எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, January 22, 2014

ஜீரகம், மிளகு வறுத்து அரைத்த ரசம்!

பொதுவாய் இம்மாதிரியான ரசங்களே பத்திய உணவு வகையைச் சேர்ந்தவை என்றாலும் இந்த ரசம் குறிப்பாக பேதி மருந்து உட்கொள்ளும் நாட்களில் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கொடுப்பார்கள்.  முன்னெல்லாம் விளக்கெண்ணெய் கொடுத்து குடலைச் சுத்தம் செய்து வந்த நாட்கள் உண்டு.  காலையிலே விளக்கெண்ணெய் கொடுத்ததும் ஒரு மணி நேரம் கழிச்சுக் காஃபி கிடைக்காது.  மாறாக இந்த ரசம் தான் சூடாகக் குடிக்கக் கொடுப்பாங்க. மதியம் பனிரண்டு மணிக்குள்ளாகக் கழிவுகள் வயிற்றை விட்டு வெளியேறியதும் மீண்டும் இந்த ரசம் விட்டுக் கொஞ்சம் போல் குழைவான சாதம் போட்டுக் கரைத்துக் கொடுத்துக் குடிக்கச் சொல்வாங்க.  அதுக்கப்புறமா மூணு மணி அளவில் வெயிலில் வைத்து எடுத்த நீரில் குளிக்கச் சொல்லிட்டு கெட்டியாக மோர் சாதம், அல்லது தயிர் சாதம் போடுவாங்க.  தொட்டுக்க மூச்ச்ச்ச்!! அப்போ அந்த சாதமே தேவாமிர்தமா இருக்கும்.  ராத்திரிக்கு 2 அல்லது மூணு இட்லிகள் அதே தயிரோடு சாப்பிடணும்.  மறுநாளைக்கும் உடனடியாக வெங்காய சாம்பாரோடு, உ.கி.கறி வெளுத்துக் கட்ட முடியாது.  எளிமையான சாப்பாடாக பருப்பே இல்லாமல் சமைச்சிருப்பாங்க.  அதைத் தான் சாப்பிடணும்.  அதுக்கப்புறமாத் தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பருப்பு சேர்த்துப் பின்னர் எண்ணெயில் வதக்கின காய்கள், தேங்காய் சேர்த்தவை எனச் சேர்ப்பார்கள்.  இப்போல்லாம் பேதி மருந்துன்னா என்னன்னே பலருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த ரசம் வைச்சுக் குடிக்கலாம்.  கொஞ்சம் வயிறு சொன்னபடி கேட்டுக்கும். :)))



நான்கு பேர்களுக்கான பொருட்கள்:

சின்ன எலுமிச்சை அளவு புளி(பழைய புளி நல்லது. அதையும் தணலில்(ஹிஹிஹி, கரி அடுப்பில் கரியைப் போட்டுப் பிடிக்க வைச்சால் வருமே அதுக்குப் பேர் தணல்) சுட்டுக்கலாம்.  இல்லையா இரும்புச் சட்டியில் போட்டுப் பிரட்டிக்குங்க.  நீரில் ஊற வைச்சுக் கரைச்சு எடுத்துக்குங்க.  இரண்டு கிண்ணம் தேவை.  ரசம் குடிக்கக் கொடுக்கணுமே, நிறைய வேண்டும்.

மிளகாய் வற்றல் 2

மிளகு இரண்டு டீஸ்பூன்

ஜீரகம் இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை ஒருகைப்பிடி

பெருங்காயம்(தேவையானால், ஒரு சிலர் ஜீரகம் போட்டால் பெருங்காயம் போட மாட்டாங்க)

தக்காளி (தேவையானால்) சின்னது ஒண்ணு

மஞ்சள் பொடி

உப்பு தேவைக்கு

தாளிக்கக் கடுகு, கருகப்பிலை

வறுக்க தாளிக்க எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

முதலில் மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, ஜீரகம் போன்றவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.  அதை எடுத்து ஆற வைத்துவிட்டு அந்தச் சட்டியிலேயே கருகப்பிலையைப் போட்டுப் பிரட்டிக் கொள்ளவும். அதையும் ஆற வைக்கவும்.

