எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, July 26, 2020

பாரம்பரியச் சமையலில் புளிக்காய்ச்சல் வகைகள்!

புளிக்காய்ச்சல் வகைகள்!
 பெருமாள் கோயில் புளிக்காய்ச்சல்

முதல்லே கோயில் புளியோதரைக்குப் புளிக்காய்ச்சல் செய்யறதைப் பத்திப் பார்ப்போம். கோயில்னு இல்லை; பொதுவாகவே நிவேதனம் செய்யும் உணவுகளில் பாரம்பரியமாக வரும் மிளகுக் காரமே சேர்க்கப்படும். உதாரணமாக ஆஞ்சநேயருக்கான வடைமாலைக்கு உள்ள வடை, புளியோதரை போன்றவற்றில் மிளகாய் வத்தல், பச்சை மிளகாய் சேர்ப்பதில்லை. தயிர்சாதம் என்றால் கூடப் பெருங்காயம் கூடப் போட மாட்டார்கள். பாலில் குழைய வேக வைத்து வெண்ணெய் சேர்த்து, சுக்குத் தட்டிப் போட்டு அல்லது இஞ்சி, கருகப்பிலை போட்டுக் கடுகு மட்டும் தாளித்திருப்பார்கள். ஆகவே இந்தக் கோயில் புளிக்காய்ச்சலுக்கும் மி.வத்தல் எல்லாம் வேண்டாம்.


நூறு கிராம் புளி, தேவையான உப்பு, மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். மிளகு இரண்டு டீஸ்பூன் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் வெந்தயம் வெறும் வாணலியில் வறுத்துத் தனியாகப் பொடி செய்து கொள்ளவும். மிளகைச் சிலர் நெய்யில் கூட வறுக்கின்றனர்.


தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு/கொண்டைக்கடலை(கறுப்பு)/வேர்க்கடலை, இவை ஏதானும் ஒன்று அல்லது கொஞ்சம் போல் கடலைப்பருப்புப் போட்டுவிட்டு, வேர்க்கடலை தோல் நீக்கி வறுத்துச் சேர்க்கலாம். கருகப்பிலை இரண்டு ஆர்க்கு. தாளிக்க நல்லெண்ணெய், சாதத்தில் கலக்க ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்.


இப்போது புளியை நன்கு கரைத்துக் கொண்டு கெட்டியாக எடுத்துக்கொள்ளவும். உருளி அல்லது கல்சட்டி இருந்தால் நல்லது. இல்லை எனில் நீங்கள் சமைக்கும் ஏதேனும் ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெயை ஊற்றவும். நல்லெண்ணெய் காய்ந்ததும் மஞ்சள் தூளைச் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றவும். உப்புச் சேர்க்கவும். புளிக்கரைசல் நன்கு கொதித்துக் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். பேஸ்ட் மாதிரி ஆனதும் கீழே இறக்கி வைக்கவும். இதை முதல் நாளே பண்ணி வைத்துக்கொள்ளலாம்.


மறு நாள் ஒரு ஆழாக்கு அல்லது 200கிராம் அரிசியைப் பொலபொலவென சாதம் ஆக்கிக் கொள்ளவும். சாதத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றிக் கலக்கவும். அரை டீஸ்பூன் உப்புச் சேர்க்கவும். புளிப் பேஸ்டையும் சாதத்தில் தேவையான அளவு போடவும். இந்த அளவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் பேஸ்ட் சரியாக இருக்கும். நன்கு கலந்ததும் மிளகுபொடி, வெந்தயப் பொடி சேர்க்கவும்.


இப்போது கடாயில் நல்லெண்ணெய் வைத்துக் காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்புப் போட்டு வறுக்கவும். இறக்குகையில் கருகப்பிலையைச் சேர்க்கவும். தாளிதத்தைத் தயாராய் இருக்கும் சாதத்தில் கொட்டிக் கலக்கவும். அரை மணி நேரம் நன்றாய் ஊறியதும் சுவாமிக்கு நிவேதனம் செய்து விட்டுப் பரிமாறவும். பெருமாள் கோயில் புளியோதரை தயார்.



அடுத்தது புளிக்காய்ச்சல் வீடுகளில் தயாரிக்கும் இரு முறைகளும், பச்சைப் புளியஞ்சாதம் தயாரிப்பு முறையும்.


