எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, November 30, 2015

உணவே மருந்து 2 சுண்டைக்காய்!

அது என்ன சுண்டைக்காய் விஷயம் எனச் சர்வ சாதாரணமாகச் சொல்வோம். சுண்டைக்காய் கால் பணம்; சுமைகூலி முக்கால் பணம் என்னும் பழமொழியும் உண்டு. இப்படி எல்லாம் குறைவாகப் பேசப்படும் சுண்டைக்காய் தான் நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் நன்மையைத் தருகிறது. சுண்டைக்காய் மலைகளில் வளருவதையே மருந்தாகப் பயன்படுத்துவார்கள். வீடுகளில் செடிகளில்/சிறிய மரமாகவும் இருக்கும், காய்க்கும் சுண்டைக்காயை நாட்டுச் சுண்டைக்காய் என்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சுண்டைக்காயைப் பொதுவாக வற்றலாகச் செய்தே சாப்பிட்டு வருகிறோம்.

Image result for சுண்டைக்காய் பயன்கள்

படம் நன்றி கூகிளார்

ஆனால் நாட்டுச் சுண்டைக்காயைப் பருப்புப் போட்டுக் கறியும் செய்யலாம். சாம்பார் வைக்கலாம், வற்றல் குழம்பும் செய்யலாம். வைடமின் சி சத்து அதிகம் உள்ள இந்தச் சுண்டைக்காயில் பொதுவாக மலைச்சுண்டைக்காய் என்னும் கசப்புள்ள சுண்டைக்காயிலேயே வற்றல் போடுவோம். பச்சைச் சுண்டைக்காய் ஒரு கிலோ வாங்கிச் சுத்தம் செய்து காம்புகளை ஓரளவுக்கு நீக்கி லேசாகக் கீறிக் கொண்டு அரை லிட்டர் தயிரில் உப்புச் சேர்த்து ஊற வைக்க வேண்டும். ஒரு வாரமாவது ஊற வேண்டும். ஆனால் தினமும் கிளறி விட வேண்டும். இல்லை எனில் பூஞ்சைக்காளான் பிடிக்கும். பின்னர் வெளியே எடுத்து தயிர் இல்லாமல் ஒரு தட்டில் பரவலாகப் போட்டு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாவடு ஊறுகாய் போட்டு மீதம் இருக்கும் ஜலத்திலும் சுண்டைக்காயை ஊறப் போட்டு வற்றல் செய்யலாம். இதன் ருசி அபாரமாக இருக்கும்.

Image result for சுண்டைக்காய் பயன்கள்

படம் நன்றி கூகிளார்

தயிரிலோ, மாவடு ஜலத்திலோ சுண்டைக்காய் ஊறும்போதே அவற்றைச் சமைக்க எடுத்துக் கொள்ளலாம். இனி சுண்டைக்காயின் பலன்களைப்பார்ப்போமா?

ரத்த அழுத்தத்தைச்சீராக இருக்கவைக்க உதவுகிறது.  இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகையைக் கட்டுப்படுத்தும். உடல்நலமில்லாத சமயத்தில் கூட தைரியமாகச் சுண்டைக்காயைச் சாப்பிடுவதால் வயிற்றுக்கோளாறுகள் நீங்கும். வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும் பிரசவம் ஆன பெண்களுக்குக் கொடுக்கப்படும் அங்காயப்பொடி எனும் ஐங்காயப் பொடியில் அதிகம் சுண்டைக்காயே சேர்க்கப்படும். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் என்றும் ஜீரண சக்தியைத் தூண்டி, வயிற்றில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றும் என்றும் சொல்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

நெஞ்சில் உள்ள கபத்தை அகற்றும் குணம் கொண்ட சுண்டைக்காய்ச் செடியின் வேரை உலர்த்திச் சூரணம் செய்துத் தேங்காய்ச் சிரட்டையில்(கொட்டாங்கச்சி) வைத்துக் கொண்டு ஒற்றைத் தலைவலிக்காரர்கள் இந்தப்பொடியால் ஒரு சிட்டிகை எடுத்துக் கொண்டு நசியமிட்டால் தலைவலி நீங்கும் என்றும் ஜலதோஷத்தினாலும் மூக்கடைப்பினாலும் அவதிப்படுபவர்கள் சுகம்பெறுவார்கள் என்றும் சொல்கின்றனர்.

