எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, August 10, 2020

பாரம்பரியச் சமையலில் கத்திரிக்காய் சாதம்!

சும்மாவானும் கத்தரிக்காய்ப் பொடி போட்ட கறியோடயே சாதத்தைப் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். ஆனாலும் தனி கத்தரிக்காய் சாதம் என்பதும் பண்ணலாம். இதற்குத் தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் கால் கிலோ சின்னதாக உருண்டைக்கத்தரிக்காயாக இருந்தால் நல்லது.

வெங்காயம் பெரிது 2 அல்லது சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி

மிளகாய் வற்றல் ஒன்று அல்லது இரண்டு, பச்சை மிளகாய் 2

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயத் தூள், கருகப்பிலை, மஞ்சள் பொடி, எலுமிச்சைச் சாறு ஒரு தேக்கரண்டி (தேவையானால்)

மசாலா பொடி: லவங்கப்பட்டை ஒரு துன்டு, சோம்பு 2 டீஸ்பூன், கசகசா ஒரு டீஸ்பூன், கிராம்பு 2, ஏலக்காய் பெரிதானால் ஒன்று, சின்னதானால் 2 எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

தாளிக்க, வதக்கத் தேவையான எண்ணெய். ஒரு சின்னக் கிண்ணம் தேவைப்படலாம்.

சமைத்து ஆற வைத்த உதிரான சாதம் ஒரு கிண்ணத்தில் இருந்து ஒன்றரைக்கிண்ணம் வரை.

உப்பு தேவைக்கு.

கத்தரிக்காய்களையும் வெங்காயத்தையும் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெயை வைக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். எல்லாம் பொரிந்ததும் கருகப்பிலை,மஞ்சள் பொடி, வற்றல் மிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிச் சேர்த்து வதக்கவும். தாளிதம் பக்குவம் ஆனதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்குவதற்கு ஒரு தேக்கரண்டி சர்க்கரையோ அல்லது அரைத் தேக்கரண்டி உப்போ சேர்க்கலாம். வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காயைப் போட்டு நன்கு வதக்கவும். கத்தரிக்காய் நன்கு வதங்கியதும் இதற்குத் தேவையான உப்பைச் சேர்க்கவும். சுருள வதக்கவும். நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைத்த சாதத்தைப் போட்டு மசாலாப் பொடியையும் போட்டு நன்கு கிளறவும். எண்ணெய் தேவை போல் இருந்தால் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றிக்கலாம் அல்லது நெய் சேர்க்கலாம். நன்கு கிளறிச் சேர்த்ததும் ருசி பார்க்கிறவர்கள் ருசி பார்த்துவிட்டுத் தேவையானால் உப்பு இன்னும் போட்டுக்கொள்ளலாம். பச்சைக் கொத்துமல்லி இருந்தால் மேலே தூவி எலுமிச்சைச் சாறைச் சேர்க்கலாம். எலுமிச்சைச் சாறு கட்டாயம் சேர்க்கணும்னு இல்லை.

இந்தக் கத்திரிக்காய் சாதமே தனியாகப் பொடி செய்து போட்டும் பண்ணலாம்.
அதற்குத் தேவையான பொருட்கள்.

வாங்கி பாத் எனப்படும் கத்திரிக்காய்ச் சாதம் செய்யத் தேவையான பொருட்கள்:  நான்கு பேர்களுக்குச் சுமார் அரைக்கிலோக் கத்திரிக்காய் தேவைப்படும். ஒன்றிரண்டு குறைத்துக் கொள்ளலாம்.

மிளகாய் வற்றல் சுமார் 10

தனியா/கொத்துமல்லி விதை இரண்டு டேபிள் ஸ்பூன்,

வெந்தயம் இரண்டு டீஸ்பூன்,

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு வகைக்கு இரண்டு டேபிள் ஸ்பூன்

மிளகு, ஒரு டீஸ்பூன், ஜீரகம் (தேவையானால் அரை டீஸ்பூன்)

ஏலக்காய் பெரிது ஒன்று அல்லது சிறிது 2

இலவங்கப்பட்டை ஒரு துண்டு,  கசகசா தேவையானால் ஒரு டீஸ்பூன்

கொப்பரைத் துருவல் இரண்டு மேஜைக்கரண்டி, வெள்ளை எள் வெறும் வாணலியில் வறுத்துப் பொடியோடு சேர்த்து வைக்கவும்.

