கூடப் போட்டோம். பட்டாணியும் கூட! கிளிகள் கொத்த வரும்!ஊட்டியில் குரங்கார் அடிக்கடி வந்துட்டுப் போவார். அப்போக் கொஞ்சம் தோட்டம் நாசம் ஆகும். பீச் பழங்கள் அப்படியே உதிர்ந்து கிடக்கும். அம்பத்தூர் வீட்டில் மேற்குப் பக்கம் முழுவதும் தென்னை மரங்கள் நான்கு இருந்தன. எல்லாமே நன்றாகக் காய்க்கும், ருசியாகவும் இருக்கும். அங்கே அநேகமாக எல்லோர் வீட்டிலும் தேங்காய் இருந்ததால் தேங்காயைச் செலவு செய்ய முடியாமல் மாரியம்மன் கோயில், ராகவேந்திரர் கோயில் எனத் தூக்கிக் கொடுத்தோம்.

      Delete
  7. கத்தரி பொடி அடைச்ச கறி எனக்கு ரொம்பப் பிடிக்கும். நானும் நிறையதடவை செய்திருக்கிறேன்.

    பைங்கன் - சப்பாத்திக்கு - எனக்குப் பிடிக்காது. எனக்குப் பிடித்ததெல்லாம் பனீர் மட்டர், கடாய் வெஜ் போன்றவைதான். தென்னிந்திய கத்தரி, வெண்டைலாம் சப்பாத்திக்கு தொட்டுக்கப் பிடிக்காது.

    ReplyDelete
  8. கத்திரி, வெண்டை,பாகல், புடலை,வாழைக்காய், அவரைக்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, இவை நாட்டுக்காய்கள் எனப்படுமே தவிர்த்துத் தென்னாட்டில் மட்டும் விளையும்னு யார் சொன்னது? வடக்கே கிடைக்கும் பிஞ்சு வெண்டைக்காயைப் பார்த்திருந்தால் இப்படிச் சொல்ல மாட்டாங்க. குஞ்சுலுவோட குட்டி விரல் மாதிரி இருக்கும் வெண்டைக்காயை மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தானில் அப்படியே முழுசா மசாலாப் பொடி அடைத்து வதக்குவாங்க. கத்திரிக்காயை முழுசாப் போட்டுப் பஞ்சாபில் சப்பாத்திக்கு க்ரேவி பண்ணுவாங்க. காஷ்மீர் வரை கத்திரி,வெண்டைப் புராணம் செல்லுபடியாகும்.முருங்கைக்காய் தான் அங்கே கிடைத்தது இல்லை. அதையும் ராஜஸ்தான், குஜராத்தில் நாங்க போத்து கொண்டு போய் நட்டு உண்டாக்கினோம்.மாங்காய் இஞ்சி கூடக் கிடைக்கும் "அம்பா ஹல்தி" என்னும் பெயரிலே. ஊறுகாய் போடுவார்கள். சின்ன வெங்காயம் தெரியாது. தமிழகத்திலே இருந்து தான் வாங்கிப் போவோம். வரவழைப்போம்

    ReplyDelete
    Replies
    1. பஹ்ரைன்ல, அரேபியர்கள் இந்த வெண்டையைத்தான் (அவங்க வெண்டை நீங்க சொல்றமாதிரி சுண்டுவிரல் அல்லது அதற்கும் குறைவான உயரம், அகலம் நம்ம நார்மல் வெண்டை மாதிரி) விளைவிக்கறாங்க, வாங்கறாங்க. நாங்க நம்ம ஊர் வெண்டையைத்தான் வாங்குவோம். இல்லைனா, காம்பை எடுத்து வால் சிறிது கட் பண்ணினால் வேற என்ன மிஞ்சும்னு கவலைதான்.

      Delete
    2. இந்தச்சின்ன வெண்டைக்காய்க்கு பஹ்ரைன் எல்லாம் போக வேண்டாம்! திருச்சியிலேயே அதுவும் ஸ்ரீரங்கத்திலேயே நிறையக் கிடைக்குது. காம்பை லேசாக நீக்கிட்டு, அடியில் சின்னதாக வெட்டி எடுத்துட்டு அப்படியே முழுசாப் போட்டு வதக்கலாமே!

      Delete
    3. என்னாது... நம்ம ஊர்லயா? இங்கல்லாம் அரை அடி நீளத்துக்கு இப்போல்லாம் வெண்டை வர ஆரம்பிச்சாச்சு.

      அடுத்த முறை உங்க ஊருக்கு வரும்போது பார்க்கிறேன். (அப்போ ரொம்ப பிஞ்சா இருக்குமோ? அட்டஹாசமா இருக்கும்)

      Delete
    4. வெண்டைக்காய்ப் பருவத்திலே சொல்றேன். ஸ்ரீரங்கம் வாங்க! முழுசா வதக்கிச் சாப்பாடு போடறேன்

      Delete