வயிறு அஜீரணத்திற்கும் சீதக்கழிச்சலுக்கும், ஜீரணமாகாமல் கழிந்தாலும் சுண்டைக்காய், வெந்தயம், மாதுளை ஓடு, நெல்லி வற்றல், ஓமம், கருகப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு இவற்றைச் சமமாக எடுத்துக் கொண்டு தனித்தனியாக இளவறுப்பாக வறுத்துக் கொண்டு பொடி செய்து தினசரி ஒரு தேக்கரண்டி பொடியை மோருடன் கலந்து சாப்பிடலாம். இது நான் நெல்லிவற்றல், மாதுளை ஓடு சேர்க்காமலும் செய்து சாப்பிட்டிருக்கிறேன். நல்ல பலன் தரும். வாயுவையும் நீக்கும். அதே போல் சுண்டைக்காயை விளக்கெண்ணெயுடன் கலந்து வறுத்து மிளகு, சீரகம், வெந்தயம், கருகப்பிலையையும் வறுத்துப் பொடி செய்து சாதத்தோடு கலந்து சாப்பிடுவார்கள். விளக்கெண்ணெய் வாசனை பிடிக்காததால் பலருக்கும் இது கொஞ்சம் பிடிக்காது தான். சும்மா ஒரு கைப்பிடி சூடான  சாதத்தில் இந்தப்பொடியைக் கொஞ்சம் போல் போட்டு ஒரு வாய் சாப்பிட்டு வந்தாலே போதும்

சுண்டைக்காய் வேரோடு, இலுப்பைப் பிண்ணாக்கு(இப்போக் கிடைக்குமானு தெரியலை)தும்பை வேர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு காய வைத்துப் பொடி செய்து கொண்டு நசியமிட்டு வந்தால் வாத சம்பந்தமான நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். இப்போது அங்காயப் பொடி செய்முறை பார்க்கலாம்,

தேவையான பொருட்கள்

வேப்பம்பூ சுத்தம் செய்யப்பட்டது ஒரு கிண்ணம்

சுண்டைக்காய் வற்றல் ஒன்று அல்லது இரண்டு கிண்ணம்

இந்துப்பு அல்லது சாதாரண உப்பு தேவைக்கு

பெருங்காயம் பவுடர் இரண்டு டீஸ்பூன் அல்லது கட்டி சிறிதளவு

ஓமம்  ஒரு டேபிள் ஸ்பூன்

கருகப்பிலை

மிளகாய் வற்றல் இரண்டு அல்லது மூன்று

மிளகு, சீரகம் தலா இரண்டு டீஸ்பூன்

சுக்கு ஒரு பெரிய துண்டு

தனியா(விருப்பப்பட்டால்)

எல்லாவற்றையும் வெறும் வாணலியில் (உப்பு உட்பட) வறுத்துக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்து கொள்ளவும். சாப்பிடும்போது கொஞ்சம் போல் சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டுக் கொண்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொஞ்சம் சாப்பிட்டதும் பின்னர் சாம்பாரோ, குழம்போ, ரசமோ சாப்பிட்டுக்கொள்ளலாம். இதை அஜீரணம் ஏற்படும்போதும் வாயில் ருசியின்மை உணர்தல் போன்ற சமயங்களில் சூடான சாதத்துடன் சாப்பிடலாம். அல்லது மோரில் கலந்து குடிக்கலாம். 

Sunday, November 29, 2015

உணவே மருந்து! 1 முருங்கை!

சாப்பாட்டுப் பதிவுகளை எல்லாம் "எண்ணங்கள்" பக்கமே கொண்டுபோனதால் இந்தப் பக்கத்துக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. இனி இங்கேயும் கவனம் வைக்கணும்னு நினைக்கிறேன். மருந்தாகப் பயன்படும் ஒரு சில காய்கள், இலைகள் போன்றவற்றின் பலன்கள், சமைக்கும் முறை, ஆகியவற்றைச் சொல்லலாம் என்று எண்ணம். முதலில் முருங்கைக் காயைக் குறித்துப் பார்ப்போம்.
Image result for முருங்கைக்காய்
Image result for முருங்கைக்காய்