கரைச்சு வைச்ச புளி ஜலத்தைப் பாத்திரத்தில் விட்டுக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துத் தேவையானால் தக்காளியையும் போட்டுக் கொதிக்க விடவும்.  ஆற வைத்த வறுத்த சாமான்களை நன்கு அரைக்கவும்.  ரொம்பக் கொரகொரப்பும் வேண்டாம்.  அதே சமயம் நைசாகவும் இருக்க வேண்டாம்.  அரைத்த விழுதில் இரண்டு கிண்ணம் நீரை விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.  புளி வாசனை போகக் கொதித்த ரசத்தில் இந்த விழுது கரைத்த நீரை விட்டு விளாவவும்.  மேலே நுரைத்து வருகையில் அடுப்பை அணைத்துவிட்டு நெய்யில் அல்லது எண்ணெயில் கடுகு தாளித்துக் கருகப்பிலை போடவும். ரசம் ருசி பார்த்துக் கொண்டு தேவையானால் ரொம்பக் கெட்டியாக இருந்தால் நீர் இன்னும் கொஞ்சம் சேர்த்து விளாவலாம்.  ஆனால் பெரும்பாலும் இந்த அளவில் ரசம் கெட்டியாக வராது.  நீர்க்கவே வரும்.

இந்த ரசம் இன்னிக்கு வைச்சதைப் படம் எடுத்துப் போட்டிருக்கேன். (25-01-14)


10 comments:

  1. எழுதியதே தேவாமிர்தமா இருக்கு...!

    குடிக்கும் ரசத்தை செய்து விடுகிறோம் இன்றே...! நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, அந்தப் புளிஜலம் கொதிக்கிறச்சே நாலைந்து பூண்டுப்பல்ல்லை நெய்யில் வதக்கிச் சேர்க்கச் சொல்லுங்க. அப்புறமா அரைச்சதை விளாவிக் கொண்டு கொதி வந்ததும் இறக்கிப் பூண்டையும் சேர்த்துக் கடிச்சுச் சாப்பிட்டால், நல்லாவே இருக்கும். இப்போல்லாம் பூண்டு ஒத்துக்கறதே இல்லை. சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் வருது. :))) இந்த ரசம் வைச்சால் கட்டாயம் பூண்டு போடுனு என் மாமனார் சொல்வார். பூண்டை நிறுத்தியே பல வருடங்கள் ஆகின்றன.

      Delete
  2. இங்கத்திய க்ளைமேட்டுக்கு ஜலதோஷம்.. வயிறும் சரியில்ல.. சொல்லி வச்ச மாதிரி வருது பதிவு!!.. ரொம்ப ரொம்ப நன்றிம்மா..

    ReplyDelete
    Replies
    1. வைச்சுச் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க பார்வதி. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்ல தீர்வு. இதோடு கண்டந்திப்பிலியும் வறுத்துச் சேர்க்கலாம். :)))) (பூண்டு சேர்க்காமல்)

      Delete
  3. இப்படி தனியாக வறுத்து அரைத்து இதுவரை செய்ததில்லை என்பதால் நாளை மறுநாள் இப்படிச் செய்து பார்த்து விடுவோம்! இதுவரை ஏற்கெனவே அரைத்து ரெடியாக வைத்திருக்கும் பொடியைத் தூவித்தான் செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. எண்ணெய்க் குளியல் அன்னிக்கு இந்த ரசம் வைச்சுடுவேன் ஶ்ரீராம். இதமா இருக்கும். :))))

      Delete
  4. என்ன ரசம் வாரமா? நவரசமா அசத்தறிங்க..! நான் ரசமே சாப்பிட மாட்டேன்... எங்க மாமியாருக்கோ ரசம் இல்லைன்னா சாப்பாடு பிடிக்காது... ரசப்பொடி வச்சி சமாளிக்கிறேன்... !

    ReplyDelete
    Replies
    1. வாங்க உஷா, ஆமாம் ரசம் வா ஆ ஆ ஆ ஆ ஆரம் தான். :))) பலரும் ரசம் சாப்பிடறதில்லை. ஆனாலும் வாழ்க்கை ரசமாவே இருக்குங்கறாங்க! :)))) உங்களுக்குக் கேட்கணுமா! பிசியோ பிசி நீங்க! :))))

      Delete
  5. செய்து பார்த்திட வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. செய்து குடிச்சுப் பாருங்க வெங்கட்! :)))) இன்னிக்கு இந்த ரசம் தான் நம்ம வீட்டிலே, படம் எடுத்து வைச்சிருக்கேன். சேர்க்கணும்.

      Delete