எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, March 24, 2013

கருவடாக் குழம்பும், அரைக்கீரை மசியலும் சாப்பிட்டிருக்கீங்களா?

இப்போக் குழம்புக் கறிவடாம்/கருவடாம் போடலாம்.  இது குழம்புக்கு மட்டுமில்லாமல் பிட்லை, கூட்டு, மோர்க்குழம்பு, கீரை மசித்தால் என எல்லாத்திலும் போடலாம். இதிலும் வெங்காயம் போட்டு/போடாமல் என இரு முறைகள் உண்டு.

சிவப்புக் காராமணி/தட்டாம்பயறு கால் கிலோ, அரை கிலோ உளுத்தம்பருப்பு, மி.வத்தல் பத்து முதல் இருபது/அவரவருக்குக் காரம் தேவை எப்படியோ அவ்வாறே.  இதுக்கு இருபது வரை தாராளமாய்ப் போடலாம், உப்பு தேவையான அளவு. பெருங்காயம். கருகப்பிலை, கொத்துமல்லி.

காராமணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.  உளுத்தம்பருப்பைக் காலையில் ஊற வைக்கவும்.  இரண்டு மணி நேரம் உளுத்தம்பருப்பு ஊறியதும். மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சி அல்லது கிரைண்டரில் அரைக்கவும்.  வடை மாவு பதத்துக்கு அரைத்ததும் எடுத்துக் கருகப்பிலை, கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும். ப்ளாஸ்டிக் ஷீட்டில் சின்னச் சின்ன உருண்டையாக உருட்டி வைக்கவும்.

வெங்காயம் வேண்டுமெனில் இதே அளவுக்கு கால் கிலோ சின்ன வெங்காயம்/பெரியவெங்காயம் ஏதேனும் ஒன்றைப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளவும்.  பின்னர் உருட்டி வைக்கவும்.

கருவடாம் போட்ட குழம்பு:  புளி கரைத்த நீர் இரண்டு கிண்ணம், உப்பு, தேவையான அளவு.  குழம்புப் பொடி இரண்டு டீஸ்பூன் அல்லது ஒரு டேபிள் ஸ்பூன்(காரத்துக்கு ஏற்றவாறு), தாளிக்க கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, து,பருப்பு, வகைக்கு ஒவ்வொரு டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், மி.வத்தல் ஒன்று, கருகப்பிலை, நல்லெண்ணெய் ஒரு கரண்டி.  கருவடாம் பத்து அல்லது பனிரண்டு.

கல்சட்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும்.  எண்ணெய் காய்ந்ததும் முதலில் கருவடாங்களைப் போட்டுப் பொரித்து எடுத்துத் தனியாக வைக்கவும். பின்னர் கடுகு,பருப்பு வகைகள், மி.வத்தல், கருகப்பிலை தாளித்துக் குழம்புப் பொடி வறுத்துச் செய்யாத பொடியாக இருந்தால் எண்ணெயிலேயே போட்டுக் கொஞ்சம் வறுத்துப் புளிக்கரைசலைச் சேர்த்து உப்புப் போடவும்.  குழம்பு நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது வறுத்துத் தனியாக வைத்திருக்கும் கருவடாங்களைச் சேர்த்து ஒரே கொதி விட்டுக் கீழே இறக்கிவிடவும்.

கூட்டு, பிட்லை, கீரை போன்றவற்றிற்குத் தாளிக்கையில் கருவடாமும் வறுத்துத் தாளிக்கலாம்.  பெரிதாகத் தோன்றினால் இரண்டாகக் கிள்ளிக் கொள்ளலாம்.


14 comments:

  1. அரைக்கீரை மசியல் அடிக்கடி உண்டு... அது என்னமோ மற்ற கீரையை விட, அரைக்கீரை எப்படி செய்தாலும் சுவையாகத்தான் இருக்கு...

    ஜவ்வரிசி வடாம் செய்து தீர்ந்து போச்சி... (நாங்கள் மற்றும் சாப்பிட்டு அல்ல) நன்றி...!

    வீட்டில் இருக்கிற பருப்பை எல்லாம் போட்டு செய்ய சொல்கிறேன்... எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, உளுத்தம்பருப்பு முக்கியமாத் தேவை. செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க. :))))

      Delete
  2. வெயில்ல போகாதீங்கன்னு சொன்னா  கேட்டாங்களா... இப்படி வடாமா புழியறாங்களே.. அடுத்தாப்புல வத்தல்னு ஆரம்பிச்சா நான் என்ன செய்வேன்..

    ReplyDelete
  3. @அப்பாதுரை,

    ஹாஹா, வத்தலும் போட்டிருக்கேன், அவரை, வெண்டைக்காய் வத்தல். :)))))

    ReplyDelete
  4. ஒரு செகண்ட் கருவாட்டுக்குழம்புன்னு படிச்சுட்டேன்!

    குழம்புக் கருவடாம் யாராவது கொடுத்தால் குழம்பில் போட்டு மகிழ்ந்திருக்கிறோம்! இனி நாங்களே செய்யலாம்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))
      செய்து சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க. :)

      Delete
    2. ஹி.. ஹீ .... நானும் கருவாட்டு குழம்பு னு தான் படிச்சேன்.

      My heart skipped a beat then. LOL.

      Delete
  5. Kavitha, grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  6. கீரை மசியலில் கருவடாம் பிரமாதமாக இருக்குமே...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இன்னிக்குக் கீரை மசியலில் மோர் மிளகாய் மட்டும் போட்டேன். :)))

      Delete
  7. அன்பின் கீதாம்மா - கருவடாம் செய்முறை நன்று - வலைச்சரம் மூலமாக வந்தேன் - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. வாங்க சீனா சார், முதல்வரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி. :)))

    ReplyDelete
  9. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள். ஆன்மிகம், சாப்பாடு இரண்டிலும் கலக்குகிறீர்களே!
    நானும் ஸ்ரீராம் மாதிரியே கருவாட்டுக் குழம்பு என்று படித்துவிட்டேன். மன்னிக்கவும்.

    இரண்டுமே சாப்பிட்டிருக்கிறேன். பண்ணியும் இருக்கிறேன்.
    எங்கள் பாட்டியின் நினைவுதான் வந்தது. ஸ்ரீரங்கம் போனால் இதெல்லாம் தாராளமாகக் கிடைக்கும்.

    நல்வாழ்த்துகள்!
    இலைவடாத்திற்குப் போகிறேன்.....

    ReplyDelete
  10. லிங்க் பிடிச்சி வந்து சேர்ந்தேன் :)தாங்க்ஸ்க்கா இதை 10 நாள் முன்னாடி பார்த்திருக்கணும் ஒரு 6 நாளுக்கு தொடர் வெயில் அடிச்சது சரி புக் மார்க்கிக்கறேன் வெயில் நிலவரம் பார்த்து செய்வேன் .
    ரெசிப்பி செய்முறை பார்த்தபின்னே தெரியுது நான் முந்தி ஒருமுறை கடையில் வாங்கின வடாமை அப்படியே பொரிக்கும்போதே புளி சேர்த்து குழம்பி கலக்கி வச்சிருக்கிறேன் .
    பொரிச்சி கடைசியில் கொதிவரும்போது சேர்த்திருந்தா ருசி தனியா தெரிஞ்சிருக்கும்

    ReplyDelete