எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, June 30, 2016

உணவே மருந்து! சுண்டைக்காய்!

சுண்டைக்காயை வற்றல் போடுவதற்குச் சாதாரணமாகக் கொஞ்சம் புளித்த மோரைத் தான் பயன்படுத்திப் பார்த்திருப்பீர்கள். ஆனால் மாவடு போட்டபின்னர் மாவடு செலவு ஆனாலும் அதன் தண்ணீர் இருக்கும். அந்த மாவடு ஜலத்தில் சுண்டையை வற்றல் போட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள். சுண்டையைக் காம்பு நீக்கி முனையில் கீறி விட்டு மாவடு ஜலத்தில் போடவேண்டும். உப்பெல்லாம் சேர்க்கவே வேண்டாம். அதில் இருக்கும் உப்பே போதும். இரண்டு, மூன்று நாட்கள் நன்கு ஊறியதும் வெயிலில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும்.

சுண்டைக்காய் வற்றல் குழம்பில் சிலர் வற்றலை வெந்நீரில் நனைத்துச் சேர்க்கின்றனர். இது வற்றலில் இருக்கும் உப்பை மட்டுமே அகற்றும். ஆனால் வற்றல் குழம்பில் சுவையாக இருக்காது. ஆகவே சுண்டைக்காய் வற்றல் குழம்பு செய்யும் முன்னர் வற்றலை நல்லெண்ணெயில் வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். குழம்புக்குத் தாளிக்க வேண்டியதெல்லாம் தாளித்துக் குழம்புப்பொடியும் உப்பும் சேர்க்கையில் நினைவாக உப்பைக் குறைத்துச் சேர்க்கவேண்டும். குழம்பு கொதி வந்த பின்னர் வறுத்துத் தனியாக வைத்திருக்கும் வற்றலைச் சேர்த்து ஒரு கொதி விட்ட பின்னர் இறக்கி வைக்கலாம். பொதுவாக வற்றல் குழம்பு ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. ரொம்ப நீர்க்கவும் இருக்கக் கூடாது. நிதானமாக இருக்க வேண்டும்.

சுண்டைக்காயைப் பச்சையாகப் போட்டு சாம்பார் செய்யலாம். சாம்பாரில்  பச்சைச் சுண்டைக்காயை வதக்கிச் சேர்த்து வறுத்து அரைத்து விட்டால் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும். அதே போல் சுண்டைக்காயை வதக்கி வேக விட்டுக் கொண்டு தேங்காய் சேர்த்துக் கொஞ்சம் போல் வெல்லம் போட்டுக் கறியும் செய்யலாம். வாரம் மூன்று நாட்களாவது சுண்டைக்காயை உணவில் சேர்க்க வேண்டும். வயிற்றுப் புண்கள் ஆறும். நீரிழிவினால் ஏற்படும் மயக்கம், படபடப்பு போன்றவைக்கு நல்லது. மலச்சிக்கல் இருக்காது. உடல் சோர்வையும் அகற்றும். ரத்தம் சுத்தம் அடைந்து சிறுநீரகம் சரிவர இயங்கி சிறுநீரைப் பெருக்கி விடும் குணம் படைத்தது சுண்டைக்காய்.

3 comments:

  1. சுண்டைக்காய் இங்கே கிடைப்பதில்லை. வற்றல் ஊரிலிருந்து எடுத்து வந்ததைத் தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இங்கே சுண்டைக்காய் கிடைக்கும் நாட்களில் நிறைய வாங்கிப் போட்டு வைச்சுக்கணும். :) எங்க வீட்டில் சுண்டைக்காய் அநேகமாய்த் தினசரி உணவில் ஒன்று. :)

      Delete
  2. சுண்டைக்காயை மாவடு நீரில் ஊறவைத்து செய்வது மிக அருமை. நல்ல டிப்ஸ்

    ReplyDelete