எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, May 20, 2013

ஆலு புஜியா!

ஹிஹிஹி,பேரைக் கேள்விப் பட்டிருக்கீங்க தானே?? வட இந்திய உணவுப் பண்டமாக இருந்தாலும், நமக்கு ரொம்பத் தெரிஞ்சதுங்க இது.  தீபாவளிக்குக் கட்டாயமாப் பண்ணுவோமே.  என்னனு கண்டுபிடிக்க முடியுதா?  படம் எடுத்தேன்.  ஆனால் காமிராவை எடுக்கலை.  சோம்பல்.  செல்லிலே எடுத்திருக்கேன்.  அது எப்படி வந்திருக்குனு தெரியலை. நல்லா வந்தாப்போடுவேன். இல்லைனா இன்னொரு தரம் பண்ணும்போது காமிராவில் எடுத்துட்டுப் போடுவேன்.  க்ர்ர்ர்ர்ர் போட்டால் மட்டும் பார்க்கவா பார்க்கிறீங்க?? உ.கி. பொடிமாஸெல்லாம் போட்டுட்டு யாரும் பார்க்காமலேயே கிடக்கு!

அது போகட்டும்.  ஆலு புஜியாவுக்குத் தேவையான பொருட்கள் முதல்லே அரை கிலோ உ.கி. நல்லாக் குழைய வேக வைச்சுத் தோலை உரிச்சு, (ஹிஹி உ.கி.யோட தோலைத்தான்) உதிர்த்து வைச்சுக்குங்க.

அரைக் கிலோ கடலை மாவு, ஒரு சின்னக் கிண்ணம் அல்லது நூறு கிராம் அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள், ஓமம் பொடிசெய்து ஓமத்தூள் அல்லது கரம் மசாலா.  இரண்டில் ஒண்ணு இருந்தால் போதும்.  நம்ம ஊர் ருசி வேணும்னா ஓமத்தைத் தூள் செய்து போடுங்க.  வட இந்திய ருசி வேண்டும்னா கரம் மசாலாப்பொடி போடுங்க.  கரம் மசாலாப் பொடி போட்டால் மிளகாய்த் தூளைக் குறைச்சுப் போட்டுக்கணும்.  அல்லது வெறும் கரம் மசாலா மட்டும் போட்டால் கூடப்  போதும். பொரித்து எடுக்க சமையல் எண்ணெய். இப்போ எப்படிச் செய்யறதுனு பார்க்கலாமா?

கடலை மாவு, அரிசி மாவு உப்பு, பெருங்காயத் தூள், மி.தூள், கரம் மசாலா அல்லது ஓமத்தூள் ஆகியவற்றை நன்றாகக் கலக்கவும்.  முதல்லே மாவில் இது எல்லாம் நல்லா ஒரே மாதிரியாக் கலக்குதானு பார்த்துக்குங்க.  அப்புறமா ஒரு சின்னக் கிண்ணம் அதாவது 50 கிராம் சமையல் எண்ணெயைக் காய வைத்து அல்லது நெய்யைக் காய வைத்து மாவில் ஊற்றவும்.  மறுபடி மாவும், நெய்/எண்ணெய் நன்றாய்க் கலக்கவேண்டும்.  இப்போ உதிர்த்த உருளைக்கிழங்கை மாவில் போட்டுக் கைகளால் நன்கு கலக்கவும்.  கவனம் இப்போ ஜாஸ்தியா இருக்கணும்.

மாவில் ஒரு சொட்டு நீர் கூட விடக் கூடாது.  உருளைக்கிழங்கில் இருக்கும் நீர்ச்சத்தே போதுமானது.  ஏற்கெனவே நெய்/எண்ணெய் வேறே காய வைச்சு ஊத்தி இருக்கோம்.  நல்லாக் கலந்து மாவு சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும் வரை பிசையவும்.  எண்ணெயைக் கடாயில் ஊற்றிக் காய வைக்கவும்.  அடுப்பைத் தணிக்கவும்.  பிசைந்த மாவை காராச்சேவுத் தட்டுப் போல இருக்கும் மெலிதான ஓமப்பொடித் தட்டில் கடாயின் மேல் தட்டை வைத்துக் கொண்டு தேய்க்க வேண்டும்.  தேய்த்தால் மெலிதான ஓமப்பொடியாக விழும். இந்தத் தட்டு (ஹிஹி, உள்ளே போட்டுட்டேன், வெளியே எடுத்துப் படம் எடுத்துப் போடறேன்.) இல்லையெனில் ஓமப்பொடி அச்சில் பிழியலாம்.  எண்ணெயில் போட்ட உடனே வெந்து மேலே வந்துவிடும்.  ஆகவே முதல்லே எண்ணெய் நன்கு காய்ந்தால் போதுமானது.  அடுப்பு ஒரே சீராக இருந்தால் தான் எண்ணெய் அதிகம் காயாமல் இருந்தால் தான் நிறம் மாறாமல் வரும். தட்டுத் தேவை எனில் துத்தநாகத் தகட்டை சதுரம், செவ்வகமாக வெட்டி அதில் மெலிதாக ஓட்டைகள் போட்டு நான்கு பக்கமும் மெலிதான கட்டைகளை அடித்து வைத்துக் கொள்ளலாம்.

அவ்வளவெல்லாம் கஷ்டப்பட முடியாது னு சொன்னா ஓமப்பொடி அச்சிலேயே பிழிஞ்சுக்கலாம்.   சாப்பிடறச்சே எப்படியும் உடைச்சுத் தானே சாப்பிட்டாகணும்.  :))))) மாலை நேரத் தேநீரோடு அல்லது தயிர் வடையின் மேலே தூவ, அல்லது பேல் பூரியின் மேலே தூவ, பானி பூரியோடு சேர்த்து உண்ண இவை எதுவுமே இல்லாட்டியும் அப்படியே சாப்பிடலாம்.  :)))))

2 comments:

  1. ஆகா...! செய்யும் விதம் சொன்ன விதம் பிரமாதம்...!

    நன்றி...

    ReplyDelete
  2. கடையில் வாங்கிச் சுவைத்திருக்கிறேன். பிடிக்காத சுவை! :))

    // க்ர்ர்ர்ர்ர் போட்டால் மட்டும் பார்க்கவா பார்க்கிறீங்க?? உ.கி. பொடிமாஸெல்லாம் போட்டுட்டு யாரும் பார்க்காமலேயே கிடக்கு!//

    பதிவோடேயே சேர்த்துப் போட்டால் பார்க்காமல் இருப்போமா? அப்புறம் சேர்த்தால்தான் பார்க்க முடியாமல் போகிறது!

    ReplyDelete