மிளகாய் வற்றல், தனியா, பருப்பு வகைகள் ஆகியவற்றை வெறும் வாணலியில் ஒன்றன் பின்னர் ஒன்றாகப் போட்டு நன்கு வாசனை வரும்படி வறுத்துக் கொள்ளவும். மசாலா சாமான்களையும் அப்படியே வறுத்துக் கொண்டு அதிலேயே கொப்பரைத் துருவலையும் போட்டு வறுத்துக் கொள்ளவும். எல்லாம் ஆறினதும் மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதைக் கொஞ்ச நாட்கள் வைத்திருந்து தேவையான போது பயன்படுத்திக்கலாம்.

இப்போது பாஸ்மதி அரிசி அல்லது நீங்கள் சமைக்கும் அரிசியைச் சாதமாக வடித்துக்கொண்டு ஒரு வாயகன்ற பேசின் அல்லது தாம்பாளத்தில் போட்டுக் கொஞ்சமாய் உப்புச் சேர்த்து நெய் விட்டுக்கிளறி மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துச் சூடேறியதும் மசாலா இலை, (பிரிஞ்சி இலை) ஏலக்காய், ஜீரகம், சோம்பு, கடுகு ஆகியவற்றைத் தாளித்துக் கொள்ளவும். வேர்க்கடலையைத் தனியே எண்ணெயில் வறுத்துக் கொண்டு தனியாக வைக்கவும். கடைசியில் சேர்க்கலாம். இப்போது தாளிதப் பொருட்கள் வறுபட்டுப்பொரிந்த உடனே நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். எப்போதுமே வெங்காயம் வதங்க அரைத் தேக்கரண்டி சர்க்கரை அல்லது உப்புச் சேர்த்து வதக்கவும். சீக்கிரம் வதங்கும்.  இப்போது இதில் பட்டாணி, தக்காளி போன்றவை சேர்ப்பதெனில் சேர்க்கலாம். அவரவர் விருப்பம். பின்னர் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய்களையும் சேர்க்கவும்.

காய்களுக்குத் தேவையான உப்புச் சேர்த்து மஞ்சள் பொடியும் சேர்த்துக் காய்கள் வேகும் வரை வதக்கவும். மூடி போட்டு வதக்கலாம்.  காய்கள் முக்கால் வேக்காடு வெந்ததும் பொடி செய்து வைத்திருக்கும் மசாலாப் பொடியைத் தேவையான அளவுக்குச் சேர்க்கவும். நன்கு கிளறவும். நன்கு கிளறிச் சேர்ந்து வந்துவிட்டதும் ஆற வைத்திருக்கும் சமைத்த சாதத்தை இதில் சேர்க்கவும். மெதுவாக அரிசி உடையாமல் நன்கு கிளறவும். தேவையானால் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.  உப்புத் தேவையானால் இப்போது தேவையான உப்பையும் சேர்த்துக் கிளற வேண்டும். சாதம் நன்கு கிளறியதும் அதில் இன்னும் கொஞ்சம் நெய்யைச் சேர்க்கலாம். பச்சைக் கொத்துமல்லி தூவி ஏதேனும் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.

23 comments:

  1. வாசிக்கும்போதே அதன் சுவை தெரிகிறது. கத்தரிக்காயை எந்த ரூபத்தில் சமைத்தாலும் பிடிக்கும், கத்தரிக்காய் சாதம் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோயில் பிள்ளை.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கத்திரிக்காய் சாதம் நானெல்லாம் சின்ன வயசிலேயே சாப்பிட்டிருக்கேனே!

      Delete
  2. தலைப்பைப் பார்த்ததும்தான் இங்க வந்தேன்.

    இந்த ஊர்ல கடந்த இரண்டு மாதங்களாக வெவ்வேறு கத்திரிக்காய்கள் வேற வேற இடங்களில் வாங்கினாலும் எல்லாமே கைக்கிறது. பழமுதிர்ச்சோலை (சென்னை) கடைகளில் வரி பிரிஞ்சால் என்று ஒன்று வாங்குவோம், அது எப்போதுமே கைத்ததில்லை.

