எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, December 29, 2012

வாழ்க்கையே ரசம் தான்!

எங்க வீட்டில் தினம் தினம் ரசம் இருக்கும். பொதுவாக நான் சாம்பார் பொடி எனத் தனியாக அரைப்பதில்லை.  அரைப்பதே ரசப்பொடிதான்.  சாம்பார் செய்வதெனில் செய்யும் அன்று வறுத்து அரைத்துச் செய்வதே வழக்கம்.  பொடி போட்ட சாம்பார் இன்றும் எனக்கு அவ்வளவு சரியாக வராது. :))))
இதற்குத் தேவையான சாமான்கள்:


கால்கிலோ மிளகாய் வற்றல்
50 கிராம் விரலி மஞ்சள்
முக்கால்  கிலோ தனியா
200 கிராம் மிளகு(அவ்வளவு காரம் வேண்டாமெனில் 100 கிராம் போதும்)
துவரம்பருப்பு 200
கடலைப்பருப்பு ஒரு கைப்பிடி
வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன்

ஒரு சிலர் கடுகு, கருகப்பிலை, உளுந்து, சீரகம் போன்றவற்றைச் சேர்க்கின்றனர்.  ஆனால் நான் போடுவது மேலே உள்ள அளவில் தான்.  பொதுவாகவே சாம்பார் பொடி அரைத்தாலும் சரி, ரசப்பொடி அரைத்தாலும் சரி துவரம்பருப்பு கூடுதலாகவும், கடலைப்பருப்பு கம்மியாகவும் போட்டால் ரசம் நல்ல தெளிவாக நீர்க்க வரும்.

மேலே சொன்ன சாமான்களை நன்கு வெயிலில் காய வைத்துக் கொண்டு மாவு மெஷினில் மிளகாய் அரைக்கும் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.  இதுவே சாம்பாருக்கும், பொடிதான் எனில் துவரம்பருப்பில் பாதி அளவுக்கு கடலைப்பருப்புப் போட்டு விட்டு மிளகு நூறு கிராமுக்கும் குறைத்துச் சேர்க்கவும்.  வெந்தயம் ஐம்பது கிராம் போடலாம்.

இந்த ஒரே பொடிதான் ரசம், சாம்பார் எனில் தனியாக ஒரு கிண்ணம் தனியா, அரைக்கிண்ணம் து.பருப்பு கால் கிண்ணம் மிளகு வெறும் வாணலியில் வறுத்து மஞ்சள் தூள் சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.  மேலே இரண்டாவதாய்ச் சொன்ன சாம்பார் பொடியிலேயே ரசம் வைப்பதெனில் இந்தப் பொடியில் ஒரு அரை ஸ்பூன் பாதி கொதிக்கையிலே ரசத்தில் சேர்த்துக் கொண்டு கருகப்பிலை ஆர்க்கோடு இரண்டாகக் கிள்ளிச் சேர்க்கவும். மேலும் ரசத்துக்குப் பருப்பைப் போட்டு அடி வண்டல் இருக்கும்படி செய்வதை விட, பருப்பை நன்கு நீர் விட்டுக் கரைத்து அந்தப் பருப்பு நீரை விட்டாலே ரசம் தெளிவாக வரும்.

மைசூர் ரசம்(தஞ்சை மாவட்ட முறை) எங்க மாமியார் வீட்டில் தினம் தினம் சாம்பார்த்திருநாள் தான்.  ரசம் என்பது எப்போதோ தான்.  அவங்களைக் கட்டாயமாக தினம் ரசம் செய்ய வைத்த பெருமை என்னைச் சேரும்.  நமக்கு சாம்பார் என்றாலே அலர்ஜி! ரசம் ஒண்ணுதான் ஒழுங்காய்ச் சாப்பிடும் ஐடம். இவங்க சாம்பார் சாதம் சாப்பிடறதைப் பார்த்து எனக்கு மயக்கமே வந்துடுச்சுனா பாருங்க! அலுக்கவே அலுக்காது! சரி, சரி, இப்போ மைசூர் ரசம் எங்க மாமியாரோட செய்முறைப்படி பார்க்கலாமா?  இந்த மைசூர் ரசம் மாதிரியும் இல்லாமல், சாம்பாராகவும் இல்லாமல் இரண்டுங்கெட்டானாக இருக்கும்.  இது வைக்கிற அன்னிக்கு சாம்பார் வைக்க மாட்டாங்க.  ஏனெனில் து பருப்பு இதுக்கு நிறைய வேண்டும்.

