எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, February 25, 2016

உணவே மருந்து --சீரகம்!

இப்போ நம்ம வெங்கடேஷ் பட் சொன்ன உடுப்பி ரசம் பத்திப் பார்ப்போம். இதிலும் சீரகம் தான் சேர்க்கிறார். ஆனால் அளவு எல்லாம் இருக்கு! மேலும் இதற்காகப் பயன்படுத்தும் மிளகாய் வற்றலும் மங்களூர் வற்றல் என்றார். அதாவது காய்ந்த மிளகாய் கொஞ்சம் சுருங்கிக் காணப்படுமே அது தேவை! அல்லது காஷ்மீர் மிளகாய் எனப் பெரிய பெரிய வணிக வளாகங்களில் விற்கப்படும். அதைப் பயன்படுத்திக்கலாம்.  இதுவும் கிட்டத்தட்ட ஜீரக ரசமே! ஆகையால் தான் இங்கே போடுகிறேன். முந்தாநாள் செய்து பார்த்தேன். நல்ல தெளிவாக ரசம் இருந்தது.

நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள் மட்டுமே இங்கே எழுதுகிறேன்.

காஷ்மீர் மிளகாய் வற்றல் 4

தனியா ஒரு டேபிள் ஸ்பூன்

வெந்தயம் ஒரு டீஸ்பூன்

ஜீரகம்    ஒன்றரை டீஸ்பூன்

கருகப்பிலை ஒரு கைப்பிடி இவற்றை

வறுக்க தே.எண்ணெய் தேவையான அளவு. மேலே சொன்னவற்றை ஒவ்வொன்றாக நிதானமாக வறுத்துக் கொண்டு ஒரு பேப்பரில் போட்டு எண்ணெய் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கவும்.

தாளிக்க

நெய் அல்லது தே.எண்ணெய்

கடுகு, ஒரு மி.வத்தல், கருகப்பிலை

ரசம் செய்யத் தேவையான பொருட்கள்

தக்காளி நடுத்தரமாக ஒன்று

புளிக்கரைசல் அரைக்கிண்ணம்

உப்பு தேவையான அளவு

மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை

துவரம்பருப்புக் குழைய வேக வைத்தது ஒரு டேபிள் ஸ்பூன் நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

பெருங்காயம் கால் டீஸ்பூன் அல்லது ஒரு துண்டு பெருங்காயக் கட்டி

பச்சை மிளகாய் தேவையானால் நடுவில் கீறிக்கொள்ளவும். இந்த அளவு ரசத்துக்கு ஒன்று போதும்.

கொத்துமல்லித் தழை

வெல்லம் தூளாக இரண்டு டீஸ்பூன் (நான் வெல்லம் சேர்க்கவில்லை. ரங்க்ஸுக்கு சர்க்கரை என்பதோடு வெல்லம் சேர்த்தால் அந்த ருசியும் பிடிக்கிறதில்லை)

ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை விட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். பெருங்காயம் சேர்க்கவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தே.எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளித்துத் தக்காளியை நறுக்கிச் சேர்த்து வதக்கவும். கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும். சிறிது நேரம் கொதிக்கவிடவும். பின்பு பருப்புக் கரைசலைக் கொஞ்சம் ஊற்றி மீண்டும் கொதிக்கவிடவும். மீதம் இருக்கும் பருப்புக் கரைசலில் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கரைத்து ரசத்தில் ஊற்றவும். பொடி போட்டதும் ரசம் அதிகம் கொதிக்கக் கூடாது. கீழே இறக்கியதும் கொத்துமல்லித் தழை தூவவும்.

சாதாரணமாக ரசத்துக்குக் கடைசியில் தான் தாளிதம் சேர்ப்போம். இங்கே ரசம் கொதிக்கையிலேயே தாளிதம் செய்து சேர்க்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் முதலில் தாளிதம் செய்து கொண்டு தான் வெங்கடேஷ் பட் அதில் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க வைத்தார்.  இதுவும் ஒரு வகை ஜீரக ரசமே!


4 comments:

  1. //தனியா ஒரு டேபிள் ஸ்பூன்//

    டேபிள் ஸ்பூனை ஏன் தனியா எடுத்துக்கணும்? அதை என்ன பண்ண வேண்டும் என்று அப்புறம் சொல்லவே இல்லையே.... ஹிஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. டேபிள் ஸ்பூனைத் தனியாத் தான் எடுத்துக்கணும்! அப்புறமா அதை ரசத்திலே போட்டுக் கலக்கணும்.

      Delete
  2. குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். ரசத்தில் வெல்லமா... நான் சேர்க்காமலேயே செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்க புக்ககத்தில் எல்லாத்திலேயும் வெல்லம்! தேங்காய் போட்ட கறிகளில் சர்க்கரை! அதாவது பரவாயில்லை சாம்பாரும், வத்தக்குழம்பும் வட இந்தியப் புளிச் சட்னி மாதிரித் தித்திக்கும்! ஆகையால் நான் சாம்பார், ரசம் சாப்பிடறதையே குறைச்சுட்டேன். ஆனால் நான் வெல்லம் சேர்ப்பதில்லை. அது பெரிய விஷயமாகவும் விவாதிக்கப்படும்.

      Delete