    கத்தரி கைத்தால், அதை எப்படிச் சரி செய்வது?

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் கஷ்டம் தான். என்றாலும் நீர்க்கப் புளி விட்டுச் சமைத்துப் பாருங்கள்.

      Delete
  3. நான் இதே முறையில்தான் செய்வேன் நிறைய நல்லெண்ணெய் கொஞ்சம் எள்ளும் தனியாப்பொடியுடன் அரைத்து சேர்ப்பேன் .முந்திலாம் எல்லா மிக்ஸும் நல்லா இருக்கும் இப்போ ரீசண்டா வாங்கின வாங்கிபாத் ,வற்றல் குழம்பு மிக்ஸ்லாம் ஒத்துக்கலை அதனால் நானே அரைத்த பொடிச்சு செய்றேன் .

    ReplyDelete
    Replies
    1. வெள்ளை எள்சேர்க்கணும் ஏஞ்சல். பதிவில் விட்டுப் போயிருக்கு. நீண்ட நாட்கள் கழிச்சு வந்து கருத்துப் பதிந்தமைக்கு நன்றி.

      Delete
  4. கத்தரிக்காய் சாதம் செய்முறை நல்லா இருக்கு. சமீபத்தில் சாப்பிட்ட நினைவே இல்லை (பல வருடங்களா).

    வெங்காயம் - சேர்க்க வாய்ப்பே இல்லை. பையனுக்கு வீட்டில் வழக்கத்தில் இல்லாத உணவுகளில் வெங்காயம் சேர்த்தாலே பிடிப்பதில்லை, சாப்பிடுவதில்லை. நானும் நேற்றிலிருந்து மசால், நார்த் இண்டியன் சைட் டிஷ் போன்ற அவசியமானவை தவிர வேறு வகையில் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று நினைத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் முன்னெல்லாம் அடிக்கடி பண்ணிக் கொண்டிருந்தேன். குழந்தைகள் சாப்பிடுவார்கள். இப்போல்லாம் அவங்களுக்கே ருசி மாறி விட்டது. இங்கே எப்போவானும் மாறுதலுக்குப் பண்ணுவேன். 2 மாசத்துக்கு ஒரு தரமாவது இருக்கும். வெங்காயம் சேர்க்காமலும் வெறும் மசாலாப் பொடி மட்டும் சேர்த்துப் பண்ணலாம். மசாலா எனில் ஏலக்காய், கிராம்பு மட்டும் இருந்தால் கூடப் போதும். இவற்றை நாங்கள் ஸ்ராத்தத்தில் கூடச் சேர்ப்போம். புரோகிதருக்கு வெற்றிலை, பாக்குப் போட்டுக்கக் கொடுக்கையில் ஏலக்காய், கிராம்பு வைத்துக் கொடுப்போம் ஜீரணத்துக்காக. சமையலிலும் ஏலக்காயைப் பயத்தம் உருண்டை, திரட்டுப் பால், பாயசம், அல்வா, எள்ளுருண்டை, அதிரசம் போன்றவற்றில் போடுவோம்.

      Delete
  5. இப்போல்லாம் எல்லாவற்றிர்க்கும் பொடி கிடைக்குது. (வாங்கீபாத் மிக்ஸ், டொமடோ ரைஸ் மிக்ஸ், பிசிபெளபாத் மிக்ஸ் என்று பலவிதம்). பேசாம, காய் வாங்கி, மிக்ஸ் வாங்கி டக்குனு பண்ணிடலாம் போல இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நான் எப்போவுமே இந்தக் கடைத்தயாரிப்புப் பொடி வாங்கினதே இல்லை. அவசரம் என்றால் கூட வீட்டுத் தயாரிப்புத் தான். வீட்டில் இருக்கும் சாமான்களை வைத்து உடனடித் தயாரித்துக் கொள்வேன். ரொம்பல்லாம் நேரம் ஆவதில்லை.