வீடுகளில் செய்யும் புளிக்காய்ச்சல்,

இதை இரு முறைகளில் செய்யலாம். ஒன்று மிளகாய் மட்டுமே தாளித்துச் செய்வது. இன்னொன்று தாளிப்பில் மிளகாயைக் குறைத்துக் கொண்டு, வறுத்துப்பொடி செய்து சேர்ப்பது. முதலில் மிளகாய் தாளிப்புப் புளிக்காய்ச்சல்.


தேவையான பொருட்கள்: புளி 200 கிராம், மி.வத்தல் காரம் உள்ளதானால் 10 முதல் 12 வரை. வெந்தயம் ஒரு டீஸ்பூன் வறுத்துப் பொடி செய்தது. உப்பு தேவையான அளவு, மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன். நல்லெண்ணெய், ஒரு சின்னக் கிண்ணம் அல்லது குறைந்த பக்ஷமாக நூறு எண்ணெய். தாளிக்கக் கடுகு, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை என்றால் முன்னாடியே ஊற வைத்துக்கொள்ளவும். வேர்க்கடலை எனில் அப்படியே தாளிப்பில் போடலாம். கருகப்பிலை. பெருங்காயம்.


புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். உருளி அல்லது கல்சட்டி அல்லது அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும். காய்ந்ததும் முதலில் மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிப் போடவும். மிளகாய் நன்கு கறுப்பாக ஆக வேண்டும். அதன் பின்னர் கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை அல்லது ஊறிய கொண்டைக்கடலையைப் போடவும். அனைத்தும் நன்கு வறுபட்டதும், கருகப்பிலை சேர்த்துக் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றவும். நன்கு கொதிக்க வேண்டும். கொதித்து எண்ணெய் பிரிந்து வருகையில் வறுத்த வெந்தயப் பொடியைச் சேர்க்கவும். பின் கீழே இறக்கவும்.
இதை நேரிடையாகச் சாதத்தில் போட்டுக் கலந்து விடலாம். தனியாக சாதத்தில் தாளிப்பு தேவை இல்லை.

இதையே முதல் செய்முறையில் சொன்ன மாதிரிப் புளிப் பேஸ்டாகக் கொதிக்க வைத்து எடுத்துக்கொண்டு, கீழே இறக்கும் முன்னர் தாளிதம் செய்து அதைக் கொதிக்கும் புளி விழுதில் கலந்து விட்டு ஒரே கொதியில் கீழே இறக்கலாம். வெந்தயப் பொடி மட்டும் கீழே இறக்கினதும் சேர்க்கவேண்டும்/ இதில் தாளிதம் எல்லாம் கரகரவென ஊறிக்காமல் வரும்.

வறுத்துப் பொடி செய்து போடும் முறை:

மேலே சொன்ன அளவுக்கு எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும். தாளிப்பில் இருந்து எல்லாவற்றுக்கும் அதே சாமான் தான், கூடுதலாகச் செய்ய வேண்டியது. ஒரு டீஸ்பூன் எள், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஆகியவை வெறும் வாணலியில் வறுத்துப்பொடி செய்து கொள்ளவும். இதைத் தவிர தனியா ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் வறுக்கவேண்டும். அதோடு பெருங்காயத்தையும் வறுத்துக் கொண்டு மிளகாய் வற்றலில் நாலைந்தை மட்டும் தாளிப்புக்கு வைத்துக் கொண்டு மிச்சத்தை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். மிளகாய், தனியாவையும் பெருங்காயத்தோடு சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். தேவைப் பட்டால் வெல்லத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன். வெல்லம் பிடிக்காதவர்கள் போட வேண்டாம்.


புளியைக் கரைத்துக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைக்கவும். பின்னர் கடாயில் மேலே சொன்னபடி முதலில் மிளகாயைத் தாளிக்க வேண்டும். இம்முறையில் தாளித்த மிளகாய் நாலைந்து தான் இருக்கும். அவை கறுப்பாக ஆனபின்னர் மற்றவற்றைத் தாளித்துப்புளிக்கரைசலை ஊற்றவும். கொதிக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வருகையில் வறுத்த பொடிகளைச் சேர்க்கவும். ஒரு கொதி விட்டதும் கீழே இறக்கவும். வெல்லம் சேர்ப்பதானால் பொடிகளைச் சேர்க்கும்போதே போட்டு விடலாம்.


