எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, April 10, 2010

புளி உப்புமா சாப்பிட வாங்க!

ஆறு மாசத்துக்கு மேலே ஆச்சு இந்தப் பக்கம் வந்து. அதுக்காகச் சமைக்கவே இல்லைனு நினைச்சுடாதீங்க. வீட்டிலே நாமதான் சமைச்சாகணும். ரங்க்ஸ் சமைப்பார்தான், ஆனால் சாப்பிடத் தான் ஆள் தேடணும்! ஒரு சாம்பார் வைப்பார் பாருங்க. அதிலே மேலே தெளிவா எடுத்து ரசம்னு விடுவார், அடியிலே சாம்பார், அதிலும் அடியிலே காய்கள் எல்லாம் இருக்கும், அதைக் கூட்டாய் வைச்சுக்கணும்! :P போதுண்டா சாமினு முடியலைனாக் கூட நானே சமைச்சுடுறது தான் வழக்கம். ஒரு நாளிலேயே வெங்கலக்கடையிலே ஆனை புகுந்தாப்போல எல்லாம் தலைகீழாப் போயிடும். மறுநாள் புதுசாக் கல்யாணம் ஆகி வந்த பொண்ணு மாதிரி உப்பு எங்கே வச்சீங்க? புளி எங்கே? அடுப்பையே காணோமேனு கேட்கணும்.

நேத்திக்குப் பக்கத்து ஃப்ளாட்டில் காலம்பர டிபன் பண்ணிட்டு இருந்தாங்க போல. எப்படித் தெரியும்னு கேட்கறீங்களா?? துணி துவைச்சுட்டு இருந்தேன். பக்கத்து ஃப்ளாட் தான் எங்க வீட்டிலே இருந்து தொட்டுவிடும் தூரம் தானே? அங்கே அந்த வீட்டுத் தங்க்ஸ் புளி உப்புமா பண்ணவா? மோர்க்கூழ் பண்ணவானு கேட்டுட்டு இருந்தாங்க. அவங்க ரங்க்ஸ் எது பண்ணினாலும் அதிலே நாலு மோர்மிளகாய் வறுத்துப் போடுனு சொல்லிட்டு இருந்தார். இங்கே எனக்குச் சாப்பிடணும்போல ஆசை வந்துடுச்சு. எங்கே மோர் மிளகாயே வறுக்க முடியாது வீட்டிலே. அப்புறமா வீசிங் என்னை வறுத்துடும். :( அம்மா வீட்டிலே இருக்கும் வரைக்கும் அப்பா வெளி ஊருக்குப் போகறச்சே தான் இதெல்லாம் பண்ணுவாங்க அம்மா. அப்பாவுக்குப் பிடிக்காது. இதெல்லாம் ஒரு டிபனாம்பார். யாருங்க அங்கே, செய்முறை சொல்லாமப் பேசிட்டே இருக்கேனு கோவிக்கிறது? இதோ வந்துட்டேன்.

முதல்லே புளி உப்புமா: இரண்டு, மூன்று விதம் இருக்கு இதிலே. எல்லாத்தையும் சொல்லிடறேன். உங்க செளகரியம் போல் செய்துக்கலாம்.

முதல்முறை: உங்க ரங்க்ஸுக்குப் பிடிக்காது புளி உப்புமா. இன்னிக்கு அவருக்கு ஆப்பீச்ச்சிலே டிபன் கொடுத்துடுவாங்க. நீங்க மட்டுமே வீட்டில். கேட்கணுமா?? எஞ்சாய்!!! இதுக்கு அவசரப் புளி உப்புமா தான் சரி. அரிசி மாவு ஒரு கப் எடுத்துக்குங்க. வெங்காயம் பிடிக்கும்னால் ஒரு வெங்காயம்(பெரியது) பொடிப் பொடியாய் நறுக்கிக்கணும். மி.வத்தல், (இதுக்கு மி.வத்தல் தான் நல்லா இருக்கும்.) நாலு, உப்பு, கருகப்பிலை, பெருங்காயப் பொடி, தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, நல்லெண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம்.புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்து ஊற வைச்சுக் கரைச்சு வைச்சுக்கவும். கரைச்சு வச்ச புளி ஜலத்தில் அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். உப்பையும் சேர்த்தே கலக்கவும். மாவு நல்லாக் கெட்டியா வர வரைக்கும் சேர்த்து உருண்டையாப் பந்து போல் வந்ததும் கொஞ்ச நேரம் வைக்கவும். இரும்பு வாணலி இருந்தால் நல்லது. இல்லாட்டி ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய வைத்துக் கடுகு, உ.பருப்பு தாளிக்கவும். கருகப்பிலை, மி.வத்தல் போடவும். மி.வத்தலைக் கிள்ளிச்(ரங்க்ஸைக் கிள்ளறாப்போல் நினைச்சுக்கலாம்)சேர்க்கவும். வெங்காயம் சேர்ப்பதாய் இருந்தால் இப்போச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், பிசைந்து வைத்த அரிசிமாவுக்கலவை இதில் போட்டுக் கைவிடாமல் கிளறவும். எண்ணெய் தேவையா என்னனு உங்களுக்கே கிளறும்போது புரிஞ்சுடும். உதிரியாக வந்ததும் எடுத்துச் சூடாகச் சாப்பிடவும்.


இது ஒரு பாரம்பரிய உணவு. இப்போ மிகச் சில வீடுகளிலேயே செய்யறாங்க. அடுத்து இதையே அரைச்சுச் செய்யறதைப் பார்ப்போம்.

5 comments:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  2. அரிசி உப்மா வெள்ள வெளேர்னு புளிவிடாததும் நன்னாதான் இருக்கும்.புளிவிட்டது மிதமான சூட்டில் நிறைய நேரம் வைத்தால் மொறு மொறுனு பொருக்கு நன்னாவேயிருக்கும்:)) ய்ம்மி

    ReplyDelete
  3. ம்ம்ம்ம் நீங்க சொல்றது புளிப்பொங்கல்னு நினைக்கிறேன் ஜெயஸ்ரீ, அது வேறே இது வேறே.

    ReplyDelete
  4. இது நாங்கள் வெங்காயம் போடாமல் செய்வதுண்டு. மோருக்கு பதிலாய் புளித்தண்ணீர் விட்டு செய்யும் புளிக்கூழ்!!

    ReplyDelete
  5. கூழாய் இருக்காது. உதிர் உதிராக உப்புமாவாகவே செய்வோம்.

    ReplyDelete