நாலு பேருக்கு மைசூர் ரசம் வைக்க:

புளி ஒரு  பெரிய எலுமிச்சை அளவு நீரில் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும்.  தக்காளி இரண்டிலிருந்து மூன்று வரை, உப்பு, மஞ்சள் தூள்

து பருப்பு குறைந்தது ஐம்பது கிராமுக்குக் கொஞ்சம் கூட  பருப்பை நன்கு வேக வைத்துக் குழைய வைத்துக்கொள்ளவும்.

தாளிக்க நெய் ஒரு டீஸ்பூன், கடுகு, கருகப்பிலை, கொத்துமல்லி

வறுத்து அரைக்க

மி.வத்தல் நான்கிலிருந்து ஆறு வரை
தனியா இரண்டு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு மூன்று டீஸ்பூன்
வெந்தயம், இரண்டு டீஸ்பூன்,
தேங்காய்

மேலே சொன்ன பொருட்களை எண்ணெயில் நன்கு வறுத்துக் கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.  புளி ஜலத்தில் தக்காளியைப் போட்டு உப்புச் சேர்த்து மஞ்சள் தூளும் சேர்த்துக் கொண்டு கொதிக்க விடவும்.  புளி வாசனை போகக் கொதித்த பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்துக் குழைய வேக வைத்த பருப்பையும் அப்படியே சேர்க்கவும்.  தேவையான அளவு நீரை விட்டு விளாவவும்.  கவனிக்கவும்.  அதிக நீரை விட்டு நீர்க்க விளாவக் கூடாது.  பின்னர் ரசம் கொதித்து வந்ததும், அடுப்பை அணைத்துக் கீழே இறக்கிக் கடுகு, கருகப்பிலை, தேவையானால் ஒரு மி.,வத்தல் நெய்யில் தாளிக்கவும்.  பச்சைக்கொத்துமல்லி சேர்க்கவும். பொரித்த அப்பளத்தோடு சாப்பிடவும்.



9 comments:

  1. ரசமான பதிவு என்ற ராஜி மேடம் கமெண்ட் ரசித்தேன்!

    நாங்கள் அரைத்துக் கொள்வது சாம்பார்ப் பொடிதான். அதிலேயே ரசம். மிளகாய் முக்கால் கிலோவுக்கு ஒன்றரை கிலோ தனியா, மிளகு 350, மஞ்சள் 150, து.ப. 1/4 கிலோ, க.ப. 100

    இதிலேயே ரசம்!

    ReplyDelete
  2. தலைப்பே பிரமாதமா இருக்கு. ரச பொடி ரெசிபிக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
    ஸ்ரீராம் சொன்ன மாதிரி எங்க அம்மா வீட்லேயும் சாம்பார் பொடியேதான் ரசத்துக்கும். அம்மா பண்ற ரசம் பிரமாதமா இருக்கும். நானும் சாம்பார் பொடியேதான் ரசத்துக்கும் போட்டுண்டு இருந்தேன். இப்பதான் சமீபமா ரசபொடி அரைச்சு பண்ண ஆரம்பிச்சேன். இதுவும் நல்லாதான் இருக்கு.