அடுத்துப் பச்சைப் புளியஞ்சாதம் என்னும் திடீர்த் தயாரிப்பு. வீட்டுக்குத் திடீரென யாரோ வந்துடறாங்க. சாம்பார் , ரசம் ஒண்ணும் வேண்டாம்னு சொல்றாங்க. புளியோதரைனா சாப்பிடறதாச் சொல்றாங்க. என்ன பண்ணலாம்னு யோசிப்போம் இல்லையா?


ஆழாக்கு அரிசியைக் களைந்து கொள்ளவும். தேவையான தண்ணீர் இரண்டு கிண்ணம் எனில் ஒரு கிண்ணம் தண்ணீர் மட்டும் சேர்த்துக் குக்கரிலோ அல்லது வேறு சாதம் வடிக்கும் முறையிலோ வேக வைக்கவும். அரை வேக்காடு வெந்திருக்கும். இப்போது எலுமிச்சை அளவுப் புளியை எடுத்துக் கரைத்து ஒரு கிண்ணம் வரும்படி எடுத்துக்கொள்ளவும். அரை வேக்காடு வெந்திருக்கும் சாதத்தில் இந்தப்புளிக்கரைசலை ஊற்றி, ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்க்கவும். அரிசியை நன்கு வேக விட வேண்டும். சாதம் உதிர் உதிராக ஆனதும் பாத்திரத்தில் இருந்து எடுத்து ஒரு தாம்பாளத்தில் பரத்திக் கொள்ளவும்.


இரண்டு டீஸ்பூன் வறுத்த மிளகாய், கொத்துமல்லிப்பொடியுடன், கடுகு, வெந்தயம், எள் வறுத்த பொடியையும் ஒரு டீஸ்பூன் போட்டுக் கலக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் வைத்துக் கொண்டு கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, ஒன்றிரண்டு மிளகாய்(முதலில் போட்டுக் கறுப்பாக்கியது), கருகப்பிலை, தேவைப்பட்டால் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்துத் தாளிதம் செய்து சாதத்தில் கலக்கவும். இது ஊற ஊற நன்றாக இருக்கும். புளிக்காய்ச்சலே செய்யாமல் செய்யும் விதம் இது. திடீரென வீட்டில் சமாராதனை, வேறு நிவேதனம் கோயில்களில் கேட்டால் இம்முறையில் வெண்கலப்பானை அல்லது உருளி அல்லது ரைஸ் குக்கர் போன்றவற்றில் வைத்துச் செய்து விடலாம்.

திடீர்த்தயாரிப்புக்கான புளியோதரை விழுது:  புளியைக் கொட்டை நீக்கிக் கோது இருந்தால் அதையும் நீக்கிக் கொண்டு அரைக்கரண்டி நீரில் ஊற வைக்கவும். மிளகாய் வற்றல், தனியா, பச்சைக்கடுகு, மஞ்சள் பொடி, வெல்லம், தேங்காய்த் துருவல் ஆகியவற்றோடு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். உப்பையும் சேர்த்துப் போட்டு அரைக்கலாம். அல்லது கிளறும்போது அரைத்துக் கொள்ளலாம். இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். நன்கு கிளறி கெட்டிப்பட்டதும் வறுத்துப் பொடி செய்த வெந்தயப் பொடியைக் கொஞ்சம் போல் சேர்க்கவும். இதை ஓர் டப்பாவில்/சம்புடத்தில் போட்டு ஃப்ரீஸரில் வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அன்று சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு நல்லெண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்பு தாளித்துக் கொண்டு கருகப்பிலையும் சேர்த்துக் கொண்டு சாதத்தில் கொட்டி நன்கு நிரவி விடவும். தேவையானால் மிளகாய் வற்றலும் ஒன்றிரண்டு கறுப்பாக வறுத்துச் சேர்க்கலாம். அவரவர் காரத்துக்கு ஏற்ப இதைச் சேர்க்கலாம். பின்னர் ஃப்ரீஸரில் இருந்து எடுத்த விழுதைத் தேவையான அளவுக்குச் சாதத்தில் கலந்து விடவும். சிறிது நேரம் ஊறிய பின்னர் சாப்பிடலாம்.  இது கொஞ்சம் மாறுதலான சுவையுடன் இருந்தாலும் புளியோதரை மாதிரி! :))))))))))))

28 comments:

  1. அருமையான இடுகை. ஒரே இடுகையில் புளியோதரையின் பல வர்ணங்களைக் கொண்டுவந்துவிட்டீர்கள். பாராட்டுகள்.