      Delete
  6. ஏற்கெனவே சொல்லி இருக்கிறீர்கள்.  நான் இன்னமும்தான் முயற்சிக்கிறேன்!  இரண்டாவது வகையில் கத்தரிக்காய் எனும் பேயறையே காணோமே...    அப்புறம் எப்படி அது வாங்கிபாத் எனும் கத்தரிக்காய் சாதம் ஆகும்?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, இரண்டு, மூன்று வரிகள் விட்டுப் போயிருக்கின்றன ஸ்ரீராம். அதைத் தேடினேன், கிடைக்கலை, புதிதாக எழுதிச் சேர்த்தேன்.

      Delete
    2. ஆனாலும் "பேயறை" அறைஞ்சுட்டீங்க! :)))))))

      Delete
    3. கடவுளே... பெயர் அப்படிதான் ஆகி விடுகிறது.

      Delete
  7. லிங்க் குறித்து வைத்துக்கொண்டுள்ளேன்.  இந்த முறையாவது செய்து பார்க்கவேண்டும்.  உருண்டைக் கத்தரிக்காய்க்கு எங்கே போக!

    ReplyDelete
    Replies
    1. உருண்டைக்கத்திரிக்காய் கிடைக்காட்டிக் கொஞ்சம் நடுத்தர அளவில் இருக்கும் கத்திரிக்காயில் பண்ணிப் பாருங்கள். அந்த நீளமான மெல்லிதுக் கத்திரிக்காய் எனில் ஒரே ஜலமாகி விடும்.

      Delete
  8. இங்கே அடிக்கடி கத்திரிக்காய் சாதம் செய்துவிடுவோம்.
    கத்திரிக்காய் பிடிக்காத பையனும் விரும்பி சாப்பிடுவான்.
    நீங்கள் சொல்லி இருப்பதே சாப்பிடவேண்டும் என்கிற ஆசை வருகிறது.
    எனக்கும் வாங்கின பொடிகள் பிடிப்பதில்லை.
    நன்றி கீதா மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க,வல்லி, கத்திரிக்காய் சாதம் உண்மையிலேயே நன்றாக இருக்கும். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

      Delete
  9. இதே முறைதான் கீதாக்கா. மசாலா வெங்காயம் சாப்பிடாதவங்கனா நார்மலா தனியா பருப்புகள் வறுத்துப் பொடி போட்டு கொஞ்சம் நிலக்கடலை, எள்ளும் சேர்த்து வறுத்துப் பொடி செய்து போட்டு கொஞ்சம் கடலையும் வறுத்து அப்படியே போட்டுச் செய்வதுண்டு.

    மசாலாப்பொடி - பட்டை சோம்பு நீங்க சொல்லிருக்கீங்களே அந்தப் பொடி நான் வீட்டில் கொஞ்சம் செய்து வைத்திருப்பதுண்டு. டக்கென்று க்ரேவிக்கு, வெஜ் ப்ரியாணிக்கு அல்லது இப்படியானவற்றிற்கு உதவும் என்பதால்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மாமியார் இருந்தவரைக்கும் ஏலக்காய், கிராம்பு மட்டும் சேர்த்து இந்தச் சாத வகைகள் எல்லாம் பண்ணுவேன். எங்களுக்குத் தொட்டுக்க வெங்காயப் பச்சடி பண்ணிட்டு மாமியாருக்குக் காரட் அல்லது தக்காளி பண்ணிடுவேன். மற்றபடி மசாலாப் பொடியெல்லாம் நானும் வீட்டுத் தயாரிப்புத் தான். ஒரு தரம் பண்ணினால் அது பல நாட்கள் வருகிறது.

      Delete
  10. இங்கு உருண்டைக் கத்தரி சின்ன சின்னதாகக் கிடைத்தது. நிறைய வெரைட்டிஸ் கிடைக்கிறது. நன்றாகவும் இருக்கிறது

    உருண்டை இல்லைனா மெலிதாக நீளமாகக் கிடைக்குமே அதுவும் கிடைக்கிறது செம ஸாஃப்டா நல்ல சுவையுடன் இருக்கிறது

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா, மெலிதாக நீளமாகக் கிடைக்கும் கத்திரிக்காய் வதக்கினால் அப்படியே ஜலமாகி விடுகிறது. அதனால் அதிகம் வாங்குவதில்லை. அம்பேரிக்காவில் பையர் அதான் வாங்குவார். :))))

      Delete