    மைசூர் ரசம் ரெசிபி சூப்பர். எங்க பாட்டி இப்படிதான் பண்ணுவாங்க. அளவு எல்லாம் மறந்து போச்சு. அதான் எக்ஸ்பெர்ட் உங்களை கேட்டேன். :)

    ஸ்ரீராம், ரசபொடில ரசம் பண்ணினா கொஞ்சம் வித்யாசமா இன்னும் நல்லா இருக்கு. ஒரு முறை பண்ணி பாருங்க. ஆனா ரசத்துக்கு மட்டும் பொடி போட்டு கொதிக்க கூடாது. புளி ஜலம் தக்காளி சேத்து, உப்பு போட்டு நன்னா கொதிச்ச அப்பறம், ரச பொடி போட்டு ஒரு கொதி வந்த உடனேயே பருப்பு ஜலம் சேத்து நுரைச்சுண்டு வரும்போதே இறக்கிடணும். இங்க ஒரு முறை அவசரத்துக்கு 777 ரசபொடில ரசம் பண்ணினேன். ரொம்ப நல்லா இருந்துது.
    உங்களோட சாம்பார் பொடி அளவேதான் எங்களோடதும். :))

    ரசமான பதிவு...... நல்லா சொன்னீங்க ராஜராஜேஸ்வரி. :))

    ReplyDelete
  3. வாழ்க்கையே ரசம்தான் தலைப்பும் அழகு.

    மீனாக்ஷி, ரசப்பொடி போட்டும் பலமுறை செய்ததுண்டு. எங்கள் வீட்டு சர்க்கிளில் சொல்வது போல 'பாஸ்' வீட்டு சர்க்கிளில் சொல்வது போல என்று பல வகைகளிலும் முயற்சித்துப் பார்த்து விடுவது! ஆனாலும் இந்த சாம்பார்ப்பொடியிலேயே ரசம் வைப்பது வழக்கமாகி விட்டது!

    நேற்று எங்க 'பாஸோ'ட சித்தி ஒரு சாம்பார் செய்து கொண்டு வந்திருந்தார்கள். வித்தியாசமான டேஸ்ட். தாளிதத்தில்தான் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று சந்தேகப் பட்டு விசாரித்தேன். ஆம், மிளகு, ஜீரகம் வெந்தயம், மி.வ அரை அரை ஸ்பூன் எடுத்துப் பொடித்துப் போட்டிருந்தார்களாம். திருநெல்வேலி டைப் சாம்பார் என்று நாங்களும் செய்வோம்! அது தேங்காயோடு அரைத்து விடுவது. இதில் தேங்காயும் இல்லை வேறு அரைத்து விடுவதும் இல்லை. டேஸ்டாக இருந்தது.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நன்றி ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், மிளகு நிறையப் போட்டால் ரசம் ரசமாகவே இருக்கும். பொதுவாகவே துபருப்பு, மிளகு நிறையப் போட்டாலே ரசம் தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.

    ReplyDelete
  7. வாங்க மீனாக்ஷி, ரசனைக்கு நன்றி. நீங்க சொன்னாப்போல் ரசப்பொடியைப் புளி வாச்னை போகக் கொதிச்சதும் சேர்க்கிறதுனா எல்லா சாமான்களையும் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த வறுத்த ரசப்பொடியைப் போடுவதெனில் புளி, தக்காளி, உப்பு சேர்த்துக் கொதித்ததும், சேர்க்க வேண்டும்.

    ReplyDelete
  8. ஸ்ரீராம், பிட்லை செய்வதெனில் எங்க வீடுகளில் மிளகு, உ.பருப்பு, க.பருப்பு, கொஞ்சம் போல வெந்தயம் வறுத்துச் சேர்ப்போம். ஜீரகம் போடுவதில்ல்லை. ஜீரகம் போட்டால் அந்த வாசனை தனி என்பதால் பிட்லை, சாம்பார்களுக்குப் போடுவதில்லை.

    வாழைப்பூவில் புளிவிட்டுக் குழம்பு செய்கையில் மி.வத்தல், உபருப்பு, கபருப்பு, மிளகு, கொஞ்சம் வெந்தயம் தேங்காய் துருவல் மட்டும் வறுத்து அரைத்துச் சேர்த்துப் பண்ணுவது உண்டு. கொத்துமல்லி விதை வேண்டாம். இதை நாங்க கூட்டுக் குழம்பு என்போம். இதே போல் அவரை, கத்திரி, கொத்தவரை, வாழைக்காயிலும் செய்யலாம்.

    ReplyDelete