    நீங்க எழுதியிருக்கிற மாதிரி, கோவில்களில் இப்போதெல்லாம் மிளகாயை அல்லது பெருங்காயத்தைத் தவிர்ப்பதில்லை. நாங்கள் திருச்சேறையில் புளியோதரை பிரசாதம் (அந்தக் கோவிலில் மட்டும் வேண்டிய அளவு பிரசாதம் தருவாங்க, மனதுக்கும் வயிற்றுக்கும் நிறைவாக) சாப்பிட்டப்போ நிறைய மிளகாய்வற்றல் உபயோகித்திருந்தாங்க (பெருமாள் பிரசாதம்). அதுபோல பல கோவில்களில் மிளகாய் உபயோகிக்கறாங்க.

    நீங்க குறிப்பிட மறந்தது, ஒப்பிலியப்பன் கோவில் புளியோதரை பிரசாதம். அங்க மட்டும் உப்பு உபயோகிக்காம பண்ணுவாங்க, ஆனால் நம் நாக்கிற்கு வித்தியாசம் தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லையாரே, ஸ்ரீராமை நினைத்துக் கொண்டு எழுதினேன். புளியோதரை பிரசாதம் என உள்ளே சந்நிதிக்குக் கொண்டு போவதில் நிச்சயம் மிளகாய் வற்றல், பெருங்காயம் இருக்காது. நாங்க இங்கே ஆண்டாளுக்குத் தளிகைக்குக் கொடுக்கையில் புளியோதரை அங்கே கோஷ்டி முடிந்து சாப்பிடக் கொடுப்பதில் மிளகாய் வற்றலோ, பெருங்காயமோ இருக்காது. ஆனால் எங்களுக்கு வீட்டுக்குக் கொடுத்ததில் எல்லாம் இருந்தன. உப்பிலி அப்பன் கோயில் புளியோதரை சாப்பிட்டதில்லை என்பதால் நினைவு வராமல் போயிருக்கலாம்.

      Delete
    2. திருப்பதி/திருமலைக்குப் போனப்போக் கொடுத்த புளியோதரைப் பிரசாதத்திலும் மிளகாய் வற்றல், பெருங்காயம் இல்லை.

      Delete
    3. நெல்லை...  ஒப்பிலியப்பன் கோவில் பிரசாதத்தில் உப்பு போடாமல் செய்தாலும் நம் நாக்குக்கு வித்தியாசம் தெரியாது என்று நீங்கள் சொல்லி இருப்பதைக் கடுமையாக நான் மறுக்கிறேன்!

      Delete
    4. என்னை நினைத்துக் கொண்டு எழுதினீர்களா?  தன்யனானேன்.  சில வருடங்களுக்கு முன்னர் கல்யாணமாகாதேவி பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்றிருந்தபோது அங்கு செய்து கொடுத்த புளியோதரையை அலட்சியமாக எடுத்து சுவைத்தேன்.  அசந்து போனேன்.  அருமையான சுவை.  மீண்டும் இரண்டு தொன்னை வாங்கி சுவைத்தேன் !

      ஆனாலும் என் நாக்கில் சுகுமார் செய்த புளியோதரையை அடிக்க இதுவரை புளிக்காய்ச்சல் வரவில்லை.

      Delete
    5. திருப்பதி புளியோதரை சுமாராகத்தான் இருக்கும்!  மன்னிக்கவும்!

      Delete
    6. நாங்க போயிருந்தப்போ எல்லாம் உப்பிலி அப்பன் கோயிலில் பிரசாதமே கொடுத்ததில்லை.ஸ்டாலில் நாங்கள் வாங்கமாட்டோம். ஒரிஜினலாக இருக்காது. திருப்பதி புளியோதரையிலும் மிளகு தான் காரத்துக்கு இருந்தது என்று தான் சொல்லி இருக்கேன். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் புளியோதரை ருசி அபாரமா இருக்கும். நான் சொல்வது எழுபதுகளில். பெரியப்பா பட்டாசாரியாரிடம் தனியாகச் சொல்லிக் கேட்டு வாங்கித் தருவார்.

