எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, March 10, 2013

ஜவ்வரிசியில் வடாம் பிழியலாமா?

அரிசிக் கருவடாம் போட்டாச்சு.  அடுத்து ஜவ்வரிசி மட்டும் போடுவோமா?  ஜவ்வரிசி தெரியணுமா? தெரியவேண்டாமா?  ஜவ்வரிசி தெரிய வேண்டாம்னா அரை கிலோ ஜவ்வரிசியை மோரில் காலையிலேயே ஊற வைக்கவும்.  அரைகிலோவுக்கு அரை லிட்டர் மோர் போதும்.  மிகுதிக்கு நீர் ஊற்றிக் கொள்ளலாம்.  இரண்டு அல்லது மூன்று மணி நேரமாவது ஊற வேண்டும்.  ஆகவே காலை ஏழு, எட்டு மணிக்குக் கூழ் கிளறணும்னா நாலு மணிக்கே ஊற வைக்கலாம்.  அல்லது ஐந்து மணிக்குள்ளாக ஊற வைக்கவும்.  இதற்குக் காரம் கொஞ்சம் போட்டாலும் எடுப்பாய்த் தெரியும். ஆகவே 100 கிராம் பச்சைமிளகாயை உப்பு, பெருங்காயம் சேர்த்து நைசாக விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழம் அரை மூடி போதும்.  ஏற்கெனவே மோரில் ஊறுகிறது.  மோர் இல்லை எனில் நீரில் ஊறப் போட்டுவிட்டு எலுமிச்சைச் சாறை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.


பின்னர் அடி கனமான பாத்திரத்தில் ஒரு லிட்டருக்குக் கொஞ்சம் கூடவே  நீரை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாகத் தளதளவெனக் கொதித்ததும், ஊறிய ஜவ்வரிசியை அதில் கொட்டிக் கிளறவும்.  முத்து முத்தாகத் தெரியணும்னா ஜவ்வரிசியை ஊற வைக்காமல் நன்கு களைந்து அப்படியே போடலாம்.  ஆனால் நீரைக் கூட வைத்துக் கொதிக்க விட வேண்டும்.  ஒரு மணி நேரம் ஆகும் நன்கு கெட்டிப் பட்டுக் கூழாக வர. கூழாக வந்ததும், கீழே இறக்கி வைத்துக் கொண்டு பச்சை மிளகாய் விழுதைத் தேவையானதைப் போட்டுவிட்டு எலுமிச்சைச் சாறும் சேர்க்கவும்.  முன்பெல்லாம் ஓலைப்பாய் அல்லது இதற்கெனத் தனி வெள்ளைத் துணி இருக்கும்.  அதில் வட்ட வட்டமாக வில்லை, வில்லையாக எடுக்கிறாப்போல் கரண்டியால் விடுவார்கள்.   இது ஒரே நாளில் காயாது.  ஆகையால் துணி அல்லது பாயின் பின் பக்கத்தை நீரில் நனைத்துக் கொண்டு மெதுவாகப் பிய்த்து எடுத்துத் தனியாகப் போட வேண்டும்.

இப்போது ப்ளாஸ்டிக் யுகமாக இருப்பதால், குளிர்சாதனப் பெட்டி, ஏசி போன்றவை சுற்றி வரும் பெரிய ப்ளாஸ்டிக் பாயில் போடலாம்.  அன்றே எடுக்க வரும்.  அதன் பின்னரும் இரண்டு நாட்களாவது காய வேண்டும்.  இல்லை எனில் பொரித்தால் நாக்கில் ஈஷிக் கொள்ளும்.

இதிலேயே கலர் வேண்டுமெனில் கீழே இறக்கியதும்  உணவுப் பொருட்களுக்குச் சேர்க்கும் கலரைத் தேவையான அளவுக்குச் சேர்க்கவும்.   காரம் குறைத்துப் போட்டால் குழந்தைகளுக்கு தாராளமாய்க் கொடுக்கலாம்.  வயிற்றுக்கு நல்லது.  இதை எண்ணெயில் பொரிக்காமல் மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுத்து விடலாம்.

9 comments:

  1. சுவையான வடாம்! அது காயும் ஒவ்வொரு ஸ்டேஜிலும் சாப்பிட்டுப் பார்ப்பது கூடச் சுவை!

    ReplyDelete
  2. ஹிஹிஹி, நிறைய அனுபவம் உண்டு போல! :)))

    ReplyDelete
  3. இது வடாம் போடும் நேரம்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், டிடி, போட்டவரைக்கும் விநியோகம் ஆயிடுச்சு. வீட்டிற்கு இருக்கானு பார்த்துட்டு மறுபடி போடணும். ஊரிலே வேறே மழையே இல்லைனு சொல்றாங்க! :)))))

      Delete
  4. இதைப் படிக்கும் போது அம்மாவுடன் மொட்டை மாடியில் போட்ட வடாம்கள் நினைவு வருகிறது.

    துணியில் போட்டால் அதை முழுதாக பிய்த்து எடுப்பதே ஒரு கலை தான். தூள் நிறைய கிடைக்கும்...:))

    ReplyDelete
    Replies
    1. உண்மை கோவை2தில்லி, துணியிலே போடுகையில் தூள் தான் நிறைய வரும். இப்போ ப்ளாஸ்டிக் ஷீட் என்பதால் தானாகவே வந்துடறது. :)))

      Delete
  5. உங்களுக்கே இது நியாயமாப் படுதா?

    ReplyDelete
    Replies
    1. எது? வடாம் போடறதா? தடை உத்தரவு இருக்கா என்ன? :P :P :P :P

      Delete
  6. வாங்க ஸ்ரீராம், ஹிஹிஹி, இந்தப் பச்சை வடாம் சாப்பிடறவங்களைக் கண்டால் எனக்கு ஆச்சரியமா இருக்கும். எப்படி இதைப் பிடிக்குதுனு! நமக்கெல்லாம் எண்ணெய் வைத்துப் பொரிச்சால் தான்! :))))))

    ReplyDelete