எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, September 19, 2018

உணவே மருந்து! கம்பு 3 உணவு வகைகள் சில!

தினம் போட முடியாட்டியும் வாரம் 2,3 பதிவாவது போட நினைச்சு ஆனால் முடியறதில்லை. சில நேரம் மற்றப்பதிவுகள் படிப்பதிலும் பதில் சொல்வதிலும் சென்றால் மற்ற நேரம் மற்ற வேலைகள்! இத்தனைக்கும் மதியம் குறைந்தது 3 மணி நேரமாவது தொடர்ந்து இணையத்தில் அமர்கிறேன். அதில் இடைவெளி அரைமணி போக மற்றபடி நான்கு, நான்கரை மணி வரை இருப்பேன். ஆனாலும் சில சமயங்களில் எதுவும் எழுத முடியறதில்லை. கவனத்துடன் எழுத வேண்டிய பதிவுகளை அதற்குரிய கவனத்துடன் பதியணுமே!

இப்போ உணவே மருந்து வகைகளில் சிறுதானிய உணவுக் குறிப்புகள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதில் கம்பில் செய்யப்படும் உணவுவகைகளில் கம்பு அடை, கம்பு தோசை, இட்லி போன்றவற்றை ஏற்கெனவே பார்த்து விட்டோம். இப்போப் பார்க்கப் போவது கம்பில் சோறு. இதற்கு நன்கு உலர்ந்த கம்பை நன்கு கழுவிக் கொண்டு நீரை வடிகட்டி அந்த மிச்ச நீரிலேயே சிறிது நேரம் ஊற வைக்கவும். அரை மணி ஊறிய பின்னர் கம்பைக் குத்திப் புடைக்கணும். மர உரல் அல்லது கல்லுரலில் முன்னெல்லாம் குத்திப் புடைப்பார்கள். இப்போவெல்லாம் குத்திப் புடைப்பது என்றாலே என்னவென்று தெரியாது; புரியாது. ஆகவே கம்பை மிக்சி ஜாரில் போட்டு நன்கு கொரகொரவென அரைத்துக் கொள்ளவும். ஒதுங்கும் தூசி போன்ற தவிட்டை முறத்தில் போட்டுத் தட்டி எடுத்துவிடவும். ஒரு பாத்திரத்தில் நாலு கிண்ணம் நீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். உப்பைச் சேர்க்கவும்.

சுத்தம் செய்து வைத்த கம்பைக் கொட்டிக்கிளறவும். ஒரு சிலர் இதோடு அரிசியும் ஒரு கைப்பிடி சேர்க்கின்றனர். புழுங்கல் அரிசி தான் சேர்க்க வேண்டும். ஒரு சிலர் சமைத்த சாதத்தை இதோடு சேர்த்துக் கலந்து வைக்கின்றனர். இந்தக் கம்பை அடுப்பில் கொதிக்கும் நீரில் கொட்டிக் கிளறி விட்டால் சிறிது நேரத்தில் நன்கு வெந்து விடும். இம்மாதிரிக் கம்புச் சோறை முதல்நாளே தயார் செய்து கொண்டு வைக்கவும். மறுநாள் அதில் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் போன்றவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டுத் தயிரை விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். வெங்காயம் பிடிக்காது எனில் ஏதேனும் துவையலும் அரைத்துக் கொள்ளலாம். தேங்காய்த் துருவலோடு மிளகாய் வற்றல், துவரம்பருப்பு வறுத்து உப்பு, புளி, பெருங்காயத்தோடு சேர்த்து அரைத்துத் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். ஒரு சிலர் துவரம்பருப்புக்குப் பதிலாகக் கொள்ளு வைத்துச் சேர்த்து அரைக்கின்றனர். அவரவருக்கு ஒத்துக்கொள்ளுவதைப் பொறுத்து வைத்து அரைத்து உண்ணலாம். அல்லது வெங்காயத் துவையல், பீர்க்கங்காய், பறங்கிக்காய்த் துவையல் போன்றவையும் நன்றாக இருக்கும்.

