எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, November 19, 2019

பாரம்பரியச் சமையலில் பருப்பு உசிலிகள்!

சேப்பங்கிழங்குக் கறியைச் சின்ன உருளைக்கிழங்குக் கறி மாதிரி முழுசாக வேகவிட்டுத் தோலை உரித்துக் கொண்டு உப்பு, காரம் சேர்த்து எண்ணெயில் வதக்கலாம். அதே போல் சிறுகிழங்கு, பெரு கிழங்கு ஆகியவற்றையும் வேக வைத்துத் தோலை உரித்துக் கொண்டு வதக்க வேண்டும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு எனில் வேகவிட்டுக் கொண்டும் பண்ணலாம். வேக விட்டால் வாழைக்காய்க் கறிக்குப் போடுவது போல் மி.வத்தல், கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, தேங்காய் வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். இல்லை எனில் அப்படியே வதக்கலாம். பிடிக்கலை என்பவர்கள் வாழைக்காய் வறுவல் மாதிரி எண்ணெயில் வறுத்து விடலாம்.

நூல்கோல், காரட், டர்னிப், போன்றவற்றை பீட்ரூட் கறி பண்ணுவது போல் வேக வைத்துக் கொண்டு வெங்காயம் சேர்த்துப் பச்சைமிளகாய், இஞ்சி, கொத்துமல்லி ஒன்றிரண்டாகச் சிதைத்துச் சேர்த்துப் பண்ணலாம். அல்லது வெங்காயம் போடாமல் பாசிப்பருப்பை ஊற வைத்துக் கொண்டு இவற்றைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வேகவிட்டுக் கொட்டிக்கொண்டு தேங்காய் சேர்த்துத் தேங்காய்க் கறி பண்ணலாம். முட்டைக்கோஸையும் பொடியாக நறுக்கிக் கொண்டு இம்மாதிரிப் பாசிப்பருப்புச் சேர்த்துத் தேங்காய் போட்டுக்கறி பண்ணலாம். இவை எல்லாவற்றுக்கும் தேங்காய் சேர்க்கும்போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் நன்றாக இருக்கும். தேங்காய் சேர்த்து வேகவிட்டுப் பண்ணும் கறி வகைகள் வயிற்றை எதுவும் செய்யாது. இவற்றில் முட்டைக்கோஸ் தவிர்த்து மற்றவற்றை வேகவைத்துக் கொண்டு வெங்காயம் சேர்த்தும் பண்ணலாம். முட்டைக்கோஸைப் பொடியாக நறுக்கிக் கொண்டு வெங்காயம் சேர்த்துக் குடமிளகாயோடு வதக்கலாம். குடமிளகாய் சேர்த்தால் காரப்பொடியோ வேறு காரமோ தேவை இல்லை. அல்லது ஒன்றிரண்டு பச்சை மிளகாய் போட்டுவிட்டு அரை டீஸ்பூன் சாம்பார்ப் பொடி போட்டும் வதக்கலாம். இவை எல்லாமே சமைக்கும்போது நமக்குத் தோன்றும் வகையில் மாற்றி மாற்றிச் செய்து கொள்ளலாம்.


அடுத்துப் பருப்பு உசிலி வகைகள். பருப்பு உசிலியைக் காய்கள் சேர்க்காமல் பருப்புக்களை மட்டும் ஊற வைத்து அரைத்து அப்படியே தாளிதத்தில் சேர்த்து நன்கு உசிலித்துச் சாப்பிடலாம். காய்கள் சேர்த்தும் பண்ணலாம். காய்கள் எனில் பருப்பு உசிலிக்கு எடுத்தது முதலில் வாழைப்பூ, பீன்ஸ், கொத்தவரை ஆகியவை தான். ஒரு சிலர் புடலை, அவரையில் பண்ணுகின்றனர். அதுவும் நன்றாகவே இருக்கும். இதைத் தவிர்த்து முருங்கைக்கீரை, அரைக்கீரை, முளைக்கீரை போன்ற கீரை வகைகளிலும் பண்ணலாம். பருப்பு உசிலிக்கு நன்கு நைசாக அரைத்துக் கொண்டு புடலங்காயில் அதை ஸ்டஃப் செய்து பின்னர் இட்லித் தட்டில் வேக வைத்துக் கொண்டு பண்ணுவார்கள்.பண்ணுவதற்குக் கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனாலும் எப்போதோ ஒரு முறை பண்ணலாம் காய் வகைகளிலோ, கீரை வகைகளிலோ ஒன்றைச் செய்கிறாப்போல் தான் மற்றதைச் செய்யணும். அதிகம் மாற்றம் இல்லை. நாளைக்குப் பார்ப்போமா?

ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. என்னால் தொடர்ந்து எழுத முடியலை. ஒரு சில பிரச்னைகள், மனக்கலக்கம் காரணமாகக் கணினிக்கு வந்தாலும் எழுதும் மனம் இல்லாமல் போனது. விரைவில் எல்லாம் சரியாகும் என நம்புகிறேன். எல்லாம் வல்ல ஆண்டவன் கிருபையால் சரியாகும்.

24 comments:

  1. சேப்பங்கிழங்கு அவ்வப்போது செய்கிறோம்.  ஒரே முறை (செய்யும் முறை).  சர்க்கரைவள்ளிக்கிழங்கு போட்டு சமைத்ததில்லை. சும்மா வேகவைத்து சாப்பிட்டிருக்கோம்.

    ReplyDelete
    Replies
    1. /ஒரே முறை (செய்யும் முறை). // - ஸ்ரீராம்... கிழங்கைப் பொறுத்தும் அது வேகவைக்கும் நேரத்தைப் பொறுத்தும் சில முறை அது நினைத்த மாதிரி வராமலிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?

      என் மாமி, வெந்த சேப்பங்கிழங்கை பொரித்து (எண்ணெயில்) பிறகு அதன்மீது மிளகு, மிளகாய் பொடி, உப்பு தூவி தருவார். அது ரொம்ப நல்லா இருக்கும். (இதுவரை செய்ததில்லை)

      Delete
    2. என் மாமியார் இப்படியும் செய்வார் நெ.த. கடலை மாவில் உப்புக்காரம் போட்டுப் பிரட்டி எடுத்துக்கொண்டு எண்ணெயில் பொரித்துப் போடுவார். இரண்டுமே நன்றாக இருக்கும்.

      Delete
  2. நூல்கோல் டர்னிப் வாங்கியதே இல்லை...!   எங்கள் அம்மா செய்து பள்ளிப்பருவத்தில் சாப்பிட்டிருக்கிறேன்.  முட்டைகோஸ் குடைமிளகாய் காம்பினேஷன் செய்ததில்லை.  முயற்சிக்கலாம்.  

    ReplyDelete
    Replies
    1. வடக்கே இருக்கையில் நூல்கோல், டர்னிப் நிறைய வாங்குவோம். நூல்கோல், பச்சைப்பட்டாணி போட்டுக் கூட்டு, டர்னிப், ராஜ்மா போட்டுக் கூட்டும் செய்து ஜீரா ரைஸ்(வட இந்திய முறை) செய்து அதனுடன் சாப்பிடுவோம்.

      Delete
  3. பருப்பு உசிலி காய்களோடு சேர்த்தே செய்திருக்கிறோம் எனினும், பருப்பு தயார் செய்யும்போது கொஞ்சம் எடுத்து தனியாகச் சாப்பிடுவது உண்டு.  முட்டைகோஸில் கூட பருப்பு உசிலி செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. எதில் பருப்புசிலி செய்தாலும் துவரம்பருப்பு மட்டும் போட்டுப் பண்ணினால் வரும் ருசி கடலைப்பருப்பு உசிலியில் வராது.

      Delete
  4. உங்கள் கவலைகள் சீக்கிரம் சரியாக பிரார்த்திக்கிறேன்.  மகன், மருமகள் உடல்நிலை சரியாகி இருக்கும் என்றும் நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிலைமை சீராகி வருகிறது. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      Delete
  5. பருப்பு உசிலி என்று தலைப்பிட்டு சேப்பங்கிழங்கு உருளைக்கிழங்கு என்று ஆரம்பித்ததைப் பார்த்து கதிகலங்கிவிட்டேன்.

    ReplyDelete
  6. //என்னால் தொடர்ந்து எழுத முடியலை. ஒரு சில பிரச்னைகள், மனக்கலக்கம் காரணமாகக் கணினிக்கு வந்தாலும் எழுதும் மனம் இல்லாமல் போனது// - எல்லாம் நல்லாவே நடக்கும் கீசா மேடம். ஒருவேளை என்னோட பிரச்சனைகளை உங்கள்ட சொன்னால், உங்க பிரச்சனைகள் சின்னதாகத் தெரியுமோ?

