
இதுக்கு முதலில் தேவையானது பாகற்காய் தாங்க. பாகல்காய் ஒரு கால் கிலோ எடுத்துக்கோங்க. நல்லா வில்லை, வில்லையா நறுக்கணும். வில்லைனதும் ராமரோட வில் நினைவில் வந்தால் நான் பொறுப்பில்லை. வட்ட, வட்டமாய் நறுக்கணும். இந்தப் பாகல்காயே இரண்டு, மூன்று விதம் இருக்கு. பொதுவா எல்லாரும் பெரிய பாகல் காய் தான் வாங்குவாங்க. ஆனால் மெது பாகல்காய்/மிதி பாகல் காய்னு ஒண்ணு இருக்கு. மிதி பாகல்காய்னதும் ம.பா.வை மிதிக்கிறதோனு நினைக்கவேண்டாம். வேலி பாகல்காய்னு ஒண்ணு இருக்கு. சின்ன பாகல்காய்னால் அதைக் காம்பு மட்டும் நறுக்கி இரண்டாய்ப் பிளந்து வச்சுக்கணும். வேலி பாகல் காயிலேயே மீடியம் சைஸா இருந்தால் வில்லை போட்டுக்கலாம். வில்லையும் போட்டுக்கலாம். உங்க இஷ்டம்.
நறுக்கின பாகல் காயில் கொஞ்சம் தயிர், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொஞ்ச நேரம் வைக்கவும். ஒரு மணி நேரம் வைக்கலாம். அதுக்குள்ளே நீங்க இரண்டு மெகா சீரியலும் பார்த்துக்கலாம். மெகா சீரியல் முடிஞ்சதும் ம.பா. இருந்தார்னா நல்லது. இல்லாட்டி நீங்களே தான் சமைச்சாகணும். து.பருப்பு ஒரு சின்ன கிண்ணம் எடுத்துக்கணும். குக்கரிலேயோ, கல்சட்டியிலேயோ து.பருப்பை நல்லாக் குழைய வேக வச்சுக்கணும். முதல்நாளே மொச்சை, கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவற்றில் எது பிடிக்குதோ அதை ஊற வைச்சுக்கலாம். அதையும் பருப்போடு சேர்த்து வேக வைச்சுக்கலாம். இது எல்லாம் தனியாத் தெரியணுமானால் அப்புறமாய்ப் போடலாம். உங்களுக்குப் பிடிக்காது ம.பா.வுக்கு மட்டுமே பிடிக்கும்னா போடாமலும் இருக்கலாம்.
இப்போ பாகல் காய் தயார். து.பருப்பு தயார். கொ.கடலை., மொச்சை தயார். இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ மசாலா சாமான்கள் வறுத்துக்கணும். மசாலான்னாலே எல்லாரும் கரம் மசாலா ஒண்ணுதான் நினைச்சுக்கறாங்க. நாம போடற உப்பு, காரமே மசாலாவோட சேர்த்தி தான். டூ இல்லை. நீங்க தயார் செய்யப் போற பிட்லை 4 பேர் சாப்பிடலாம்னு வச்சுக்குங்க. (பின்னே? யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்னு எல்லாருக்கும் கொடுக்கவேண்டாமா?) ஒரு சின்ன எலுமிச்சம்பழ அளவுப் புளி, 4ல் இருந்து 6 மி.வத்தல். (காரம் அவங்க, அவங்க ருசிக்குத் தகுந்தாற்போல்) ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, (இது போடாமலும் செய்யலாம்) கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன், உ.பருப்பு ஒரு ஸ்பூன், 5 அல்லது 6 மிளகு, ஒரு சின்னக் கட்டிப் பெருங்காயம், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் போன்றவற்றை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வறுத்துக் கொள்ளணும்.
நல்லா சிவப்பா, உங்களுக்குக் கோபம் வந்தால் மூஞ்சி எப்படிச் சிவக்குமோ அவ்வளவு சிவப்பா வறுத்துக்கலாம். வறுத்ததை ஆற விடவும். அதே வாணலியில் தயிர், உப்பு, ம.தூள் சேர்த்து ஊற வைத்த பாகல்காயைப் போட்டுச் சற்றே வறுக்கவும். தயிரை எல்லாம் பிழிஞ்சு எடுத்துட்டுத் தான். ம.பா.வை வேலை வாங்கப் பிழிஞ்சு எடுக்க மாட்டோமா? அல்லது மாமியாரோ, நாத்தனாரோ அகப்பட்டால் பிழிஞ்சு எடுக்க மாட்டோமா அதே மாதிரித் தான். மிச்சம் இருக்கும் தயிரை ஜூஸுனு சொல்லி ம.பா.கிட்டேயே கொடுக்கலாம் வீணடிக்காமல். நம்ம ம.பா. கிட்டே இதெல்லாம் பலிக்கலை, தோட்டத்துக் கறிவேப்பிலை தான் சாப்பிட்டுட்டு இருக்கு அந்த மாதிரி பிழிஞ்சதும் மிச்சம் இருக்கும் தயிரை எல்லாம்.

டிஸ்கி: படங்கள் உதவி: கூகிளார். திடீர்னு பாகற்காய் பிட்லை படம் போடணும்னா என்ன செய்யறது? அதான் கூகிளாரைக் கேட்டதும் கொடுத்துட்டார். நன்றிங்கோ!