அடுத்துக் கம்பங்கூழ். இதற்கும் முன் சொன்னாப்போல் கம்பைச் சுத்தம் செய்து கொரகொரவென அரைக்காமல் கொஞ்சம் நைசாக அரைத்துக் கொள்ளவும். ரொம்பக் கொரகொரப்பாக இருந்தால் சல்லடையில் சலித்துக் கொள்ளலாம். இந்த மாவு ஒரு கிண்ணம் எனில் அதோடு இரண்டு கிண்ணம் தண்ணீரும் தேவையான உப்பும் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வைக்கவும். கம்பங்கூழ் தயாரிப்பதற்கு முதல்நாளே இந்த மாவுக்கலவையைக் கலந்து வைக்கலாம். ஏனெனில் கொஞ்சம் புளிப்பு வந்தால் தான் நன்றாக இருக்கும். அடுத்த நாள் பச்சரிசி அல்லது புழுங்கலரிசி மேற்சொன்ன அளவுக் கம்பு மாவுக்கு ஒரு கரண்டி எடுத்துக் கொண்டு களைந்து மிக்சி ஜாரில் போட்டு உப்புமா ரவை போல் பொடிக்கவும். இதை முதலில் கொதிக்கும் வெந்நீரில் போட்டுக் கரைய விடவும். இது வெந்தபின்னர் முதல் நாளே கரைத்து வைத்த மாவை மெதுவாக ஊற்றிக்கொண்டே இன்னொரு கையால் கிளறவும். இதையும் ஒரு நாள் வைத்து விட்டு மறுநாள் தயிரோ, மோரோ ஊற்றிக் கொண்டு ஊறுகாய் அல்லது சின்னவெங்காயம் அல்லது மாங்காய் ஊறுகாய் அல்லது மாங்காய்த் தொக்கு போன்றவற்றோடு குடிக்கலாம். ரொம்ப நீர்க்க இருக்காது. கொஞ்சம் கெட்டியாகவே இருக்கும்.

7 comments:

  1. கம்பு உணவு....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், அநேகமாக் கம்பு முடிஞ்சது!

      Delete
  2. இதெல்லாம் நீங்க செய்து சாப்பிட்டிருக்கீங்களா? எனக்குத் தெரிந்து கம்பு உணவு சாப்பிட்டவங்களைப் பார்த்ததே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை. கம்புச் சோறு பண்ணினதே இல்லை. பார்த்திருக்கேன். ஒரு வாசனை வரும். ஆகவே கொஞ்சம் அலர்ஜி போல ஆயிடுத்து! ஆனால் கம்பு மாவும் கேழ்வரகு மாவும் சேர்த்துக் கூழ் செய்து சாப்பிட்டிருக்கேன். சின்ன வெங்காயம் நறுக்கிப் போட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்து மோர் விட்டுக் கரைத்துக் குடித்திருக்கேன். இப்போவும் சிறு தானியக் கஞ்சி தானே மோர் விட்டுக் குடிக்கிறோம். மற்ற தானியங்களில் அநேகமா எல்லாம் பண்ணிப் பார்த்திருக்கேன். சாதமாவும் சமைத்து சாம்பார் அல்லது குழம்பு, ரசத்தோடு சாப்பிட்டிருக்கோம்.

      Delete
    2. நான் சென்னையில் இருக்கிறச்சே ரங்க்ஸுக்குச் சர்க்கரை இருப்பது தெரியும் முன்னரே அடிக்கடி கம்பு வாங்கி அடை, தோசை பண்ணி இருக்கேன். மற்றவை சாப்பிட்டது இங்கே வந்தப்புறமாத் தான்!

      Delete
  3. ஒன்றைத் தேடணும்னா (உதாரணம் மைசூர்பாக் செய்முறை) எந்தத் தளத்துல தேடறது, இங்கயா, எண்ணங்கள்லயா இல்லை வேறு எதிலுமா? நீங்க தலைப்பையும் சரியா போடறதில்லைனு தோணுது. கொஞ்சம் ஆர்கனைஸ் செய்து வைங்களேன். எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்.

    ReplyDelete
  4. http://geetha-sambasivam.blogspot.com/2012/09/blog-post_10.html
    http://sivamgss.blogspot.com/2015/08/blog-post_13.html

    மைசூர்ப்பாகு என கூகிளில் தேடினாலே இவை கிடைக்கின்றன. தனியாக மைசூர்ப்பாகு செய்முறைனு எல்லாம் தலைப்பு வைச்சால் யாரும் வரமாட்டாங்க! தலைப்பே பிறரைக் கவர்வதற்காக வைப்பது தான். மற்றபடி இதை விட நன்றாக ஆர்கனைஸ் செய்வது எல்லாம் எனக்கு வராது. :))))))

    ReplyDelete