      Delete
    7. ஒப்பிலியப்பன் சன்னிதி பிரசாதம்தான். நான் ஸ்டாலில் வாங்குபவைகளை ப்ரசாதக் கணக்கில் சேர்ப்பதில்லை.

      திருப்பதில மிளகு புளியோதரை, பல வருடங்கள் முன்பு, தரிசனத்திற்குக் காத்திருக்கும் வேளையில் கொடுப்பாங்க. நான் சென்ற வருடம் ஜீயர் சேவைக்குச் சென்றிருந்தபோது, மடப்பள்ளியிலிருந்து பிரசாதத்தைக் கூடைகளில் சுமந்து, ஜய விஜயர்கள் இருக்கும் மண்டபத்தில் மேடையில் வைக்கும் பாக்கியம் கிடைத்தது. அதில் மிளகாய் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

      புளியோதரை - திருச்சேறையில் ரொம்ப சுவையாக இருந்தது. (ஆனால் பாருங்க... அந்த பரிசாரகர், ஒரு பெரிய வாளி புளியோதரைக்கு 20க்கு மேல் வற்றல் மிளகாய் போட்டிருந்தார். பிரசாதம் தருவதற்கு முன்பு மிளகாய்களை எடுத்துவிட்டார். நான் என் நினைவுக்காக படம் எடுத்தேன் என்று நினைவு. கிடைக்கும்போது பகிர்கிறேன்)

      Delete
    8. விநியோகத்துக்கு மிளகாய் வற்றல் போட்டுக் கொடுத்திருப்பார். எனக்குத் தெரிந்து வைணவக் கோயில்களில் நடைமுறைகளை மாற்றும் சமரசமே கிடையாது. பாரம்பரிய முறைப்படிதான் செய்வார்கள். நாங்க வைத்தீசுவரன் கோயிலில் அபிஷேஹத்துக்குக் கொடுத்தப்போ ஒரு சின்ன வாளி நிறையக் கல்கண்டு சாதம், புளியோதரை கொடுத்தார்கள். அதிலும் மிளகாய் வற்றல் கிடையாது. கருகப்பிலை போட்டிருந்தார்கள். ஸ்ராத்தத்தில் கூடக் கருகப்பிலை பயன்பாடு உண்டே!

      Delete
  2. புளியோதரை விழுது - செய்துபார்க்கிறேன். நல்லா இருக்கா இல்லையா என்று சாப்பிட்டுவிட்டுச் சொல்கிறேன்.

    வீட்டில் புளியோதரை சாப்பிட்டு ரொம்ப ரொம்ப நாட்கள் (மாதங்கள்) ஆகிவிட்டன. யாத்திரையில் புளியோதரை மட்டும் நான் சாப்பிடுவதில்லை. வயிற்றுக்கு ஒத்துக்கொள்வதில்லை. (எதனால் என்று தெரியலை). புளியோதரையும், பூந்தி ரெய்த்தாவும் பண்ணு என்று கடந்த சில நாட்களாகச் சொல்லியிருக்கேன். காம்பினேஷன் சரியில்லை என்று சொல்கிறா (அப்படீன்னா பண்ணமாட்டான்னு அர்த்தம் ஹா ஹா)

    ReplyDelete
    Replies
    1. எங்க பையருக்குப் புளியோதரை பிடிக்காது. பெண்ணுக்கு உயிர். புளிக்காய்ச்சல் தவிர்த்து இந்த விழுது வேறே பண்ணி வைச்சுட்டு வருவேன். ஃப்ரீசரில் வைத்துக் கொள்வாள். ஆச்சு, அடுத்த ஞாயிறு பதினெட்டாம்பெருக்கிற்கு எல்லாச் சாதமும் பண்ணும்போது புளியோதரையும் பண்ணுவாங்க. பூந்தி ராய்தாவெல்லாம் புளியோதரையோடு நல்லா இருக்காது தான்.

      Delete
    2. நீண்ட இடைவெளிக்குப்பிறகு எங்கள் வீட்டில் வரும் ஆடி பதினெட்டுக்கு பாஸ் புளிக்காய்ச்சல் செய்யப்போகிறார்.  இரண்டு வருடங்கள் விட்டுப் போயிருந்தது.

