எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, January 24, 2018

உணவே மருந்து! கருகப்பிலை! 2

கறிவேப்பிலைக் குழம்பு!

கறிவேப்பிலை அல்லது கருகப்பிலை இரண்டு, மூன்று கைப்பிடி! ஆர்க்கு என்று சொல்லப்படும் குச்சியில் சத்து நிறைய இருப்பதால் நான் அதை வீண் செய்ய மாட்டேன். எல்லோரும் உதிர்த்து இலையாக வைத்துக் கொண்டால் நான் தலைகீழ்! அந்த ஆர்க்கோடு பொடியாக நறுக்கிச் சேர்ப்பேன். அப்படி நறுக்கிச் சேர்த்த கருகப்பிலை ஒரு கிண்ணம் நிறைய!

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு

வறுத்து அரைக்க:-

மிளகு ஒரு டீஸ்பூன் (மிளகு பிடிக்கும்னால் இரண்டு டீஸ்பூன்)

மி.வத்தல் 2 அல்லது மூன்று. மிளகு பிடிக்காதவங்க மிளகைக் குறைத்துக் கொண்டு மிவத்தல் நான்கு, ஐந்து வரை வைச்சுக்கலாம்.

பெருங்காயம்! ஒரு துண்டு (பெரும்பாலும் பெருங்காயம் சேர்க்க மாட்டாங்க, ஆனால் நான் சேர்க்கிறேன்.)

வறுக்க ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்

உப்பு தேவையான அளவுக்கு

நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்கக் கடுகு, மஞ்சள் பொடி (தேவையானால்)

புளியைக் கரைத்துக் கொண்டு வடிகட்டித் தயாராக வைக்கவும்.  அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு ஒவ்வொன்றாக வறுத்து எடுக்கவும். கடைசியில் அந்தக் கடாயிலேயே ஆய்ந்து வைத்த கருகப்பிலையையும் போட்டுப் புரட்டி எடுக்கவும். ஆற விட்டுப் பின்னர் நல்ல விழுதாக நைசாக அரைக்கவும். கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலில் போட்டுக் கரைக்கவும். மிக்சியை அலம்பியும் ஜலத்தை விட்டுக் கொள்ளலாம். உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு தாளிக்கவும். விரும்பினால் பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும். இல்லை எனில் கரைத்து வைத்துள்ள குழம்புக்கலவையை மெதுவாக ஊற்றவும். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது கீழே இறக்கி வைக்கவும். சூடான சாதத்தோடு நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிடச் சுவை! மோர்க்கூட்டு, மோர்க்கீரை, தயிர்ப்பச்சடி நல்ல துணை!

கருகப்பிலைத் துவையல்:- இதை இரண்டு முறையில் அரைக்கலாம். ஒன்று சாதாரண நாட்களில் செய்வது! இன்னொன்று ச்ராத்தம் போது செய்வது!

மி.வத்தல் 4

கடுகு, உபருப்பு தலா ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

புளி ஒரு சுண்டைக்காய் அளவுக்கு நீரில் ஊற வைக்கவும்

உப்பு தேவையான அளவு

நல்லெண்ணெய் வறுக்க

நல்லெண்ணெயைக் கடாயில் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு முதலில் வறுத்துத் தனியாக வைக்கவும். பின்னர் மி.வத்தல், பெருங்காயம் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு அதிலேயே கருகப்பிலையையும் போட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் ஆற விட்டு மிக்சி ஜாரில் முதலில் புளியுடன்,   மி.வத்தல் உப்பு, பெருங்காயம், கருகப்பிலையைப் போட்டு நன்கு அரைத்துக் கொண்டு பின்னர் கடுகு, உபருப்புச் சேர்த்துக் கொரகொரவென்று அரைத்து எடுக்கவும். தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றோடு சேர்த்துச் சாப்பிடலாம்.

ச்ராத்தத்தின் போது செய்யும் கருகப்பிலைச் சட்னி

கருகப்பிலை, இஞ்சி சுமார் 25 கிராம், உப்பு, புளி, கடுகு, உபருப்பு (வறுத்தது)

வெறும் வாணலியில் கருகப்பிலையை வறுத்துக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, உபருப்பு வறுத்து எடுத்துக் கொண்டு இஞ்சியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். நன்கு வதக்கிக் கொண்டு இவை ஆறியதும் உப்பு, புளி சேர்த்து அரைத்துக் கடைசியில் தாளிதத்தைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு எடுக்க வேண்டும்.

