எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, April 29, 2019

தேங்காய்ப் பொடி பிடிக்குமா? எள்ளுப் பொடி பிடிக்குமா?

எள்ளுப் பொடி:- இதை இரு வகைகளில் செய்யலாம். அதிகமாகப் பண்ணி வைத்துக் கொண்டால் சீக்கிரம் வீணாகி விடும் என்பதால் அவ்வப்போது பண்ணிக் கொள்வது நல்லது. அதில் மிச்சம் இருந்தால் உடனே ஒரு வாரத்துக்குள் பயன்படுத்திக்கலாம். இப்போத் தேவையான பொருட்கள்.

Image result for எள்

எள் சுமார் 50 கிராம் களைந்து கல்லரித்து வெறும் வாணலியில் வெடிக்க விட்டு எடுத்து ஆற வைக்கவும்.

உப்பு தேவையான அளவு  இதையும் வெறும் வாணலியில் வறுத்து எள்ளோடு சேர்த்து ஆற வைக்கவும்.

Image result for மிளகாய் வற்றல்        Image result for கல் உப்பு

மிளகாய் வற்றல் 6 முதல் எட்டு வரை  காம்பு நீக்காமல் விதைகள் நீக்காமல் வெறும் வாணலியில் எள்ளும், உப்பும் வறுத்த அந்தச் சூட்டிலேயே போட்டு வறுக்கவும். மிளகாய் கறுப்பாக ஆகக் கூடாது.

எல்லாம் ஆறிய பின்னர் எள்ளுப் பொடியை ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.
எள் சாதம் கலப்பதாக இருந்தால் ஏற்கெனவே சமைத்த சாதத்தில் அரை டீஸ்பூன் உப்புச் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு உதிராக வரும் வரை ஆற வைக்கவும். பின்னர் தேவையான எள்ளுப் பொடியை சாதத்தில் போட்டு நன்றாகக்  கிளறவும்.

இன்னொரு முறை. இம்முறையில் கொஞ்சம் உளுத்தம்பருப்பு சேர்ப்பார்கள் சிலருக்கு இது பழக்கம். ஆனால் நான் சேர்ப்பதில்லை. சொல்லப் போனால் இந்த வகைக் காரம் போட்டு எள்ளுப்பொடியும் அதில் செய்யும் சாதமுமே புக்ககம் வந்து தான் தெரியும். எங்க அம்மா வீட்டில் எள்ளும், வெல்லமும், கலந்து ஏலக்காயோடு சேர்த்துப் பொடித்து வைப்பார்கள். சாதம் கலந்தால் கூட அதில் தான்!

எள் அதே மாதிரி ஐம்பது கிராம் களைந்து கல்லரித்து வெறும் வாணலியில் வெடிக்க விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உளுத்தம்பருப்பு  இரண்டு டேபிள் ஸ்பூன் வெறும் வாணலியில் சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும்.

Image result for உளுத்தம்பருப்பு

உப்பு தேவையான அளவு வறுத்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றல் இதுக்குக் கொஞ்சம் அதிகமாக சுமார் பத்து வரை கருகாமல் வறுத்துக் கொண்டு முதலில் மி.வத்தல், உப்பு, உ.பருப்பு போட்டு மிக்சி ஜாரில் சுற்றிப் பொடித்துக் கொண்டு பின்னர் எள்ளைப் போட்டுக் கலந்து பொடியாக்கவும். இதையும் அதிக நாட்கள் வைத்துக் கொள்ளாமல் சீக்கிரம் செலவு செய்யணும்.  சாதம் கலக்கும் முறை முன்னர் சொல்லி இருக்கிறாப்போல் தான்.

பூண்டுப் பொடி: இது பூண்டு சாப்பிடறவங்களுக்கு மட்டும்.  நான் பண்ணவும் மாட்டேன். ஒரு சிலர் பருப்புப் பொடியிலேயே பூண்டையும் போட்டுக் கலந்து விடுகின்றனர். அந்த ருசி பிடிக்குமெனில் பருப்புப் பொடி செய்யும் போதே வெறும் வாணலியில் பூண்டையும் மொறுமொறுப்பாக வறுத்துக் கொண்டு சேர்த்துப் பொடித்துக் கொள்ளலாம்.