      Delete
    3. ஹாப்பி புளியோதரை ஸ்ரீராம். நான் இப்போத் தான் ஒரு மாசத்துக்கு முன்னால் செய்திருந்த புளிக்காய்ச்சலைத் தீர்த்தேன். அதுக்கப்புறமாப் புளிக்காய்ச்சல் பண்ணலை. மிளகு குழம்பு பண்ணி வைச்சிருக்கேன். ஆகவே இப்போதைக்கு நோ புளிக்காய்ச்சல். இந்த வருஷம் பண்டிகை இல்லை என்பதால் சும்மா சாஸ்திரத்துக்கு ஏதேனும் ஒரு சாதம் மட்டும் பண்ணுவேன். நீங்க ஏன் இரு வருடங்களாகப் பண்ணவில்லை? பண்டிகை இருந்தது தானே?

      Delete
  3. பச்சைப் புளியஞ்சாதம் - எனக்கென்னவோ நன்றாக இருக்குமான்னு சந்தேகம்.

    அது சரி..திடீர் விருந்தாளிகள், புளியஞ்சாதம் பண்ணுங்கன்னு கேட்பாங்களா? வேற கலவை சாதமோ, இல்லை ஜீரா மிளகு ரசம், பொரித்த அப்பளமோ/உருளை கட் கறியோ பண்ணினால் சாப்பிட மாட்டாங்களா?

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கும் நெல்லையாரே! சாதம் கொதிக்கக் கொதிக்க இருக்கும்போது என் அம்மா, மாமியார் எல்லாம் புளி ஜலத்தைவிட்டு உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி மூடி வைத்துவிடுவார்கள். அடுப்பில் இருக்காது. அந்தச் சூட்டிலேயே பக்குவம் ஆகிவிடும். அரை மணி நேரத்துக்கப்புறமாத் தாளித்துக் கலப்பாங்க. சில சமாராதனைகளிலும் இப்படிப் பண்ணுவது உண்டு.நான் இம்மாதிரி நிறையப் பண்ணி இருக்கேன்.

      Delete
    2. என் அம்மா கூட செய்திருக்கிறார் என்று மங்கலான நினைவு!  சிலர் வீட்டில் செய்யும் வெந்தயக்குழம்பே புளிக்காய்ச்சல் வாசனை அடிக்கும்!

      Delete
    3. சிலருக்கு சாம்பார், ரசம்னு சாப்பிடப் பிடிக்காது. அவங்களுக்கு இம்மாதிரிப் பண்ணிப் போடலாம். வெந்தயக் குழம்பில் வெறும் வாணலியில் வறுத்த வெந்தயப் பொடி சேர்த்தால் புளிக்காய்ச்சல் வாசனை வரும்.

      Delete
  4. எங்க அம்மா செய்யும் புளிக்காய்ச்சல் (சாதத்தில் கலந்துகொள்ளலாம், நிறைய நாட்கள் புளிக்காய்ச்சலை வைத்துக்கொள்ளலாம்) ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். ஆனா பாருங்க... நான் இதெற்கெல்லாம் செய்முறை கேட்டு வைத்துக்கொள்ளவில்லை. கடந்த சில வருடங்களாக கேட்டால், நினைவில்லை என்று சொல்லிடறாங்க. ப்ச்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லையாரே, எனக்கெல்லாம் குறைந்தது 3 மாதங்கள் புளிக்காய்ச்சல் இருக்கும். கெட்டுப் போகாது. நீங்க உங்க அம்மா செய்முறையைக் கேட்டு வைச்சிருக்கணும். :(

      Delete
  5. ஆ....   புளியோதரை!   ஒரு வகையில் இருந்தாலே சுவைக்க ஆசை வரும்.  இத்தனை வகைகளா?   பெருமாள் கோவில் புளியோதரை வகை எல்லாம் நீங்கள் முன்னரே எங்கோ சொல்லிப் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், முன்னர் மீனாக்ஷி என்பவர் அடிக்கடி வந்து அநானியாகக் கருத்துச் சொல்லுவார். அப்பாதுரைக்குச் சொந்தம் என்பீர்களே! இப்போ வரதில்லை. அவங்க கேட்டதின் பேரில் இதெல்லாம் முன்பே எழுதி இருக்கேன்.