கருகப்பிலைப் பொடி! கருகப்பிலை சுமார் 100 கிராம். நன்கு காய வைக்கவும்.

மி.வத்தல் 5 அல்லது ஆறு

உப்பு,

ஓமம் அல்லது பெருங்காயம்

கருகப்பிலையை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அந்த வாணலியிலேயே மி.வத்தலையும் போட்டுக் கருகாமல் வறுத்துக் கொண்டு ஓமத்தையும் போட்டு வறுக்கவும். பெருங்காயம் தேவையானால் சேர்க்கலாம். எல்லாம் ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும். சுமார் ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.


8 comments:

  1. கருவேப்பிலை குழம்பு - இதைச் செய்துபார்க்கிறேன். நான் எப்போதும் நிறைய கருவேப்பிலையை வைத்திருப்பேன். அதுவும் பச்சை மிளகாயும் எப்போதும் ஃப்ரிட்ஜில் இருக்கும். இன்றைக்கு நிறைய கருவேப்பிலையைப் பார்த்தபோது, அடைக்கு அரைப்போமா என்று தோன்றியது. வேண்டாம், கருவேப்பிலை குழம்பு செய்துபார்க்கிறேன்.

    நான் பெருங்காயத்தை, புளி கரைசலைக் கொதிக்கவிடும்போதே போட்டுவிடுவேன். பெரும்பாலும் திருவமாறும்போது சேர்ப்பதில்லை.

    மற்றபடி கருவேப்பிலைத் தொகையல் பிடிக்கும் என்று தோன்றவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. பெருங்காயம் பொரித்துச் சேர்த்தால் ஒரு சுவை. பொரிக்காமல் சேர்த்தால் ஒரு சுவை!

      Delete
  2. கரிவேப்பிலைக் குழம்புக்கு முதல் வோட்டு.

    துவையல் முதல் (சாதாரண நாட்களில் செய்வது) வகையில் தண்ணீர் விட்டு வைத்திருக்கும் புளியை மறுநாள் கொட்டி விட்டு பாத்திரத்தை அலம்பி விடலாமா என்று நீங்கள் சொல்லவில்லை!!!

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், புளியைச் சேர்த்து அரைக்கணும்னு எழுதினது விட்டுப் போயிருக்கு! :)

      Delete
  3. ஹை வெங்காயம் பூண்டு இல்லாத குழம்புன்னா எங்க வீட்டு இளவரசிக்கு கொண்டாட்டம் :)
    இன்னிக்கு எங்கள் பிளாக்கில் ரெசிப்பி பார்த்ததும் இங்கே சைன் போர்ட் வழி காட்டுச்சா ஓடிப்போய் ஒரு பாக்கட் கருவேப்பிலை வாங்கிட்டு வந்தேன் அநேகமா நாளைக்கு செய்வேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சலின், முதல் வரவுக்கு நன்றி. இதிலே உள்ள மற்றவற்றையும் படித்துப்பார்க்கவும். :)

      Delete
  4. எச்ச்சூஸ்மீ :) கீதாக்கா .நான் இன்னிக்கு செஞ்சேன் செம ருசி ஆனா கலர் புளியோதரை கலர்ல இருந்ததே yyyy ??
    நிறைய மிளகாய் சேர்த்ததாலா இல்லை கஞ்சப்பட்டு கைப்பிடி கறிவேர்ப்பில்லை சேர்த்ததாலா ???
    நீங்க நெக்ஸ்ட்டைம் படம் ஒன்னு போடுங்க அப்போதான் எனக்கு திருப்தி வரும்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம் புளி பழைய புளியாக இருந்திருக்கலாம். என்றாலும் நாங்க கருகப்பிலைக்குழம்பு, மிளகு குழம்பு, புளிக்காய்ச்சல் போன்றவற்றிற்குப் பழைய புளியே வைப்போம். மஞ்சள் பொடி சேர்த்தீர்களா? மிளகாயைக் குறைத்துக் கொண்டு மிளகை அதிகப்படுத்திப் பாருங்க. அதுக்குள்ளே நான் செய்தால் படம் போடறேன். வீட்டிலே புளிக்காய்ச்சல் போணியே ஆகாமல் இருக்கிறதாலே இதெல்லாம் பண்ண முடியலை! :)

      Delete