Image result for பூண்டு

தனிப் பூண்டுப் பொடி தேவை எனில் பூண்டு சுமார் 50 கிராம் தோல் நீக்கி உரித்துக் கொண்டு வெறும் வாணலியில் போட்டு அடுப்பைத் தணித்து வைத்தே சிவக்க மொறுமொறுப்பாக வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் உளுத்தம்பருப்பு  சுமார் அரைக்கிண்ணம் எடுத்துக் கொண்டு வறுத்துக் கொள்ளவும்.

உப்பு தேவையான அளவு வறுத்துக்கொள்ளவும்.

மிளகாய் வற்றல் காரத்துக்கு ஏற்றபடி 10 அல்லது 15க்குள். காரமான மிளகாய் எனில் எட்டு அல்லது பத்து போதும். வறுத்துக் கொண்டு  முதலில் மிளகாய் வற்றல், பூண்டு, உப்பைப் பொடித்துக் கொண்டு கடைசியில் உளுத்தம்பருப்பைச் சேர்த்துக் கொஞ்சம் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். இதய நோய் இருப்பவர்கள் இதை அடிக்கடி சாப்பிடலாம்.

தேங்காய்ப் பொடி: இதையும் அதிக நாட்கள் வைத்துக்கொள்ள முடியாது. எனினும் இப்போது எல்லோர் வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டி இருப்பதால் அதில் வைத்து 3,4 மாதம் பயன்படுத்திக்கலாம்.

Image result for தேங்காய்

தேவையான பொருட்கள்: முற்றிய தேங்காய் ஒன்று அல்லது கொப்பரை ஒன்று. துருவிக்கொள்ளவும்

மி.வத்தல் சுமார் 10 அல்லது 15 , பெருங்காயம் ஒரு துண்டு, உப்பு தேவையான அளவு  கடலைப்பருப்பு+ உ.பருப்பு வகைக்கு இரண்டு டேபிள் ஸ்பூன்.

வறுக்கக் கொஞ்சம் எண்ணெய்

கடாயில் எண்ணெயை ஊற்றி முதலில் பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மிளகாய் வற்றலைப் போட்டு வறுத்துத் தனியே வைக்கவும்.
அதன் பின்னர் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பைத் தனித்தனியாகச் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விடாமல் இருக்கும் அந்த எண்ணெயிலேயே துருவிய தேங்காய்த் துருவலைப் போட்டுச் சிவக்க வறுக்கவும்.
உப்பையும் அதோடு போட்டு வறுத்துக் கொள்ளலாம். அல்லது தனியாகவும் வறுக்கலாம். உப்பை வறுப்பதால் இம்மாதிரிப் பொடிகள் செய்கையில் அதன் நீர்ச்சத்தினால் பொடி விரைவில் கெட்டுப் போகாது.

இப்போது மிக்சி ஜாரில் மி.வத்தல்+உப்பு+பருப்பு வகைகளைப் போட்டுப் பொடித்துக் கொண்டு பின்னர் வறுத்த தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொண்டு பொடிக்கவும். நன்கு கலந்து ஆறிய பின்னர் பாட்டிலில் போட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

சம்பாசாதப் பொடி: தேவையான பொருட்கள்

Image result for மிளகு Image result for ஜீரகம்

மிளகு அரைக்கிண்ணம்,ஜீரகம் ஒரு கிண்ணம், உப்பு தேவையான அளவு. பெருங்காயம் பொடியாக அரை டீஸ்பூன் அல்லது கட்டியாக இருந்தால் ஒரு சின்னத் துண்டு.

