எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, January 30, 2020

பாரம்பரியச் சமையல்--பச்சடி வகைகள்! தொடர்ச்சி!

பச்சடி வகைகளில் அடுத்து நெல்லி முள்ளியில் பண்ணும் பச்சடியைப் பார்ப்போம். நெல்லிக்காய் காய்ந்ததில் பண்ணுவார்கள் இந்தப் பச்சடி. நெல்லி முள்ளி என்றால் நெல்லிக்காய்களை மொத்தமாக வாங்கிக் கொட்டைகளை நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்வதாகும். நெல்லிக்காய் கிடைக்காத சமயங்களில் இதில் பச்சடி பண்ணலாம். இதற்குத் தேவையான பொருட்கள்.

காய்ந்த நெல்லி முள்ளி பத்துச் சுளைகள், தேங்காய் ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 4, கொத்துமல்லி பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, புளிப்பில்லாத தயிர் அல்லது கெட்டி மோர் ஒரு கிண்ணம், பெருங்காயப் பொடி அரை டீஸ்பூன், தாளிக்க எண்ணெய், கடுகு.

நெல்லி முள்ளியை எடுத்து நன்கு கழுவிக் கொண்டு வெந்நீரில் ஊற வைக்கவும். இதோடு பச்சை மிளகாய், தேங்காய், பச்சைக் கொத்துமல்லி சேர்த்து நன்கு நைசாக அரைத்துத் தயிர் அல்லது கெட்டி மோரில் கலக்கவும். தேவையான உப்புச் சேர்த்துக் கொண்டு ஒரு இரும்புக் கரண்டி அல்லது தாளிக்கும் கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு போட்டுத் தாளித்துக் கொண்டு பச்சடியில் ஊற்றிக் கலக்கவும். இதப் பெரும்பாலும் ஏகாதசி விரதம் இருப்பவர்கள் துவாதசி அன்று சாப்பிடுவார்கள். சாதாரண நாட்களிலும் சாப்பிடலாம்.

விளாம்பழப் பச்சடி. நல்ல கெட்டியான விளாம்பழம் வாங்கிக் குறைந்தது இரண்டு நாட்கள் வைக்கவும். உள்ளே உள்ள விழுது ஆட ஆரம்பிக்கையில் அதை உடைத்துக் கொள்ளவும். விளாம்பழம் விழுது ஒரு கிண்ணம் எனில் ஒரு கிண்ணத்திற்குக் குறையாமல் வெல்லம் தூள் செய்து எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்துக் கையால் மசித்தாலே நன்கு மசியும். இல்லை எனில் மிக்சி ஜாரில் போட்டு ஒரே சுற்றில் எடுத்து விடவும். உப்புச் சேர்க்கவும். பின்னர் நல்லெண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்துப் பச்சடியில் கலக்கவும். இது வத்தல் குழம்பு, துவையல் சாதம் ஆகியவற்றோடு சாப்பிட நன்றாக இருக்கும்.


பச்சைச் சுண்டைக்காய், பச்சை மணத்தக்காளிக்காய் ஆகியவற்றை இரண்டு நாட்கள் தயிரில் உப்புக் கலந்து ஊற வைத்து அதையும் தயிர்ப்பச்சடி போல் செய்து சாப்பிடலாம். இது எல்லோருக்கும் பிடிப்பதில்லை.  காரட், முட்டைக்கோஸ், சௌசௌ ஆகியவற்றையும் துருவலாகத் துருவிக் கொண்டு எண்ணெயில் வதக்கிக் கொண்டு தயிரில் கலந்து பச்சடி செய்யலாம். தயிரில் இன்னும் வெங்காயப் பச்சடியும் பண்ணலாம்.

வெங்காயத்தை மெலிதாக நீள வாக்கில் நறுக்கிக் கொண்டு கொஞ்சம் உப்புச் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். புளிக்காத தயிரில் உப்பு, பெருங்காயம், கறுப்பு உப்புக் கிடைத்தால் அது எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும் . ஊறிய வெங்காயத்தைத் தயிரில் சேர்த்துக் கலக்கவும். பச்சைக்கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தூவவும். இது வெஜிடபுள் சாதம், ஜீரக சாதம், புலவு, பட்டாணிப் புலவு, தக்காளி சாதம் ஆகியவற்றுடன் நன்றாக இருக்கும்.

பச்சடிகள் தொடரும்

2 comments:

  1. நெல்லி பச்சடி உடலுக்கு நல்லது.  எனவே அது அவ்வளவாக பிடிப்பதில்லை!!!  கடைசியில் சொல்லியிருக்கிறீர்களே வெங்காயப் பச்சடி...    அது பிடிக்கும்!

    ReplyDelete
  2. நெல்லி பச்சடி - சாப்பிட்டதுண்டு. எனக்கும் பிடிக்கும்.

    விளாம்பழ பச்சடி சாப்பிட்டதில்லை.

    ReplyDelete