    நான் ப்ரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவரவர் நிலையில் அவரவர் பிரச்னைகள் பெரியவையே! உங்கள் பிரச்னைகள் தீரப் பிரார்த்திக்கிறேன்

      Delete
  7. பருப்புசிலி என்ற தலைப்பைப் பார்த்ததும், இந்த ஞாயிறு, என் மனைவியின் அக்கா வீட்டில் சாப்பிட்ட கொத்தவரை பருப்புசிலி என் நினைவுக்கு சட்னு வந்தது. மிக மிக அருமையாகச் செய்திருந்தார். அதுபோன்ற பருப்புசிலி சமீப வருடங்களாக சாப்பிட்டதே இல்லை (நளபாகச் சக்ரவர்த்தி-மெழுகுவர்த்தி இல்லை நெல்லைத்தமிழன் செய்முறை உட்பட ஹா ஹா). ஆனா அவங்க, துவரம்பருப்பு மட்டும் உபயோகித்தேன் என்றார், நல்லா எண்ணெய் விட்டு உசிலித்து அப்புறம் வெந்த காயைச் சேர்த்தாராம். நான் பீன்ஸில் அதனைச் செய்ய நினைத்திருக்கிறேன், நேரம் இருந்தால்.

    ReplyDelete
    Replies
    1. அதே, அதே! மேலே ஸ்ரீராமுக்குச் சொல்லி இருக்கேன்.

      Delete
  8. ஊர்ல அம்மா செய்யும்போது சேப்பங்கிழங்கு குழைந்து பார்த்ததேயில்லை .ஆனா இங்கே நான் வேகவைச்சாலே பேஸ்ட் ஆகிட்டிருந்தது .பிறகுதான் ஸ்டிம் செய்து சமைக்க ஆரம்பிச்சேன் ,நான் சே.கிழங்கை தனியா செய்யாமால் அதுகூட வாழைக்காய் சேனை இவற்றையும்  சேர்த்து பொரிப்பேன் மெழுகுப்பிரட்டி மாதிரி ..மகளுக்கு ரொம்ப பிடிக்கும் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், பின்னால் பதில் சொல்றேன்.

      Delete
    2. சேப்பங்கிழங்கோட வாழைக்காய், சேனையா? விட்டால் வெண்டை கத்தரிலாம் போட்டுடுவீங்க போலிருக்கே?

      இப்படித்தான் கீசா மேடம் கத்தரி, உருளை கறி என்றதைப் படித்து இது என்ன மாதிரியான காம்பினேஷன்னு மீ மயங்கிக் கிடக்கேன்

      Delete
    3. ஏஞ்சல், சேப்பங்கிழங்கெல்லாம் குக்கரில் வைத்து வெயிட் போடாமல் வேக வைத்தால் நன்றாக வரும். தோல் உரித்த பின்னர் பெரிய கிழங்கைத் துண்டம் போடும்போதும் கைகளில் ஒட்டாது. சேம்போடு, வாழைக்காய், சேனை சேர்த்துத் தனியாக அவியல், எரிசேரி மாதிரிப் பண்ணிப் பார்த்திருக்கேன். மெழுக்குவரட்டியும் நன்றாகவே இருக்கும்.

      Delete
    4. வெண்டைக்காயும், கத்திரிக்காயும் சேர்த்துக் கறி வதக்குவோம் எங்க வீட்டிலே. அதே போல் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்த்த கறி சின்ன வயசில் இருந்தே சாப்பிட்டு வருகிறேன். இங்கே எங்க பெண்,பையர் எல்லாம் அவரைக்காய், கொத்தவரைக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றோடு உருளைக்கிழங்கையும் சேர்த்துச் சப்பாத்திக்குத்தொட்டுக்கக் கறி செய்வார்கள்.

      Delete
  9. கீதாக்கா ..சீக்கிரம் மனகவலைகள் பிரச்சினைகளெல்லாம்  தீர  பிரார்த்திக்கிறேன் ..சிலநேரம் வெதரும் ரொம்பவே நம்மை அழுத்திடும் . 

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல், சீதோஷ்ணம் மட்டும் காரணம் இல்லை. அசாதாரணமான சூழ்நிலைகள். மெல்ல மெல்லச் சரியாகிறது.

      Delete
  10. யூ டியூபில் வாழ்க வளமுடன் அப்டீன்னு ஒருமாமி ஆரம்பிப்பாங்க சமையல் குறிப்பை ..பேர் கவனிச்சதில்ல அதனால் வாழ்க வளமுடன் மாமின்னு வச்சிட்டேன் :) அவங்க ரெசிப்பி இப்படி வேகவைத்து அப்புறம் தனி கடாயில் எண்ணையில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி எடுத்தாங்க ஆனா ஆயில் கூட என்பதால் எப்பவாச்சும்தான் செய்யணும்னும் சொன்னாங்க 

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பொறுத்தவரை இந்த முறையில் எண்ணெய் குறைவாகச் செலவு ஆகும். ஆகவே வாரம் ஒரு முறையானும் பண்ணிக்கலாம்.

      Delete