வாணலியைக் காய வைத்துக் கொண்டு முதலில் மிளகைப் போட்டு வெடிக்க விட்டு எடுத்து ஆற வைக்கவும். பின்னர் ஜீரகத்தைப் போட்டுச் சிவக்க வறுக்கவும்.உப்பையும் வறுக்கவும். பெருங்காயப் பொடி எனில் உப்போடு சேர்த்துவிடவும்.கட்டி எனில் தனியாகச் சூட்டில் போட்டுப் பிரட்டி எடுக்கவும். எல்லாவற்றையும் மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

சம்பா சாதம் எனப்படும் சாதம் செய்ய இந்தப் பொடி தேவைப்படும். சாதத்தை வடித்துக் கொண்டு சூடாக இருக்கையிலேயே நல்ல நெய்யைத் தாராளமாகக் கலந்து கொண்டு இந்தப் பொடியைத் தேவையான அளவு போட்டுக் கலந்து வைத்தால் கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதம் போன்ற சம்பா சாதம் தயார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இத்துடன் கத்திரிக்காய் கொத்சுவும் செய்து கொடுப்பார்கள். அதைப் பின்னர் ஒரு முறை பார்க்கலாம்.

19 comments:

  1. எள்ளுப்பொடி படிக்கும்போதே...என்னடா இது என் மனைவி செய்முறையா இருக்கு... எங்க வீட்டுல வெல்லம் போட்டுத்தானே செய்வாங்கன்னு நினைத்தேன்...அதையும் நீங்க சொல்லிட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழரே, கும்பகோணம்/தஞ்சாவூர்க் காரங்களுக்குக் காரம் போட்டஎள்ளுப் பொடிதான் தெரியும். வெல்லம் சேர்த்தது தெரியாது. நான் இரண்டும் பண்ணுவேன்.

      Delete
  2. தேங்காய் பொடி நல்லாருக்கும். ஆனால் சிலர் இதில் பூண்டையும் சேர்க்கின்றனர் (மாம்பலத்தில் ஒருவரிடம் இதனை வாங்குவது முன்பு வழக்கம்). அந்த ருசியும் நல்லாவே இருக்கும்.

    மற்றபடி வெறும் பருப்புப்பொடியில் பூண்டு சேர்த்தது பிடிப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. தேங்காய்ப் பொடியில் அநேகமாகப் பூண்டு கலப்பதில்லை. என் மாமியார் அடிக்கடி பண்ணுவார். ஆனால் நம்மவருக்குப் பிடிப்பதில்லை. நான் மட்டும் போட்டுக்கணும். அதனால் பழக்கமே இல்லாமல் போச்சு!

      Delete
  3. சம்பாப்பொடி நல்லா இருக்குமா? ஒரு தடவை கத்தரி கொத்ஸு (சிதம்பரம் கொத்சு) செய்ய முயற்சித்து சுத்தமா நல்லா வரலை-சமையல் செய்ய ஆரம்பித்த ஆரம்ப காலங்களில். சம்பாசாதமும் நல்லா இருக்குமான்னு தெரியலை

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே, இந்த வலைப்பக்கங்களிலேயே சிதம்பரம் கொத்சு எனத் தேடினால் கிடைக்கும். சுட்டி தேடிப் போடறேன். சம்பா சாதம் நம்மவருக்கு ரொம்பப் பிடிச்சது. அடிக்கடி பண்ணச்சொல்லுவார். அவல் கூட இப்படித் தான் மிளகு, சீரகம் உடைச்சுப் போட்டுப் பண்ணினால் பிடிக்கும்.ரொம்பக் காரம் தேவை இல்லைனு அதில் தேங்காய் சேர்ப்பேன்.

      Delete
  4. இப்போ நீங்க புதுசா ஆரம்பித்திருக்கிற இந்தத் தொடர் மிக உபயோகமானது.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி. :)

      Delete
  5. ஓ...
    இது ஒரு பக்கம் ஓடிக்கிட்டு இருக்குதா!..

    இத்தனை நாள் தெரியாமப் போச்சே!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, இது பத்து வருஷத்துக்கும் மேலே இருக்குமே! இதோடயா? "என் பயணங்களில்" அப்படினு ஒரு வலைப்பக்கம் கூட ஆரம்பிச்சு எழுதினேன். அதிலே சிவனடியார்கள் பற்றி, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி விளக்கங்கள்னு எழுதி இருக்கேன். அநேகமாக மரபு விக்கிக்காக நான் எழுதியவை எல்லாம் அங்கே வலை ஏற்றினேன். அப்புறமாத் தொடரலை! ஒரு கதைத் தொடர் ஆரம்பிச்சேன். அதிலே கொஞ்சம் பிரச்னை வந்தது. பாதியில் நிறுத்தினேன்.அப்புறமா அந்தப் பக்கமே போகலை!