முருங்கைக்காய், இலை, பூ அனைத்துமே மருந்து தான். பூவை நெய்யில் வதக்கி திராக்ஷைப் பழம், சோம்பும் சேர்த்துப் பிள்ளைத் தாய்ச்சிகளுக்குக் கஷாயம் வைத்துக் கொடுப்பார்கள்.இது குடித்தால் பொய் வலி இருந்தால் அது சரியாகும். உண்மையான வலி என்றால் வலி நீடித்துச் சிக்கல்களைப்போக்கிப் பிரசவம் நன்கு சுமுகமாக நடக்க வழி வகுக்கும்!
Image result for முருங்கைப்பூ மருத்துவ குணங்கள்
முருங்கைப் பூவைப் பாசிப்பருப்புச் சேர்த்துத் தேங்காய், சீரகம் அரைத்துவிட்டுக் கூட்டுச் செய்யலாம்.  பொரிச்ச குழம்பு செய்யலாம். முருங்கைக் கீரையையும் சமைக்கலாம். முருங்கைக்கீரைப்பருப்பு உசிலி செய்யலாம். வெங்காயம் சேர்த்துப் பாசிப்பருப்புப் போட்டுக் கறி செய்யலாம். வெங்காயம் போடாமலும் பாசிப்பருப்பு, தேங்காய் போட்டுக் கறி செய்யலாம். முருங்கைக்கீரையையும் பொரிச்ச குழம்பு, புளி விட்ட குழம்பு செய்யலாம். அடைக்குப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

முருங்கைக்காயையும் சாம்பார், பொடியாக நறுக்கி வேகவைத்து விழுதைச் சுரண்டிக் கொண்டு அதில் கூட்டு, கறி செய்யலாம். முருங்கைக்காயையும் பொரிச்ச குழம்பு செய்யலாம்.

முருங்கை சாப்பிடுவதின் பலன்கள்: சிறுநீர் எளிதாகப் பிரியும். வலியைப் போக்கும். முருங்கைப் பூ பெண்களின் மாதவிடாய்ச் சிக்கலைத் தீர்க்கும். உடலை உரமாக்கும். முருங்கை இலைச்சாறோடு எலுமிச்சைச்சாறையும் சேர்த்து முகத்தில் பூசினால் பருக்கள் மறையும். தலைவலிக்கு முருங்கை இலையோடு மிளகையும் வைத்து இடித்துச் சாறு எடுத்துப் பத்துப் போடத் தலைவலி நீங்கும்.

வீக்கம் உள்ள இடங்களில் முருங்கை இலைச்சாறைப் பூச வீக்கம் குறையும். எல்லாவற்றையும் விட நாய்க்கடிக்குச் சிறந்த மருந்து முருங்கை இலைச்சாறு. 2 பூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு முருங்கை இலையோடு சேர்த்து அரைத்து உள்ளுக்கும் கொடுத்துக் கடிவாயிலும் பூசினால் புண் ஆறி நாய்க்கடியினால் ஏற்பட்ட நஞ்சு முறியும்.

வளரும் குழந்தைகளுக்கு சாறோடு பால் சேர்த்துக் கொடுக்கலாம். வயிற்று வலி, வயிற்றுப் புழுக்கள் ஆகியனவற்றுக்கு முருங்கை இலையைக் கிள்ளி எடுத்தபின்னர் கிடைக்கும் ஈர்க்கு,கருகப்பிலை ஈர்க்கு இரண்டையும் சேர்த்துக் குடிக்கும் நீரில் போட்டு ஊற வைத்துக் குடிக்கலாம். ஆண்களுக்கு முருங்கைப் பூ தாது விருத்தியைப் பெருக்கும். மலட்டுத் தன்மை நீங்கும். கீல் வாதங்களுக்கும், அது குறித்த வலிகளுக்கும் முருங்கை விதை எண்ணெயோடு கடலை எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம். முருங்கை மரத்தின் பட்டையும் உபயோகமானதே!

முருங்கைப்பட்டையை இடித்துச் சாறு எடுத்துச் சமமாகப் பால் கலந்து நெற்றியில் பத்துப் போட்டால் தலைவலி நீங்கும். வேரைக் கஷாயமாகச் செய்து குடித்தால் கல்லீரல், மண்ணீரல் வீக்கங்களுக்கு நல்ல மருந்து. வேரை இடித்த சாறோடு பால் கலந்து அருந்தினால் இரைப்பு, கீல் வாதம் போன்றவை நீங்கி ஜீரண சக்தியும் அதிகம் ஆகும்.