
ஜெயஸ்ரீ சொன்ன மங்களூர் கொஜ்ஜுவைப் பத்தி இப்போப் பார்க்கலாமா?? பொதுவா இந்த கொஜ்ஜு அன்னாசிப் பழத் துண்டங்களில் தான் செய்யறாங்க. ஆனால் வித்தியாசமாய் ஓர் அம்மாள் சங்கரா தொலைக்காட்சி சானலில் மாங்காய், பழுக்கும் நிலையில் இருப்பதில் செய்து காட்டினார். அவர் செய் முறையில் மி.வத்தல், தனியா, உளுத்தம்பருப்பு, வெந்தயம், வெள்ளை எள் ஆகியனவற்றோடு கொப்பரைத் துருவலும் இருந்தது. சிலர் தனியா சேர்க்க மாட்டோம் என்கின்றனர். பொதுவிலிது ஒரு வகைப் பச்சடி என்றே சொல்லலாம். இப்போ அன்னாசிப் பழத் துண்டுகளில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் அன்னாசிப் பழத்துண்டுகள் ஒரு கிண்ணம். மி.வத்தல் 4 அல்லது 6 காரத்தின் தன்மைக்கேற்ப, தனியா ஒரு டேபிள் ஸ்பூன், உளுந்து இரண்டு டீ ஸ்பூன், வெள்ளை எள் ஒரு டீ ஸ்பூன், வெந்தயம் ஒரு டீ ஸ்பூன். கொப்பரைத் துருவல் ஒரு கப். தேங்காய் அதிகம் வேண்டாமெனில் அரை கிண்ணம் போதும். எல்லாவற்றையும் வறுக்க எண்ணெய். புளி ஒரு நெல்லிக்காய் அளவு நீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். எண்ணெய் விட்டு எல்லாப் பொருட்களையும் அன்னாசிப் பழத் துண்டுகள் தவிர வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.
அன்னாசித் துண்டங்களைக் குக்கரிலோ அல்லது நீர் வைத்து வாணலியிலோ வேக வைக்கவும். வேக வைத்த அன்னாசித் துண்டில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்துப் புளிவாசனை போகக் கொதிக்க விடவும். இப்போது பொடித்துள்ள பொடியைத் தேவையான அளவு போடவும். ஒரு சின்னத் துண்டு வெல்லம் இஷ்டப் பட்டால் சேர்க்கலாம்.
ஒரு சிலர் தனியாவோடு நாம் சாம்பாருக்கு அரைக்கிறாப் போல் கடலைப் பருப்பும் சேர்த்து வறுத்து அரைக்கின்றனர். இது அவரவர் ருசிக்கு ஏற்ப மாறுபடும்.