      Delete
  6. என் தாத்தா, கௌதமன் மாமாவின் அப்பா,  அந்தக் காலத்தில் ரெடிமேட் புளியோதரைப்பொடி தயார் செய்து விற்பனை செய்திருக்கிறார்.  அதன் கூட அப்பளம் போன்ற வகைகளும் விற்பனை செய்வார்.  அவரும் அவர் மாப்பிள்ளையும் (என் சித்தி கணவர்) அந்தக் காலத்தில் சென்னையில் அலைந்து திரிந்து விற்பனை செய்திருக்கிறார்கள்.  தாத்தாவின் பேச்சுக்கே செம விற்பனை ஆகும்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், நான் சொன்ன விழுதையே நன்கு கிளறி உதிராக எடுத்தால் புளியோதரைப் பொடி. ஆனால் என்னோட முகராசிக்கு அதெல்லாம் விற்பனை ஆகாது. சும்மாக் கொடுத்தாக் கூட வாங்கலாமானு யோசிப்பாங்க! :)))))

      Delete
    2. கீசா மேடம்.... ருசி மட்டும்தான் criteria. நான் முன்பே எழுதியிருப்பது போல, மாம்பலத்தில் குடந்தை மங்களம் மாமி என்ற பிராண்டில் (அந்த மாமி தயார் செய்வது), அவரது கணவர், தெருவின் ஓரத்தில் சிறிய தள்ளுவண்டியில் மோர்க்குழம்புப் பொடி, புளிக்காய்ச்சல், பலவித பொடிகள், ஊறுகாய்கள், அப்பளாம் வகைகள் விற்பனை செய்வார் (இப்போவும் இருக்கும்). குவாலிட்டிதான் முக்கியம். நல்லா இருந்ததுன்னா நிறைய வாடிக்கையாளர்கள் வருவாங்க.

      உங்களுக்கு அதில் ஆர்வம் இல்லை. அவ்ளவுதான். எனக்கு ஆர்வம் உண்டு ஆனால் செயல்படலை.

      Delete
    3. ஆர்வம் எனக்கு இல்லையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எங்க வீட்டில் ஒத்துக்க மாட்டாங்க! அவ்வளவு தான். இதே எங்க மாப்பிள்ளைக்கு என் சமையலை மார்க்கெடிங் பண்ணிப் பிரபலமாக்கும் ஆர்வம் நிறைய உண்டு. ஒரு முறை பெண்ணின் சிநேகிதி அவங்க வீட்டு விசேஷத்துக்குச் சமைத்துக் கொடுக்கும்படி கேட்டார். பெண்ணுக்குக் கோபம். மறுத்து விட்டாள். இங்கேன்னா அக்கம்பக்கம் பக்ஷணம் செய்து கொடுக்க, சமையலில் உதவி செய்யனு அம்பத்தூரில் இருந்தவரை போவேன். தீபாவளி சமயம் மைசூர்பாகுக்கும், கிருஷ்ண ஜயந்தி சமயம் முறுக்குச் சுத்தவும் ஏகப்பட்ட அழைப்பு வரும். இப்போ எங்க வீட்டிலேயே சுத்த முடியலை. கை எங்கோ இழுத்துக் கொண்டு போகிறது! :(

      Delete
  7. அன்பு கீதாமா, இன்னிக்கே தயார் செய்கிறேன்.
    அவ்வளவு ருசியா சொல்லி இருக்கிறீர்கள்.
    அடேங்கப்பா எத்தனை வெரைட்டி.

    மிளகு புளியோதரை அழகர் கோவிலில் சாப்பிட்டிருக்கிறேன்.
    இப்போது இங்கே பெருமாள் கோவிலில் கூட யாரும் வாங்குவதில்லை.
    அந்த அதிர்ஷ்டம் எல்லாம் எப்போது கிடைக்குமோ.

    ஆடி பதினெட்டு இந்த வருடம் கொண்டாட பகவான்
    அருளி இருக்கிறார்.
    உங்கள் வகையில் செய்து பார்க்கிறேன்.
    மிளகு புளியோதரையை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, உங்க புளிக்காய்ச்சல் கொதிப்பதை முகநூலில் பார்த்தேன். உடனே செய்ய ஆரம்பித்து விட்டீர்களே! எனக்கு இந்த முறைப் புளிக்காய்ச்சல் செய்யத் திருக்கண்ணபுரம் மடப்பள்ளியில் சொல்லிக் கொடுத்தார்கள். அதே போல் இன்னொரு பெருமாள் கோயிலிலும் இப்படித் தான் சொன்னார்கள்.

      Delete
  8. நல்ல செய்முறைக் குறிப்புகள்.

    ReplyDelete