      Delete
    2. அரங்கனைப் பற்றியும், சிதம்பரம் பற்றியும் மற்றும் நாங்க போன கோயில்கள், கயிலை யாத்திரை எல்லாமும் http://aanmiga-payanam.blogspot.com இந்த வலைப்பக்கம் வந்து கொண்டிருக்கிறது. எனக்கே எனக்குனு ஒரு ரகசிய வலைப்பக்கமும் வைச்சிருக்கேன். :) அதுக்கும் சிலர் வந்தாங்க! :))))) அதிலே இப்போ எழுத முடியலை. உட்கார்ந்து நிறையக் குறிப்பு எடுக்கணும். நிறையப் படிக்கணும்.இந்த இரண்டும் இப்போ முடியலை! உழைப்பே இல்லாமல் போச்சு இப்போல்லாம்! :( சில சமயங்களில் வெட்கமாகக் கூட இருக்கும். ஆனால் நேரம்!

      Delete
  6. எள்ளுப்பொடி நான் செய்வ(த)தே இல்லை.

    பூண்டுப்பொடி நாங்கள் வேறு விதமாக செய்வோம். எபியில் செய்முறை கொடுத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எள்ளுஞ்சாதம் சாப்பிடாமல் வாழ்க்கையைக் கழித்துவிட்டீர்களே... உடனே செய்து சாப்பிடுங்க.

      கீசா மேடம்... இந்த பொடி வகை சாத்த்துக்குன்னு தொட்டுக்க எது பண்ணுவீங்க? எனக்கு அவியலோ இல்லை ஏதேனும் ரெய்த்தாவோ வேணும்..

      Delete
    2. வாங்க ஶ்ரீராம், என் அப்பா வீட்டிலும் எள்ளுச் சாதம் கிடையாது. எனக்குத் தெரிந்த வரை தென் மாவட்டங்களிலேயே எள்ளுப் பொடி என்றால் எள்+வெல்லம்+ஏலக்காய் கலந்து தான். இங்கே ஆடிப்பெருக்குக்குக் கூட எள் சாதம் உண்டு. சில சமயம் சனிக்கிழமை ஒரு மாறுதலுக்காக எள்ளுப் பொடி செய்து சாதம் கலந்து மோர்க்குழம்பு வைப்பேன். இந்தக் காம்பினேஷன் புகுந்த வீட்டில் ரொம்பவே பிரபலம்.

      Delete
    3. நெல்லைத் தமிழரே, பொடி சாதத்துக்கு அநேகமாக டாங்கர் பச்சடி அல்லது பச்சை மோர்க்குழம்பு! எப்போவானும் வெள்ளரிக்காய் கிடைத்தால் பச்சடியும் செய்வது உண்டு.

      Delete
  7. தேங்காய்ப்பொடி அவ்வப்போது செய்ததுண்டு. சேமித்து வைத்துக் கொண்டதில்லை. ஆனால் அதுவும் செய்து சாப்பிட்டு பல வருடங்களாகி விட்டன.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், தேங்காய் நிறையக் கிடைக்கும்போது செய்து வைச்சுக்கலாம். நான் கோயில்கள் எல்லாம் போய் வந்த பின்னர் கிடைக்கும் தேங்காய் மூடிகளைத் துருவி ஃப்ரீசரில் வைத்து விடுவேன். ஒரு மாதம் வரை பயன்படுத்திக்கலாம். நிவேதனத்துக்குத் தேவை என்றால் மட்டும் தேங்காய் வாங்குவோம்.

      Delete
  8. மிளகுஜீரகப்பொடி செய்து வைத்துக் கொண்டு சாதத்தில் கலந்து சாப்பிடுவோம். ஆனால் அதை கொள்வதில்லை. உப்பும் சேர்க்க மாட்டோம். உப்பு அவ்வப்போது தட்டில்தான் போட்டுக்கொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. 'வறுத்துக் கொள்வதில்லை' என்பதில் 'வறுத்து' காணாமல் போய்விட்டது!!!!

      Delete